நல்ல விதைகள் நல்ல மரங்களைத்தரும் நல்ல கதைகள் நாளைய சமுதாயத்திற்கு நல்ல மனிதர்களைத்தரும் ... மீ.மணிகண்டன்
லேபிள்கள்
- அத்தனையும் பச்சை நிறம் (8)
- அமானுஷ்யச் சிறுகதை (1)
- அரேபியக் கதைகள் (4)
- ஆனந்த விகடன் (2)
- ஆனந்தசந்திரிகை (10)
- கட்டுரை (4)
- கவிச்சிறகுகள் (1)
- கவிதை (71)
- கனவு ஆசிரியர் (1)
- காதல் (6)
- குடைக்குள் கங்கா (10)
- சிறுகதை (29)
- நகைச்சுவை (6)
- நாடகம் (6)
- நாம் நகரத்தார் (3)
- பரிசு (9)
- பரிசு பெற்ற கவிதை (7)
- பரிசு பெற்ற சிறுகதை (6)
- பாக்யா (1)
- புத்தகம் (9)
- பேசும் புதிய சக்தி (2)
- மழலை மழைத்துளிகள் (11)
- வெண்பா (6)
- About (1)
- Article (3)
- Austin Tamil Sangam (1)
- Certificates (1)
- FeTNA (2)
- Invitations (1)
- Nagarathar (5)
- NATAWO (1)
- Padaippu (3)
- Post (3)
- SciFi (1)
- Stories (11)
- Thugal (1)
- WriterSCafe (1)
ஞாயிறு, 17 டிசம்பர், 2023
நேற்றுவரை
சனி, 16 டிசம்பர், 2023
பறந்து கொண்டிருக்கும் ... மீ.மணிகண்டன்
வியாழன், 14 டிசம்பர், 2023
பாரதி பாரதி பாரதி ...மீ.மணிகண்டன்
வியாழன், 7 செப்டம்பர், 2023
முதல் பயணம் ... மீ.மணிகண்டன்
சனி, 12 ஆகஸ்ட், 2023
நகரத்தார் எழுத்தாளர்கள் பரிசுக்கவிதை: நகரத்தார் பெருமைகள்
கொடுத்த தலைப்பு: நகரத்தார் பெருமைகள்
கவிதை எழுதியவர்: மீ.மணிகண்டன்
தாயபிள்ளை யாயிவர்கள் தாண்டிவந்த காலம்பல;
பாயும்நதி போலிவர்கள் போகும்தூரம் இன்னும்பல;
வணிகத்தில் கணக்கெழுதும் வழிகண்டு சொன்னவர்கள்;
குலதெய்வத் துணையோடு கொண்டுவிற்று வென்றவர்கள்;
ஒர்கடவுள் முருகனென்ற உண்மைதனை அறிந்தவர்கள்;
ஓயாமல் என்றுமென்றும் ஓமுறைக்கும் உத்தமர்கள்;
மன்னனுக்கு அறிவுசொல்லும் மாமேதை இனத்தவர்கள்;
மாறுகின்ற காலத்திலும் மாறாமல் இருப்பதற்கு
புள்ளிஎன்ற கணக்குச்சொன்ன புத்திசாலி மானிடர்கள்;
புகழ்பெறுவார் இன்னுமின்னும் பூமிக்கொரு பகலவன்போல்!
...மீ.மணிகண்டன்
திங்கள், 17 ஜூலை, 2023
யாருக்கு இன்டெர்வியூ? … மீ.மணிகண்டன்
நாடகமாக்குவதற்காக எழுதப்பட்ட கதை.
இக்கதையின் நிறைவு, இப்படியும் நடக்குமா? என்று logic கேட்பீர்களேயானால் உங்களுக்காக சொல்லிக்கொள்கிறேன், இது எனது கற்பனையில் நான் நகைச்சுவைக்காக எழுதியது. நன்றி. ...மீ.மணிகண்டன்
யாருக்கு இன்டெர்வியூ?
சிறுகதை: மீ.மணிகண்டன்
நாள்: 02-Dec-2019
இடம்: U.S.A.
| யாருக்கு இன்டெர்வியூ? … மீ.மணிகண்டன் |
"ஆமா... "சற்று நிதானித்துத் தொடர்ந்தான், "சொல்லவே இல்ல ..." என்றான் சினேகன்.
"என்னடா.."
"நாளைக்கு இன்டெர்வியூவாம்..."
"யாரு சொன்னா...?", கேட்டான் பிரகாஷ்.
"அம்மாதான்... நேற்று வீட்டிற்கு வந்திருந்தாங்க... அப்ப... சொன்னாங்க..."
"முதல்ல உட்காரு..." என்று சினேகனை உட்காரச்சொல்லிவிட்டு தானும் சோஃபாவில் அமர்ந்தான். "இதென்ன முதல் இன்டெர்வியூவா... எத்தனை இடத்துக்குப் போய் வந்தாச்சு..." அலுத்துக்கொண்டான் பிரகாஷ்.
"யு டோன்ட் ஒர்ரி டா, இப்பதான் சனி திசை மாறுது இல்ல.... உனக்கு எல்லாமே நல்லா நடக்கும்.."
"இது யாரு சொன்னா..?"ஆச்சர்யமாக கேட்டான் பிரகாஷ்.
"ம்... அம்மாதான்..."
"ஏண்டா.. அம்மா உங்க வீட்டுக்கு வந்தது என்னப்பத்தி எல்லாத்தையும் சொல்றதுக்குத்தானா... வரட்டும் வச்சுக்கறேன்..."
"அதிருக்கட்டும்... இப்ப எங்க இருக்காங்க அம்மா..."
"ம்... அக்கா வீட்டுக்குப் போயிருக்காங்க நாளைக்குத்தான் வருவாங்க..." என்று பதிலளித்தான் பிரகாஷ்.
"ஒ... அப்ப தனியாத்தான் இருக்க... சரி விடு... இந்தத்தடவை நீ பாஸ் பண்ற... அத நாம கொண்டாடுறோம்.... கிளம்பு..." என்று எழுந்து பிரகாஷ் கையைப் பிடித்து எழச்சொன்னான் சினேகன்.
"கொண்டாட்டம் எல்லாம் இன்டெர்வியூவிற்கு அப்பறம்..." என்று மறுத்த பிரகாஷ் தொடர்ந்தான், எனக்கு வேற சனி திசை ஆரம்பிக்குதாம் இன்னிலேருந்து ரொம்ப கவனமா இருக்கணும், அவசியம் இல்லாம நான் வெளியில வர்றதா இல்ல..." என்று தீர்மானமாகச்சொன்னான் பிரகாஷ்.
"அது நீயா தனியா போகும்போது பாத்துக்கோ, இப்ப என் கூடத்தான் வரப்போறே... சோ டோன்ட் ஒர்ரி..." என்றான் சினேகன்.
"இப்ப எங்க என்ன இவ்வளவு அவசரமா கூப்புடுற..." என்று சற்று வேகமானான் பிரகாஷ்
"பிரகா..ஷ், நீயும் தனியாத்தான் இருக்க வா ரெஸ்டாரெண்ட் போயிட்டு டின்னர் முடிச்சுட்டு வருவோம்..." என்றான் சினேகன்
சட்டென சனியின் நினைவு வந்தது பிரகாஷிற்கு, 'அச்சச்சோ.... சனி ஸ்டார்டிங்... வெளில வந்தா ஒண்ணுக்கு ரெண்டா செலவாயிடும்.... நோ நோ... நான் வரல..."
"பிரகாஷா.... " சற்று யோசித்தான் சினேகன், பின் தொடர்ந்தான், "சரி இப்படி வச்சுக்குவோம்..."
"என்ன...?"
"நான் சாப்பிடறதுக்கு நான் பில் பெ பண்றேன்.... உன் சாப்பாட்டுக்கு நீ பெ பண்ணு... ஓகே ?" என்று கேள்வி தொடுத்தான் சினேகன்.
நண்பனின் வற்புறுத்தலை தவிர்க்கமுடியாமல் பிரகாஷும் யோசித்தான், 'சரி நான் சாப்பிடறதுக்கு நான்தானே பெ பண்ணப் போறேன்... ஓகே சொல்லுவோம்', என்று சிந்தித்தபடி சினேகனுக்கு பதிலளிக்கத்தொடங்கினான், "சரி... ஆனா வெஜ் ரெஸ்டாரெண்ட் தான் போகணும்... அப்பனா வறேன்..."
பிரகாஷின் சம்மதம் கிடைத்ததே பெரிய சங்கதி என்று எண்ணிக்கொண்டு, "சரி", என்றான் சினேகன்.
ரெஸ்டாரண்ட் சென்ற இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து மெனுவை வாசிக்கத்தொடங்கினர். உணவு பரிமாறுபவர் அருகில் வந்து "என்ன சாப்பிடறீங்க..." என்றார் பிரகாஷைப் பார்த்து.
"அவனைக் கேளுங்க அதுக்குள்ளே நான் கொஞ்சம் மெனு பார்த்துக்கறேன்.." என்றான் பிரகாஷ்.
"சார் என்ன சாப்பிடறீங்க..." என்றார் சினேகனைப் பார்த்து
"காபேஜ் கட்லெட் இரண்டு, ஆனியன் ரவா கீ அதிகமா போட்டு ஒண்ணு, அப்பறம் மினி இட்லி வித் சாம்பார்..." என்று தன் ஆர்டரை முடித்தான் சினேகன்
ஆர்டர் எடுத்துக்கொண்ட அவரும் மீண்டும் பிரகாஷிடம் வந்து, "சார் ரெடியா..." என்றார்
சனியின் நினைவு வரவே ஏதும் வில்லங்கத்தில் மாட்டிவிடக் கூடாது என்று எண்ணி தன் பாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தான் பிரகாஷ், வாலெட் இருந்தது. மெனுவை மூடி வைத்துவிட்டு, "ம்..." என்றான் பிரகாஷ்.
"சொல்லுங்க..."
சற்று யோசனைக்குப் பிறகு, "ஒரு… மசால் தோசை..." என்றான் பிரகாஷ்
"வேற..." என்றார் ஆர்டர் எடுத்தவர்.
"ம்.." அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "மசால் தோசை..." என்று சொல்லிவிட்டு அவ்வளவுதான் எண்பதுபோலத் தலையசைத்தான் பிரகாஷ்.
"ஓகே சார்... வேற..." என்றார் ஆர்டர் எடுப்பவர் மும்முரமாக கையில் டச் பேடில் ஆர்டர் குறித்துக்கொண்டே...
தான் தலையசைத்தது இவருக்குப் புரியவில்லையோ என்ற நினைப்பில், "மசால் தோசை அவ்வளவுதான் சார்.." என்று முழுதாகச்சொல்லி முடித்தான் பிரகாஷ்.
"ஓகே... சார்.." என்று நகர்ந்தார் ஆர்டர் எடுத்தவர்.
ஆர்டர் எடுப்பவர் சென்றதும், சினேகனைப் பார்த்துக் கேட்டான் பிரகாஷ், "ஏண்டா காலைல இருந்து ஏதும் விரதமா..."
"ஏண்டா..."
"இல்ல... வரிசையா ஆர்டர் பண்றியே.. அதான்..."
"வர்றது எப்பவோ ஒரு தடவை... வரும்போது என்ஜாய் பண்ணனும்... அதான் இத்தனை ஆர்டர்..."
"ஓகே ஓகே..." என்று சினேகனுக்கு பதில் சொன்னாலும் மனதுக்குள் நினைத்துக்கொண்டான் 'நீ சாப்பிடறதுக்கு நீதானே பெ பண்ணப்போற'. பிரகாஷின் கை ஒரு முறை பாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்துக்கொண்டது.
சற்று நேரத்தில் அவர்கள் ஆர்டர் மேசைக்கு வந்தது.
"சார் கேபேஜ் கட்லெட்.." என்றார் பரிமாறுபவர்
"அங்க வைங்க.." என்று எதிர்பக்கத்தைக் காட்டி சினேகனிடம் வைக்கச்சொன்னான் பிரகாஷ்,
"ஆனியன் ரவா..."
"அதுவும் அங்கே வைங்க..." என்று எதிர் திசையைக் காட்டினான் பிரகாஷ்.
"இது மினி இட்லி..."
"அதுவும் அங்கே தான்..." என்றான் புன்னகையோடு பிரகாஷ்.
சினேகனின் ஆர்டரை பரிமாறி முடித்த அவர், மூன்று தனித்தனி தட்டுகளில் மூன்று மசால் தோசைகளை பிரகாஷின் முன் வைத்தார் சிப்பந்தி.
"என்னது மூணு..." என்று சந்தேகமாகக் கேள்வி தொடுத்தான் பிரகாஷ்.
"உங்க ஆர்டர் சார்.." என்றார் புன்னகையோடு சிப்பந்தி.
"நான் மசால் தோசை ஒண்ணுதானே கேட்டேன்..." என்று அப்பாவியாகக்கேட்டான் பிரகாஷ்.
"சார் நல்லா யோசிச்சுப் பாருங்க... நான் வேற வேற ன்னு கேட்டபோதெல்லாம் நீங்க மசால் தோசைதான் ஆர்டர் பண்ணீங்க, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... மூணாவது மசால் தோசை சொல்லும்போதுதான் நீங்க அவ்வளவுதான்னு சொன்னீங்க... சந்தோசமா சாப்பிடுங்க சார்..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சிப்பந்தி.
பிரகாஷிற்கு அசரீரி ஒலித்தது, "சனி ஆரம்பம் ஆகுது, வாய் வார்த்தையிலே கவனமா இருக்கணும்", சனி இப்படியும் வேலையைக் காட்டுமா என்று அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ்.
****
அழைப்பு மணி ஓசை கேட்டு உறக்கம் களைந்து எழுந்தான் பிரகாஷ். வாசல் நோக்கி நடந்தான், கதவைத்திறந்தான் வெளியில் அம்மா. "என்னம்மா, காலைலயே வந்துட்ட, அக்கா வெரட்டி விட்டுடுச்சா.." என்றான் பிரகாஷ் வாசலில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து.
"டேய் உன்ன இன்டெர்வியூவுக்கு அனுப்பணுமில்ல, அதான் சீக்கிரமா வந்துட்டேன்", என்று சொல்லிக்கொண்டே கையில் பையுடன் உள்ளே நுழைந்தவர் வேகமாகச் சமையல் அறைக்குச் சென்றார், "சீக்கிறம் குளிச்சுட்டு கிளம்புடா, அக்கா வீட்டுல இருந்து டிஃபன் கொண்டு வந்துட்டேன், நீ குளிச்சு முடிச்சு வந்த உடனே சாப்பிட்டுட்டு கிளம்பலாம்" என்றாள் அம்மா.
"அது ஒரு உப்பில்லாத உப்புமா கிண்டியிருக்கும், அத மாமா வேணும்னா தலையெழுத்தேண்ணு சாப்பிடலாம், இத வேற நீ பத்து ஊருக்கு கேட்குறமாதிரி அக்கா வீட்டு டிஃபன்னு பெருமையடிச்சுக்கற"
"ம்... உனக்கும் ஒருத்தி பொண்டாட்டியா வருவாள்ல, அப்ப அவ இதையாவது கிண்டுறாளான்னு பாக்குறேன்" என்றாள் அம்மா கோபமாக.
"ஆமா… முன்னாடி என்ன சொன்ன இன்டெர்வியூவா... ஆ... இன்னிக்கு இன்டெர்வியூ... அச்சச்சோ.. மறந்தேபோச்சு..." அவசரமானான். மனதுக்குள் எண்ணிக் கொண்டான், "ம்... மூணு மசால் தோசையை மொத்தமா தின்னா தூக்கம் வராம என்ன வரும்"
குளித்து விட்டு வந்த பிரகாஷ் அவசரம் அவசரமாகத் தன் அறைக்குச்சென்று அலமாரியில் இருந்து தேடி அயன் செய்த சட்டை பாண்டை எடுத்தான். உடையணிந்தவன் வேகம் வேகமாக பாலிஷ் செய்து வைத்திருந்த ஷூவை அணிந்தான்.
"டேய்... டிஃபன்..." என்றாள் அம்மா
"அந்த ரவையை நீயே சுவை, நான் இன்டெர்வியூ சக்ஸஸா முடிச்சுட்டு வெளில விருந்தே சாப்டுக்கறேன்" என்று பதில் அளித்தான் பிரகாஷ்.
"கண்ணா இந்தா விபூதி சாமிய நல்லா மனசில நினைச்சுக்கோ" என்று சொல்லிக்கொண்டே பயபக்தியுடன் தெய்வங்களை வேண்டிக்கொண்டு பிரகாஷின் நெற்றியில் பூசிவிட்டார்.
"இத பூசிக்கிட்டா வேலை கன்பார்ம் ஆயிடுமா", நக்கலாகக் கேட்டான்.
"டேய் பேசாம சொல்றத கேளு, போன இன்டெர்வியூ நான் சொன்னதை நீ கேட்கல, இப்ப சனி திசைவேற ஆரம்பிச்சிருக்கு"
"இப்படி செஞ்சா சனி பயந்துடுமா?" என்று கேட்டான் பதிலுக்கு
"அப்படி இல்லடா ஒரு பாசிடிவ் வைப்ரஷன், அதுக்குதான் இதெல்லாம்"
"சரி சரி... நான் கிளம்பறேன்" அம்மாவிடம் விடைபெற்று கிளம்பினான் பிரகாஷ்.
****
வேகவேகமாக தனக்கான இன்டெர்வியூ அலுவலகம் வந்தடைந்தான் சரியான நேரத்திற்கு வந்துவிட்டோமா என்று ஒரு முறை கைக்கடிகாரத்தை சரி பார்த்தான். 'அம்மா நீ கொஞ்சம் முன்னாடி வந்து என்ன எழுப்பிவிட்டிருந்தா இப்ப இப்படி லேட்டா வந்திருக்கமாட்டேனெ..' மனதுக்குள் எண்ணியவாறே ரிசெப்ஷன் சென்று அங்கிருந்த பணிப்பெண்ணிடம், "ஹை ஐ அம் பிரகாஷ், ஐ ஹேவ் அன் இன்டெர்வியூ அப்பாயின்ட்மென்ட் டுடே" என்றான் அவசரமாகவும், மெதுவாகவும், அதேவேளை புன்னகை கூட்டிய முகத்தோடும். மனதினுள் எண்ணிக்கொண்டான், 'இவ்ளோ அழகா இருக்காளே கடலை போடுறதுக்குக் கொஞ்சம் கூட நேரமில்லையே...'
பணிப்பெண்ணும் புன்னகை தவழும் முகத்தோடு பதில் தந்தாள், 'ப்ளீஸ் உட்காருங்க, வீ வில் கால் யு'
சற்று நேரத்தில் அழைப்பு வர இன்டெர்வியூ அறைக் கதவைத் தட்டினான், "மே ஐ கம் இன்.."
"எஸ் ப்ளீஸ்..." உள்ளிருந்து பனியுருகும் குரலொன்று அழைக்க, அழைத்தவளைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தேவிட்டான் பிரகாஷ், 'வாவ் வாட் எ பியூட்டி' மனதினுள் நினைத்தவன் மின்னல் வேகத்தில் எண்ண அலைகளில் அவளுக்கு காதல் தூது விட்டான், 'எப்படியும் இன்டெர்வியூ பாஸ் பண்றோம் இவள லவ் பண்றோம்' முடிவுடன் உள்ளே நுழைந்த பிரகாஷ் வாய் திறந்தான், "தேங்க்ஸ்..."
"ப்ளீஸ் ஹேவ் யுவர் சீட்...' என்று தனக்கு எதிர் இருக்கையைக்காட்டி இருக்கச்சொன்னாள் அவள்.
"ஐ அம் ப்ரேமி, இங்க ஐ டி டிவிசனுக்கு நான் தான் ஹெட், கேன் வீ ஸ்டார்ட்?" என்று அடுக்கிக்கொண்டே போனாள் அந்த ஐ டி ஹெட்
உறைந்திருந்த பிரகாஷ் சற்று சுதாரித்து, "சாரி..?" என்று வினவினான்
"ஐ மீன்.. இன்டெர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா..." என்றாள்
"ஷுர்..."
ஒரு முறை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்ட அவள் தொடர்ந்தாள், "இன்டெர்வியூவிற்கே இவ்வளவு லேட்டா வர்ற நீங்க எப்படி தினமும் வேலைக்கு கரெக்ட் டைமுக்கு வருவீங்க?"
"அச்சச்சோ, அப்படி இல்ல... நீங்க வேலை மட்டும் குடுத்துப் பாருங்க நான் வீட்டுக்கே போகமாட்டேன்." என்று பவ்யமாக பதிலளித்தான் பிரகாஷ்.
"கடிகாரத்துல எத்தனை முள் இருக்கு ?" என்று கேட்டாள் ஐ டி ஹெட்
"இது இன்டர்வ்யூ கொஸ்டியனா?" என்று கேட்டான் பிரகாஷ்
"என்ன பதில் சொல்லாம கேள்வி கேட்கறீங்க..." என்றாள் சற்று வேகமாக
"இல்ல...புரோகிராமர் வேலைக்கும் கடிகார முள்ளுக்கும் என்ன ரிலேஷன்னு யோசிச்சுப் பார்த்தேன்..." என்று மெதுவாக பதிலளித்தான் பிரகாஷ்
"இப்பவே கொஸ்டியன் பண்றீங்க... உங்க சீனியர் ஒரு ஜாப் கொடுத்தா அதையும் இப்படித்தான் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பீங்க இல்லையா.."
அசரீரி ஒலித்தது "சனி ஆரம்பம் ஆகுது வாய் வார்த்தைல ஜாக்கிரதையா இருக்கணும்". எங்கே வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவசரமாக, "மேம்... அப்படியெல்லாம் இல்ல... இனிமே நான் வாயே தொறக்க மாட்டேன்" என்று சரண்டர் ஆனான் பிரகாஷ்
சற்று நேர உரையாடலுக்குப் பிறகு அறையின் கதவு தட்டப்பட்டது.
"எஸ் கம் இன்..." என்றாள் பிரேமி
உள்ளே நுழைந்தவர் பெரிய அதிகாரியாக இருக்கவேண்டும் என்பதை அவர் உடையிலேயே உணர்ந்துகொண்டான் பிரகாஷ். உள்ளே நுழைந்த அந்த அதிகாரி ப்ரேமி இருக்குமிடம் சென்று அவளைப் பாராட்டிக் கைகுலுக்கினார், "எக்ஸலண்ட் பெர்ஃபார்மென்ஸ்... அப்ரஸியேடட்... நாங்க எதிர் பார்த்ததுக்கு மேலயே நீங்க பெர்ஃபார்ம் பண்ணியிருக்கீங்க... உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் மெயில் பண்ணச் சொல்லியிருக்கேன்..." என்று சொல்லிக்கொண்டே போனார் அந்த அதிகாரி.
அவளும் புன்னகை மாறாமல் எழுந்து நின்று பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு, "தேங்க்ஸ் சார்" என்றாள் பணிவுடன்.
நடப்பது என்னவென்று புரியாமல் சந்தேகப் பார்வையுடன் எழுந்தான் பிரகாஷ், அதிகாரியிடம், "சார், நீங்க எனக்குத் தான் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரணும், தேங்க்ஸ் சோ மச்... நான் தான் இன்டெர்வியூ கேண்டிடேட்", என்று தனது டையை சரிசெய்துகொண்டு பவ்யமாக நின்றான்.
"ஹா ஹா... தாங்ஸ் மிஸ்டர் பிரகாஷ், இன் ஃபாக்ட் இன்னிக்கு பிரேமிதான் கேண்டிடேட், அவங்களுக்குத்தான் இன்டெர்வியூ, எங்க ஹெச் ஆர் ல ஒரு பொசிஷனுக்கு அப்ளை பண்ணியிருந்தாங்க, ஒரு புது கேண்டிடேட்டை அவங்க எப்படி இன்டெர்வியூ பண்றாங்கன்னு நாங்க பக்கத்து ரூம்ல இருந்து மானிட்டர் பண்ணிட்டிருந்தோம், ஷி டிட் வெல். பை தி வே ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ஜாப் செர்ச்". என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த அதிகாரி.
"சனி எந்த நேரத்துல எந்த ரூபத்துல வருமுன்னு யாராலையும் சொல்லமுடியாது" அசரீரி ஒலித்தது ப்ரகாஷிற்கு.
மீ.மணிகண்டன்
சனி, 8 ஜூலை, 2023
வெள்ளி, 26 மே, 2023
செவ்வாய், 2 மே, 2023
எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன்
எக்ஸிபிஷன் … சிறுகதை … மீ.மணிகண்டன்
![]() |
| எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன் |
"மார்க்கெட் இறங்கலாம், டிக்கட் எடுக்காதவுங்க இருந்தா எடுத்துடுங்க, அடுத்தது ஸ்டேஜ்", என்று கண்டக்டர் தனது வழக்கமான வார்த்தைகளை மனப்பாடமாக ஒப்பித்தார். அடுத்த ஸ்டாப்பிங் கதிரேசு இறங்கவேண்டிய இடம், இறங்குவதற்குத் தயாராக வாசலருகே வந்து நின்றுகொண்டான். கதிரேசு இறங்கியதும் கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பணிந்த பேருந்தின் ஓட்டுநர், அடுத்த இலக்கை நோக்கி பேருந்தைப் பறக்கவிட்டார். கதிரேசு பள்ளிக்கூடச் சிந்தனையிலேயே வீடு நோக்கி நடந்தான். எக்ஸிபிஷன் போக பெயர் பதிவு செய்ய நாளை வெள்ளிக்கிழமைதான் கடைசி நாள். சனிக்கிழமை பாலன் சார் தலைமையில் தனது வகுப்பு மாணவர்கள் எக்ஸிபிஷன் செல்கிறார்கள். ராமு, குமரவேல், வாசு எல்லோரும் பணம் கட்டிப் பெயர் பதிந்துவிட்டார்கள். தான் செல்ல முடியுமா முடியாதா என்ற சந்தேகம் கதிரேசுவிற்கு வலுவாக இருந்தது. காரணம் கதிரேசு, தான்தான் சென்ற ஞாயிறன்று பால்காரர் வீட்டிற்குப் பால் வாங்கச்சென்றான், அப்போது பால்கார அண்ணனிடம், தனது தாய் சொன்னதுபோல, 'அடுத்தமாதம் சேர்த்துக் கொடுத்துவிடுகிறோம் அப்பா குவாரிக்கு இரண்டு வாரமாகப் போகவில்லை புது காண்ட்ராக்டர் இன்னும் இரண்டு வாரம் பொறுத்துத்தான் வரச்சொல்லியிருக்கிறார்', என்று சொல்லியிருந்தான். இந்தச் சூழ்நிலையில் அம்மாவிடமோ அப்பாவிடமோ இருபது ரூபாய் கேட்பது சற்றும் நியாயம் இல்லை என்று அவனது உள்மனம் உரைத்தது.
மெளனமாக வீட்டை அடைந்தான் கதிரேசு.
"என்னடா என்ன நினைப்பு, செருப்போட வீட்டுக்குள்ள வர்ற", அம்மாவின் குரல் சிந்தனையைக் கலைக்க தன் தவறை உணர்ந்து. "இல்லம்மா, இன்னிக்கு இங்கிலிஷ் பேப்பர் குடுத்தாங்களா, ராமுவைவிட நான் ரெண்டு மார்க் அதிகம் வாங்கியிருந்தனா, அந்த யோசனைதான்", என்று சமாளித்தவாறே செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் சென்று வாசல் அருகே ஓரமாக வைத்தான்.
அன்றைய வீட்டுப் பாடங்களை எழுதி முடித்தான் கதிரேசு. அம்மா அழைக்க, அப்பாவும் தானும் ஒன்றாக அமர்ந்து, அம்மா மண்ணெண்ணை அடுப்பில் சுட்டு வைக்கும் சப்பாத்திகளை ஆளுக்கு இரண்டாகச் சுவைத்தார்கள் தொட்டுக்கொள்ள அம்மாவின் மாவடு ஊறுகாய் சப்பாத்தியின் சுவையைக் கூட்டியிருந்தது.
உணவு முடிந்ததும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றிருந்தபொழுது வாங்கிவந்த அந்த காந்தச்சக்கரத்தை எடுத்து சற்று நேரம் விளையாடினான், இங்கும் அங்குமாக இரண்டு கம்பிகளுக்கிடையே உருளும் காந்தச்சக்கரம் பழைய ஞாபகங்களை சிந்தனையில் உருட்டியது, மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் தன் நண்பர்களும் அந்த சிரிப்புக் கண்ணாடிகளின் முன் நின்றுகொண்டு அடித்த லூட்டி இப்பொழுதும் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது, மகேஷ் ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு "பாருடா என் வயிறு மட்டும் குண்டா இருக்கு" என்றான், ராமு ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு, "டேய் என் தலையைப் பாருடா சப்பாத்தி மாவை அழுத்திவச்ச மாதிரி சப்பையா இருக்கு", என்றான், குமரவேல், "என்னை பாருங்கடா எவ்வளவு ஒல்லியா உயரமா இருக்கேன், வானத்தையே தொட்டுவிடுவேன்" என்றான், கதிரேசுவோ ஒரு கண்ணாடியின் முன் நின்று, "எனக்கு பல்லு மட்டும் வாயைவிட பெரிசா இருக்குடா, அஹ்ஹ் ஹஹ் ஹா..." என்று எல்லோரும் கூடிச்சிரித்த நிகழ்வு ஏக்கத்தை வரவழைத்தது கதிரேசுவிற்கு.
ஓரிடத்தில் கடல்வாழ் உயிரினங்களின் காட்சி வைக்கப்பட்டிருந்தது, அங்கே இருந்த வண்ண வண்ண மீன்கள், பல வகையான அளவுகளில், அகலமாக, நீளமாக இருந்தவற்றையெல்லாம் கண்டு மாணவர்கள், "டேய் அது கெளுத்தி", "இல்லடா அது கலர் மீன், கெளுத்தி இல்ல", "இல்லடா அது விரால் மீன்", "போடா அது சின்ன சைஸ் சுறா", என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத்தெரிந்த பெயர்களைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டதும் கதிரேசுவுக்கு நேற்று நடந்ததுபோல் இருந்தது. சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றது வரலாற்று ஆசிரியர் அருணாச்சலம் சார் தலைமையில்தான். எல்லா மாணவர்களும் சீருடையில் தான் வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அருணாச்சலம் சாருக்கு அசிஸ்டென்டாக அறிவியல் ஆசிரியர் ஜோசப் சார் வந்திருந்தார்.
மாணவர்களும் ஆசிரியர்களும் எக்ஸிபிஷனில் நிறைய காட்சிப் பரப்புகளைக் கண்டுவந்தனர், மாலை இருட்டிக்கொண்டு வந்தது, பொருட்காட்சித் திடல் எங்கிலும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தது, இராட்டினங்களில் பலவகை, பெரிதும் சிறிதும், அங்கும் இங்குமாக வைக்கப்பட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வேகமாகவும் மெதுவாகவும் இயங்கிகொண்டு பார்ப்பவர்களை வசீகரித்துக்கொண்டிருந்தது. சிறுவர் பெரியோர் எனப் பேதம் இல்லாமல் எல்லோரையும் ஈர்க்க பலவித விளையாட்டுப் பொருட்களின் கடைகள் கண்கவர் விளக்குகளால் வலைவீசிக்கொண்டிருந்தன. சுடச்சுட டெல்லி அப்பளம், சுவை மிக்க பானி பூரி, மசாலா மணக்கும் பொரித்த மீன், சலசலவென சத்தத்தோடு எண்ணையில் பொரிந்துகொண்டிருக்கும் முட்டை போண்டாக்கள், காரம் மிக்க மிளகாய் பஜ்ஜிகள், கைகள் கொள்ளாத அளவுகளில் பல வண்ணங்களில் பஞ்சு மிட்டாய்கள் எனப் பல வகையான தின்பண்டக் கடைகள் சுற்றிலுமாக அடுத்தடுத்தாக நிறுவப்பட்டிருக்க, பொருட்காட்சியை சுற்றிக் களித்தவர்கள் பசியில் ருசிதேடி, மீன் வாங்குவோமா, பஜ்ஜி வாங்குவோமா, அப்பளம் வாங்குவோமா, ஐஸ் கிரீம் வாங்குவோமா என்ற குழப்பத்தில் அனைத்துவகைக் கடைகளையும் நாடினர்.
மாணவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்த அருணாச்சலம் சார், "தம்பிகளா இங்கதான் விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள் கடையெல்லாம் இருக்கு எல்லோரும் போயிட்டு வேணுங்கறத வாங்கிட்டு சரியா இந்த புக் ஸ்டால் கிட்ட வந்துடனும்", என்று அருகில் இருந்த புத்தக நிலையத்தை அடையாளம் காட்டினார், "கரெக்ட்டா பதினஞ்சு நிமிஷம்தான் அதுக்குள்ளே இங்க திரும்ப அசம்பிள் ஆயிடனும், அப்படி வரலைன்னா நாங்க விட்டுட்டுப் போயிடுவோம்", என்றார். மாணவர்கள் அனைவரும் இதற்காகவே காத்திருந்ததுபோல ஹூய் என்ற ஆரவாரத்தோடு ஒவ்வொருவரும் ஒவ்வொருதிசையில் சிட்டாகப் பறந்தனர்.
கதிரேசுவிற்குக் குழப்பம், முதலில் விளையாட்டுப் பொருள் வாங்கப் போவதா அல்லது தின்பண்டக் கடையை நாடுவதா? பதினைந்து நிமிடங்களுக்குள் எதைச்செய்ய முடியும் இந்த சார் ஒரு அரை மணிநேரமாவது கொடுக்கக் கூடாதா... என்று மனதினுள் நினைத்துக்கொண்டே, முதலில் பொம்மைக் கடைக்குப் போவோம் தின்பண்டம் கைகளில் மீதம் இருந்தாலும் அதைப் போகும்போதோ அல்லது வீட்டிற்குப் பொய்க்கூட உண்ணலாம் ஆனால் பொம்மைக் கடை அப்படி அல்ல என்று முடிவெடுத்து பொம்மைக் கடைகளில் தனது ஆசைப் பொருளான காந்தச்சக்கரத்தைத் தேடினான், தங்கைக்கோர் கீதம் படம் பார்த்ததிலிருந்தே அந்த காந்தச்சக்கரத்தின் மீது ஆசை, ஆம் அந்தப் படத்தில் செந்தாமரை அவ்வப்பொழுது தனது கையில் சிவப்புநிற காந்தச்சக்கரத்தை கம்பிகளின் ஊடாக உருட்டிக்கொண்டு வசனம் பேசுவதே ஒரு தனி அழகு. அப்படித்தானும் காந்தச்சக்கரம் உருட்ட வேண்டும் வசனம் பேசவேண்டும் என்பது கதிரேசுவின் ஆசைகளில் ஒன்று. அங்கே இங்கே தேடி ஒரு கடையில் வரிசையாகத்தொங்க விடப்பட்டிருந்த காந்தச்சக்கரங்களைக் கண்டுவிட்டான். மஞ்சள் பச்சை சிவப்பு நீலம் எனப் பல நிறங்களில் சக்கரம் இருந்தது ஆனால் கதிரேசு குறிப்பாக கடைக்காரரிடம் சிவப்பு நிறம் கேட்டு வாங்கினான், என்ன விலை என்ற கதிரேசுவின் கேள்விக்கு பதினைந்து ரூபாய் எனப் பதிலளித்தார் கடைக்காரர். அதே காந்தச்சக்கரம் தான் இதோ இப்பொது கதிரேசு கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருப்பது.
"என்னடா இன்னும் தூங்கலையா" அப்பாவின் குரல் கேட்டு தன்னிலைக்கு வந்தான் கதிரேசு.
மறுநாள் எந்த நினைப்பும் இல்லாமல், நாளை பார்க்காவிட்டால் அடுத்த ஆண்டு பொருட்காட்சி பார்த்துக்கொள்ளலாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இறைவனை வணங்கிவிட்டு பள்ளிக்கூடம் புறப்பட்டான். வழக்கத்திற்கு மாறாக பேருந்து இன்று மிகுந்த கூட்ட நெரிசலுடன் வந்தது. ஓட்டுநர் சரியாக நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சற்று தள்ளிச்சென்று நிறுத்தினார். கதிரேசு ஓடிச்சென்று பேருந்தில் பின்பக்கப் படிக்கட்டில் தொற்றிக்கொண்டான்.
"யாரப்பா அது, சார் சின்னப்ப பசங்கள படில நிக்காம கொஞ்சம் உள்ள விடுங்க சார்", என்றார் கண்டக்டர். முண்டியடித்துக்கொண்டு ஏறிய கதிரேசுவையும் இன்னும் ஒன்றிரண்டு பள்ளிக்கூட மாணவர்களையும் உள்ளே போகச்சொல்லி மிகுந்த சிரமத்திற்கிடையே ஒதுங்கி... இல்லை இல்லை ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு வழிவிட்டனர் மற்ற சக பயணியர். அந்தக்கூட்டத்திலும் சிறுவர்கள் தங்களின் பஸ் பாசை எடுத்து கைகளை உயர்த்தி கண்டக்டரிடம் நீட்டினர். பார்த்தும் பார்க்காமலும் "சரிசரி... நகரு நகரு…" என்று ஸ்டேஜை நிறைவு செய்வதில் மும்முரமாக இருந்தார் கண்டக்டர். எல்லோரும் கிட்டத்தட்ட அடுத்தவர்களின் பூட்ஸ் மற்றும் செருப்புக் கால்களை அரைகுறையாக மிதித்துக்கொண்டுதான் நின்றிருந்தார்கள் இருந்தாலும் கூட்ட நெரிசல் காலை வேளை என்பதைப் புரிந்துகொண்ட அனைவரும் அடுத்தவர் மீது கோபப்படாமல் பயணித்துக்கொண்டிருந்தனர்.
கதிரேசு நின்றிருந்த இடத்தில் அவனது கால்கள் ஏதன் மீதோ நிற்பது போலத் தோன்றியது. முதலில் யாருடைய காலின்மீதோ தனது வலது கால் இருக்கிறது என்றுதான் நினைத்தான் பின்னர் எதேச்சையாக அழுந்தியபோது பக்கத்தில் நின்றிருந்த யாரும் குரல் தரவில்லை. கண்டிப்பாக அது பிறரின் காலாக இருந்தால் தான் தவறுதலாக மிதித்தது அவர்களுக்கு வலியை கொடுத்திருக்கும் லேசாகவாவது குரல் கொடுத்திருப்பார்கள். இப்போது மீண்டும் தனது வலது காலை அழுத்தினான்... ம்... முடிவு செய்துவிட்டான்... தரையில் எதோ கிடக்கிறது, ஒரு வேளை அது மணிபர்ஸாக இருந்தால்... அதில் பணம் இருந்தால்... அடுத்த வினாடி கதிரேசுவின் கண்கள் பிரகாசித்தது... தானும் நாளை எக்ஸிபிஷன் சென்றுவரலாம். இப்போது காலின் அடியில் இருப்பதை எடுத்து தனது பாண்ட் பாக்கெட்டினுள் வைக்க வேண்டும் எப்படி? சிறிதும் தாமதிக்காமல் தலையை நிமிர்த்தி மேலே பார்த்துக்கொண்டு உட்காருவதுபோல தனது வலக்கையை மட்டும் தன் காலின் கீழே செலுத்தி காலில் தட்டுப்பட்டதை கையால் தொட்டுப் பார்த்தான் சந்தேகமே இல்லை அது மணிபர்ஸ்தான், சற்றே கனமான அந்த மணிபர்ஸை எடுத்து கையினால் தடவியபடியே எழுந்து தனது வலப்பக்க பாண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தான். பத்து வினாடிகளில் பல நிகழ்வுகள் அவனது மூளைக்குள் பிரவேசித்தது. சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும். யாரும் அந்தப் பர்ஸைத் தேடும்முன் தான் இறங்கி பள்ளிக்கூடம் செல்லவேண்டும். பாலன் சாரிடம் பெயர் பதியவேண்டும். எக்ஸிபிஷன் போக வாய்ப்பு கிடைத்துவிட்டது. இப்படி மூளை வேலை செய்தாலும் அவனது உள் மனம் கேள்வியெழுப்பியது 'இது தவறல்லவா?' 'இல்லை' என்றது வெளி மனம். காரணம் கேட்டது உள் மனம். ‘திருட்டு தவறு, ஆனால் இது திருட்டு இல்லை கீழே கிடந்ததுதானே’ என்றது வெளி மனம். இன்னும் மூன்று நிறுத்தங்கள் கடந்துவிட்டால் போதும் நான்காவது நிறுத்தம் கதிரேசுவின் பள்ளிக்கூட நிறுத்தம். பள்ளிக்கூடத்தில் இறங்கிவிட்டால் பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை.
ஆனால் அடுத்த நிறுத்தத்திலேயே அது நிகழ்ந்தது. பெருந்துக்கூட்டத்தைவிட்டு இறங்கிய ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இறங்கிய ஒன்றிரண்டு வினாடிகளில் பேருந்தின் பக்கச்சுவற்றை வேகமாகத் தட்டிக்கொண்டே "சார் சார் பஸ்ஸை எடுத்திடாதீங்க... எடுத்திடாதீங்க... என்னோட பர்ஸ் உள்ளே விழுந்திடுச்சு..." என்று குரலெழுப்பினார்.
பகீரென்றது கதிரேசுவிற்கு.
"யாரம்மா இது... எல்லாரும் அவசரமாக இருக்க நேரத்தில... பஸ்ஸை நிறுத்தச் சொல்றது..." என்று சற்றே கோபமானார் நடத்துனர்.
"உள்ள தான் எங்கயோ விழுந்திருக்கு கொஞ்சம் யாராவது பாருங்களேன்..." தொடர்ந்து குரலெழுப்பினார் அந்தப் பெண்மணி.
கதிரேசுவிற்கு இப்பொழுது பயம் பதட்டம் உச்சத்தைத் தொட்டது. மூளை முன்னர் போலவே மின்னலாய் செயல்பட்டது. அமைதியாக இருந்திட வேண்டியதுதான். தன்னிடம்தான் பர்ஸ் இருக்கிறது என்று யாருக்குத்தெரியும்?
சிலர் அங்கும் இங்கும் கீழே பர்ஸ் எதுவும் தென்படுகிறதா என்று தேடினர். சிலர் அவசரத்தில் நின்று பொறுமையிழந்து கொண்டிருந்தனர். கதிரேசுவின் வெளிமனம் பேசியது. 'சற்று நேரம் தேடிப்பார்ப்பார்கள், கிடைக்காது, கண்டக்டரும் அவசரத்தில் இருக்கிறார், பேருந்தை எடுக்கச் சொல்லிவிடுவார். பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை'. உள்மனம் மீண்டும் வினவியது 'இது சரிதானா?' மற்றவர்கள் பரபரப்பாக இருந்தாலும் அமைதியாக நின்றான் கதிரேசு.
"ஏம்மா நீ பர்ஸை இங்கதான் விட்டேன்னு எப்படி சொல்லுற, வேற எங்கயாவது விட்டிருப்ப..." என்றார் கண்டக்டர்.
"இல்ல சார், உங்க கிட்ட இருந்து டிக்கட் வாங்கீட்டு, நீங்க குடுத்த பாக்கியையும் டிக்கட்டையும் உள்ள வச்சு நான் மூடினது நல்லா ஞாபகம் இருக்கு", என்று பதிலளித்தார் அந்தப் பெண்மணி.
வெளியில் நின்ற ஒன்றிரண்டு பயணிகள், 'ஏம்பா நல்லா பாருங்கப்பா, அந்தம்மாதான் இவ்வளவு சொல்றாங்க இல்ல, கண்டிப்பா கீழ எங்கயாவது இருக்கும்' என்று அந்தப் பெண்மணிக்கு ஆதரவாகப் பேச பேருந்தில் தேடுதல் வேட்டை இன்னும் தீவிரமானது.
கதிரேசுவின் மனம், ஆசையா?, நீதியா?, நானா?, நீயா?, சரியா?, தவறா? என்று இடைவெளி இல்லாத 'பட' 'பட' துடிப்போசையில் விவாதித்துக்கொண்டிருக்க சட்டென தனது வலது கை பாண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை மின்சார வேகத்தில் எடுத்து மீண்டும் காலுக்குக் கீழே வைத்துவிட்டு, 'இதோ இங்க எதோ இருக்கு இதா பாருங்க' என்று கீழே இருந்து பர்ஸை எடுத்து நீட்டினான் அதை யாரோ ஒருவர் வாங்கி வெளியில் நின்றிருந்த பர்ஸைத் தேடும் பெண்மணியிடம் நீட்டினார். அந்தப் பெண்மணிக்குத் தனது பர்ஸ் மீண்டும் கிடைத்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி, எல்லோருக்கும் நன்றி சொன்னார், குறிப்பாக கதிரேசுவிற்கு 'நன்றி தம்பி' என்றார். அருகில் நின்றிருந்த சக பயணி ஒருவர் "அம்மா பர்ஸில் எல்லாம் சரியா இருக்கான்னு திறந்து பார்த்துக்கோங்க" என்றார். அந்தப் பெண்மணியும் சோதித்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்லிவிட்டு நடத்துனருக்கு ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தன் பாதையைத்தொடர்ந்தார். கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பேருந்து புறப்பட்டது.
அந்தப் பெண்மணி
சொன்ன ‘நன்றி’ கதிரேசுவை எதோ செய்தது. கதிரேசுவின் மனக்குதிரையின் குளம்படிச்சத்தத்தின்
டக்... டக்..... டக்...... டக் குகளுக்கு இடைவெளி அதிகமாகிக்கொண்டிருந்தது.
"சின்னப்
பையன் அதான் நேர்மையாக் கொடுத்துட்டான்" என்றார் கூட்டத்தில் ஒருவர். "வேற
யாருமா இருந்தா பாக்கெட்ல போட்டுக்கிட்டு தெரியாத மாதிரி போயிருப்பாங்க" என்றார்
மற்றொருவர். "கள்ளம் கபடமில்லாத பிள்ளை மனசு அதான்" என்றார் பின்னாலிருந்து
ஒருவர். கதிரேசு இப்போது ஒரு பேசு பொருளாக, காட்சிப் பொருளாக பேருந்தில் நின்றிருந்தான்.
சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும் பேருந்தில் இருந்து இறங்கவேண்டும் என்ற
உணர்வில் படிகளை நோக்கி அடியெடுத்து வைத்தான் கதிரேசு. அருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி
கதிரேசுவின் கையைப் பிடிக்க... திரும்பி பாட்டியைப் பார்த்தான் கதிரேசு, "நீயா
இருந்ததால குடுத்துட்டே, வேற மனுசனா இருந்தா பாவம் அந்தப் பொண்ணு பணத்தைத் தொலைச்சிருக்கும்,
நீ நல்லவன், நல்லா இருப்ப" என்று ஆசி கூற, கதிரேசு தான் செய்வதறியாது பாட்டியிடமிருந்து
தனது கையை மெதுவாக விடுவித்துக்கொண்டு படிக்கட்டுகளை நோக்கி நகர்ந்தான்.
… மீ.மணிகண்டன்
Sep-09-2020
சனி, 22 ஏப்ரல், 2023
பரிசுகளும் பாராட்டுகளும்...
மீ.மணிகண்டன் பரிசுகளும் பாராட்டுகளும்...
![]() |
| FeTNA 2023, Sacramento, CA |
ஆண்டு 2025 (03-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'செம்புலப் பெயல் நீர் போல'.
ஆண்டு 2024, அன்னை ஸ்வர்ணாம்பாள் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு. கதை: வேண்டுதல்
ஆண்டு 2023 (12-Aug-2023), Nagarathar Writers, கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு, நகரத்தார் எழுத்தாளர்கள் அமைப்பு, கொடுக்கப்பட்ட தலைப்பு: நகரத்தார்கள் பெருமைகள்.
ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான கவிதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'ஒற்றையடிப் பாதை'.
ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'அன்பே செல்வம்'.
ஆண்டு 2023 (01-Jul-2023), கதிர்'ஸ் பல்சுவை மின்னிதழ் - இளவல் ஹரிஹரன் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு. கதை: ஜாஹ்ரா
ஆண்டு 2023, துகள் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'தாய்'.
ஆண்டு 2023, பண்ணாகம்.கொம் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய பாடல் எழுதும் போட்டியில் பரிசு.
ஆண்டு 2023, அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.
ஆண்டு 2023, குவிகம் மாத இதழ் நடத்திய குறும்புதினப்போட்டியில் பரிசு. குறும்புதினம்: முதல் பயணம்.
ஆண்டு 2022, வலஞ்சுழி வலைத்தளம் நடத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு. சிறுகதை: அகம்.
ஆண்டு 2021, அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'காதல் வானிலே'.
ஆண்டு 2018, படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பிற்கான விருது. கவிதை: நகராத ஒரு கணம்
ஆண்டு 2017, மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ்மணி மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு. சிறுகதை: புத்தகம் மூடிய மயிலிறகு.
ஆண்டு 2015, 'மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது' வழங்கியவர்கள் 'இணையதளப் படைப்பாளிகள் பேரவை', புதுச்சேரி.
ஆண்டு 2014, eluthu .com தளத்தில் கவிதைகளுக்குப் பரிசுகள். கொடுக்கப்பட்ட கவிதைத் தலைப்புகள்: கற்றவை பற்றவை, பூக்களோடு ஒரு கைக்குலுக்கல், அழகான வாழ்க்கை ஆனந்தமாய், நாளைய தமிழும் தமிழரும்
படைப்பு விருது பெற்ற கவிதை
2018ம் ஆண்டு ஜூலைத் திங்கள் படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பு விருது.
முதற்பரிசுக் கவிதை
வெள்ளி, 21 ஏப்ரல், 2023
கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்
கொரோனாவின் தொடக்க காலத்தில் எழுதிய நகைச்சுவைக் கதை. நாடகமாக்கிட ஏதுவாக அதிகம் உரையாடலாக எழுதிய கதையிது.
கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்
சிறுகதை எழுதியவர் மீ.மணிகண்டன்
எழுதிய நாள்: Feb-04-2020
| கொக்கரக்கோ |
"என்ன இது..."
"இன்னைக்கு சண்டே..."
"தெரியும் சண்டே ... இது என்ன..."
"சிக்கன்..."
விடுவிடுவென சமயலறைக்குள் நுழைந்தாள் ப்ரேமி, "ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?" என்றாள் அடுப்பிலிருந்து வெந்த இட்டலியை
இறக்கி வைத்துக்கொண்டே.
"எந்த ஊர்ல..."
"ம்… நாம எந்த ஊர்ல இருக்கோம்..."
"அம்மாடி... புரியுற மாதிரி ஏதாவது சொல்லுறியா..."
"டி.வி. பாக்கறீங்க... யூடியூப் பாக்கறீங்க... எதுவுமே தெரியாத மாதிரி என்னைக் கேட்கறீங்க..." என அடுப்புச்சூட்டில் பொரிந்தாள்.
"ஸ்... அப்பா... தலை வலிக்குது... கொஞ்சம் காபி போட்டுத் தருவியா?"
"அம்மாடி… தலை வலியா... இதோட ஆரம்பம் தலை வலின்னு எந்த யூடியூப் லையோ சொன்ன மாதிரி இருக்கே... கடவுளே மறுபடி அதைப் பார்க்கலாம்னா
எந்த சேனல் ன்னு அவசரத்துல ஞாபகம் வரமாட்டேங்குதே..." பயமும் கவலையும் கலந்துகட்ட, படபடத்தாள்.
"சரிதான்... காபியும் இல்லையா... பரவால்ல நான் வெளில போய் கடையில சாப்பிட்டுக்கறேன்..."
"போகும்போது நீங்க வாங்கிட்டு வந்ததை ஓபன் பண்ணாம எடுத்துட்டு போய் குப்பைல போடுங்க..."
"அடிப் பாவி... சிக்கன் விக்கற விலைக்கு... அப்படியே தூக்கி ஏறியச் சொல்லுற.. ஓஹோ... சிக்கன்தான் இவ்வளவுக்கும் காரணமா... இப்பப் புரியுது..."
"ம்... புரிஞ்சா சரி..."
"அடியே... அது எங்கயோ... யாருக்கோ கொரோனான்னு நியூஸ்ல சொல்றாங்க அதுக்காக நம்ம ஊர் சிக்கன் என்னடி பண்ணுச்சு?" என்று. கோழி சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் கிறங்கினான் பிரகாஷ்.
வாசற்கதவு தட்டும் ஓசை கேட்க, பிரகாஷ் சாளரம் வழியே எட்டிப்பார்த்தான், வெளியே யாரோ முகத்தை மூடிக்கொண்டு நின்றார்கள். நின்றவர் மீண்டும் கதவைத்தட்டினார்,
"யாரது..."
"நான்தான்..."
ப்ரகாஷிற்கு வெளியே நிற்பவர் "நான்தான்" என்று சொல்வது புரிகிறது அதனைத்தொடர்ந்து அவர் சொல்வது என்னவென்று புரியவில்லை. ஒருவேளை
அவர் முகத்தை மூடாமல் பேசினால் புரியும்.
சமையலறை விட்டு வெளியே வந்த ப்ரேமி, “கதவைத் திறந்துதான் பேசுங்களேன்..." என்று கதவைத்திறக்க அடி எடுத்து வைத்தாள்.
"ஏய்... நில்லு... அவர் முகத்தை மூடி இருக்கார்... யாராவது முகமூடித் திருடனா இருக்கப் போகுது..."
கதவு மீண்டும் தட்டப்பட்டு, "நான்தான்..." என்றுவிட்டு இன்னும் எதோ சொல்கிறார்...
சற்று உன்னிப்பாகக் கேட்ட ப்ரேமி சிரித்துக்கொண்டே, "அப்பா..." என்றாள்.
"என்னது உங்க அப்பாவா?"
"ஹையே... ஆமாங்க... உங்களுக்கு அப்பாவோட குரல் தெரியலையா?"
கதவைத்திறந்தாள் ப்ரேமி, "வாங்க அப்பா... என்ன இது முகமூடி?"
"வாங்க மாமா, என்ன ஒரு போன் கூட பண்ணல..."
முகத்தை மூடியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு, " அப்பாடா... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்…” என்று மூச்சை இழுத்துவிட்டுச் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “சண்டே.. சும்மாதானே இருப்பீங்கன்னு அப்டியே கிளம்பி வந்துட்டேன் மாப்ள..."
"சரி இதென்ன கெட்டப்?"
"அட நீங்க வேற... ஏதோ கொரோல்லா வாமே அதுக்கு பயந்துதான்..."
"மாமா... அது கொரோல்லா இல்ல... கொரோனா…"
"எதோ ஒண்ணு... அத விடுங்க இன்னைக்கு என்ன சமையல்? யார் சமையல்?"
"என்னப்பா சண்டே இங்க வந்தா கொக்கரக்கோ சாப்பிடலாம்னு வந்துட்டீங்களா..."
"அதென்ன கொக்கரக்கோ... சிக்கன்னு செல்லமா சொல்லக்கூடாதா..."
"ஆண்டவா... ஆண்டவா... அந்தப்பேரை சொன்னாக்கக்கூட சைனால இருக்கறது சைதாப்பேட்டைக்கு சட்டுன்னு வந்துடுதாம்... காத்துல அவ்வளவு வேகமாப் பரவுதாம்... அதான் அந்தப் பேரைக்கூடச் சொல்லமாட்டேன்." எச்சரிக்கைக் கொடி பிடித்தாள் ப்ரேமி.
"அடடா... நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டே ப்ரேமி... சிக்கனுக்கும் கொரோல்லாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல..."
"மாமா... அது கொரோனா..." மாமனாரை மீண்டும் திருத்தினான் பிரகாஷ்.
"விடுங்க மாப்ள... எனக்கு அப்படித்தான் வருது... சரி மாப்ள நீங்க இன்னும் சிக்கன் வாங்க கடைக்குப் போகலையா?"
"மாமா... அதெல்லாம் ஆச்சு... இப்போ இந்த சிக்கன் குப்பைக்குப் போகணுங்கறதுதான் ப்ரேமியோட போராட்டம்... இந்தப் போராட்டத்துக்கு நீங்கதான் சமாதானக் கொடி கட்டணும்..."
"அம்மாடி... உங்க அம்மா சைவமா இருந்துக்கிட்டு எப்பவுமே வெஜ்தான்... உனக்கு தெரியாதா... எப்பவோ ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை சிக்கன் சாப்பிடுறதுக்காக நாலு தெரு தள்ளி உங்க வீட்டுக்கு வறேன்... ஏமாத்திடாதடா கண்ணு..." என்று மகளைக் கெஞ்சினார் அப்பா.
"மாமா நீங்க தலை கீழ நின்னாலும் சரி... இன்னிக்கு இட்லி சாம்பார்தான்..."
"ஆமா... இப்ப இட்லி ரெடியா இருக்கு ரெண்டு பெரும் வாங்க மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பார் இருக்கு... மதியானத்துக்கு கொக்கரக்கோ மாதிரியே உங்களுக்கு காலிபிளவர் பொரியல் செஞ்சு தரேன்..."
"பாத்தீங்களா... மாமா... நான்... சொன்னது சரியா..."
இவர்களின் உரையாடலுக்கு நடுவே உள்ளே எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்த பப்பு வெளியில் ஓடிவந்தான், "தாத்தா க்ரோனா என்ன…"
"அட உனக்கும் இது தெரிஞ்சுடுச்சா... அது எதோ கண்ணுக்குத் தெரியாத பூச்சியாம்..." பேரனுக்குப் பாடம் சொன்னார் தாத்தா.
"அடடா... மாமா கொஞ்சம் நிதானமா... குட்டிப் பையன குழப்பிடாதீங்க... அவன் கேட்கறது கொரோனா இல்ல... க்ரோனா என்ன? அதாவது C R O W க்ரோ அப்படின்னா என்ன?
"ஓஹோ... அதானே பார்த்தேன்... இதக் கண்டுபுடிச்சே ஒரு மாசம்தான் ஆகுது அதுக்குள்ளே எப்படிடா ப்ரீ கே ஜி க்கு பாடமா வந்ததுன்னு…" என்று இழுத்துச் சமாளித்தார் தாத்தா.
சத்தமில்லாமல் சிக்கன் பையை எடுத்து சமையலறையில் ப்ரேமி பார்வை படும்படி வைத்துவிட்டு வந்தான் பிரகாஷ். இதனைக் கண்ட ப்ரேமி, "சொன்னா கேட்க மாட்டீங்க..." என்று ஒரு அதட்டல் போட. "இன்னிக்கு மட்டும்தான்..." என்று கெஞ்சலாகச் சொல்லிவிட்டு மாமனாருடன் உரையாட ஹாலுக்கு வந்தான் பிரகாஷ்.
பின்னாலேயே பையைத்தூக்கிக்கொண்டு ஓடிவந்த ப்ரேமி, "என்னங்க என்ன இது சிக்கன்னு சொல்லி காலிபிளவர் வாங்கிட்டு வந்திருக்கீங்க..."
"ஏய் சும்மா சமாளிக்காத... நான் கொண்டு வந்தது சிக்கன்தான்..."
"அட இங்க பாருங்க..." என்று பையை திறந்து காட்டினாள். ப்ரகாஷிற்குப் புரியவில்லை. "நான் சின்னையா கடையிலிருந்து சிக்கன்தானே வாங்கி
வந்தேன்... அவர் சிக்கன் வெட்டி பையில் போடும்போது பார்த்தேனே..." என்று யோசித்தான். "சரி ஒரு எட்டு அவர் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்," என்று கிளம்பினான்.
"இன்னிக்கு காலிபிளவர் பொரியல்தான்..." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் ப்ரேமி.
கடை காலியாக இருந்தது. இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது. "ஆஹா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டாரா?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான்.
"என்ன மாப்ள சிக்கன் கொண்டு வந்துடீங்களா?" என்றார் மாமனார் ஆவலுடன்.
"இல்ல மாமா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டார்…"
"சோ வாட், அவருக்கு ஒரு போன் போடறது..."
"ஆமா மாமா, நல்ல யோசனை" என்று தனது மொபைல் போனை எடுத்து சின்னையாவிற்கு டையல் செய்தான் பிரகாஷ்.
மறுமுனையில், " ஹலோ…"
"அண்ணே நான்தான் பிரகாஷ் பேசுறேன்..."
"சொல்லுங்க தம்பி..."
"அண்ணே நான் உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்த சிக்கன் வீட்டுக்கு வந்ததும் காலி ப்ளவரா மாறிடுச்சு..." என்று சிரித்தான்
"அடடே அது நீங்க தானா…"
"என்ன சொல்றீங்க?"
"ஆமா பிரகாஷ் தம்பி, நான் வீட்டுக்கு வாங்கி வச்சிருந்த காலி ப்ளவரை நீங்க மாத்தி எடுத்துட்டு போயிட்டீங்க போல..."
"நான் அந்தப் பையை மாத்தி எடுத்தபோதே சொல்லக்கூடாதா?"
"அட... எனக்கெப்படி தெரியும் நீங்க மாத்தி எடுத்தீங்கன்னு? நான் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பறப்போ பார்த்தா அந்தப் பையில சிக்கன் இருக்கு. சரி யாரோ மாத்தி எடுத்துட்டு போய்ட்டாங்க கேட்டா சொல்லலாம்னு இருந்தேன். இப்ப தான் தெரியுது நீங்கதான்னு... சரி நாளைக்கு கடைப்பக்கம்
வரும்போது மறக்காம என்னைப் பாத்து சிக்கன் காசை திரும்ப வாங்கிக்கோங்க... சரியா?"
"அட அது இருக்கட்டும் அண்ணே, இன்னிக்கு நம்ம சிக்கன் கனவை மொத்தமா கலைச்சுடீங்களே…"
மெளனமாக இருந்தார் சின்னையா
"சரி அண்ணே உங்களுக்கு சண்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையா, அதுவும் சொந்தமா கடை வச்சிக்கிட்டு…"
"நமக்கு வெஜ் தான் எப்பவும் ஸ்பெஷல் தம்பி. சிக்கன் நமக்கு தொழில் அவ்வளவுதான்."
"ஆச்சர்யமா இருக்கு..."
"ஆமா... கொஞ்சநாளைக்கு முன்னே யாரோ சொன்னாங்க வெஜ்தான் ஹெல்த்துக்கு நல்லதுண்ணு, அதுலேருந்து நாங்க வீட்டோட வெஜிடேரியனா மாறிட்டோம். சரி தம்பி மணக்க மணக்க வத்தக் குழம்பு என்னைக் கூப்பிடுது நான் இப்போ போனை வைக்கிறேன், நாளைக்கு மறக்காம கடைப்பக்கம் வந்து காசை வாங்கிக்குங்க" என்று போனை வைத்தார் சின்னையா.
"என்ன மாப்ள ரொம்ப நேரமா உரையாடல்..."
"ம்... அது ஒன்னும் இல்ல மாமா... இனிமே நம்ம வீட்டில... வெஜ்தான்..." என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு பிரகாஷ் எழ, மாமனார் "வடை போச்சே..." என்று விழிக்க...
"ப்ரேமி... காலிப்ளவர் பொரியல் ரெடியா..." என்று சமையலறை நோக்கி அடி எடுத்துவைத்தான் பிரகாஷ்.
... மீ.மணிகண்டன்
வியாழன், 2 மார்ச், 2023
மௌனம் திறக்கும் கதவு
எனது கவிதை வரிகள் இடம்பெற்ற மற்றுமொரு தொகுப்பு 'மௌனம் திறக்கும் கதவு'. திரு ஜின்னா அவர்களுக்கு நன்றி!
ஆண்டு: 2017
பிரபலமான இடுகைகள்
-
2022 ம் ஆண்டு குவிகம் நடத்திய குறும்புதினப் போட்டியில் தேர்வான குறும்புதினம். முதல் பயணம் . எழுதியவர்: மீ.மணிகண்டன்
-
சிறுகதையின் தலைப்பு: புத்தகம் மூடிய மயிலிறகு எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ) சிறுகதை இடம்பெற்ற புத்தகமும் பரிசும் ... மணிமீ ...
-
நகரத்தார் எழுத்தாளர்கள் பரிசுக்கவிதை கொடுத்த தலைப்பு: நகரத்தார் பெருமைகள் கவிதை எழுதியவர்: மீ.மணிகண்டன் நகரத்தார்கள் பெருமைகள்... மீ.மணி...












