சனி, 30 ஜூலை, 2022

தலப்பாக்கட்டி சினிமா ... மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு:  தலப்பாக்கட்டி சினிமா 

எழுதியவர்: மீ.மணிகண்டன்

பிரகாஷ் டைனிங் டேபிளில் அமர்ந்து மனைவியின் கைவண்ணத்தை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான், "சாம்பார் சாம்பார் மாதிரியே செஞ்சிருக்க, வாவ்"

"இல்லாட்டி அது சாம்பார் இல்லையெங்க"

இடது கை போனில் வாட்ஸாப் நகர்த்த, வலது கை இட்லியைப் பிட்டு சாம்பாரில் பிசைந்து வாய்க்கு கூரியர் செய்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில்... "பிரேமி… காஃபில உப்பு இல்ல..." என்றான்

"என்னது..."

"ஐ மீன்...  காஃபில இனிப்பு இல்ல... சூடும் இல்ல… சப்பு ன்னு இருக்கு..."

"நான் டேபிள்ள காஃபியே வைக்கலியே..."

"வைக்கலியா.... " மொபைல் போனிலிருந்து கவனத்தை குவளைக்குத் திருப்பினான் அது தண்ணீர்க் குவளை, அப்போதுதான் புரிந்தது தான் அருந்தியது தண்ணீர் என்று.... "ஹே... சாரி.... தண்ணியில சுகர் இல்ல...."

சமயற்கட்டை விட்டு வெளியில் வந்த பிரேமி, "அன்பான கணவரே... என்ன ஆச்சு இன்னிக்கு.. காஃபில உப்பு இல்லங்கறீங்க... தண்ணில சுகர் இல்லங்கறீங்க...."

" ம்.... எல்லாம் இந்த வாட்ஸாப்ப்பால வந்தது... ஓ.கே. காஃபிய ஃபிக்ளாஸ்கில தந்துடு... நான் கொஞ்சம் அவசரமா கிளம்பறேன்...."

"என்ன அவசரமோ...ம்... " சொன்னவள் மெதுவாக புன்னகைத்தபடி தொடர்ந்தாள், "அப்பறம் ஈவினிங் சீக்கிரம் வந்துடுவீங்களா... "

"ஏன் கேட்குற"

"இல்ல.... ரொம்பநாள் ஆச்சு தியேட்டர்க்கு போயி...."

"மை டார்லிங்...இவ்வளவுதானா... இதுக்குப் போயி.. இவ்வளவு யோசனையா....ம்.... நீ சொல்லிட்டா தென் நோ அப்ஜெக்சன்"

"எந்த படம்னு சொன்னீங்க னா.."

"சி... நீ தான் ஆரம்பிச்ச... நீயே டிசைட் பண்ணு.."

"ஓ.கே. கமல் படம்.."

"ஓ.கே.... சரி சரி நான் இப்போ கெளம்பனும் டைம் ஆகுது... ஓ.கே. டார்லிங்...." 

"பை.."

பிரகாஷ் புறப்பட்டு சென்றபின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட் கிளம்பினாள் ப்ரேமி. ஷாப்பிங் முடித்து வீடு திரும்பிய ப்ரேமி பிரகாஷுக்கு போன் செய்தாள், "என்னங்க..."

"என்ன..."

"அது வந்து... கமல் படம் வேண்டாம்"

"வொய்.. "

"வந்து... மார்க்கெட்ல காய் வாங்கும்போது பக்கத்துல பேசிக்கிட்டாங்க புதுசா வந்திருக்க ரஜினி படம் நல்லா இருக்காம்.."

"ஓ.கே. இட்ஸ் யுவர் சாய்ஸ்"

தலப்பாக்கட்டி சினிமா ... மீ.மணிகண்டன்

போனை வைத்து விட்டு இருக்கையில் துள்ளிகுதிதான் பிரகாஷ் "வாவ் இன்னிக்கு தியேட்டர் போறோம்... ரிட்டர்ன் வரும்போது தலப்பாக்கட்டி... தென் வீட்டில... என்ஜாய்..."

சினிமாவிற்கு கிளம்பும் ஆவலில் சீக்கிரம் வேலைகளை முடிப்பதில் மும்முறமாக இருந்தாள் ப்ரேமி. மாடியில் துணி காயப்போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்... கணவனுக்கு போன் டயல் செய்தாள் "ஹலோ.."

"என்ன டார்லிங்.. "

"வந்து மாடில துணி காய போடும்போது செகண்ட் ஃபிளோர் கீதா சொன்னா விஜய் படத்துக்குத்தான் கூட்டம் நிறையுதாம் அதுனால...”

"அதுனால என்ன ரஜினி படம் வேண்டாம்.... இஸ் இட்..."

"ம்..." என்றாள் சற்றே நாணத்தோடு.

"உன் சந்தோஷமே என் சந்தோஷம்..." என்றான் மறுப்பேதும் இல்லாமல் பிரகாஷ்.

"தேங்க்ஸ்ங்க... ம்மா...." என்று உற்சாகம் ஆனாள் ப்ரேமி.

அலுவலகத்தில் பிரகாஷின் மனத்திரையில் ஓடியதெல்லாம் தலப்பாக்கட்டிதான் மற்றபடி எந்தப் படமாக இருந்தாலும் அவனுக்கு அது ஒரு பொருட்டல்ல.

பிரகாஷ் டெஸ்கில் போன் ஒலித்தது... எதிர்முனையில் CEO "பிரகாஷ் இன்னிக்கு சர்பிரைஸ் ஆடிட் இருக்கு... டீம் க்கு தெரியவேண்டாம்... நீங்க ஈவினிங் கொஞ்சம் ஸ்டே பண்ணனும்..." சொல்லிவிட்டு பிரகாஷின் பதில் எதிர்பாராமல் போன் கட் ஆகிவிட்டது. ‘இதென்னடா வம்பாய் போச்சு எப்படி சமாளிப்பது’ என்று பிரகாஷ் மூளைக்கு வேலை கொடுக்கத் துவங்கினான்.

மணி மதியம் இரண்டு முப்பது, பிரகாஷ் மொபைல் போன் ஒலித்தது எடுத்துப் பார்த்தான், பிரேமி..."ம்... என்ன..."

"வந்து... விஜய் படத்துக்கும் வேண்டாம்னு முடிவாகிடுச்சு.."

"நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அப்பறம் முடிவாகிடுச்சுன்னு சொல்றியா... சரி சொல்லு வேற எந்தப் படம்..."

"தல படத்தப்பத்திதான் இப்ப லேடிஸ் பேசிக்கிறாங்க... சோ... அஜித் படம்..."

"ஓ.கே. எனக்கு ஆஃபிஸ்ல கொஞ்சம் சமாளிக்க வேண்டிய வேலை இருக்கு... நான் இப்போ போனை வைக்கிறேன்... "

"நீங்க உங்க வேலையை பாருங்க... நான் உங்க கிட்ட சொல்லாம எதுவும் செய்வேனா... அதான் உடனுக்குடன் அப்டேட்.."

"ஓ.கே. ஓ.கே. " போனை வைத்துவிட்டு சிந்தனையைத் தீவிரமாக்கினான் பிரகாஷ், எப்படி மாலை சீக்கிரம் வீட்டிற்கு செல்வது... நீண்டநாட்களுக்குப் பிறகு பிரேமி கேட்கிறாள்... இன்று விட்டுவிட்டால் நாளை மாமனார் மாமியார் வந்துவிடுவார்கள்... தனியே படம் பார்க்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு இருக்காது... சிந்தனை தொடர்ந்தது...நடுவில் மத பேதமின்றி தனக்குத் தெரிந்த கடவுளர்களின் பெயர்களையெல்லாம் மனதில் கூட்டி பிரார்த்திக்கொண்டான் பிரகாஷ்... எதிரில் தன் உடன் வேலை செய்யும் விமல் வரவைப் பார்த்ததும்.. "டேய் ஒரு ஹெல்ப்..." என்று அவனிடம் விஷயத்தை சொல்லத் துவங்கினான் ஆனால் CEO இது சர்பிரைஸ் ஆடிட் என்று சொன்னது நினைவிற்கு வரவே..."இல்ல...." சற்று சமாளித்து "சரோ கேபின்ல இருக்காளா..." 

"ஏண்டா IM ல ஆன்லைன்ல காட்டலையா..." என்றான் விமல்.

"எஸ்... மறந்துட்டேன்.... நானே செக் பண்ணிக்கிறேன்..." "கடவுளே... சினிமா... தலப்பாக்கட்டி...." மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது பிரகாஷிற்கு.

டேபிள் போன் ஒலிக்க, அவசரமாக எடுத்தான்," பிரகாஷ் ப்ரோக்ராம் கான்சல்ட்... இன்னிக்கு ஆடிட் இல்ல... பட் எனக்கு ஆன்வல் ஸ்டேட்மென்ட் மட்டும் கொடுத்துட்டுப் போங்க... ஐ நோ இட் ஐஸ் நாட் தட் ஈஸி... பட் ஐ நீட் இட்..." CEO விடமிருந்து வந்த போன் மீண்டும் பிரகாஷின் பதிலுக்குக் காத்திராமல் கட் ஆனது. 

மனதிற்குள் நினைத்துக் கொண்டான் பிரகாஷ் "பாவி மனுஷா ஆடிட் இல்லன்னு சொல்லி பால வார்த்துட்டு கூடவே ஸ்டேட்மென்ட் கேட்டு சுடுதண்ணி ஊத்திட்டியே... அதுக்கு கொறஞ்சது நாலு மணி நேரம் ஆகுமே..." அருகில் காஃபி பிளாஸ்க் பார்வையில் பட்டது... மனைவியின் நினைவும் வந்தது.. "ஆசையாக காத்திருப்பாளே..." என்று நினைத்த பிரகாஷ் சட்டென ஏதோ தெளிவு கிடைத்ததுபோல் விமலின் உதவியை நாடினான்.. "டேய் இதுமட்டும் செய்... ஓவர் டைம் நான் சைன் பண்ணுறேன்.." என்று CEO தன்னிடம் ஒப்படைத்த வேலையை பிரகாஷ் விமலிடம் கைமாற்றினான், ‘ஒரு வழியாக சமாளித்து விட்டோம்’ என்ற மன நிம்மதியில் காஃபியை கோப்பையில் ஊற்றினான் பிரகாஷ்.

மொபைல் போன் ஒலித்தது, எடுத்தான் எதிர்முனையில் ப்ரேமி, "என்ன அடிக்கடி போன் போடுற...."

"இல்ல ஒரு விஷயத்தை சுத்தமா மறந்துட்டேன், நாளைக்கு அப்பா அம்மா வராங்க இல்ல அதுக்காக கெஸ்ட் ரூம் ரெடி பண்ணியிருந்தேன்ல.."

"ஆமா..."

"ஆனா கெஸ்ட் ரூம்க்கு கர்ட்டன் ஆல்டர் பண்ண கொடுத்ததை வாங்க மறந்துட்டேன், ஆனா தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி வாங்கிட்டு வந்துடறேன்.."

"இதைக்கூட என்கிட்டே சொல்லனுமா.."

"அப்டேட்..." என்று சிரித்துக்கொண்டாள் ப்ரேமி.

சின்னச்சின்ன அலுவல்களை முடித்துக்கொண்டே நேரம் எப்போது ஐந்தைத்தொடும் என்று காத்திருந்த பிரகாஷ், கடிகார முட்கள் சரியாக ஐந்தைக் காட்டியதும் விடுவிடுவென பறந்தான்... பார்க்கிங் வந்து கார் ஸ்டார்ட் செய்து பறக்க விட்டான். சாலையும். சரம் சரமாய் மனிதர்களும். சர் சர் என்ற போக்கு வரத்தும் பிரகாஷின் பயணத்தில் பொம்மைகளாய்க் கடந்தன. காரை வீட்டு வாசலில் பார்க் செய்துவிட்டு வேகமாக வாசற்கதவை நாடினான். கதவு பூட்டியிருப்பதுபோலத் தோன்றியது. சந்தேகத்தில் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு வெளிக் கதவைத் திறந்தான். உள்ளே வெளிச்சம் இல்லை இருட்டாகவே இருந்தது. விளக்கை பளிச்சிட்டான். "பிரேமி..." கூப்பிட்ட குரலுக்கு பதில் வரவில்லை... ‘ஆல்ட்ரேட் செய்த கர்ட்டன் வங்கச் சென்றவள் இன்னும் வீடு திரும்பவில்லையோ’ என்ற நினைப்பில் நுழைவரை தாண்டி சமயற்கட்டுக்குச் சென்று பார்த்தான் அங்கும் இல்லை.. பின்புறம் பால்கனி வந்தடைந்தான்.. அங்கும் இல்லை... "பிரேமி..." போனை எடுத்து நம்பரை அழுத்தினான்... ரிங் செல்கிறது ஆனால் பதில் இல்லை.. யோசனையில் இருக்கையில் அமர்ந்து போனை எதிர் மேசையில் வைத்தான்… 

டடங்... போன் ஒளிர்ந்தது எடுத்துப் பார்த்தான் பிரேமியிடமிருந்து வாய்ஸ் மெசேஜ்... "என்னங்க நீங்க ரொம்ப பிஸின்னு சொன்னிங்களா அதான் புறப்படும்போது கூட சொல்லல அதான் இப்போ மெசேஜ் பண்றேன்... செகண்ட் ஃபிளோர் கீதா ஆண்லைன்லயே டிக்கட் போட்டுட்டா நாங்க ரெண்டு பெரும் ஊபர் புடிச்சு வந்துட்டோம்... உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு... டேபிள்ல சாப்பாடெல்லாம் வச்சிருக்கேன்... நீங்க எனக்காக எதுவும் வைக்காதீங்க... நீங்க வேணுங்கறத சாப்பிடுங்க... எனக்கு இல்லன்னாக்கூட நான் வந்து உப்மா செஞ்சுக்குவேன்... சரியா... டேக் கேர்..." வாய்ஸ் மெசேஜ் நிறைவானது. தலப்பாக்கட்டி பிரியாணிக்குள்ளிருந்து இரண்டு ஆடுகள் தலையை வெளியே நீட்டியது.!

 ...மீ.மணிகண்டன்

ஞாயிறு, 24 ஜூலை, 2022

அத்தனையும் பச்சை நிறம் ... மீ.மணிகண்டன்

 வணக்கம் அன்பு நண்பர்களே,

மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறிவிடவேண்டும் என்று எண்ணுவது மானுட இயல்பு. எண்ணங்களில் எது உகந்தது எது மாறானது என்று வரையறுக்கும் சக்தி ஒன்று உண்டெனில் அதுவும் மானுடமாகவே அமைந்துவிடுவது உலக நடப்பு. இயல்பையும் நடப்பையும், உறவையும் வயதையும் கொண்டு நான் புனைந்த சிறுகதை 'அத்தனையும் பச்சை நிறம்'. படித்துப்பார்த்துத் தங்களின் கருத்துகளைத் தளத்தில் பகிர்ந்து ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

...மீ.மணிகண்டன் 

அத்தனையும் பச்சை நிறம் ... சிறுகதை ... மீ.மணிகண்டன் 

அத்தனையும் பச்சை நிறம் ... மீ.மணிகண்டன்
கடற்கரை அலைகள் காவியாவின் கொலுசணிந்த பாதங்களை நனைத்து நனைத்து மகிழ்ந்து களித்துக்கொண்டிருந்தன. காவியாவின் மனதில் எப்பொழுதும் தோன்றும் எண்ணம் மறுபடி நிழலாடியது. இந்தக் கடற்கரைக்கு வரும்நேரமெல்லாம் அந்த நினைப்பு தொடர்ந்துவிடும். என்று அந்த ஆசை நிறைவேறுமோ? என்கிற ஏக்கம் சற்றே தலைதூக்கும். 'இந்த அப்பாவிடம் எத்தனை முறை கேட்டுவிட்டேன் எப்பொழுது கேட்டாலும் ஏதாவது ஒரு பதில், மிகவும் சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பதில்களைத் தந்துவிடுகிறார், என்னாலும் அதற்கு மேல் பேச முடியவில்லை. அப்படி என்ன கேட்டுவிட்டேன், அதோ தெரியும் கப்பலில் ஏறிப் பயணிக்க வேண்டும் அவ்வளவுதான் இது ஒரு பெரிய சவாலா? என்ன... கரையிலிருந்து கப்பல் வரை நடந்துபோக முடியாது... தெரியும், அதற்குத்தான் கரையில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுமரங்கள் இருக்கின்றனவே, அதில் ஒன்றைச் செலுத்தி கப்பலை எட்டிவிட்டால் பின்னர் கப்பலில் ஏறிவிடலாம் பிறகென்ன ஆனந்தப் பயணம்தான். என்ன எனக்கு மட்டும் பலமிருந்தால் நானே அந்தக் கட்டுமரத்தில் ஒன்றைத்தள்ளிக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவேன், எனக்கு அத்தனை பலம் இல்லாத காரணத்தால்தான் அப்பாவை நாடுகிறேன், அவரும் இன்று வேண்டாம், நாளை என்பார், அடுத்த முறை கேட்டால் பயணச்சீட்டு வாங்க வேண்டுமென்பார், மறுமுறை... கப்பல் தரை தட்டிவிட்டதாம் என்பார் இப்படிப் பல காரணங்கள் சொல்லிக்கொண்டே வருகிறார். இந்த பதில்களை அவர் முன்னமே தயார் செய்து வைத்திருப்பாரோ? ', என்று தனக்குள் கூடிவந்த தன் தந்தைமீதான கோபத்தை அணைக்கும் விதமாகக் கடல் நீரைத் தன் இரு கரங்களாலும் அள்ளிப் பருகினாள், உப்பு நாவைத்தாண்டி தொண்டையைத்தொட, க்கு... க்கு... என்று இருமிக்கொண்டு த்து... த்து... எனக் குடித்ததுபோக மீதமிருந்த தண்ணீரை வாயிலிருந்து துப்பினாள். 'ப்ரியா..' என்று அப்பாவின் கோபம் கூடிய குரல் கேட்டதும் சுதாரித்த காவியா, 'ம்... முடிந்தது... இனிப்போகாமல் இருந்தால் ப்ரியா பாவம்', என்று தனக்குள் எண்ணிக்கொண்டு கடல் அலைகளை விட்டுப் பின்வாங்கிப் ப்ரியாவை நாடினாள் காவியா.  

கடற்கரை மணலில் சட்... சட்... சட்... என்று குளம்படிச்சத்தம் கிளப்பிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிய குதிரைகளைப் பார்த்த காவியாவிற்கு குதிரைச்சவாரி செய்ய ஆசை கிளம்பியது, கேட்டால் மட்டும் உடன் ஆசை நிறைவேறிவிடவா போகிறது இருந்தாலும் கேட்டுவைப்போம் என்று தன் தந்தையின் இடது கரத்தைப் பற்றினாள் காவியா, தனது வலது கரத்தை கடலை நோக்கி நீட்டிப் ப்ரியாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த அப்பா காவியாவை கவனித்தார், காவியாவின் பார்வை அங்கிருந்த குதிரையொன்றின் மீது குதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு 'என்ன குதிரைச் சவாரி செய்யணுமா?' என்றார், 'அட அப்பா கனிவுடன் கேட்பதைப்பார்த்தால் இன்று நமக்கு குதிரைச்சவாரி ஆசை நிறைவேறிவிடும் போலிருக்கிறதே', என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதே வேளை அப்பா அந்தக் குதிரையின் கடிவாளத்தைப் பற்றிக்கொண்டு குதிரைக்கு அருகில் நின்ற நபரை அணுகி அவரிடம் சில வார்த்தைகள் பேச அடுத்த சில நொடிகளில் காவியா  குதிரைமீதமர்ந்திருந்தாள், குதிரையின் மேனியைத் தொட்டுப்பார்த்து அதன் பட்டுத்தன்மையை உணர்ந்தபோது விழிகளை உயர்த்தி அதிசயித்தாள், வலுவான தேகமாக இருப்பதை உணர்ந்து வியப்படைந்தாள். 'இங்கிருந்து பார்க்கும்பொழுது உலகம் கொஞ்சம் தாழ்ந்துவிட்டது', என்று தனக்குள் எண்ணி நகைத்துக்கொண்ட காவியா, குதிரையோட்டத்தில் ஏற்பட்ட உடற்குலுங்கலை ஏற்கவும் இயலாமல் விலக்கவும் இயலாமல் வம்படியாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். இதுவரை அவள் உடல் உணர்ந்திராத உணர்வு. வயிற்றுக்குள்ளிருந்து குடல் வாய்வழியே வந்துவிடுமோ என்று ஒரு அச்சம் விழிதிறந்தது. கரையில் நின்று குதிரையைக் கண்டபொழுது அவள் எதிர்பார்த்தது வேறு, சவாரியில் அவள் அனுபவிப்பது வேறு, இருந்தாலும் வந்த அச்சம் ஒரு சில நொடிகளில் விடைபெற்று ஆனந்தமாக மாறியது. குதிரையும், கடற்கரையிலிருந்து அந்த யாரோ ஒருவரின் சிலைவரை சென்று திரும்பிவந்து ஒரு வட்டமாகத் தன் பயணத்தை நிறைவேற்றியது.

குதிரையிடமிருந்து விடைபெற்றதும், காவியா தன் மனதில் எழுந்த ஆசையை அப்பாவிடம் கேட்டுப்பார்த்தால் என்ன என்ற எண்ணத்தில், 'அப்பா நாமும் ஒரு குதிரை வாங்கலாமா?', 'ம்..ம்..' என்று  சுரத்தில்லாமல் பதிலளித்ததிலிருந்தே காவியா புரிந்துகொண்டாள் இது நடக்காது என்று, 'அப்படி என்ன கடினமாக இருந்துவிடப்போகிறது, கோழி வளர்ப்பது போல நாய் வளர்ப்பது போல குதிரையும் ஒரு பிராணி, இப்படித்தான் அன்றொருநாள் நாய் வளர்ப்பது எப்படி என்று ப்ரியா கம்பியூட்டரில் தேடிப்பார்த்து அறிந்துகொண்டாள், அதேபோல் குதிரை வளர்ப்பையும் கம்பியூட்டரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நம் வீட்டில் பெரிய தோட்டம் இருக்கிறது குதிரை ஓடவும் உலாவவும் நம் வீட்டுத்தோட்டம் நல்ல வசதியானது மேலும் நானும் அவ்வப்பொழுது விரும்பும் வேளைகளில் நம் தோட்டதிலியேயே குதிரைச்சவாரி செய்யலாம்'. என்று தனக்குள் சிந்தித்துக்கொண்டே மீண்டும் அப்பாவை நோக்கி 'சரியாப்பா?', இந்த முறை அப்பாவின் 'ம்..ம்..' சற்று முரட்டுத்தனமாக இருந்தது கூடவே 'ப்ரியா..' என்ற கூப்பாடு. இது நடக்காது என்று புரிந்துகொண்ட காவியா, 'ப்ரியா மட்டும் நாய் கேட்கலாம் ஆனால் நான் குதிரை கேட்கக்கூடாது, ப்ரியாவிற்கொரு நீதி, எனக்கொரு நீதி, புரியாத அப்பாவிற்கு மகளாய்ப்பிறந்து இன்னும் என்னென்ன சந்திக்கக் காத்திருக்கிறேனோ?' என்று சத்தமில்லாமல் விசனப்பட்டுக்கொண்டாள்.

சட்டென கண்விழித்த காவியாவிற்குத் தான் ஒரு நிலையில்லாத இடத்தில் உறங்கிக்கொண்டிருப்பது புலப்பட்டது நகர்ந்துகொண்டிருக்கும் ஏதோவொன்றில் இருக்கும் தான் கண்விழித்த திசையில் இருள்... வெள்ளை வட்டம்... 'அது என்ன? ஓ நிலா... அப்படியானால் இருட்டிவிட்டதா... அந்தச் சின்னச் சதுர இடைவெளியில் நிலா தெரிகிறதே அப்படியானால் நகர்ந்துகொண்டிருப்பது என்ன? அடடா விமானமா? நான் கேட்டதுபோல அப்பா என்னை விமானத்தில் அழைத்து வருகிறாரா? இது தெரியாமல் உறங்கிவிட்டேனா?' இப்படிப் பல கேள்விகள் மண்ணிலிருந்து விண்ணை நோக்கிப் புறப்பட்ட ராக்கெட்டுகளாய் மனதிலிருந்து புறப்பட்டது , 'போகட்டும் மீதிப் பயணத்தை விழிப்புடன் அனுபவிக்கவேண்டும் என்று எழுந்து அமர்ந்த பொழுது அந்தச் சின்னச் சதுர இடைவெளி சற்றே பெரிதாகியது, நிலா வெளிச்சத்தில் மரங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது... ஆகாயத்தில் எப்படி மரம்?! அடடா இது விமானம் அல்ல ரயில், மீண்டும் ரயிலில் பயணமா?', புறப்பட்ட ராக்கெட்டுகள் செயலிழந்து கடலை நாடியதுபோல அத்தனை கேள்விகளும் பதிலின்றிக் கரைந்தன. 'நான் ஏற்கனவே இந்த அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன் அடுத்த முறை விமானப் பயணம்தான் போகவேண்டுமென்று ஆனால் சமர்த்தாக நான் உறங்கும்வேளையில் என்னை ரயிலில் அழைத்துவந்துவிட்டார்... இருக்கட்டும், இப்போதைக்கு இந்தப் பயணத்தை அனுபவிப்போம்' என்று நன்றாக எழுந்து உட்கார்ந்தாள் காவியா, ஆயா வீட்டுச் சாமியறையில் ஒரு படமிருக்கும் அதில் ஒருவர் தாடிவைத்துக்கொண்டு தலை முடியைக் கொண்டைபோட்டுக்கொண்டு இப்படித்தான் அமர்ந்தவண்ணம் கண்களை மூடிக்கொண்டிருப்பார் அதேபோல் அமர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள் ப்ரியா.  'உறங்குபவளுக்கு எதற்கு சன்னலோரம்?' என்ற கேள்வியெழ, ப்ரியாவைத் தட்டியெழுப்பி நகரச்சொல்லிவிட்டுச் சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டு நகரும் மரங்களை நிலவொளியில் எண்ணத் துவங்கினாள் காவியா. இரவு நேரம் காற்று சிலுசிலுவென்றிருக்குமே கைகளை வெளியே நீட்டலாமென்று முனைந்த காவியாவின் கரங்களை சன்னலின் கண்ணாடிக் கதவு தடுத்தது. சன்னல் மூடியிருக்கிறது, தான் ஓரத்தில் உட்கார்ந்துவிடுவேன் என்றே கதவை அடைத்துவிட்டார்கள் என்ற குட்டிக்கோபத்தின் ஊடே பார்வையை மட்டும் வெளியே செலுத்தினாள். மரங்கள் கடந்துபோனாலும் காவியாவின் எண்ணத்தில் ஏன் விமானத்தில் பயணிக்கவில்லை? என்ற கவலையும் கேள்வியும் அலைமோதியது, அவள் விமானப் பயணம் வேண்டுமென்று சொன்னதற்குக் காரணமிருந்தது. ஒருமுறை இப்படியான ரயில் பயணத்தில் இருக்கையின் இடைவெளிகளில் தூசி படிந்திருப்பதைக் கண்டாள், அவற்றைச் சுத்தம் செய்து தூய்மைப்படுத்த எண்ணியவள் அருந்துவதற்காக வைத்திருந்த போத்தல் நீரைச் சிறிது சிறிதாகத் தூசி தெரிந்த இடைவெளிகளில் ஊற்ற அந்த நீர் இருக்கையையும் நனைத்தது, தண்ணீரை ஊற்றிய பின்னர் தன் கரங்களால் இங்குமங்கும் தடவிச் சுத்தம் செய்யத்துவங்கினாள், அதுவரை எங்கோ சென்றிருந்த அப்பா திரும்பிவந்து காவியாவின் செய்கையைப்பார்த்து 'ப்ரியா...' என்று குரலெழுப்பினார், சன்னல் வழி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா அதிர்ந்துபோனாள், ஏன்... அருகாமையில் உடன் அமர்ந்து பயணித்த சக பயணிகளும்கூட ஒரு கணம் ஸ்தம்பித்து அப்பாவைத் திரும்பிப்பார்த்தனர். அப்பாவிடம் பெற்ற பாட்டைப் ப்ரியா, காவியா மீது எதிரொலித்தாள். இப்படிச்சிக்கல் வந்துவிட்டது என்று நவீனிடம் பேசிக்கொண்டிருந்தபோது நவீன்தான் சொல்லியிருந்தான் விமானத்தில் பயணித்தால் இதுபேன்ற தொல்லைகள் நேராது காரணம் விமானத்தை மிகவும் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று. நவீனின் மாமாவின் வீடு சிங்கப்பூரில் இருந்தது விடுமுறைக்கு நவீன் அவர்கள் மாமா வீட்டிற்குப் போய் வருவான் அதனால்தான் நவீனுக்கு விமானம் பற்றித்தெரிந்திருந்தது. இப்படியான நினைவுகளில் அடடா மரங்களை எண்ண மறந்துவிட்டோமே என்று மரங்களைத்தேடினாள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் தென்படவில்லை ரயில் பாலத்தின்மீது பயணித்துக்கொண்டிருந்தது பாலத்தின் ஓரங்களைப் பார்க்க சற்று பயமாக இருந்ததால் திரும்பிப் ப்ரியாவைப் பார்த்தாள் ஆயா வீட்டு சாமியறைப் படம் மீண்டும் நினைவில் வந்தது. வெளியே நிசப்தமான இரவு தடக் தடக்கென தாலாட்டும் ரயிலோசை... பிரியாவின் மடிமீது சாய்ந்துகொண்டு கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தாள் காவியா.

மூடிய விழித்திரைக்குள் பச்சை வண்ணப் பட்டாம்பூச்சிகள் கண்ணாமூச்சி விளையாடின. ஒரு பட்டாம்பூச்சி தன் முதுகில் நட்சத்திரம் ஒன்றைச் சுமந்து மின்னியவண்ணம் பறந்துகொண்டிருந்தது. அதனைக் கண்ட மற்ற பட்டாம்பூச்சிகள் உனக்கெப்படி நட்சத்திரம் கிடைத்ததெனக் கேட்க நட்சத்திரம் சுமந்த பட்டாம்பூச்சி கர்வத்துடன் பதிலளித்தது தனக்கு நிலா என்றொரு நண்பனிருக்கிறான் அவன்தான் கொடுத்தானென்று. இப்போது மற்ற பட்டாம்பூச்சிகள் தங்களுக்கும் நிலவை நண்பனாக்கச்சொல்லி கோரிக்கை விடுத்தன. இந்த நாடகங்கள் நிறைவேறும்பொழுது காவியா கண்விழித்து அத்தனை பச்சைப் பட்டாம்பூச்சிகளையும் காணவில்லையே என்று தேடப்போகிறாள், அப்போதும் அப்பா, 'ப்ரியா..' என்று கோபமாகக் குரலெழுப்பப் போகிறார், அப்பாவி அம்மா ப்ரியாவும், அந்தக் கோபத்தை, மகள் காவியாவின் மீது எதிரொலிக்கப் போகிறாள்…!

தரைதட்டிய கப்பலைத் தனியொரு ஆளாகப் பயணிக்க வைப்பதும், ஒன்றரை சென்ட் கொல்லைப்புற நிலப்பரப்பில் குதிரையொன்றை அனல்பறக்க ஓடவிடுவதும், மகிழுந்து, பேருந்து, ரயில் போன்ற வாகனங்களில் மட்டுமே கடந்து பயணிக்க வாய்ப்புள்ள தூரங்களை விமானத்தில் பயணித்துக் கடப்பதும், கனவில் தோன்றும் பட்டாம்பூச்சிகளைக் கண் முன் தேடிப் பிடிப்பதும், முப்பத்திரெண்டு வயது அப்பாக்களுக்கு வேண்டுமானால் சாத்தியமற்றுப் போகலாம், ஆனால் மூன்று வயது காவியாக்களுக்கு அவைகள் என்றும் சாத்தியமே!

... மீ.மணிகண்டன்

03/31/2022


திங்கள், 18 ஜூலை, 2022

ஐந்தோடு ஒன்று ஏழு ... மீ.மணிகண்டன்

 ஐந்தோடு ஒன்று ஏழு 

ஆன்மிகமும் இயற்கையும் வேறு வேறென எண்ணத்தகுமா? என்று எனக்குள் எழுந்த கேள்விக்கான விடை இந்தச் சிறுகதை, சிறுகதை என்றால் ஒரு ஆரம்பம், நிறைவு, திருப்பம் போன்ற சில வரையறை கட்டுப்பாடுகளுக்குள் வரவேண்டுமே! இந்தப் பதிவு அப்படியான கட்டுப்பாடுகளுக்குள் அடங்க மறுக்கும். அப்படியானால் இதனைச் சிறுகதை என்று சொல்லவியலாது, பின்னர் இதனை என்னவென்று சொல்வது? எண்ணத்தின் ஓர் எழுத்துவடிவம் மட்டுமே. படித்துவிட்டுத் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் நான் அறியாதவற்றை மேலும் அறிந்து கொள்கிறேன். நன்றி!

மீ.மணிகண்டன்

 ஐந்தோடு ஒன்று ஏழு ... மீ.மணிகண்டன்

உலகப் பந்திலே மனிதனாய்ச் சிந்திப்பது ஆனந்தத்தின் எல்லை அல்ல என்று மரமொன்றின் நிழலில் அமர்ந்து தியானிக்கலானான் ஒருவன். தன்னை மறந்த நிலையில் தாடி, மீசை, தலையில் வளர்ந்த முடி, யாவும் நீண்டு திரிந்ததையும் உணர்தற்கல்லாத முனிவனாகத் தியானத்தில் நிலைத்துக்கிடந்தான். 

உலகம் மனிதச்சிந்தனைக்கு விருந்து என்றும், மனிதனாய்ச் சிந்திப்பது பாக்கியம் என்றும் கருதிய ஒருவன் மரத்தடி வழி கடந்துபோகையில் முனிவரைக்கண்டான். இவரைத் தீண்டிப் பார்த்தால் என்ன என்றெண்ணி முனிவரின் தலைமுடியைத் தொட்டுப் பார்த்தான் முனிவர் அசையவில்லை. தாடியை லேசாக இழுத்தான் முனிவர் விழிக்கவில்லை மீசையின் இரு முனைகளையும் இழுத்து முடிந்து வேடிக்கை பார்த்தான் முனிவர் சற்றும் சாயவில்லை. 

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதச்சிந்தனையில் சிக்குறாத நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயமும், முனிவரைத் தீண்டும் மனிதனைத் தாமும் தீண்டினாலென்ன என்றெண்ணி முதலில் நீர் அவன் மீது மழையாய்ப் பொழிந்தது. "ஏ மழையே என்னைத் தொந்தரவு செய்யாதே... " என்று மழையைப் புறக்கணித்துவிட்டு மனிதன் முனிவரைத் தீண்டுவதில் மும்முரமாக இயங்கினான். 

மழைக்குத் தயங்காத அவனை, நிலம் தன் வேலையைக்காட்டி அவனை ஆட்டிப் பார்ப்போம் என்று சற்றே அவன் நின்றிருந்த இடத்தில் அதிர்வைக் கொடுத்தது. அதிர்வு தனக்கான சோதனை என்றுணராத மனிதன் பூமி அதன் வேலையைச் செய்கிறது என்றெண்ணி சற்றும் கண்டுகொள்ளாமல் இடம் மாற்றி முனிவரின் பின்புறம் சென்று அவரது சடாமுடியைப் பின்னி மரத்தின் ஒருகிளையொடு பிணைத்துக் கொண்டிருந்தான். 

கிளையினோடு முனிவரின் சடாமுடியைப் பிணைத்துக்கொண்டிருந்தபோது கிளைகளின் உராய்வினால் ஏற்பட்ட தீப் பிழம்பு அவனது கைகளைத் தீண்ட அது தான் முனிவரைத்தீண்டுவதால் தீ தனக்களித்த சூடு என்றுணராமால் ஊதி அணைத்து விட்டு சற்றே கைகளை உதறிவிட்டு தீயைப் போக்கித் தனது மானுடச் சிந்தனை சொல்லிக்கொடுத்தபடி முயற்சியில் பின்வாங்காமல் முனிவரின் சடாமுடியைக் கிளையொன்றொடு பிணைத்திருக்கினான். 

காற்று தன் பங்கிற்கு தூசியைக் கிளப்பி மனிதனின் கண்களைத்தீண்டியது மனிதனோ காற்றின் இயல்பு என்றெண்ணி காற்றடித்த திசைக்கு மாற்றுத்திசையில் நின்று தனது கண்களைத் துடைத்துக்கொண்டு முனிவரின் கைகளைத் தூக்கிப் பார்ப்போம் என்றேண்ணி முனிவருக்கு முன்னால் வந்து குனிந்துநின்று அவரது கைகளைத் தொட்டுப் பார்த்தான். 

இந்த மனிதனின் சிந்தனையைத் திசை திருப்புவதற்காக ஈர வானம் பலமாக இடியொன்றை மனிதனின் கண் பார்க்கும் தூரத்தில் இறக்கியது, மின்னலொளி கண்களை சற்று இருட்டாக்க, இடியோசை காதைப் பிளக்க மனிதனுக்கு சற்று நேரம் கண்களும் காதுகளிரண்டும் செயலிழந்து போய்த்திரும்பியது. 

இயற்கை அதன் வேலையைச்செய்கிறது என்றுமட்டும் எண்ணிய மனிதன் தான் முனிவரைச் சீண்டியதால்தான் இந்த விளைவு என்பதனைப் புரிந்துகொள்ளாமல் தனது திருவிளையாடல்களைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். ஐம்பூதங்களும் மனிதனை இயற்கைச் சீற்றம் எனும் பெயரால் வெயில், மழை, புயல், பூகம்பம், இடி, மின்னலென மாற்றி மாற்றி தீண்டிக்கொண்டேயிருந்தது. தியான நிலை என்பது தன் உடலை மறக்கும் நிலை, இயற்கையோடு கலக்கும் நிலை என்ற முனிவரின் நிலையை மனிதனும் புரிந்துகொள்ளவேயில்லை. 

இப்போது மனிதன் முனிவரைச் சோதித்துப் பார்க்கிறானா அல்லது முனிவர் மனிதனைச் சோத்தித்துப் பார்க்கிறாரா ? 

மனிதன் தனக்குத்தானே விளைவுகளைத் தெடிக் கொள்கிறானா அல்லது இயற்கை மனிதனைத் தேடிவந்து தண்டிக்கிறதா ? 

ஐந்தோடு ஒன்று ஏழு என்பது பிழை, இது மனிதனின் கணக்கு. 

ஐந்து பூதங்களோடு மனிதன் ஒன்றாய் ஐக்கியாமானால் பிறக்கும் அறிவு ஏழு, இது முனிவர் கணக்கு. 

... மீ.மணிகண்டன் (மணிமீ) 


வெள்ளி, 1 ஜூலை, 2022

அகம் ... மீ.மணிகண்டன்

 வலஞ்சுழி  இணைய தளத்தில் நானெழுதிய 'அகம்' சிறுகதைக்கு முதற்பரிசு. 

வலஞ்சுழி இணையதளத்திற்கு எனது நன்றி மற்றும் கதையை வாசித்துக் கருத்துத்தெரிவித்த அன்பு உள்ளங்கள் யாவர்க்கும் என் நன்றி.

போட்டி அறிவித்த நாள் - April 2022

வெற்றியாளர் அறிவிப்பு நாள் - 26-Jun-2022

சிறுகதையின் தலைப்பு: அகம் 

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

valanchuli . com

அந்த மாமரத்தில் பூக்கள் பூத்த கிளைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தாள். எண்ணச்சொல்லிச் சென்றவன் அவள் கணவன். காலையில் அவன் வெளியே புறப்படும்போது, அவள் தனிமையில் ஏதாவது சிந்தித்துத் தன்னை வருத்திக் கொள்ளக்கூடும் என்று அப்படியொரு பொழுதுபோக்கை அவளுக்குச் சொல்லிச் சென்றான். ஏன் அவள் சிந்தித்து வருந்தவேண்டும்? கடந்த இரண்டு நாட்களாக அவள் எதிர்பார்த்த வீடு அமையவில்லை அவனும் அவளுக்காக எங்கெங்கோ அலைகிறான் ஆனால் கிடைக்கவில்லை. இன்றாவது கிடைத்துவிட்டது என்ற நல்ல செய்தியைக் கொண்டுவருவான் கணவன் என்ற எதிர்பார்ப்போடு இதோ மாம்பூக் கிளைகளை எண்ணிக் கொண்டிருக்கிறாள். வீடு என்பது வெறும் கனவு மட்டுமல்ல அதையும் தாண்டி அவசியம் ஆனது. ஒரு வீட்டில்தான் குடும்பம் நிறைவடைகிறது, தலைமுறை தழைக்கிறது, மழலைகளின் எதிர்காலம் உருவாக்கப்படுகிறது, வீடு இல்லையென்றால் குடும்பம் எது? 

இந்தப் பிரபஞ்சம் இயற்கை. இங்கே ஓரறிவு உயிர்கள் தொடங்கி, உயரெண்ணிக்கை அறிவுயிர்கள்வரை எல்லோரும் எதிர்பார்ப்பது அதிகபட்சம் மகிழ்ச்சி என்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். பிற அனைத்தும் 'மகிழ்ச்சி' என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துகொள்கிறது. அவளும் மகிழ்ச்சியை எதிர்பார்க்கும் உயிர்களுள் ஒருத்தியாய் இந்த இயற்கையில் இணைந்திருப்பவள். வீடு தேடும் படலம் மட்டும் இல்லாதிருந்திருந்தால் அவள் இந்நேரம் அதிக மகிழ்ச்சியில் இருந்திருப்பாள் பூக்கள் பூத்துக்குலுங்கும் அந்த மாமரத்தைப்போல. ஒவ்வொருநாளும் வீடு தேடிவிட்டு வரும் கணவனிடம் அவள் எதிர்பார்ப்பது ஒற்றை பதில்தான், அது  'கிடைத்துவிட்டது' என்பது, ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அடுத்தவரை எதிர்பார்த்து வாழ்வது எத்தனை கொடுமையானது என்று அவள் இப்போது உணர்கிறாள். தன்னால் இயலவில்லை என்பது அவளுக்கு ஒரு குறையாக இருப்பினும் அந்தக்குறைக்கு இயற்கையும் பொறுப்பு என்று அவள் நம்பினாள். ஏற்கனவே பார்த்துவைத்த வீட்டை அன்று வந்த கடும்புயல் கொண்டு போகுமென்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. அந்தப் புயலில்தான் எத்தனை எத்தனை சேதம்.. அப்பப்பா நினைத்துப் பார்க்கையில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு, ஆடுகள், மாடுகள் என்று எத்தனை உயிரினங்கள்...? எத்தனை மரங்கள்...? மனிதர்களின் சராசரி வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது. நினைவுகளின் ஊடே பூக்கிளைகளை எண்ணுவதிலும் அவள் கவனமாக இருந்தாள்.

அகம் ... மீ.மணிகண்டன்

இன்று தன் தொழில் செவ்வனே நிறைவேறியதென்று தன் கதிர்களைச் சுருக்கிக்கொண்டு ஆதவன் புறப்பட்ட காரணத்தால் மேற்கு வானம் சிவப்புடுத்தியிருந்தது. சூரியகாந்திகள் மேற்கில் தன் தலைவனுக்கு விடை கொடுத்துவிட்டுத் தலைவனைப் பிரிந்த சோகத்தில் நின்றன. அலரப் போகும் ஆனந்தத்தில் அரும்பாக அல்லிகள் செழித்து நிமிர்ந்து நின்றன, ஆனால் அவளோ தன் கணவன் இன்னும் திரும்பவில்லையே என்ற கவலை, தன் சிவந்த கண்களில் பளபளக்க, இங்குமங்குமாகத் தலையைத் திருப்பி அவன் வரும் திசைகளை ஆவலோடும், சற்றே படபடப்போடும், கோடிக் கனவுகளோடும் நோக்கினாள்.  பொதுவாக வெளிச்சம் இருக்கும் வேளையிலேயே திரும்புபவன் இன்று இருட்டப் போகும் நேரம் ஆகியும் ஏன் இன்னும் திரும்பவில்லை? என்ற கேள்விக்கொக்கி மனதைத் துளைத்துக்கொண்டிருக்க, அங்கே யாரோ வருவது போல் தெரிகிறதே அது வெறும் தோற்றப்பிழையாக இருந்துவிடாமல் தன் கணவனாக இருக்கவேண்டுமென்று கூர்ந்து கவனித்தாள்... ஏமாற்றமே மிஞ்சியது. பார்த்துப் பார்த்து சோர்வடைந்த கண்கள் சிறிது ஓய்வு கேட்கும் நேரம் அவளுக்குப் பின்புறமாக வந்து நின்று அவளை ஆச்சர்யப்பட வைத்தான் கணவன். அவன் வரவால் அமைதி கொண்டவள், நிம்மதிப் பெருமூச்சாக நாசி விடைக்கக் காற்றை உள்ளிழுத்தாள் பின் வெளியேற்றி நாசியை இயல்பு நிலைக்குத் திருப்பினாள். 'இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா சுவீட்டோடதான் வரணும்' என்று கணவனுக்குக் கட்டளையிடுபவளாக அவள் இல்லை. 'கிடைச்சுதா?' என்பதுதான் அவளின் முதல் வார்த்தையும், ஒரே வார்த்தையும், கேள்வியுமாக இருந்தது. அவன் எந்த ஆரவாரமும் கொள்ளாமல் இல்லை எனும் தோரணையில் தலையை இடம் வலமாகத் திருப்பினான். கணவன் திரும்பவில்லையே என்றிருந்த கவலை நிலைகடந்துபோக இப்பொழுது கணவனைக் காண்கையில் அவளுக்குக் கோபமே மிஞ்சியது, 'இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நமக்காக ஒரு வீடு இல்லையா?', பதில் தரவேண்டிய கட்டாயம் அவனை இப்பொழுது பேச வைத்தது, 'கோபப்படாம நான் சொல்றதக் கொஞ்சம் அமைதியா கேட்பியா?'

'நீ சொல்றதுக்காக நான் பொறுக்க முடியாது... இன்னும் ஒரு நாள்தான் அதுக்குமேல என் கையில எதுவும் இல்ல...'

'இது நல்லா இருக்கே, நானா புயலை வரச்சொன்னேன்? நானா பார்த்து வச்ச வீட்டை துவம்சம் பண்ணிட்டுப் போகச் சொன்னேன்? எதெதுக்குத்தான் நான் பொறுப்பேத்துக்கறது?', என்று சலித்துக்கொண்டான்.

'பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, என் நிலைல இருந்துபார் உனக்குப் புரியும். என்ன செய்யுறது? இயற்கை ஆணை ஒரு மாதிரியும் பெண்ணை வேறமாதிரியுமில்ல படைச்சிருக்கு'. என்று தன்னை நொந்துகொண்டவளின் அருகில் சென்று ஆறுதல் வார்த்தைகள் மொழிந்தான். 

'இப்படி சொன்னா எப்படி... இந்தா மொதல்ல இதைச் சாப்பிடு.. நீ பசியோட இருப்ப', என்று அவளின் பசியாற்ற முனைந்தவன் மீது கோபப்பார்வை ஒன்றைச் செலுத்திவிட்டுத்  தன் தலையைத் திருப்பிக்கொண்டாள்.

‘எப்பவும் சீக்கிரம் வர்ற நான் இன்னிக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதமா வந்தேன்னு நீ கேட்கவே இல்லையே…’

'அதான் வந்துட்டியே... இப்ப நான் கேட்கிறதால ஏதாவது மாறிடப் போகுதா? போ போ... உன் தேவைக்கு நீ எங்க ஊர் சுத்தப் போனியோ? நீ உண்மையாவே வீடு தேடுனியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு...'

'பாத்தியா... என்மேலையே உனக்கு சந்தேகமா.. சரி கேளு.. ஒரு வீடு பார்த்தேன் அது இங்க பக்கத்துல இல்ல, சூரியகாந்தித் தோட்டத்துக்கு அந்தப்பக்கம் கொஞ்ச தூரம் போகணும், அதுனாலதான் இவ்வளவு நேரமாச்சு, வீடும் நாம தேடுற மாதிரியான வீடுதான் ஆனாப்பாரு அந்த வீட்டுல நாம எதிர்பார்க்கிற மாதிரி சூழ்நிலை  இல்ல... ' 

இவர்களின் இந்த சலசலப்பைப் புரிந்துகொள்ள மனமில்லாமல் அல்லிகள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. பாதிச் சந்திரன் தடாகத்தில் மிதந்துகொண்டிருந்தது, பனியுடுத்திப் புற்கள் நிமிர்ந்து நின்றது, பாலொளி எங்கும் பரவி இருட்டுக்கு நிலவு நிறம் பூசிக்கொண்டிருந்தது, அவள்  மலர்ந்திருக்கும் அல்லிகளை நோக்கினாள், அந்த அல்லியின் அருகில் அடுத்தநாள் மலரக் காத்திருக்கும் ஒரு புது மொட்டின் மீது தனது பார்வையைப் பதியவைத்து விழித்துக்கொண்டிருந்தாள். அவளை அமைதிப் படுத்தும் முயற்சி முயற்சியாகவே நிற்க அன்று முழுதும் அலைந்த காரணத்தால் அவன் உறங்கிப் போனான். உறங்கிக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து அவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள், 'எனது கோபம் நியாயமானதுதானே?, நீயும் எனக்காக அலைகிறாய், எனக்கது புரிகிறது, ஆனால் காலத்திடம் அந்தப் புரிதல் இல்லை. எனக்குத் தெரியும் நீ என்மீது கோபம் கொள்ள மாட்டாய், எனது வார்த்தைகளில் வேகம் இருந்தாலும் என் மனதில் உன்னைப் பற்றிய புரிதல் உண்டு என்பது உனக்கும் புரியும்.' விடியும் பொழுது தங்கள் தேவைக்கு ஒரு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவள் உறங்க முன்வந்தாள்.

பின் தூங்கி முன்னெழுந்தவளின் குரல்கேட்டு விழித்துக்கொண்டான், தானே முன்வந்து அவள் பேசியதிலிருந்து அவளின் கோபம் நேற்றே விடைபெற்றுவிட்டதைப் புரிந்துகொண்டு, 'நம்பிக்கையோட இரு இன்னைக்கு கண்டிப்பா வீட்டைக் கண்டுபிடிச்சுட்டு மதியத்துக்குள்ள வறேன்' என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு உற்சாகமாய்ப் புறப்பட்டான்.

நேற்று தென்திசைப் பாதையில் சென்று வந்ததால் இன்று வேறு திசை நாடுவோம் என்று தோன்றவே கிழக்கைத் தேர்வு செய்தான். கீழைத்திசையில் சிறிது தூரம் சென்றான் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தத் தெருவை தூரத்திலிருந்து பார்த்தபொழுது தெருவின் ஓரங்களில் அடசலாக நிறைய மரங்கள் தென்பட்டன 'எப்படி இந்த மரங்கள் புயலுக்குத்தப்பியது?' என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சற்று முன்னோக்கி விரைந்தான் இங்கொன்றும் அங்கொன்றுமாக செங்கற்கட்டிடங்கள் கண்ணில் பட்டன கட்டிடங்களின் பின்புறமும் மரங்கள்! 'புயலை இந்தத்தெரு புறக்கணித்துவிட்டதோ? இல்லை, புயல் இங்கே வர மறுத்துவிட்டதா? எதுவானால் என்ன நமக்குத்தேவை வீடு' என்று எண்ணிக்கொண்டு கட்டிடங்களில் பார்வையைச் செலுத்தினான். அவனின் உள்ளுணர்வு அந்தத்தெருவில் வீடு கிடைக்குமென்று உறுதியளித்தது. 

அவளிடம் சொல்லிச்சென்றதுபோல மதிய வேளை வீடு திரும்பினான், படபடவெனத் தன் மகிழ்ச்சியை அவளிடம் வெளிப்படுத்தினான், அவளுக்கும் ஆனந்தம் மனதில் கரைபுரண்டோடியது. எங்கே காலம் தன் ஆசையைப் பொய்யாக்கி விடுமோ என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தவள் இப்போது உற்சாகமாக உல்லாச ராகம் இசைத்தாள். 'சரி சரி கிளம்பு ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது, போனா வராது', என்று அவளை உடனடியாகக் கிளம்பும்படி வற்புறுத்தினான்.

'சரி எவ்வளவு தூரம் போகணும்?' என்று கேட்டவளுக்கு கீழைத்திசையில் அவன் சென்று வந்த தூரத்தை விளக்கினான், தூரத்தை அறிந்துகொண்டபின் 'இது நாம இப்ப இருக்குற இடத்துக்கு பக்கம் தானே? எப்படி இவ்வளவு நாள் உன் கண்ல படாமல் போச்சு?' 

'அதுதான் எனக்கும் புரியல. பக்கத்துல கிடைக்காதுன்னு எதோ நம்பிக்கைல, நான் இன்னிக்குவரை தேடாமல் இருந்திருக்கேன்', அவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு 'முட்டாள் முட்டாள்' என்று திட்டவேண்டும்போல இருந்தது அவளுக்கு இருந்தாலும் அடுத்த கணம் அவனின் வெகுளித்தனத்தை ரசித்தவளாய், 'அங்க சூழ்நிலை எப்படி இருக்கு?', என்று வினா தொடுத்தாள்.

'நாம எதிர்பார்க்கிற மாதிரிதான்..' என்று மகிழ்ச்சி பொங்கப் பாடலாய்ப் பாடி பதிலளித்தான். 

இருவரும் அவன் பார்த்துவந்த வீட்டை நோக்கிப் பயணம் புறப்பட்டனர், வீட்டை அடைவதற்குச் சற்று முன் அவளை நிற்கச்சொன்னான், 'ஏன்?' என்றாள், காரணத்தைச் சொன்னான், 'நல்லாக் கேட்டுக்க நான் வெளியிலே இருந்து அந்த வீட்டுக்காரன வம்புக்கிழுக்கறேன், அவன் வெளியில வந்ததும் சண்டை போட்டுக்கிட்டே தூரமாப் போயிடுறேன், அவனும் என்னுடன் சண்டைபோட்டு வெல்லும் மும்முரத்தில் என்னுடன் வந்துடுவான். நீ அந்த நேரம் வீட்டுக்கு உள்ள போய் அங்க இருக்குற அவங்களோட முட்டையில ஒண்ணை கீழே தள்ளிவிட்டுட்டு உன் முட்டையை இட்டுட்டு சத்தமில்லாம நம்ம இடத்துக்குப் போயிடு, கொஞ்ச நேரம் நான் அந்த வீட்டுக்காரன சமாளிச்சுட்டு பிறகு நம்ம இடத்துக்குத் திரும்பிடறேன்'. என்று தன் சோடிக் குயிலிடம் திட்டத்தை விளக்கிவிட்டு காக்கையிடம் வம்பிழுக்கப் பறந்தது ஆண்குயில்.

… மீ.மணிகண்டன்