ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

நிலவோடு ஒரு நேர்காணல் … சிறுகதை … மீ.மணிகண்டன்

 நிலவோடு ஒரு நேர்காணல் … சிறுகதை … மீ.மணிகண்டன்

நிலவோடு ஒரு நேர்காணல்
… மீ.மணிகண்டன்
பள்ளிக்கூட மணியடித்ததும் ஹோய் என்ற சத்தத்துடன் மாணவர்கள் தங்கள் வகுப்பறைகள் விட்டு ஓடி வெளியேறினர், மாலை வீடு திரும்பும் மகிழ்ச்சி. மலைச்சாமியும் செல்வமும் எப்பொழுதும்போல பேசிக்கொண்டே நடந்தனர், மலைச்சாமி செல்வத்திடம் கேட்டான், "டேய் தமிழ் சார் எதோ புத்தக விழா பற்றி சொன்னாரே அது எப்போ?"

"அது ஜூன் மாசத்துல டா, நமக்கு அப்ப பள்ளிக்கூடம் லீவு விட்டுருவாங்க"

"அது சென்னையில தானே"

"ஆமாடா... அது புத்தகக் கண்காட்சி, அங்க நிறைய பேர் எழுதின புத்தகங்கள் வச்சிருப்பாங்க, நிறை புத்தகங்கள் வெளியிடுவாங்க"

"நானும் போய் பாக்கணும்டா" மனதினுள் தன்னுடைய 'நிலவோடு ஒரு நேர்காணல்' புத்தகமும் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டான் மலைச்சாமி.

தன்னுடைய வீடு வந்ததும், "சரிடா நாளைக்கு பார்க்கலாம்", என்று செல்வத்திடம் விடை பெற்று தன் வீட்டிற்குள் நுழைந்தான் மலைச்சாமி. அம்மா சமையலறையில் மூட்டிய அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தாள் அடுப்பிற்கு நேர் மேலே ஓலை கீத்து இடைவெளியில் மாலைச் சூரியன் தன் கதிர்களை அனுப்பி சமைக்கும் பாத்திரத்தின் மீது சதிராடிக் கொண்டிருந்தான். சுற்றி நான்கு புறமும் மண்சுவர் நடுவில் ஒரு கைப்பிடி உயர அரைச்சுவர் தடுப்பு, எது சமையலறை எது தங்கும் அரை என்று வகுத்துக்காட்ட ஓலைகள் வேய்ந்த அந்த வீட்டில்தான் மலைச்சாமியும் அவனது தாயாரும் மலைச்சாமிக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்ந்து வருகிறார்கள்.

"டேய், கால் கை கழுவிட்டு கொஞ்சம் வந்து இந்தக் காய் நறுக்கிக்கொடுடா" என்றாள் தாய்.

"சரிம்மா..."

"நாளைக்கு சனிக்கிழமை தானே, பள்ளிக்கூடம் இருக்கா?"

"இல்லம்மா..."

"அப்போ, காலைல வேப்பங்காட்டுக்குப் போய் கொஞ்சம் சுள்ளி சேர்த்துக்கிட்டு வாரியா?"

"சரிம்மா.." போகும்போது செல்வத்தை கூட்டிட்டு போலாம் என்று தனக்குள்  நினைத்துக்கொண்டான்.

இரவு பள்ளிப் பாடங்களை முடித்துவிட்டு வழக்கம்போல் வெளிச்சுவற்றில் சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்துக்கொண்டு வீட்டு நிலை வாசலுக்கு வலப்பக்கமாக வெளியில்  போட்டான் உள்ளே சென்று போர்வை தலையணையை எடுத்துக் கொண்டு வந்தான் வெளியில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் விரித்தான். கட்டிலில் ஆயாசமாக மல்லாந்து படுத்தவனின் நேர் பார்வையில் முழு வட்ட நிலா அவனை வரவேற்றது. மலைச்சாமிக்கு நிலாதான் குரு. நிலவைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் தமிழ் ஊற்று பீறிட்டு எழும். நிறைய வரிகள் தோன்றும் அப்படியே மனனம் செய்து கொள்வான் காலையில் எழுந்ததும் முன்னிரவில் யோசித்த வரிகளை அவனது நோட்டுப் புத்தகத்தில் எதுகை மோனையோடு எழுதி ஒரு முழுக் கவிதையாக்குவான். சில நாட்கள் முன்னிரவில் யோசித்த வரிகளை மறந்துவிடுவான் எவ்வளவு யோசித்தாலும் அது திரும்ப வராத கனவாகிவிடும். இப்படியே நிலவோடு பேசிக் காதலித்து அவன் எழுதிய நோட்டுப் புத்தகத்தின் தலைப்புத் தான் 'நிலவோடு ஒரு நேர்காணல்'. அந்த நோட்டுப் புத்தகம் நிறைய அவன் எழுதிய புதுக் கவிதை மற்றும் சந்தக் கவிதைகள். தமிழ்ப் பாடம் என்றால் அவன் ஆர்வமாகப் படிப்பான், வகுப்பறையில் தமிழ் இலக்கணம் நடத்தும் பொழுது கவனித்து நோக்குவான் வீட்டிற்கு வந்ததும் தான் எழுதிய கவிதை வரிகள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வான். உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம், ஒரு முறை தான் எழுதிய ஒரு சந்தக் கவிதையில்...

'சித்திரம் போலுன்னை வெண்ணிலாவே

செதுக்கியது யாரோ வெண்ணிலாவே'

என்று எழுதியிருந்தான், தமிழ் வகுப்பில் கற்ற மாத்திரை அளவு தனது கவிதைக்குப் பொருந்துகிறதா என்று பார்த்தான் பொருந்தவில்லை என்றுணர்ந்ததும் அந்த வரிகளை இப்படி மாற்றினான்.

'சித்திரம் போலுனை வெண்ணிலவே

செய்தவர் யாரது வெண்ணிலவே'.

சனிக்கிழமை காலை, சகாக்கள் இருவரும் வேப்பங்காட்டுக்குக் கிளம்பினார் சுள்ளி சேர்க்க. வழக்கம் போல் போகும் வழியில் உரையாடல், பேசிக்கொண்டே காட்டை அடைந்தனர், "டேய் சீக்கிரம் சேர்த்துட்டு வீட்டுக்குப் போகனும்டா, எங்க மாமா இன்னிக்கு எங்க வீட்டுக்கு வராங்க கூடவே கனகாவும் வருது" என்றான் செல்வம்.

"அதானே, கனகா வந்தா நீ வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டியே, என் நல்ல நேரம் நான் காலையிலேயே உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்..." என்று சிரித்துக் கொண்டான் மலைச்சாமி.

"பேசாதடா... சீக்கிரம் வேலையப் பாரு.." என்று அதட்டினான் செல்வம்.

சேர்த்த சுள்ளிகளைக் கட்டி முடிந்து இருவரும் தங்கள் தலையில் சும்மாட்டின் மீது வைத்துக் கொண்டு வீடு நோக்கித் திரும்பினார் வழியில் மலைச்சாமிக்கு அந்தப் புத்தகக் கண்காட்சி நினைவு வர "டே நான் எழுதி வச்சிருக்க கவிதை தொகுப்பு 'நிலவுடன் ஒரு நேர்காணல்' புத்தகத்தையும் அந்த கண்காட்சியில வெளியிடப் போறேண்டா" என்றான் மலைச்சாமி உற்சாகமாக.

சிரித்துவிட்டு செல்வம், "டேய் புத்தகம் வெளியிடுறதுன்னா என்ன தெரியுமா, உன்னையும் என்னையும் மாதிரி பத்தாங்கிளாஸ் படிக்கிறவுங்க விளையாடுற விளையாட்டு இல்ல. நீ எழுதினத ஒரு அஞ்சாறு பேர் படிச்சுப் பார்க்கணும், அதோட யாராவது ஒரு பிரபலமும் அதைப் படிச்சுட்டு நல்லா நாலு கருத்து எழுதித் தரணும் அப்பறமா அந்த கருத்த புத்தகத்தோட முதல் பக்கமா வச்சு அதன் தொடர்ச்சியா உன் எழுத்துக்களை அச்சிடனும் அதுக்கு ஒரு நல்ல அட்டைப்படம் வேணும் எல்லாத்துக்கும் மேல ஒரு புத்தகப் பிரசுரக் கம்பெனி உன் கவிதைகளை ஏத்துக்கிட்டு அச்சடிச்சுத் தரணும் இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?"

இவற்றை மௌனமாகக் கேட்டுக்கொண்டே நடந்த மலைச்சாமி, "இவ்வளவும் செஞ்சாத்தான் என் புத்தகத்தை வெளியிட முடியுமா, ஏன் ஒரு கையெழுத்துப் பிரதியா வெளியிட முடியாதா? அந்தக் காலத்துல எவ்வளவு பேர் கையெழுத்துப் பிரதி வெளியிட்டிருக்காங்க, நம்ம பாடத்துல படிச்சிருக்கோம்ல"

"அது அந்தக் காலம் டா மலைச்சாமி , இப்பல்லாம் அது செல்லாது"

"என்னோட கவிதைகளை நம்ம வெற்றி டைலர் படிச்சிருக்கார், டீக்கடை சாஹிப் படிச்சிருக்கார், மாதவன் மெடிக்கல்ஸ்ல சங்கர் அண்ணன் படிச்சிருக்கார், போன வாரம் லைப்ரரி போனப்போ ரவி சார் கூட நான் நல்லா எழுதறேன் விடாம எழுதுன்னு சொன்னார்"

"அவங்க சொல்றது உண்மையா இருந்தாலும் பெரிய படிப்பு படிச்சவுங்க முகவுரை எழுதித்தரணும்டா"

"எங்கிட்ட இருக்கே"

"என்னடா சொல்ற"

"நம்ம ஸ்டேஷன் மாஸ்டர்கிட்ட ஒரு தடவை என் கவிதைகளை படிச்சுப் பாருங்கன்னு கொடுத்திருந்தேன் அவரும் ரெண்டு நாள் வச்சிருந்து ஸ்டேஷன்ல ரயில் வராத நேரத்துல என் கவிதையெல்லாம் படிச்சுப் பார்த்து, ஒரு பக்கத்துல நல்லா எழுதுற புரட்சி நிறைய இருக்கு மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காரே"

"அட போடா கிறுக்கா... என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது... சரி சரி என் வீடு வந்துடுச்சு... இந்நேரம் கனகா வந்திருப்பா..." சொல்லிவிட்டு மலைச்சாமியின் பதிலுக்குக்காதிராமல் துள்ளிக் குதித்து ஓடினான் செல்வம்.

அன்றுதான் பள்ளியின் கடைசி வேலை நாள் அதன் பிறகு விடுமுறை. இன்று எப்படியும் தமிழ் சாரிடம் புத்தகக் கண்காட்சி விலாசத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று மிகக் கவனமாக மலைச்சாமி தமிழ் சாரைத் தேடினான். "சார், நீங்க புத்தகக் கண்காட்சி நடக்குதுன்னு சொன்னீங்களே அந்த விலாசம் தர முடியுமா?"

"உனக்கு எதுக்குடா மலைச்சாமி?" கேட்டார் தமிழ் சார்

இவரிடம் தான் புத்தகம் வெளியிடப் போவதாகச் சொன்னால் இவரும் செல்வத்தைப் போல ஏதாவது குதர்க்கமாகச் சொல்வார் என்று எண்ணிய மலைச்சாமி, "நான் லீவுக்கு எங்க பெரியப்பா வீட்டுக்கு, சென்னைக்குப் போவேன் சார், அப்போ கண்காட்சி பாக்கலாம் இல்லையா அதுக்குத்தான்" என்று பாதி உண்மையை மறைத்தான் மலைச்சாமி.

"எழுதிக்கோ" என்று விலாசத்தைச் சொன்னார் தமிழ் சார்.

விலாசத்தைப் பெற்றுக்கொண்ட மலைச்சாமி சாருக்கு நன்றி சொல்லிவிட்டு தனது புத்தகத்திற்குப் பரிசு கிடைத்ததைப்போல பேரானந்தம் அடைந்தான்.

பள்ளியிலிருந்து திரும்பிய மகனை வழக்கம்போல் வரவேற்றாள் அம்மா,"டேய் கால் கைய கழுவிட்டு வந்து இந்த காப்பிய குடி, குடிச்சுட்டு இந்த உப்புக்கண்டத்தை கொஞ்சம் நச்சுக் குடு"

"சரிம்மா.."

நல்ல வெள்ளாட்டு உப்புக்கண்டம் காய்ந்து கனத்து இருந்தது எளிதாக அடித்து நைக்க முடியவில்லை மலைச்சாமியால். பெரும் போராட்டத்திற்குப் பிறகு நைத்த உப்புக்கண்டங்களைத் தாயிடம் நீட்டினான் மலைச்சாமி. "சாமி இன்னியோட பள்ளிக்கூடம் முடிஞ்சதுல்ல?" கேட்டாள் தாய்.

"ஆமாம்மா..."

"மாதவன் மெடிக்கல்ஸ்ல வேலைக்கு கேட்டிருக்கேன், நீ உடனே போக வேண்டாம் ரெண்டு நாளைக்கு நல்லா உங்கூட்டாளிகளோட விளையாடு, கண்மாயில் ஆட்டம் போடு அப்பறமா, மெடிக்கல்சுக்கு ரெண்டு மாசத்துக்கு வேலைக்கும் போயிட்டு வா பள்ளிக்கூடம் தொறக்குற வரைக்கும் சரியா ராசா, மருந்தெல்லாம் எழுதப் படிக்கத் தெரிஞ்சுக்கிட்டா நாளைக்கு நீயும் கடைகன்னி வைக்க உதவியா இருக்கும்ல?"

மலைச்சாமிக்கு இது திடீர் மாற்றமாகத் தெரிந்தது ஒன்றும் புரியாமல் ஏக்கத்தில், "ஏம்மா, லீவுல பெரியப்பா வீட்டுக்கு அனுப்பமாட்டியா? போன வருஷம் பெரியப்பா வீட்டுக்குத் தானே போனேன்?"

"அட புரியாதவனே... போன வருஷம் உங்க பெரியப்பா வீடு கட்டினாரு... கூட சித்தாள் வேலைக்கு ஒத்தாசையா இருக்கும்னு உன்னை கூட்டிட்டு போனாரு.. இப்பல்லாம் உன்னை கூப்பிட மாட்டார்"

சுரீரென்று முதுகில் யாரோ அடித்தது போல இருந்தது மலைச்சாமிக்கு. இப்போதுதான் புரிந்தது சென்ற ஆண்டு விடுமுறையில் ஏன் தான் சென்னையில் பெரியப்பா வீட்டில் இருந்தோம் என்பது.

அம்மா செய்து கொடுத்த கஞ்சியை ருசிக்க முடியவில்லை, உப்புக்கண்டத்தை மெல்ல முடியவில்லை. ஒவ்வொரு கவளமும் ருசியைக் காட்டாமல் மலைச்சாமியின் தொண்டையைக் கடந்துகொண்டிருந்தது. உணவுக் கடமையை முடித்த மலைச்சாமி எதுவும் பேசாமல் எழுந்து சென்றான். இரவு படுக்கைக்குச்செல்லும்முன் பரணில் வைத்திருந்த நிலவோடு ஒரு நேர்காணலை எட்டி எடுத்தான், தட்டுத் தடுமாறி கீழே விழுந்த நோட்டுப் புத்தகம் எதோ ஒரு பக்கத்தைத் திறந்துகொண்டு விழுந்தது... அங்கே..

உனை எட்டிப் பிடிக்க நான் பறக்க வேண்டும்

பறந்து பார்க்க சிறகுகள் வேண்டும்

சிறகுகள் தந்திட இறைவன் வேண்டும்

இறைவனுக்கு எட்டும் வரை

எழுதிட வேண்டும்...

...மலைச்சாமி

...மீ.மணிகண்டன்

May-09-2020


குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

மிதக்கும் பயணங்கள் ... மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு: மிதக்கும் பயணங்கள்

சிறுகதையை எழுதியவர்: மீ.மணிகண்டன் 

மிதக்கும் பயணங்கள் ... மீ.மணிகண்டன்

நெல்சனின் நடப்பு கான்ட்ராக்ட் நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது விரைவில் தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை நேரில் பார்க்கப் போகும் ஆவலில் இருந்தான் நெல்சன். இந்த கான்ட்ராக்ட் நிறைவடையும் பொழுது கப்பல் யான்பு துறைமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும், கான்ட்ராக்ட் தேதி முடிந்து ஐந்து நாள்களுக்குப் பிறகே கப்பல் யான்பு துறைமுகத்தைத் தொட்டிருக்கும். பொதுவாக கரையில் இறங்கும்பொழுது இரண்டொரு நாட்கள் அந்தத் துறைமுகநகரை சுற்றி பார்த்துவிட்டு பின் பயணத்தை தொடர்வதோ அல்லது ஊருக்குத் திரும்புவதோ வழக்கம் ஆனால் யான்பு துறைமுகத்தில் அப்படி இறங்கி உலா வரமுடியாது. இஸ்லாமியர்களின் முக்கிய நகரமான மதீனா இருக்கும் காரணத்தால் இசுலாமியர்கள் அல்லாதவர்கள் அங்கே வெளியில் செல்ல அனுமதி கிடையாது. கப்பலை விட்டு இறங்கக்கூட கெடுபிடி அதிகம். முறையான அனுமதிப் படிவங்கள் பெற்ற மேலதிகாரி பரிசோதகர்கள் மட்டுமே கப்பலைவிட்டு இறங்க முடியும். நெல்சனுக்கு கான்ட்ராக்ட் முடியும் காரணத்தால் அவன் திரும்ப அவனது ஊர் செல்லவேண்டுமாதலால் அவனுக்கு அனுமதி வாங்கியிருந்தார்கள். கப்பலில் இருந்து இறங்கியதும் நேரே விமான நிலையம்தான் செல்ல முடியும் வேறு எங்கும் அடி எடுத்து வைக்க முடியாது.

இந்தக் கப்பலில் பாட்ரிக் தான் நெல்சனுக்கு மிக நெருங்கிய நட்பு. இலங்கை துறைமுகத்தைக் கடக்கும் பொழுது ஒருநாள் நெல்சனுக்கு காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது கப்பலில் இருந்த மருத்துவர் ஒன்றிரண்டு மருந்துகளைக் கொடுத்து நல்ல ஓய்வெடுக்கச்சொன்னார். அந்த இரண்டு நாட்கள் முழு ஓய்வில் பாட்ரிக் நெல்சனை கவனித்துக் கொண்ட விதம் நெல்சனுக்கு அவனது தாயை ஞாபகப் படுத்தியிருந்தது. மேல்தளத்தில் வேலைக்கு செல்லும்பொழுது கூட வெந்நீரை பிளாஸ்கில் வைத்துவிட்டு "நீ ரொம்ப எழுந்திரிக்காதே நான் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை டெக்கில் உன்னை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுச்செல்வான் பாட்ரிக். அடுத்ததாக நெல்சனின் நெருக்கம் அந்த இரண்டு புறாக்கள், ஆம் ஒரு மாலை வேளை ஹாங்காங் துறைமுகத்திடம் விடைபெற்றுக்கொண்டு கப்பல் நகர்ந்த பொழுது சிறகடித்து வந்து இரண்டு புறாக்கள் நெல்சனின் டெக்கின் ஜன்னல் அருகே அமர்ந்தது, ஒன்று இளம் சாம்பல் நிறம் மற்றொன்று வெண்மை. நெல்சனுக்கு இவைகளைப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இருட்டும் வரை அந்தப் புறாக்கள் அந்த ஜன்னலை விட்டு மீண்டும் பறக்கவே இல்லை, இது மேலும் ஆச்சர்யத்தைத்தூண்டியது நெல்சனுக்கு. காலையில் பார்த்தான் அங்கேயே நின்றன. அன்று அவைகளுக்கு அடைக்கலம் கொடுக்க எண்ணி கப்பலில் இருந்த மரச் சட்டங்களைக் கொண்டு அவைகளுக்குக் கூடு செய்தான். தினமும் உணவு தண்ணீர் கொடுத்து புறாக்களை உபசரித்து வந்தான். வேலை நேரம் போக புறாக்களுடன் பேசி மகிழ்வது நெல்சனின் வினோதப் பொழுதுபோக்கு.    

இன்று பாட்ரிக்குக்குப் பிறந்தநாள், கப்பல் சிப்பந்தி கேக் செய்திருந்தார், எல்லோருடைய பிறந்தநாளையும் கேக் வெட்டிக் கொண்டாடுவது கப்பலில் வழக்கம். கப்பல் சிப்பந்திகள் அதிகாரிகள் என எல்லோரும் கூடியிருக்க கேக் வெட்டி முதல் துண்டை நெல்சனுக்கு ஊட்டினான் பாட்ரிக். நெல்சனும் பாட்ரிக்குக்கு ஊட்டினான். "பிரெண்ட்ஸ் உங்களுக்கெல்லாம் ஒரு ஹாப்பி நியூஸ்," என்று நெல்சனின் திருமண நிச்சயத்தை சொல்ல வாயெடுத்தான் பாட்ரிக், வெட்கத்தில் சொல்லாதே என்று கையசைத்தான் நெல்சன், ஓர விழியில் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் பாட்ரிக். நம்ம பிரென்ட் நெல்சன் இந்த கான்ட்ராக்ட் முடிஞ்சதும் ஊருக்குப் பொய் கல்யாணம் செஞ்சுக்கப் போறார், அவங்க வீட்டில பெண் பார்த்து நிச்சயம் செஞ்சுட்டாங்க" என்றதும் குழுமியிருந்த அனைவரும் ஹூய் என்ற ஆரவாரத்தோடு கைகள் தட்டி ஒவ்வொருவரும் நெல்சனுக்கு வாழ்த்துச்சொல்ல ஆரம்பித்தார்கள். "ஐ ஆம் ஹாப்பி டு கெட் யுவர் க்ரீட்டிங்ஸ், எல்லோருக்கும் நன்றி, மறந்துடாதீங்க இன்னிக்கு பாட்ரிக்குக்குத்தான் பிறந்தநாள் சோ இந்த செலிப்ரேஷன் பாட்ரிக்குக்குத்தான்" என்று ஞாபகப் படுத்தினான் நெல்சன். 

நடுக்கக்கடலில் பிறந்தநாள் கொண்டாடி ஆனந்தமாய் பெற்றோருடன் போனில் உரையாடி நல்ல பொழுதாக இருந்ததை சற்றே மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தான் நெல்சன். புறாக்களுக்கு உணவளித்துவிட்டு இந்த இரவில் சற்றுநேரம் இயற்கைக் காற்றுவாங்கிவிட்டு வரலாம் என்று மேல்தளத்திற்கு வந்தான். அங்கே ஏற்கனவே பாட்ரிக் கையில் தேனீர் குவளையோடு நின்றிருந்தான். "என்னடா தூக்கம் வரலியா" என்றான் பாட்ரிக். "மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு, எல்லாமே நிறைவா இருக்க மாதிரி ஒரு பீலிங், தூக்கம் வரல" என்றான் நெல்சன். "ம்... வுட்பீ ஞாபகம்னு சொல்லு.." என்றான் பாட்ரிக் சிரித்துக்கொண்டே. "ஏ... எனக்கு மறந்தா கூட நீ ஞாபகப் படுத்திவிடுவாய்" என்றான் பதிலுக்கு சிரித்துக்கொண்டே நெல்சன். "நெல்சன், உன்கிட்ட ஒண்ணு சொல்லணும், இன்னிக்கு பார்ட்டில எல்லோரும் ஹாப்பியா இருந்தாங்க ஆனா நீ கவனிச்சியா வாலரி மட்டும் கொயட்டா இருந்தா, அவ முகம்கூட கொஞ்சம் டல்லா இருந்துச்சு," 

"யெஸ், கவனிச்சேன், ஆனா எனக்கு அத கேட்கணும்னு தோணல,"

"என்னவா  இருக்கும்?"

"அவகிட்டையே கேட்கலாமே பாட்ரிக்", என்றான் நெல்சன்.

"நோ, அவ எதார்த்தமா இருந்து நாம தப்பா புரிஞ்சுக்கிட்டா?" என்று கேள்வியெழுப்பினான் பாட்ரிக்.

"இல்ல, அவ ஏதோ நினைப்புல இருந்ததை என்னால பீல் பண்ண முடிஞ்சுது," என்றான் அழுத்தமாக நெல்சன். "சரி விடியட்டும் நானே அவகிட்ட கேட்கறேன்" என்றுவிட்டு நெல்சன் தொடர்ந்தான், "நான் கிச்சனுக்கு போய் ஒரு டீ போட்டு எடுத்துட்டு வறேன்", "நானும் வறேன் "என்று நெல்சனைத் தொடர்ந்தான் பாட்ரிக்.

டெக்கினுள் நல்ல உறக்கத்தில் இருந்தான் நெல்சன் கதவு திறக்கும் ஓசை கேட்டு சட்டென விழித்தான், பட படவென சிறகடித்தன புறாக்கள், பதட்டமாக உள்ளே வந்த பாட்ரிக், "ஹேய் நீ எதுவும் வாலரிகிட்ட பேசல இல்ல?" என்று கேட்டான், "நைட் நாம பேசிட்டிருந்தோம் அப்பறம் நான் கீழ வந்து தூங்கிட்டேன்," என்ற நெல்சன் தொடர்ந்தான், "நான் அவகிட்ட எதுவும் பேசல," 

"நல்லது, காலைல ப்ரேக்பாஸ்ட சாப்பிட கிச்சன் போனேன், வாலரி கண்ணை தொடைச்சிகிட்டே உள்ள இருந்து வெளியே வந்தா, அவ போனதுக்கப்பறம் நானும் செஃப் கிட்ட ஏன் வாலரி சோகமா இருக்காண்ணு கேட்டேன், செஃப் சொன்னத கெட்டப்பறம் எனக்கு இந்த கப்பல் லைப் மேல ஒரே கோபம்."

"என்னடா சொல்ற"

"பின்ன என்னடா, உனக்கே தெரியும் வாலரியோட மேரேஜ் ஒரு லவ் மேரேஜ், இப்போ என்னடான்னா அவ ஹஸ்பெண்ட் அவளுக்கு டிவோர்ஸ் அனுப்பியிருக்கானாம்"

இதைக் கேட்டு அதிர்ந்த நெல்சன், "ஏண்டா" என்றான் முழுவதும் தூக்கம் கலைந்தவனாக.

"இவ பாக்குற கப்பல் டூட்டி பிடிக்கலையாம்"

"இதெல்லாம் முன்னாடி தெரியாதா?"

"அது என்னவோ, ஆனா பாவம்டா வாலரி, அவளோட பேமிலி சிச்சுவேஷன் கொஞ்சம் எனக்கு தெரியும், பட் வாட் டு டூ... நத்திங் இஸ் இன் அவர் ஹான்ட்"

நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னும் ஒரு மாதம் இருக்கிறது நெல்சனின் இந்த ஒப்பந்தம் நிறைவடைய. இன்று ஞாயிற்றுக் கிழமை பிரியாணி ஸ்பெஷல் டே. வாலரி சைவம் என்பதால் கப்பலில் அசைவ உணவு சமைக்கும் நாட்களில் அவள் தனியே தனக்கென சைவ உணவு தயார் செய்து கொள்வாள். அன்று ப்ளம் கேக் கெய்திருந்தாள் முட்டை சேர்க்காமல். அங்கே ஒரு மேசையில் பாட்ரிக் மற்றும் நெல்சன் அமர்ந்து பிரியாணி சுவைத்துக்கொண்டிருந்தனர். அருகில் தனது ப்ளம் கேக்குடன் வந்து அமர்ந்தாள் வாலரி. "கைஸ் சண்டே என்ன ஸ்பெஷல்" என்றாள், "வேற என்ன சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போன் செய்யணும், ஒரு படம் பார்க்கணும், தண்ணியில மிதந்துகிட்டு வேற என்ன பண்ண முடியும் சொல்லு" என்றான் பாட்ரிக்.

"ட்ரு," என்றவள் நெல்சனிடம்,  "உன்னோட டவ்ஸ் எப்படி இருக்காங்க, கண்டு பிடிச்சுட்டியா ரெண்டு பெரும் ஜோடியா இல்ல பிரெண்ட்ஸா..?"

சிரித்தோக்கொண்டான் நெல்சன், "அவங்க யாரோ தெரியாது, ஆனா ரெண்டுபேருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப அதிகம்." என்றவன் தொடர்ந்தான், "ஆமா நீ பிறந்தித்திலிருந்தே சைவம் தான் சாப்பிடுவியா வாலரி?,"  

"ஐ கான்ட் சே, பட் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் வெஜ் தான் ஏனோ எனக்கு மீட் டேஸ்ட் ஒத்து வரல" 

"பட், இப்ப நாங்க சாப்பிடுறோம் நீ எங்க பக்கத்துல உக்காந்திருக்க... இஸ் தட் ஓகே ?", கேட்டான் பாட்ரிக்.

"ஐ யூஸ்ட் டு இட்" என்று பதிலளித்தாள் வாலரி 

"ஸோ மூக்கு ஏத்துக்கும் நாக்கு தான் ஏத்துக்காது, ஆம் ஐ ரைட் வாலரி," சிரித்துக்கொண்டான் நெல்சன்.

"ஹே.. யு நோ.. ப்ளம் கேக் இஸ் ஒன் ஆப் மை பாவோரைட்"

"அதான் மத்தவங்களுக்கு கொடுக்காம நீயே கொஞ்சமா செஞ்சுக்கிட்டியா," கண்ணடித்தான் நெல்சன்.

"ஹேய்... நீங்க பிரியாணி டேஸ்ட் பண்ணும்போது இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம், டு யு வாண்ட் டு டேஸ்ட் இட்?" எடுத்து நெல்சனிடம் நீட்டினாள் வாலரி 

"ஹேய்... ஜஸ்ட் கிட்டிங்...." என்று மறுத்தான் நெல்சன்.

"யு நோ... ப்ளம் கேக் செய்ய கத்துக்கிட்டதே என் ஹஸ்பண்ட்காகத்தான். அவருக்கு பிடிக்கும்னு சொன்னார் அவருக்காக செய்ய ஆரம்பிச்சு இப்போ இது எனக்கு பிடிச்சுப் போச்சு", நெல்சன் பாட்ரிக் இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் சற்றே மௌனத்தில் கடத்தினர்.

"ஹே... என்ஜாய் தி சண்டே கைஸ்", என்று விடை பெற்றுக்கொண்டு மேசைவிட்டு நகர்ந்தாள் வாலரி. 

யான்பு துறைமுகத்தின் எல்லையை அடைந்ததும் கப்பல் நங்கூரமிட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. "பாஆஆ.....ம்.." கப்பலின் சங்கொலி யான்பு துறைமுகத்திற்கு சமிக்ஞையானது. துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினார் தலைமை மாலுமி, தகவலில் நெல்சனுக்கான அனுமதி, விமான நிலையம் வரை தனி வாகனம் மற்றும் விமான டிக்கட் போன்ற விபரங்களை மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார்.

இந்த இரவு மட்டும்தான் நெல்சனுக்கு இந்தக் கப்பல் பயணம் நாளை கப்பல் துறைமுகத்தை அடைந்தபின்னர் அவனுக்கு வேறு வாழ்க்கை காத்திருக்கிறது. இரவு உணவிற்குப் பின் கப்பலில் பயணித்து வந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் ஒவ்வொருவரையும் சென்று பார்த்து விடை பெற்று வந்தான் நெல்சன். கேன்டீன் கடந்து வரும்பொழுது அங்கே வாலரி மற்றும் பாட்ரிக் இருவரும் நிற்பதைக் கண்டான். அருகில் சென்றான் நெல்சன், பேசுவதற்கு வார்த்தை வரவில்லை, பாட்ரிக்கின் கண்கள் பளபளப்பதைக் கண்டான் நெல்சன், வாலரியும் அதை கவனித்தாள், பாட்ரிக்கின் கையை இருக்கமாகப் பிடித்து, "ஹே... டேக் இட் ஈஸி..., இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் நீயும் ஒரு இடத்தில் இறங்கப்போற அதற்கு அப்பறம் எனக்கும் ஒரு இடம், நம்ம ஜாப் இப்படித்தானே... டேக் இட் ஈஸி.." என்று பாட்ரிக்கை சமாதானம் செய்தாள் வாலரி. அதுவரை அடைத்து வைத்திருந்த மனக்குமுறலை பாட்ரிக்கின் தோளில் சாய்ந்து கண்ணீராக கொட்டித்தீர்த்தான் நெல்சன். இதை பாட்ரிக் எதிர்பார்த்திருந்தவன்போல நெல்சனை அணைத்து ஏற்றுக்கொண்டான். 

நெல்சன் தங்கியிருந்த டெக்கில் தனது உடமைகளை சரிசெய்து கொண்டு இருந்தான், பாட்ரிக் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தான். "டேய் இந்த புறாக்களை என்ன செய்யலாம்," கேட்டான் பாட்ரிக்.

"புரியுது, நான் கூட கூட்டிக்கிட்டு போக முடியாது, யாரையும் பார்த்துக்கச்சொல்லவும் முடியாது, சோ காலைல அவங்க ரெண்டுபேரையும் ஜன்னல்கிட்ட வைக்கப்போறேன் அவங்க இருக்க நினைக்கிறாங்களா இல்ல பறக்க நினைக்கிறாங்களான்னு அவங்களே முடிவு செய்யட்டும், யான்பு தரையிலே நடக்குறதுக்கு எனக்குத்தான் அனுமதி இல்ல ஆனா யான்பு வானத்துல பறக்குறதுக்கு அந்தப் புறாக்களுக்கு முழு சுதந்திரம் இருக்கு, அவங்களுக்கு மத அடையாளம் கிடையாது.

இன்று அந்த சூரியன் கொஞ்சம் நிதானமாகத்தான் எழுந்தான், கப்பலை விட்டு நெல்சன் பிரிவதில் அவனுக்குக்கூட சற்று வருத்தம் போல. சொன்னதுபோல புறாக்களை ஜன்னலின் அருகே வைத்தான். காரணம் கேட்காமல் படபடவென சிறகடித்து நெல்சனுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த இளம் சாம்பல் நிறப் புறாவும் வெண்புறாவும் யான்பு வானத்தில் உல்லாசமாகப் பறந்தது. அவைகள் கண்களுக்கு எட்டும் வரையில் அந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் நெல்சன்.

தலைமை அதிகாரியிடம் விடை பெற்று கோப்புகளில் கையெழுத்திட்டுவிட்டு தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு கப்பலிலிருந்து பிரியாவிடை பெற்றான் நெல்சன்.

கால மாற்றத்தில் பறவைகளின் இருப்பிடம் மாறும், கப்பல் பயணமும் வாலரி பாட்ரிக் நெல்சன்களுக்கு ஒரு கால மாற்றம்.

வாலரி, பாட்ரிக், நெல்சன்களின் பயணங்களுக்கு துறைமுகங்கள் கிடையாது இந்தப் பயணங்கள் மிதந்துகொண்டே இருக்கும்.

... மீ.மணிகண்டன்

சனி, 3 செப்டம்பர், 2022

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம் ... மீ.மணிகண்டன்

பெண்மையைப் போற்றுவதாகச்சொல்லி ஏமாற்றும் உலகில், என்பார்வையில் கண்டத்தைக் கதையாகியிருக்கிறேன். அலங்காரப்பொருள்களுக்கு அடிமையாக்கி பெண்கள் தங்கள் சுயத்தை இழக்கும்படி செய்யும் நாகரீகக் கிருமிகளுக்கு மத்தியில் நான் கண்டவற்றைக்கொண்டு கதையாக்கியிருக்கிறேன். பொருளீட்டுவது முன்னேற்றம் என்றுசொல்லி உடல் நலத்தை நயவஞ்சகமாகச் சூறையாடுபவர்கள் மத்தியில் நான் கண்டவற்றைக் கொண்டு கதையாக்கியிருக்கிறேன்.

சிறுகதை: மெல்லச் சிரித்தது அல்லிக்குளம் !

... மீ.மணிகண்டன்

06-Dec-1994

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம் ... மீ.மணிகண்டன்
கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம் இருட்டு, ஒதுங்கிநிற்க ஒத்துழைக்காத மழை காரணத்தால் நனைந்துகொண்டே வீட்டை அடைந்தாள் வித்யா. "ஏம்மா இப்படி நனைஞ்சிட்டு வர்றியே போகும்போதே குடை கொண்டு போகக்கூடாதா?" என்றாள் சிவகாமி. "காலைல போகும்போது நல்ல வெயில் அடிச்சுது அத்தை, மழை வர்ற மாதிரியே தெரியல" என்றபடி தன் அறைக்குச் சென்று தலைதுவட்டி உடை மாற்றி மோகனின் படத்தின் முன் சென்று, விபூதிக் கீற்று இட்டுக்கொண்டு படத்தையே பார்த்து ஒருநிமிடம் தியானித்தாள். கணவனின் அன்பை, பாசத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும்முன் வித்யாவிடமிருந்து அவனைத் தன்வசம் ஆக்கிக்கொண்டான் அந்த இறைவன்.

சமையற்கட்டிற்குச் சென்ற வித்தியாவிற்கு காபி தயாராக இருந்தது. அவள் தாயாக மதிக்கும் அத்தை சிவகாமிதான் அவளுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் தானே எல்லாவற்றையும் செய்வாள். காரணம் தன் மகனைப் பிரிந்த சோகமே அவளுக்குப் பெரிய சுமையாக இருக்கும் என்று எண்ணினாள், மேலும் மாமியார் மாமனார் இருவரின் அன்பிற்கும் பாத்திரமானவள் வித்யா.

"கிளினிக் போயிட்டு வந்தியா, டாக்டர் அம்மா என்ன சொன்னாங்க" கேட்டாள் சிவகாமி.

"கன்பார்ம்தான்னு சொன்னாங்க... மூணு மாசம்..." என்ற வித்யாவின் கண்கள் தன்னையறியாமல் சிந்திய துளிகள் கன்னங்களை ஈரமாக்கின.

தூக்கம் கண்களைத் தழுவாத காரணத்தால் புரண்டு படுத்தாள் வித்யா, இது பழக்கமாகிவிட்டது. சில நாட்கள் ஜன்னலோரம் அமர்ந்து அந்தச்சிறு குளத்தில், நிலவொளியில் சிரிக்கும் அல்லிகளைக் கண்டும் அவள் தன்னை மறப்பதுண்டு. "அது சரி ஏன் இவ்வளவு கோபம்... கடைக்காரர் பில் எழுதும்போது தவறுதலாகக்கூட எழுதியிருக்கலாம்...." என்றான் மோகன். "அதெப்படி பணம் வாங்கும்போது தவறுதலாக எண்ணிக்கையில் விட்டார்களா ..." என்று பதிலளித்தாள் வித்யா. "சரி போகட்டும் அதுகுத்தான் அவரை உண்டு இல்லைன்னு செஞ்சுட்டியே..." சிரித்துக்கொண்டே மோகன் கூற மௌனமாய் நடந்தாள் வித்யா. "இந்த நீதி காக்கும் கோபம் உன்னோட பிறந்ததா.... இல்லை நடுவில் வந்ததா...." கேட்டான் மோகன். "ம்... இது புதுசு..." சொல்லிவிட்டு மெல்லச் சிரித்தாள் வித்யா, உண்மையைச் சொல்லவேண்டுமெனில் மோகனின் அருகாமைதான் அன்று அவளைக் கடைக்காரரிடம் தைரியமாகப் பேச வைத்தது... கணவனோடு வாழ்ந்த நான்குமாத நினைவுகளின் அரவணைப்பில் உறக்கம் எப்போது அவளின் கண்களை சுற்றும் என்பதை அறியாமலேயே உறங்கிப்போவாள், இன்றும் அப்படித்தான்... உறங்கிவிட்டாள்.

ராஜராஜன் தன்னுடைய வேலைக்கு சாதகம் செய்வதாகவே வித்தியாவிற்குச் சிலநாட்களாகத் தோன்றிவருகிறது. நேற்று ஏற்பட்ட ஒரு பிழையை பின்னர் தான் வித்யா அறிந்தாள், தன் மேலாளர் ராஜராஜன் அழைத்துக் கேட்பார் தவறுதனை ஒப்புக்கொண்டு சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றிருந்தவளுக்கு ஆச்சரியம். ராஜராஜன் அழைப்பை ஏற்று அவனது அறைக்குச்சென்றாள், "மன்னிக்கணும் சார்... என்ட்ரி தவறானதை பின்னாடிதான் கவனிச்சேன்..." என்றாள் வித்யா. "தட்ஸ் நார்மல்... நோ இஷ்யூஸ்... " சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் ராஜராஜன் "நான் நாளைக்கு உங்க மாமா மாமியை பார்க்க வரணும்... யு ஹேவ் அப்ஜெக்க்ஷன்?".

"நோ சார்... நீங்க வரலாம்.... வெல்கம்... நான் என் மாமா அத்தைகிட்ட சொல்லிடறேன்..." என்றால் வித்யா. "தேங்க்ஸ்.... நீங்க போகலாம்..." என்று வித்யாவைப் போகச்சொல்லிவிட்டு தன் அலுவலைத் தொடர்ந்தான் ராஜராஜன். எதற்காக இவர் நம்வீட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டே விடை தெரியாத குழப்பத்தில் தன் இருக்கையை அடைந்தாள் வித்யா.

இந்தக் கணினி யுகத்தில் காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்துவிடுகிறதே. ஆம் இது ஒன்பதாவது மாதம். அன்றொருநாள் ராஜராஜன் வித்யாவின் மாமனார் மாமியாரைச் சந்தித்து வித்யாவை மணந்துகொள்வதாகச் சொல்லி அவளின் சம்மதத்தை கேட்டுச் சென்றபின் மாமா அத்தை இருவரும் தீர ஆலோசித்து இந்தத் திருமணத்தால் வித்தியாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்று எண்ணினார்கள்.

"ஏம்மா வித்யா, அந்தத் தம்பிக்கு என்ன பதில் சொல்லுறது... நீ இன்னமும் மௌனமா இருக்கியே..." கேட்டாள் சிவகாமி. "எம்மா நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா".

"சீச் சீ, அசடு என்ன வார்த்தை சொல்லீட்ட... உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்குமேன்னுதான்..." என்றாள் சிவகாமி.

"இதோ பாரும்மா, இன்னைக்கு நாங்க இருக்கோம், உன்னை கவனிச்சுக்கறோம், உன் புருஷனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை எங்களுக்கும் ஏற்படாதுன்னு என்ன நிச்சயம். உனக்கு ஒரு குழந்தை பிறந்து பின்னால அது உன்னை கவனிச்சுக்கற வரை உனக்கு என்ன பாத்துகாப்பு... புதுமைப்பெண் புரட்சிப்பெண் அப்படின்னு கதைகள்ல படிக்க நல்லாருக்கும் ஆனா இந்த சமூகத்தில் ஒரு பொண்ணு தனியா வாழறது சாத்தியமில்லைம்மா... உன் அப்பா ஸ்தானத்துல இருந்து எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன் உனக்கு எது நல்ல வழின்னு தெரியுதோ, அதை நீயே தேர்ந்தெடுத்துக்கோ " - இது மாமனார் சதாசிவம்.

பெண்மனம் சிந்திக்கத் தொடங்கியது, வித்யா... அவள் செய்த குற்றம்தான் என்ன... சீக்கிரமே கணவனைப் பிரிந்தது இறைவன் செய்த குற்றம்... முகத்தைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அந்த நான்கு மாத வாழ்க்கையை நினைவில் கொண்டு அவள் காலத்தைக் கடத்தவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம். கணவன் என்ற அந்த உறவின் அன்பிற்கும், பாசத்திற்கும் அவள்மட்டும் என்ன விதிவிலக்கா...? இன்றைய நிலையில் அவள் மறுமணம் செய்துகொண்டால் இந்த சமூகம் அதைத் தவறாகப் பேசுமா? பேசட்டும். அதற்காக அவள் வருந்தத் தேவையில்லை. அவள் செய்தது தவறில்லையே. இந்த நிலையிலும் அவளை மணக்க ஒருவன் முன்வருகிறான் என்றால் அவன் உண்மையில் உலகம் புரிந்தவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம் அவனால் அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. நிலவொளியில் சிரித்த அந்த அல்லிகள் வித்யாவின் கேள்விகளை ஆமோதித்துத் தலையசைப்பதாகவே தோன்றியது.

மறுநாள், "அம்மா, இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன், ஆனா கல்யாணத்திற்குப் பிறகும் நீங்க ரெண்டுபேரும் என்கூடத்தான் இருக்கணும்".

மாமா அத்தை இருவருக்கும் ஏதோ ஒரு கவலை பறந்துவிட்டதுபோல் நிம்மதி. இரவு மணி 10:10 வித்யாவிற்கு இடுப்புவலி ஆரம்பமாகியது. இனிமேலும் தாமதிக்கக்கூடாது என்று எண்ணி இருவரும் அவளை டாக்சியில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள்... டாக்டர் பரிசோதித்துவிட்டு "கவலைப் படாதீங்க, காலை நாலு மணிக்குள்ள குழந்தை பிறந்துடும்.... சுகப்பிரசவமாகத்தான் இருக்கும்" என்றார். நேரம் கரையக் கரைய வித்யாவின் முனகல் சத்தம் அதிகரித்து பின் கத்தும் நிலைக்கே வந்துவிட்டாள். மணி 3:15 சுகமாக ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்த வித்யா மயக்க நிலைக்குச் சென்றாள்.

காலை மணி ஆறு வித்யா மயக்கம் தெளிந்து எழுந்தாள், அருகே மாமியார் "ஆண்குழந்தை பிறந்திருக்கும்மா..." என்றாள் சற்றே கலங்கிய கண்களோடு. "இதைப் பாக்க என் பிள்ளைதான் இல்லாமப் போய்ட்டான்..." என்று அத்தை சொன்னதைக் கேட்டு ஏதோ ஒரு இனம்புரியாத பயம் அவள் மனதில் பரவ அது கண்ணீராய் உருவெடுத்தது. அவள் அழத்துவங்கினாள். கண்ணீர் வற்றிக் கண்கள் சிவக்கும் வரை அழுதவள் தூங்கிப்போனாள். மீண்டும் அவள் விழித்து எழும்போது ஏதோ ஒரு மாயையிலிருந்து விடுபட்டவள் போல் காணப்பட்டாள். தன் குழந்தையைப் பார்க்கும்போது ஏதோ ஆயிரம் காலம் தன் கணவனோடு வாழ்ந்துவிட்டது போல் அவள் உணர்ந்தாள். பிஞ்சுக் கரங்களின் மென் பரிசத்தில் அந்த வாசம் மீண்டும் நாசியைத்தொட்டது... சன்னக் குரல் சிணுங்கலில் "வித்யா" என மோகனின் குரல் தட்டி எழுப்பியது... மோகனின் அருகாமையில் அன்று அவள் கண்ட தைரியம் மீண்டும் துளிர்த்ததாக உணர்ந்தாள்...

"அம்மா நான் பொட்டு வச்சுக்கலாமா..." - வித்யா

"என்ன இது கேள்வி... நெத்திப் பொட்டுங்கறது உன்னோட பொறந்தது... நாங்க சொன்னா நீ எப்படி எடுத்துக்குவியோன்னு நினைச்சோம்... அதனால இதப்பத்தி நாங்க இதுவரை பேசல... எங்களுக்கு நீ இப்படிக் கேட்டது மகிழ்ச்சியா இருக்கு ..." என்றாள் சிவகாமி

"அம்மா... இனி நான் பழைய ஆபீசுக்கு போக வேண்டாமுன்னு நினைக்கிறேன்.... புது வேலை தேடிக்கப்போறேன்..." வித்யாவின் தீர்க்கமான பார்வையும் ஆழமான குரலும் சிவகாமிக்கு புதுமையாக இருந்தது... ஆனாலும் பிடித்திருந்தது.

வித்யாவின் மடியில் புதிதாகப் புன்னகைத்த அந்தச்சிசு, தவறு செய்ய இருந்தவளை தடுத்து நிறுத்த வந்த தெய்வமாய் அவளுக்குத் தோன்றியது. ஆம் அமைதியாக இருந்த குளத்தில் யாரோ கல்லெறிந்து சற்று கலக்கம் ஏற்படுத்திவிட்டனர். இதோ ஒரு புதிய அரும்பின் பிறப்பால் அந்தக்குளம் மீண்டும் அமைதியானது.... விட்டுப்போன அத்தியாயத்தைத் தொடரக் கிளம்பிவிட்டாள் வித்யா தெளிவாக...!

...மீ.மணிகண்டன்

06-Dec-1994