செவ்வாய், 10 மார்ச், 2015

மனித மந்தையில் தொலைந்த மந்திகள் ... M.Manikandan

அந்த மூவரையும்
காணவில்லையே

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாம்
விரல் பதிவுகளில்
பள்ளிக்கூடங்களுக்குள்ளேயே
போர்வைகள் விலகுகின்றன

மொழிச் சுதந்திரம்
முதிர்ந்து விட்டதாம்
மூச்சிரைக்க முழங்கப் படுகிறது
முனகல்ச்சத்ததின் பரிணாமங்கள்
முளைக்கட்டுக் கூடங்களிலேயே

கேள்வி ஞானம்
கிளைத்து விட்டதாம்
சேர்க்கை சரிதங்கள்
செதாரமறக் கேட்டு ரசிக்கப்படுகிறது
எழுத்தறிவுச் சாலையிலேயே

வயது முதிர்ந்ததோ
வறுமை முறித்ததோ 
அழத் தோன்றுகிறது 
அழகு மந்திகளைத்
தேடித் தாருங்களேன் 

by M.Manikandan

11-Mar-15

வியாழன், 5 மார்ச், 2015

வான் காணாப் பிறை ... M.Manikandan

உறையும் பனிக்குளிரில் 
ஓடாமல் நான் குளிக்க 
ஒருபானைத் தண்ணீரை  
அடுப்பேற்ற வேண்டாம் 

சிக்குண்ட தலைமுடிக்கு  
நல்லெண்ணெய் வார்த்துபின்னே 
சீகர்க்காய் தேய்த்துமே 
சீர் படுத்திட வேண்டாம் 

சீப்புக் கொண்டு தலை வாரி 
ரெட்டைப் பின்னல் ரிப்பனிட்டு 
சிங்காரம் செய்துமே 
சிரமங்கள் படவேண்டாம் 

உடை தேடி எனக்குடுத்தி 
ஒழுங்காகப் பையடுக்கி 
பள்ளிக்கூடம் செல்வதற்குப்
பாதி வழி வரவேண்டாம் 

கறுப்புப் பொட்டுவைத்தும் 
கற்பூரம் சுற்றி வைத்தும் 
கண்ணேறு கழித்து நீ 
கவலைகள் படவேண்டாம் 

காரத் துவையலோடு 
கறி சமைத்துச் சோறாக்கி 
உடல் வருத்தி நீ எனக்கு 
ஒரு வாய் ஊட்டிடவும் வேண்டாம் 

ஏங்கி நான் அழுகும் 
இன்னல் பொழுதுகளில் 
அருகே நீ இருந்தால் 
அது போதும் ஆறுதலாய் 

அம்மா நீ யாரோ ...... ?


by M.Manikandan
05-May-15