பாரதி பாரதி பாரதி ...மீ.மணிகண்டன்
பக்கம் எங்கும் பாரதி
பதினொன்று டிசம்பர் என்றால்
பளபளப் பாவான் பாரதி
எழுதிவிட் டால்அது போதுமா?
ஏழையை விடியல் நாடுமா?
பழுதுபட் டிருக்கும் மானிடா
பாடுவ தால் பசி நீங்குமா?
ஓரிரு வரிகள் எழுதி
ஒற்றுமை என்றால் போதுமா?
பேரிருள் நீக்கிட அவன்போல்
பிறர்க்கென வாழ்ந்திடத் தெரியுமா?
காக்கை குருவியைக் கண்டு
காதல் சொன்னான் என்று
கவிதையை எடுத்துக் கொண்டாய்
கருத்தினைக் காற்றில் விட்டாய்?
சாதிகள் இல்லை என்றான்
சமநிலை கொண்டிடு என்றான்
சாதிகள் தீர்த்தே உன்னால்
சரித்திரம் காண முடியுமா?
ஆண்டுகள் தோறும் சிலைக்கு
அழகிய மாலை எதற்கு?
தொண்டுகள் செய்திட மறந்து
தோற்றது உந்தன் கணக்கு
சிந்தனை முழுதும் நஞ்சடா
சிரிக்கும் அற்ப மானிடா
வந்தனை எதற்குச் செய்கிறாய்?
வஞ்சனை உந்தன் குணமடா
பாரதி பெயரைச் சொல்லி
பாரில் அரசியல் நடக்கும்
பாரதி சொன்ன அரசியல்
பாழுங் கிணற்றில் கிடக்கும்
அழுது புலம்பி நடிப்பாய்
அரசியல் லாபம் செய்வாய்
எழுது முடிந்தால் உன்னையும்
எழுத முடிந்தால் உண்மையும்
மீண்டும் டிசம்பர் பிறக்கும்
பதினொன் றதிலே இருக்கும்
வேண்டும் என்றால் திருந்து
வேண்டாம் என்றால் வருந்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~