வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

உறங்கும் சுவைக்கட்டி ... M.Manikandan


சிந்தனையும் மொழியும்
கலவிக்க
எண்ணத்தில் கருவானவள் நான் !

கருவுற்ற சிறு பொழுதுகளில்
கற்பனையால் வளர்க்கப்படும்
சிசு நான் !

எண்ணம் புடைக்க வளர்ந்து
கை விரல் மருத்துவத்தில்
மைக்கருவி ஆயுதத்தால்
பிரசவிக்கப்பட்டு
காகிதத் தொட்டிலில்
தவழ விடப்பட்டது என் பிறப்பு !

அங்கமெங்கும் அடுக்கப்பட்ட
அலங்கார வார்த்தைகளின்
அணிவகுப்பு என் அழகு !

இலக்கணத் தெளிவுகொண்டு
எல்லோரையும் வியக்க வைக்கும்
அறிவு எனது !

எதுகை மோனையோடு
யாப்பு பூசிய என்னை
எடுத்துக் கொஞ்சுபவருக்கு
என்னால் நிழல் தர இயலும் !

இங்கே என்னைப்போல்
நாகரீகம், பொதுவுடைமை
அன்பு, அறிவு,
ஒழுக்கம், உயர்வு என
இன்னும் இன்னும் எத்தனையோ
எங்கள் தோழமைகள் !

எம்மைப் பிரசிவக்க
மும்முரமாக இயங்குவோர்
ஏனோ எடுத்துக் கொஞ்ச
முன் வருவதில்லை.

இப்படித்தான்
பெருக்கிக் கிடக்கிறோம்
எழுதப்பட்ட அனாதைகளாய் !

By M.Manikandan
28-Feb-15

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

அழகுப் பிள்ளை யார் ... M.Manikandan



பல விகற்ப இன்னிசை வெண்பா

மஞ்சள் அரைத்திட மாலைக் கதிரவன்
கொஞ்சி வணங்கிட குட்டியம் மூசிகம்
கண்டு கிளைக்குள் கிளையாய் இருந்திடும்
குண்டழ குப்பிள்ளை யார்  

by M.Manikandan
22-Feb-15

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

நெஞ்சு பொறுக்குதில்லையே ... M.Manikandan

நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
Title by eluthu com
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முப்பங்கு சமுத்திரத்தால் மூழ்கடித்த உலகமிதை
அப்படியே அழிக்கவந்த அரக்கர்கள் கூட்டமிங்கே,
...மிரளவைத்து பயமுறுத்தி மிகையாக வற்புறுத்தி
...தரமற்ற பொருள்விற்க தந்திரமாய் விளம்பரங்கள் !

தேர்தலதன் வீரமதை தெரியாமல் கைநீட்டி
அர்த்தமற்று இலவசத்தின் அடிமையான வாக்காளர் !
...கல்விதரும் கூடங்கள் கணக்கில்லை அவனியிலே,
...பல்கலையோ வரண்டுபோகப் பணம்பறிக்கும் எண்ணங்கள் !

உயிர்சாயம் உலர்ந்துபோன உழைப்பாளி வறுமையிலே,
மயிர்சாயம் பூசிவாழும் மந்திரிகள் மமதையிலே !
...வலிதீர்க்கும் மருத்துவத்தை வருமானப் பாதையாக்கி
...பலியாக்கி வறியோரைப் பதம்பார்க்கும் மூர்க்கர்கள் !

ஆன்மீக அருமையினை அடகுவைக்கும் காலிகளால்,
தன்னுள்இறை உணராமல் தள்ளிநிற்கும் மாந்தர்கள் !
...துள்ளிவரும் மழலையினைத் தூக்கிதினம் கொஞ்சாமல்
...அள்ளிவந்து பொருள்குவிக்க அலைந்துநோகும் பெற்றோர்கள் !

பணவேட்டை ஒன்றுமட்டும் பார்வாழ்கை என்றாக
குணம்குன்றி குவலயமும் குற்றுயிராய்ச் சாகுதம்மா !
...பழசாகிப் போனதனால் பந்தபாசம் இற்றதனால்
...நிழல்காற்று இல்லாமல் நெஞ்சுநொந்து அழுகுதம்மா !

By M.Manikandan
08-Feb-15