செவ்வாய், 4 ஜூலை, 2023

FeTNA 2023 நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை - வணக்கம் வட அமெரிக்கா  இவ்வாண்டு (2023) நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை இது.

FeTNA நிகழ்வு நாள்கள்: From 30/Jun/2023 till 03/Jul/2023

இடம்: Sacramento, CA, USA

குறிப்பு: FeTNA என்பது  வட அமெரிக்காவின் 67 தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு.

2023 FeTNA & Sacramento Tamil Sangam, USA

போட்டிக்கதைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "அன்பே செல்வம்". கொடுக்கப்பட்ட வார்த்தை வரம்பிற்குள், நேரத்திற்குள் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விரிந்த தகவல்.

~~~

நேற்று போக்குவரத்து சிக்கனலின் சிவப்பிற்காக நின்றபொழுது, எப்படியும் புதுமையான ஒரு கட்டுரை எழுதி அதை இந்தவாரப் பதிவில் வெளிவரும்படிச் செய்யவேண்டும், கடந்த இரண்டு மதங்களாகத் தனது பதிவு எதுவும் வெளியாகவில்லை என்ற ஏக்கமும் வேகமும் ரவியின் சிந்தனையை ஆட்கொண்டிருந்தது. சிந்தனையைத் திசைதிருப்பியது அந்த ஹோம்லெஸ் தாடிக்காரன் கையில் பிடித்திருந்த பதாகை. 'ப்ளீஸ் ஹெல்ப் மீ.' என்ற பதாகை வாசகத்தால் இரக்கப்பட்டு, ஈர்க்கப்பட்டு, அந்த தாடிக்காரனுக்கு உதவி செய்யும் நோக்கில் காருக்குள் இருந்தபடியே கண்ணாடியை இறக்கிவிட்டு, அவனைத் தன்னருகில் அழைத்தான் ரவி. டேஷ் போர்டில் கிடந்த நாணயங்களை தனது வலதுகரத்தால் கொத்தாக அள்ளினான், எண்ணிப்பார்க்கவில்லை, ஒருவேளை எண்ணுவது நாணயம் அல்ல என்று எண்ணியிருக்கலாம், அப்படியே தாடிக்காரனிடம் நீட்டினான். தாடிக்காரன் அதனைப் பெற்றுக்கொண்டு தனது கறைபடிந்த பற்கள் வெளிப்படப் புன்னகைத்து ரவிக்கு நன்றி தெரிவித்தான். காரில் ப்ளூடூத்தில் 'தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்' என்று டி எம் எஸ் பாடிக்கொண்டிருந்தார். எத்தனை காலம் கடந்தாலும் ரவிக்கு பழைய பாடல்களின் மேலிருந்த மோகம் இன்னும் குறையவில்லை. அமேரிக்கா வந்தது பொருளீட்டதான் மற்றபடி பழக்கவழக்கங்கள் பண்டிகைகள் பண்பாடுகளை மறப்பதற்கல்ல என்ற கருத்தில் உறுதியாக இருப்பவன் ரவி. சிக்கினல் பச்சையை உதிர்த்தது.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு தனது அலுவலை நிறைவேற்றிக்கொண்டு அதே சாலையில் திரும்பிக்கொண்டிருந்த ரவிக்கு அவன் எதிர்பாராத நிகழ்வொன்று காத்திருந்தது. அது, ஒரு பாலத்தின் அடியில் தன்னிடம் உதவிபெற்றுக்கொண்ட அந்த தாடிக்காரன் இப்பொழுது கையில் சிகரெட் ஒன்றை வைத்துக்கொண்டு போதை உட்கொள்வதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். மனமிறங்கி உதவி செய்வதை இவன் தவறாகப் பயன்படுத்துகிறானே என்ற மன உறுத்தலோடு பயணத்தைத் தொடர விருப்பமில்லாத ரவி அருகில் இருந்த மால் வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு பாலத்தின் அடியில் தாடிக்காரனை சந்திக்க விரைந்தான்.

தன்னருகில் யாரோ நிற்பதை உணர்ந்த தாடிக்காரன் நிமிர்ந்து பார்த்தான். தலைமுடிகள் சிக்குண்டு திரிந்து எல்லாத்திசைகளையும் அடையாளம் காட்ட, கண்களிரண்டைச்சுற்றி கார் டயர்போன்ற அழுக்காக கருவளையங்கள் நெளிய, தாடிக்காரனின் பார்வை ரவியை ஏறிட்டது. சிக்னலின் சிவப்பு தற்பொழுது ரவியின் கண்களில் ஒளிர்ந்தது. பார்வையை இறக்கி அமைதியாக சிகரெட்டை நுகர்வத்தைத் தொடர்ந்தான் தாடிக்காரன். "என்ன செய்கிறாய்?" என்றான் ஆத்திரமாக ரவி.

சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, "இது உனக்கு அவசியமில்லாதது?" என்று அமைதியாகப் பதிலளித்தான் தாடிக்காரன், இந்தமுறை சிகரெட் மீதிருந்த பார்வையைத் திருப்பவில்லை.

"நல்லது எண்ணித்தான் நான் உதவினேன்".

"உன் மீது தவறில்லை என் மீதும் பிழையில்லை", என்று கண்களை மூடி ஞானிபோல் பதிலளித்துவிட்டு  அமைதியைத் தொடர்ந்தான் தாடிக்காரன்.

"நீ செய்வது தகாத செயல்".

"எனக்கு வாழ்க்கை தொலைந்துவிட்டது. கடும் வெய்யிலை கொடும் பனியை வெட்டவெளியில் நீ உணர்ந்திருக்கிறாயா?", என்று மறுபடி ரவியின் முகத்தை ஏறிட்டான் தாடிக்காரன்.

"நீ உடலுழைக்க மறுத்துக் காரணம் தேடுகிறாய்", என்றான் ரவி.

"எனக்குப் பொருளீட்டப் பணி இல்லை, வசிப்பதற்கு இருப்பிடம் இல்லை இதற்கெல்லாம் காரணம் என் கண்ணியம் என்று சொன்னால் நீ நம்பவா போகிறாய்?" என்று கூறிச் சாலையில் கடந்துபோன வாகனங்களின் மீது பார்வையைத் திருப்பினான் தாடிக்காரன்.

இத்தனை நேரம் கோபம் குடிகொண்டிருந்த ரவியின் மனம் சற்று கோபத்தைத் தள்ளிவைத்துத் தாடிக்காரன் கூறப்போகும் காரணத்தை எதிர்பார்த்தது. "என்ன சொல்லப்போகிறாய்?".

தன் வாதத்தை முன்வைக்கத் தொடங்கினான் தாடிக்காரன், "நானும் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு என் நாடு தற்காப்பிற்காக கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது. ஒரு மாலை நான் உணவகத்திலிருந்து என் குடியிருப்பிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன், இருள் சூழ்ந்த நேரம், நான்கு கயவர்கள் என்னை வழி மறித்தார்கள் என்னிடமிருந்த டாலர்களுக்காகத்தான் என்னை வழிமறிக்கிறார்கள் என்று எண்ணி என்னிடமிருந்த சொற்ப டாலர்கள் அனைத்தையும் எடுத்து நீட்டினேன், அவர்களுக்கு அது அவசியமற்றது என்று பின்னர் உணர்ந்தேன், இருளில் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு மறைவிடம் நோக்கி நகர்ந்தார்கள். என்  ஆடைகளைக் களைய வற்புறுத்தினார்கள். நான் மறுத்தேன் என்னைத் தற்காத்துக்கொள்ள நான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை பயமுறுத்தும் நோக்கில் எடுத்து நீட்டினேன், அதே வேளை அவ்வழி வந்த போக்குவரத்து போலீஸ் வண்டி அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. வண்டியை நிறுத்தி போலீசிடம் நான் அவர்களை மிரட்டுவதாகக் கதைக்கட்டினார்கள். நான் கையில் துப்பாக்கியுடன் நின்றது மேலும் அவர்களுக்குச் சாதகமானது. என்னுடைய வாதம் எடுபடவில்லை அவர்கள் வென்றார்கள், நான்  சிறைக்குச்சென்றேன். ஓராண்டு சிறையிலிருந்துவிட்டுத் திரும்பிய பிறகு எனக்கு இருப்பிடம் கிடைக்கவில்லை வேலையும் கிடைக்கவில்லை காரணம் பேக் ரவுண்டு வெரிஃபிகேஷன் நான் கிரிமினல் குற்றத்திற்காக சிறை சென்றவன் என்று அடையாளப்படுத்தியது. இப்போ சொல், கடும் வெய்யிலை கொடும் பனியை வெட்டவெளியில் நீ உணர்ந்திருக்கிறாயா?" என்று கொட்டித்தீர்த்தான் தாடிக்காரன். இதை எதிர்பார்க்கவில்லை ரவி. புயல் அடித்து ஓய்ந்ததுபோல அமைதி. ஜூன் மாத வெயில் உச்சத்தில் தகித்தது.

தொடர்ந்தான் தாடிக்காரன், "இங்கே பணம் இருக்கிறது நான் சந்தித்த மனிதர்களிடம் பண்பு இல்லை. இங்கே அதிகாரம் இருக்கிறது நான் சந்தித்த மனிதர்களிடம் அன்பு இல்லை", என்றவன், "என்னைப்பற்றி உனக்கேன் அக்கறை, நீ யார்?" என்றான் முதல் முறையாக. தன்னைக் கணிப்பொறி வல்லுநன் என்றும் பகுதிநேர எழுத்தாளன் என்றும் அடையாளப் படுத்திக்கொண்டான் ரவி. சற்றும் தாமதிக்காமல் தாடிக்காரன் கூறினான், "அப்படீன்னா எழுது, அமெரிக்கா என்பது அழகும் ஆடம்பரமும் மட்டுமல்ல அநீதியும் அசிங்கமும் கூடக் கலந்தது."

***

வீடு திரும்பிய பின்னரும் ரவியின் மனம் தாடிக்காரனையே சுற்றிச்சுற்றி வந்தது. தன்னை அசுவாசப்படுத்திக்கொள்ள, ஆட்கொண்ட நினைவிலிருந்து தன்னை மீட்டெடுக்க, ஒரு காபி உதவி செய்யும் என்று எண்ணியவன் சமையலறை நோக்கி நடந்தான். ஆம் அவன் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் காரணம், இந்தவாரப் பதிப்பிற்கு அவன் புதிய கட்டுரை ஒன்று எழுதவேண்டும் இரண்டு மாத தாகத்தைத்  தணித்துக்கொள்ளவேண்டும். காபியோடு வந்து ஹாலில் தொலைக்காட்சி ஒருபுறம் மெல்லிய ஒலியுடன் வண்ணங்களை உமிழ்ந்துகொண்டிருக்க சோபாவில் சாய்ந்து அமர்ந்தான். சிந்தனையும் முழு நாள் உழைப்பும் அவனை உறக்கத்தில் ஆழ்த்தியது, ஆடைகளை மாற்றவும் மறந்தவன் அப்படியே உறங்கிப்போனான். விடியும்பொழுது புதுத்தெளிவுடன் எழுந்தான். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை நிறுத்தினான். நேற்றைய தாடிக்காரனுடனான சந்திப்பையே ஒரு பக்கக் கட்டுரையாக்கினான். குளித்துமுடித்துப் புதியவனானான் ரவி. கட்டுரைத்தனைக் கணினியில் தட்டச்சு செய்து அச்சுப்பிரதி எடுத்துத் தயாராக கையில் எடுத்துக்கொண்டான்.

மிகுந்த உற்சாகத்துடன் இதழ் அலுவலகம் நோக்கித் தனது காரைச் செலுத்தினான் ரவி. அந்தக் காலையிளம்வெயிலும் காரினுள் லாவெண்டர் மணமும் மகிழ்ச்சியைக்கொடுத்தது ரவிக்கு. வழியில் கடந்து சென்ற கார்களையும் நடந்துசென்ற மாந்தர்களையும் கண்ட பொழுது ரவியின் மனமேடை ஒரு நாடகம் நடத்திக்காட்டியது அதில் வந்த மாந்தர்கள் ரவியினைச் சூழ்ந்துகொண்டு அவனது கட்டுரைக்காக பாராட்டுத் தெரிவித்துக்கொண்டும் ரவியுடன் தொடர்பு வைத்துக்கொள்ள அவனது சமூக வலைதள அடையாளங்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தனர், ரவி தனது எழுத்தாளன் என்ற அடையாளம் ஒரு மைல்கல்லைத்  தொட்டுவிட்டதாக பூரித்துக்கொண்டிருந்தான். இந்த ஒரு கட்டுரை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என்று எண்ணினான். சொல்லப்படாத ஒரு நிகழ்வைச் சொல்லப்போகிறது, ஒரு சாமானியனின் பேசப்படாத ஒரு மூலைப்பகுதியை, ஒரு இருட்டுப் பகுதியை இந்தப் பதிவு பேசப்போகிறது என்று எண்ணினான். ஒரு தீக்குச்சி கதிரவனாகப் போகிறது சிறு இலையின் அசைவு பெரும் புயலை உருவாக்கப்போகிறது என்ற ரவியின் சிந்தனையைத் ஏந்திக்கொண்டு கார் இதழ் அலுவலகத்தை அடைந்தது.

தனது கட்டுரையை பதிப்பாசிரியர் டாம் நிச்சயம் அங்கீகரிப்பான் என்ற நம்பிக்கையோடு அலுவலகத்தில் நுழைந்தான் ரவி. மொத்தத்தில் தான் கொண்டு வந்திருக்கும் தகவலில் கனம் இருப்பதாகவே நம்பினான்.

"ஹெலோ ரவி, ஹௌ ஆர் யு டூயிங்? ரொம்ப நாளா உன்னோட பங்களிப்பு இல்லை, இந்தவாரப் பதிப்பிற்காவது ஏதேனும் வித்தியாசமாக தயார் செய்திருக்கிறாயா?", என்ற பதிப்பாசிரியர் டாமின் கேள்விக்கு, வணக்கம் தெரிவித்துவிட்டுத் தொடர்ந்தான் ரவி, "டாம் இந்த முறை என்னுடைய கட்டுரை கண்டிப்பா உனக்குப் பிடிக்கும். நீ கொடுத்த தலைப்பு 'அன்பே செல்வம்' இதற்கு மிகப் பொருத்தமா இருக்கும்" என்றான்.

"எனக்குப் பிடிக்கிறது முக்கியமில்லை ரவி, மக்கள் ரசிக்கிறமாதிரி இருக்கணும், எங்கே காட்டு" என்று கூறி ரவி தயாராகக் கையில் வைத்திருந்த தாளை வாங்கிப் படித்தான். முழுவதுமாகப் படித்து முடித்த டாமின் முகம் மாறியது. "என்ன ரவி இது?, எப்பவும் போல உன் எழுத்து நடை மிக அழகா இருக்கு ஆனா யாரோ ஹோம்லெஸ் தாடிக்காரனுடைய வாழ்க்கைத் தகவல் என்பதெல்லாம் ஜனரஞ்சகமா இல்லயே?" என்று கோபமாகக் கூறிவிட்டு தாளை ரவியிடம் திருப்பினான் டாம்.

டாமின் புரிதலை ஏற்க மனமில்லாமல், இந்தமுறையும் தனது எழுத்து நிராகரிக்கப்படபோகிறதே என்ற வருத்தத்தில் தனது கட்டுரையில் தனது பார்வையை எடுத்துச்சொல்ல முயன்றான் ரவி. "டாம், ஒரு மனிதனின் வலி இன்னொரு மனிதனுக்குப் புரியணும் அதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம், பணம் மனித வாழ்க்கைக்கு தேவை ஆனால் பணம் இருந்தும் ஒருவன் பண்பில்லாத அன்பில்லாத மனிதர்களால் வேட்டையாடப்படுவது எப்படி ஜனரஞ்சகமா அமையாதுன்னு சொல்ற?" என்றான். மேசையிலிருந்த மடிக்கணினியின்று பார்வையை நகர்த்தவில்லை டாம்.

டாமின் விளக்கத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் மீண்டும் கேள்வி எழுப்பினான் ரவி. "ஒரு சாமானியனின் வாழ்க்கை சில வல்லூறுகளால் திசைதிருப்பப்படுகிறது. வல்லூறுகள் திரைமறைவில் தனது வாழ்க்கையை சேதாரமின்றித் தொடர்ந்துகொண்டிருக்க சாமானியன் வாழ்க்கை இழப்பதை எந்த மன்றமும் வெளிச்சத்தில் காட்டாத பொழுது அதை எழுத்து மட்டும்தான் வெளிக்கொணர இயலும். எழுத்தும் கைகட்டி வாய்பொத்தி நின்றால். எதிர்காலச் சமூகத்திற்கு நல்லது எது தீயது எது என்று யார் எடுத்துச்சொல்வது?"

ரவியின் தொடர்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய டாம், "இங்க பார் ரவி, மக்களுக்குத் தேவை கேளிக்கை, படிச்சு முடிச்சா நல்லா சிரிக்கணும் இன்னும் நாலு பேருக்கு அதைப் பரிந்துரைக்கணும், தினம் தினம் பல சிக்கல்களை அனுபவிச்சுக் கடந்து வர்ற வாசகன் இந்தமாதிரி வலிகளைப் படிக்க விரும்பமாட்டான்", என்று விளக்கமளித்துவிட்டு மடிக்கணினித்திரைமீது மீண்டும் பார்வையைத் திருப்பினான்.

தாளைப் பெற்று மடித்துத் தனது கால்சட்டைப் பைக்குள் நுழைத்துக்கொண்டு டாமின் அறையை விட்டு வெளியேறினான் ரவி. அலுவலகத்தை விட்டு வெளியேறி தனது காரைச் செலுத்திக்கொண்டு அந்த சாலைப் பாலத்தின் அருகாமையில் உள்ள மால் வளாகத்திற்குச் சென்றான். காரை நிறுத்திவிட்டு மால் வளாகத்தில் இருக்கும் துரித உணவுக் கடையிலிருந்து ரொட்டிவகை உணவை வாங்கிக்கொண்டு, தான் நேற்று தாடிக்காரனைச் சந்தித்த பாலத்தின் அடி நிழலுக்குச்சென்றான். அங்கே திறந்த வெளியில் சாலையோரத்தில் அந்த தாடிக்காரன் நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்டான், அது இயல்பான உறக்கம் இல்லை ராஜ போதை என்பது ரவிக்குத்தெரியும். இன்னும் சிலமணி நேரங்களுக்கு அந்த சுற்றுச்சூழலில் நடப்பவற்றை தாடிக்காரனால் உணரமுடியாது என்பதும் ரவிக்கு நன்றாகத் தெரியும். கொண்டு வந்த உணவை அவனருகில் பத்திரப்படுத்திவிட்டுத் தனது காருக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் தென்பட்டது ஒரு குப்பைத் தொட்டி, தனது கால்சட்டைப்பைக்குள் இருந்த கட்டுரைத்தாளை எடுத்துக் கிழித்துக் குப்பையில் எறிந்துவிட்டு தனது காரை நோக்கி நடந்தான்.

...மீ.மணிகண்டன்

Comments from readers:








4 கருத்துகள்:

  1. அழகான நடை, யதார்த்தமான கதை முடிவு, தலைப்பிற்கேற்றார்போல் நல்ல கதை!! வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  2. அமெரிக்கா என்பது அழகும் ஆடம்பரமும் மட்டுமல்ல.. அநீதியும் அசிங்கமும்கூடக் கலந்தது...... என்ற ஆசிரியரின் வரிகள் எனக்கு உடன்படவில்லை... அமெரிக்கா மட்டுமல்ல.. உலகம் முழுவதும் அநீதியும் அசிங்கமும் கலந்ததுதான்...அது நம்மைத் தீண்டாமல் இருக்கவே இறையருளையும் தந்தள்ளான் இறைவன்...அமெரிக்காவில் வெளிப்படையாகத் தெரிவது மற்ற நாடுகளில் திரைமறைவில் உள்ளது. இதுதான் வித்தியாசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. "அழகும் ஆடம்பரமும் மட்டுமல்ல அநீதியும் அசிங்கமும் கூட", என்பதையே கதை கோடிட்டுக்காட்டுகிறது.

      நீக்கு