செவ்வாய், 30 டிசம்பர், 2014

வருக இரண்டாயிரத்துப் பதினைந்து ... M.Manikandan

ஏறுமுகம் கூட்டிவந்து காடுகள் சேர்ந்துயர
ஆறுகுளம் ஏரிநிறை கார்பொழிந்து - சோறுதரும்
மண்வளர்க்க மானுடம் தீட்டிப் பலப்பலவாய்
நன்மைதரட் டும்பதி னைந்து 

*** பல விகற்ப இன்னிசை வெண்பா
*** மீ.மணிகண்டன்  

வாழ்க வளமுடன் 


ஞாயிறு, 28 டிசம்பர், 2014

புறம் பேசும் அகம் பாவம் ... M.Manikandan

சிரிக்காத சிலையொன்றில்
  செதுக்கியவர் குறைகாண்பார்
பழுக்காத காயொன்றில்
  பறித்தவரின் பிழைகாண்பார்

உயராத பயிரொன்றால்
  உழுதவரைப் பழிசொல்வார்
இனிக்காத படைப்பொன்றை
  எழுதியவர் தவறென்பார்

ஒருகல்லும் பிடியாமல்
  ஓங்கவில்லை சுவரென்பார்
மருந்தொன்றும் காணாமல்
  மாறாத பிணியென்பார்.

சலிக்காமல் புறம்பேசி
  சருகாலே சரந்தொடுப்பார்
வலிக்காத நோயதனை
  வருந்தாமல் உட்கொள்வார்.

உடன்பெருகும் நாவார்த்தை
  உவர்ப்பில்லை உமிழுவதால்
கடவுள்தான் கருச்சிதையும்
  கவலையென்ன அவர்க்கதனால்.

by M.Manikandan

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நாளை அது இனிப்பு ... M.Manikandan

இன்றைக்குப் போதுமென
இன்னுமுள்ள மீதமதை
நாளைக்காய் வேண்டுமென
நானிலத்தார் இருத்துகிறார்   

இன்றைக்கே இல்லாதோர்
இன்னுமிங்கு இருக்கின்றார்
நாளையது வரட்டுமென
நாளதனைப் பார்த்திருப்பார்

இருவருக்கும் நாளையென்று
இருக்கிறது நம்பிக்கை
இதுமட்டும் இல்லையெனில்
இனிப்பேது இருப்பதனில்

by M.Manikandan

புதன், 24 டிசம்பர், 2014

கோணல் வரிசை ... M.Manikandan

வானை வாசலென்றும்
வையத்தை வானமென்றும் ...

குப்புறப் படுத்து
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
கோணல் வரிசைப் புள்ளிகளை

எதைத் தொட்டேன்
எதை விட்டேன்
எண்ணிக்கை விட்டுப்போக
இன்னும் இன்னும் ...
எத்தனையோ முறை ...

வீதி பெருக்கி
வெண்ணொளி தெளித்தும்
தொகுத்த கணக்கு
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
மூடிய திரைக்குள்
முடித்திடும் முயற்ச்சியில்.

திரை விலகும்
திரும்பவும் படரும்
திருத்தாத வரிசை

கள்ளக் கணக்கென்று
கடிந்துகொண்டுமிருக்கும்
கருவரியாத மாயை
மீண்டும்
குப்புறப் படுத்துக் கொண்டு !


by M.Manikandan

வியாழன், 18 டிசம்பர், 2014

மறந்து போனது மலராக

மறந்து போனது மலராக

மதிவளர்க்கும் என்றெண்ணி
மண்டையில் ஏற்றி  
அதிவிரைவில் அழியுமுன்னே
தாளில் மாற்றி
மதிப்பெண்கள் பெற்றகணம்   
மறையும் கூற்றை  
விதிவெல்லும் செயலேன்றோர்
விளக்கம் சொல்வார்.

பலர்கூட பாராட்டும்
பதக்கம் வாங்கி
சிந்தனையைச் சிதரவிட்டுச்
சிறப்பென் றேங்கி
முந்தானை, முறுக்குமீசை
முனகல் பேசி
விந்தழியும் காமமதில்
விழுந்தே நோவார்  

உணவிருந்தும் உடையிருந்தும்
உறக்கம் போக்கி
பணம்பெருக்கும் தந்திரத்தை 
பழக்கம் ஆக்கி
கணக்கின்றிக் காகிதத்தைக்
கட்டிச் சேர்த்து
பிணக்கழுகுப் பொறித்தேடிப்
பிணைத்தும் கொள்வார்  

உலகமிதை அமுதமென
ஊன்றிப் பேசி
கலகநிறைக் காட்சியிதை
களியென் றாடி  
பலமிதன்று படுத்துவிட  
பயந்தே ஓடி
உலர்ந்து போய் உருக்குலைந்து
உதிர்ந்தே போவார்  


Written by M.Manikandan

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும்

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும் - M.Manikandan

அருணமலை ஈசனோடு ஆறுபடை நாயகனும்
அருளுவக்க‌ ஆலயமாய் ஆக்கிவைத்த‌ கோட்டையிலே
தருணமிதில் நாமிருந்து தந்தபுகழ் ஏற்றுவதாய்
கருணைமனப் பூர்விகரைக் கைபொருத்திப் போற்றிடுவோம் 1

காடுதனைச் சீர்படுத்திக் கட்டிடக்கலை புகுத்தி
நாடுதனில் கோட்டையென்றே நலமாய்ப் பெயர்படுத்தி
பாடுபட்டு நம்முன்னோர் பகட்டாய் ஆக்கிவைத்த
வீடுதனைச் சந்ததிக்காய் விட்டுக் கொடுத்தாரே     2

கடலரித்துப் போனதுவாம் காவிரிப்பூம் பட்டினத்தில்
உடன‌ழைத்த மன்னருக்காய் ஒன்றிணைந்தே பாண்டிமண்ணில்
மடையுடைத்து மறுபடிநீர் மனையகத்தே புகுந்திடாது
வடிவமைத்தார் படியடுக்கி வாசலது உயரமதில்     3

பட்டண‌‌ வாசலெல்லாம் பதமாய்ப் பதிந்தசிலை
மட்டும்போ தாதென்றே மரத்தினில் சிற்பக்கலை
சிட்டாய் வரலாற்றைச் செதுக்கிய கதவுநிலை
எட்டாக் கற்பனைதான் இந்நாள் ந‌மதுநிலை     4

சனங்கள் வந்தமரச் சதுரச் சமுக்காளமிட்டு
தனங்கள் பெருக்கிவரத் தானங்கள் பூசையிட்டு
தினங்கூடி வாழுதற்கும் திருமணங்கள் செய்தற்குமாய்
மனங்கூடித் திட்டமிட்ட மகத்துவமே பேரில்லம்    5

மொட்டுடன் இலைகொட்டும் முற்றம் வளவென்றும்
இட்டொரு அடுப்பிருக்க இரண்டாங் கட்டிருக்கும்
கட்டிட நுணுக்கமதை கற்றோர் வகுத்தவித‌ம்
கட்டுகள் மூன்றோடே கணக்காய் நான்கிருக்கும்     6

பட்டாலை பத்தி,சடப் பரப்பம்பாய் விரித்திருக்கும்
பட்டியக்கல் நெடுவாசல் பாதிச்சுவர் பளிங்கிருக்கும்
முட்டைப் பூச்சுடனே முழுச்சுவரும் பூசிரிக்கும்
கட்டிய களஞ்சியங்கள் கொட்டிய நெல்பெருக்கும்     7

"எப்பத்தான் வருவாக‌ எம் ஐயா கடல்தாண்டி"
இப்படியாய் மனமேங்க‌ இருப்பாக வரம்வேண்டி
அப்பத்தா ஆயாக்கள் அகத்தே செய்ததவம்
அப்பப்பா அடையாளம் அப்பாவித் தூண்களெலாம்     8

வீதி இரண்டிணைக்கும் விதமாய் அமைந்திருக்கும்
ஆதி நகரத்தார் ஆக்கிய இல்லங்கள்
மேதினி அதிசயிக்க மேலாய்ச் சிறக்க‌ட்டும்
சோதிச் சிவனருளால் சுகமே பெருக்கட்டும்     9

அந்திப் பொழுதெல்லாம் அடுத்தோர் விடியலுக்கே
அந்தப் பழஞ்சொத்தும் ஆக்கிடப் புதுமைக்கே
சிந்தனை தவறவிட்டு சேதார மாக்கவேண்டாம்
முந்திச் செயல்பட்டு முகப்பில்லம் காத்திடுவோம்     10

உதிரம் தந்தசுவர் உதிரவும் விடலாமொ ?
புதினம் மாற்றமென்றே புகழழித் திடலாமோ ?
அதிகம் சொல்லவில்லை அறிந்தது கொஞ்ச‌மதை
பதிகம் எழுதிவந்தேன் பழையது நிலைக்கட்டுமே.        


ஆக்கம்: கல்லல். மீ.மணிகண்டன்

புதன், 29 அக்டோபர், 2014

கதிராய் எழுவாய் கதிரேசா ... M.Manikandan

கதிராய் எழுவாய் கதிரேசா

ஆனைமுக நாயகனே அருமருந்தே அற்புதமே
மோனைத்தமிழ் காக்கும் மூவாமுதல் நிலையே
சேனைமண வாளனை சேய்மொழியில் நான்பாட
தானைத் தளபதியே காத்தருள்வாய் கணபதியே

விண்ணாடும் நிலவொளியே வேல்பிடிக்கும் செஞ்சுடரே
என் நாடும் காத்தருளும் எழிற்பழனி வேலவனே
கண்ணான முருகனுனை கவிபாடி நானழைக்க
என்னாசைக் கண்மணியே எழுவாய் இதுசமயம்

தில்லை நடம் புரியும் சிதம்பரனார் புத்திரனே
கிள்ளை மொழி பயிலும் வள்ளி மணம் கொண்டவனே
முள்ளை எடுத்தாலும் முல்லையென மாற்றிவைக்க
பிள்ளை மனத்தரசே எழுவாய் இதுசமயம்

கண்ணுதலான் நல்மணியே கன்னல்மொழி நாயகமே
மண்ணிலத்தார் மன்றாடும் மாழைமயில் வாகனனே
விண்ணப்பித்தேன் என்குறைகள் வேகமாக மாறிடவே
அண்ணல் மலைக்கோவே எழுவாய் இதுசமயம்

பொல்லாத்திசைகளைந்து பொய்கையென வார்த்தருளும்
புல்லார் பகையழிக்கும் புள்ளிமயில் வேலவனே
செல்லாத காசெனவே பிள்ளைனிலை மாறும்முன்னே
வில்லார் வடிவழகா எழுவாய் இதுசமயம்

வானோர்குலம் காக்க வண்ணமயில் ஏரிவந்தாய்
தானவர் திரளழிக்க தற்பரமாய் நீயிருந்தாய்
மானாம் என் மிடிதீர்க்க மன்னவனே தாமதமேன்
தேனாம் தமிழ் தொடுத்தேன் எழுவாய் இதுசமயம்

தாலாட்டும் நேரமிதில் தாயுனை நான் தேடுகிறேன்
பாலூட்டும் வேளைதனில் பதுங்குவதேன் வேலவரே
வேலாட்டம் விழியிரண்டால் வேண்டும் வரம் நீயருள
கோலாட்டம் ஆடியிங்கு எழுவாய் இதுசமயம்

அள்ளிக்கொடுத்ததெல்லாம் ஆர்வலனே மாறியதேன்
சொல்லிக் கொடுத்தாரோ சூட்சுமத்தை நானறியேன்
கள்ளி மலராதோ கார்முகில்தான் பெய்யாதோ
வெள்ளி மயிலேரி எழுவாய் இதுசமயம்

ஆலைக்கரும்பாகி ஆட்டுவிக்கும் என் நிலையை
சோலைக் கதிராக்க சுந்தரனே தாமதமேன்
நாளையென தேதி சொல்லி நாளைக் கடத்தாமல்
வேளை பிறந்ததென்று எழுவாய் இதுசமயம்

ஒப்பேதும் இல்லையென்று உன்னடியை நம்பிவந்து
இப்போதழைப்பதுவும் கேட்டு மனம் மாறலையோ
சிப்பிக்குள் முத்தாகி எத்தனை நாள் அங்கிருப்பாய்
தப்பாமலே இணங்கி எழுவாய் இதுசமயம்

வாடா மலர்க்கரத்து வஞ்சியரின் நாயகனே
பாடாத செந்தமிழே பார்த்தருளும் தாயகமே
தேடி வருவோர்கள் தேம்புதல் உனக்கழகோ
நாடிக் குறை தீர்க்க எழுவாய் இதுசமயம்

சொல்லாத என்னிலையை சொல்லிவிட்டேன் இப்போது
கல்லாய் இருப்பதென்ன கந்தா மனமிறங்கு
இல்லார் நிலை மாற்றும் இன்முகத்துச் செண்பகமே
நல்லார் மனங்குளிர எழுவாய் இதுசமயம்

*** மீ.மணிகண்டன்

வியாழன், 2 அக்டோபர், 2014

அறிவிலி யான் ... M.Manikandan

மகத்துவம் அறியார்க்கு
மருத்துவம் இனியில்லை.
பொருளே புசித்தார்க்கு
புலரும் பொழுதில்லை.
மடியும் மாந்தர்க்கு
மகிழ்ச்சி யென்றில்லை – இதை
அறிந்தும் அறிவிலியான்
அகத்தவம் மேற்கொள்ளேன்.

by M.Manikandan

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மன நிறை வெனும் மழை ... M.Manikandan


கட்டிய மலர்களும்,பறவை களும்,
கன்றுட னசைமரங் களும்,சா ரலும்,
கற்சிலை, கடற்கரை, மலை,மே கமும்,
கண்டினுங் கரைந்திடா தொருதா கமும்…

எண்ணியே மயங்கிடக் கிளிக்கீச் சுகள்,
எங்கினு மொலிக்கமூங் கிலின்பாட் டுகள்,
எப்பொழு துடன்பாணர் களின்மெட் டுகள்,
என்னிலை யிலுந்தளர்ந் திடாக்கா துகள்…

அற்புத மனமகிழ் மழைவா சனை,
அந்திம லரும்புது மலர்வா சனை,
அத்தரும், புனுகுடன் சுகவா சனை,
அன்றியு மதனினும் ஒருயோ சனை…

உன்னத வகையொடப் பளபா யசம்
உப்புட னறுசுவை யுணவா யிரம்
உச்சியு மிரவுமுண் டுமயங் கியும்
உத்தர விடுங்குடல் பசிமே விடும்...

கட்டுடல் மகிழவும் களைப்பா றவும்
கன்னிம ணவாளனும் பரிமா றவும்
கட்டிலும் தலையணை தினம்மா றியும்
கற்றிடக் கலைவளர் வதுநூ தனம்...

இத்தனை பருகியும் நிறையா தது
இன்னுமெ னதேடுதல் குறையா தது
இன்னுமி தெதற்கென உணரா தது
இன்னலே மிகுமினிப் பிழைதா னது

by M.Manikandan

புதன், 3 செப்டம்பர், 2014

யானோ வணிகன்

கற்பனைச்சுருளில்
படம்பிடித்தேன்
காகிதப் பக்கத்தில்
திரையுமிட்டேன்

...விற்பனை கூவியும்
...வேகமில்லை
...வீங்கிக்கிடக்குது
...வீட்டுகுள்ளே...!

உற்சவ மூர்த்தியை
உருவமைத்தேன்
ஊர்வலம் போய்வரத்
தேரமைத்தேன்

...ஊருக்குச் சொல்லியும்
...ஓசையில்லை
...உறங்கிக் கிடக்குது
...ஓலைக்குள்ளே...!

பொய்யும் புரட்டும்
போகும் பாதையில்
பூவும் பொன்னுமே
மூடிக்கிடக்குது

...புல்லர் அறிந்திட
...வில்லையெனிலோ
...போகட்டுமே ஒரு
...தோல்வி இல்லை...!

by M.Manikandan

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் ... M.Manikandan

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டிக் கவிதை
(eluthu.com) மூன்றாம் பரிசு வென்ற படைப்பு
----------------------------------------------------------------------------------

பொன்னிறைக் கூடத னூடே
மின்மினிக் கோலம தாலே
உன்னத வாழ்வதை மேலே
அன்புட னாக்கிடுஞ் சேயே !

செந்நிற மாயொரு வீணை
என்னிலை ஏற்றிடுஞ் சேனை,
நன்னில மீதினில் வானை
புன்னகை யாலுதிர்ப் பானே !

முன்னிரு பாலொளிப் பற்கள்
மின்னிட வான்பிறை வீணே !
கன்னிக ளாயிரு சொற்கள்
கன்னலு மேகெடுந் தானே !

தன்னிரு கைகளில் மண்ணை
பின்னொளித் தாட்டுவான் கண்ணை
முன்வர வேயவ னன்னை
நன்னடை காட்டிடு வானே !

அன்னிய மாகிடும் நாளை
என்வச மாக்கிடும் பாளை !
என்னவன் பூநகை போலே
முன்னிலை வேரெது மேலே !

முன்னுரை ஆகிவந் தானே
நன்னுரை ஆக்கவந் தானே
இன்னுரை வாழ்வது வீழா
தென்றுரைத் தாடிவந் தானே !

பன்னிரு ஆண்டுக ளோடி
பின்னது பூத்தென போடி,
நன்னுல காக்கிட வந்த
என்னரும் பாலனுக் கீடோ !

சொன்னது ஓர்துளி தேனே
இன்னமு தோரடை தானே !
இன்னமு மாக்கிட பேனா
வின்முனை, மைவளம் காணா !

by M.Manikandan


புதன், 6 ஆகஸ்ட், 2014

மழை கா ... M.Manikandan

வான் தரும் மழை நீர்
தா வரம் பெறும் நீர்
தா னென உணர் வீர்
மாண் புடை மனத் தீர்.

by M.Manikandan

செவ்வாய், 29 ஜூலை, 2014

இமையே ... M.Manikandan

இமையே,
மூடித்திறப்பதை மறந்துவிடு
முன்னால் நிர்ப்பது
என்னவள்...!

by M.Manikandan

இது தான் காதலா ... M.Manikandan

காற்றையும் பூவையும்
... நேசிக்கக் கற்றேன்
கடலையும் வானையும்
... வாசிக்கக் கற்றேன்
கவிதை வரிகளை
... யோசிக்கக் கற்றேன்
காரிகை என்னிடம்
... பேசிய தாலே !

by M.Manikandan

வியாழன், 17 ஜூலை, 2014

பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்-சர்நா கவிதை வாசிப்புப் போட்டி ... M.Manikandan

Title given by eluthu.com for a competition

காரிருள் நீக்க வரும்
கதிரவனின் பூக்கதிரை
காதலிக்க வேண்டுமென
கண் விழித்த காலமது... 10

செல்லக் குஞ்சுகளும்
சிணுங்கிக் கொஞ்சலிட
சிறகடித்துக் குருவிகளும்
இரை தேடிப் பறந்ததென்ன... 19

மெல்லப் பனி முத்தும்
மேனி நனைத் திறங்க
புல்லும் குளித்து நிதம்
புதிதாய்ச் சிரித்ததென்னெ... 30

அறம் செய விரும்பென
அன்றைய தேர்வுக்காய்
அதிகாலை மனனிக்கும்
மழலைக் குரலென்ன... 39

நீர் சொட்டும் மயிர் துவட்டி
நீள் கூந்தல் துண்டு டுத்தி
தலை வாசல் தனைப் பெறுக்கி
தண்ணீர் தெளித்தங்கெ
தாமரைக் கோலமிடும்
தாரகையர் கோலமென்ன... 57

ஓடையில் நீச்சலிட
ஓடி வந்து விழுவதென்ன
ஓரிருவர் சத்தமிட
உதட்டை நான் கடித்ததென்ன... 66

இத்தனை சுகங்களையும்
இன்று மீண்டும் தேடுகிறேன்
இருக்கும் இடம் கண்டு
எவரேனும் சொல்வீரோ... 76

புரியாதவன் புலம்புகிறேன்
என்றுவிட்டுப் போவீரோ.... 80

அழுக்குப் பணம் சுமக்க
அழகனைத்தும் தொலைத்துவிட்டேன்
புழுத்தேடிப் புல் மறந்து
புரியாமல் புறப்பட்டேன் 90

நினைவுப் பூக்களுடன்
கை குலுக்கிக் கிடக்கின்றேன்
நிச்சயம் பூவுலகம்
நிசத்தை திருப்பு மென்று. 100

by M.Manikandan

ஞாயிறு, 13 ஜூலை, 2014

கற்றவை பற்றவை

Title given by eluthu.com for a competition
Won first prize in a competition from eluthu.com

கற்றவை பற்றவை - M.Manikandan

பற்றம் கூடிய‌
பள்ளிச் சுவடி
கற்றுக் கூடிய‌
கல்வித் தகுதி
பெற்றுத் தேடிய‌
பெருமை பகுதி.

சுற்றம் ஆடிய‌
சோதனை யூட்டு,
அற்றம் களைய‌
அறிவினை யூட்டுங்
கொற்றம் அதுவே
கொள்வாய் மிகுதி !

அன்னம் ஊட்டிய‌
அன்னை கல்வி !
தன்னம் பிக்கை
தந்தைக் கல்வி !
பொன்னும் பொறுமை
பூமிக் கல்வி !

நட்டவை பூக்கும்
நன்னில மேருழ‌,
சுட்டவை யேறுஞ்
சுண்ணஞ் சுவரெழ‌,
பட்டறி வூட்டும்
படிப்பி னைவாழ !

கற்றவை சலித்து
களையவை நீக்கு.
பெற்றவை உனது
பின்னிவை திரித்துப்
பற்றவை மனதொடு
பதியவை உரமிடு !

ஆக்கம்: மீ.மணிகண்டன்
Won first prize in a competition from eluthu.com

வெள்ளி, 6 ஜூன், 2014

சுற்றி யாவும் சூட்சுமமே ... M.Manikandan

இலக்கணம் சொன்னது தமிழ்
எழுதுகிறேன்
இனிப்பைச்சொன்னது தேன்
சுவைக்கிறேன்

கவிதை சொன்னது மழை
ரசிக்கிறேன்
கதைகள் சொன்னது பழமை
வியக்கிறேன்

வாசம் சொன்னது பூ
சுகிக்கிறேன்
வண்ணம் சொன்னது வானம்
நம்புகிறேன்

நட்பைச் சொன்னது பறவை
நெகிழ்கிறேன்
நடக்கச் சொன்னது நதி
உழைக்கிறேன்

நேசம் சொன்னது நிலம்
திளைக்கிறேன்
நிசத்தைச் சொன்னது தீ
நிமிர்கிறேன்

மென்மை சொன்னது தென்றல்
லயிக்கிறேன்
மயங்கச் சொன்னது இரவு
உறங்குகிறேன்

சேர்க்கை சொன்னது விலங்கு
சிரிக்கிறேன்
சீற்றம் சொன்னது புயல்
சிந்திக்கிறேன்

மதிக்கச் சொன்னார் முன்னோர்
வணங்குகிறேன்
உதிக்கச் சொன்னான் சூரியன்
வாழ்கிறேன்

by M.Manikandan

வியாழன், 5 ஜூன், 2014

கழிவு நீர்க் கடையாலே

எங்க சாமி மனுக் கொடுக்க
எங்க வாழ்கை தொலஞ்சு போச்சு
ஏச்சுப் பொழைக்கும் இனங்க ளுக்கெ
ஏக கால மாகிப் போச்சு

தாலி தந்த கணவனிங்கே
தவிச்ச வாய்க்கு தண்ணிதல்ல‌
கூலி செஞ்ச காசையெல்லாம்
குடும்பத்துக்குத் தருவதில்ல‌

வருத்தமில்ல பிள்ளகுட்டி
வளருவதும் கருத்திலில்ல‌
தெருத் தெருவாத் திரிபவன‌
திருத்த வொரு பேருமில்ல‌

பெத்தவளக் கேட்டாக்கப்
பொறுத்திருந்து போகச்சொன்னா
வித்தையில்ல விடியுமுன்னே
விடைதெரிய வென்றுசொன்னா

அவரவர் பழவினைன்னு
ஆடிச்சொன்னர் பூசாரி
வெவரங் கெட்டவ நான்
வேறயென்ன எதிர்பாக்க‌

தரங்கெட்ட அரசாங்கம்
தம்பட்ட மடிச்சுக்குது
தன்னலமே இல்லையிண்ணு
தைரியமாப் புழுகுது

இட்டிலிய சோத்தத் திண்ணா
ஏழ சனம் ஒசந்துடுமா
பட்டியெல்லாம் டாஸ்மாக்
பல்லிளிச்சுக் கொல்லுதம்மா

சாதிவாழும் மண்ணிலே
சமுதாய மத்தியிலே
நாதியத்த சனங்களா
நாங்க‌ளுமே மனுசதான்


by M.Mnaikandan

திங்கள், 26 மே, 2014

பெற்றோர்க்குச் சொல்ல வந்தேன் ... M.Manikandan

ஒன்று சொல்லத் தோன்றியதால்
உரைக்க வந்தேங்க‌
நன்று என்றே தோன்றியதால்
நவில வந்தேங்க‌

வென்று வாழும் வாழ்கையது
தேர்வி லில்லீங்க‌
வெள்ளைத் தாள் மதிப்பெண்வெறும்
பார்வை தானுங்க‌

தேர்வெழுதித் தோற்பதொன்றும்
தீர்வு இல்லீங்க‌
தெரிந்து கொண்ட அனுபவமே
தொடர்ந்து வெல்லுங்க‌

தோற்றதனால் பிள்ளைகளை
வெறுப்ப தேனுங்க‌
தோள்கொடுத்து ஊக்கமதை
ஊட்டிப் பாருங்க‌

மறுபடியும் கிளைத்தெழவே
மலர்சி யூட்டுங்க‌
மனமுணர்ந்த மக்களிடம்
மாற்றம் காணுங்க‌

உயர் மதிப்பெண் பெற்றவரும்
உலர்ந்த துவுண்டு
உலர் மதிப்பெண் பெற்றவரும்
உயர்ந்த துவுண்டு

மதிப்பெண் ஒன்றே வாழ்வுயர்த்த‌
மாயையு மில்லை
மதிப்பெண்ணிழந்த காரணமாய்
வீழ்வது மில்லை

எத்தனையோ சாதனைகள்
இன்னும் இருக்க‌
இன்று சின்ன‌ தோல்விக்காக‌
இறுக்க மேனுங்க‌

இன்றிழந்தால் இன்னுமுண்டு
தேர்வு வாய்ப்புங்க‌
இப்படித்தான் வாழ்கையென்று
எழுந்து காட்டுங்க

முன்கோபம் வெறும் உணர்வே
மூட்டை கட்டுங்க‌
முயர்சியினால் முட்டிஎழும்
விதையைக் காட்டுங்க‌

சாதனையின் கதவுகளைச்
சாத்திடா தீங்க‌
சரித்திரமாய் வாழவழி
காட்டி நில்லுங்க !


by M.Manikandan

வெள்ளி, 16 மே, 2014

நேற்றால் இன்று ... M.Manikandan

நாளை என்றொரு
நம்பிக்கை இன்றேல்
நாளும் வாழ்கை
எவ்விதம் நகரும் ?
மாற்றம் இதுவென
மனதில் தோன்ற
மருந்தொன் றுண்டு
என்றே இருந்தால் !

உனக்கதைச் செய்வேன்
எனக்கிதைச் செய்வாய்
உத்திர வாதம்
கையெழு த்தாகும்
உன்கதை என்கதை
செய்தவ னிருக்க
ஊடேயொப் புதல்
செய்திட லாமோ ?

நடப்பது யாவும்
நடத்திய தாலே
நடப்பதை யுணர
முயன்றவ ராரோ
நாளை எதுவென்
றறிந்திடு வாரே
நாளும் நடப்பைப்
பார்த்தி ருப்பாரே !

by M.Manikandan

குரு வாழ்க

குரு வாழ்க - M.Manikandan

குருவாழ்க குருவாழ்க குருவாழ்கவே !
குணம்வாழ குலம்வாழ குருவாழ்கவே !

தருவாகத் தரவந்த திருவாழ்கவே !
தலந்தந்து தனந்தந்த திருவாழ்கவே !

கரஞ்சேர்த்துக் கரைசேர்த்துக் கலமாகினாய்
கடந்தீர்த்துக் கனியீந்துக் காப்பகினாய்

அரணான‌ அன்னைனின் அருளாசியால்
அடிபோற்றும் அடியேனை உடனாக்கியே

எப்போதும் உன்னோடு நானாகவே
எனதான எந்தைனின் எழில்வாழ்கவே !

வளம்வாழ்க நலம்வாழ்க குருவாழ்கவே
வணங்கித் தொழுவேன்னின் தாள்வாழ்கவே !

ஆக்கம்: மீ.மணிகண்டன்


வியாழன், 1 மே, 2014

ஏமாளிப் போராளி

நானொரு தொழிலாளி
நலந்தரப் பொறுப்பாளி
நானிலம் சீருயர‌
நனைந்திடும் பணியாளி !

பேச்சில் ஊக்குவிக்கப்
பெரியோ ர‌ருகுண்டு
பெரும்பே ர‌துபோதும்
பெறுங்கணக் கேனிங்கு.

பகலாய் இரவாகும்
பணியின் தரமுயர
பாராட் டுப்போதும்
பலநாள் பணியுயர‌.

நால்வர் குடியுயர‌
நானோ கடனாளி
நா நயம் நிசமென்னும்
நாணயப் பாட்டளி !

வார்த்தை வாழ்த்துக்களால்
வளங்கள் உயருமென‌
வர்த்தக உலகியலில்
வாழ்கைப் போராளி !


by M.Manikandan

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இயற்கை வாழ்க ... M.Manikandan

குட்டிக் குட்டி மழைத்துளிகள்
கொட்டிக் களித்திடும் மேகம் வேண்டும்.
குளுகுளுக் காற்றை எனக்காக‌
கொண்டு வந்திடும் சோலை வேண்டும்.

வனங்கள் உயர்ந்திட வேண்டும்
வரங்கள் வழங்கிட வேண்டும்
மனங்கள் செழித்திட வேண்டும்
மரங்கள் வாழ மனிதம் வேண்டும் !

இயற்கை வாழ்க

ஆக்கம்: மீ.மணிகண்டன்

ஆசான்கள் ... M.Manikandan

வள்ளுவனார் தெள்ளமிழ்தால்
    ஈரடி தந்தார்
கள்ளுணர்வாய்க் கோள்ளவெழு
    சீரடி தந்தார் !
அள்ளியருந் துள்ளமதை
    யாரடி கொண்டார்
ப‌ள்ளியோடு மெள்ளமரந்
    தாரடி முறையோ ?

வண்ணமிகுத் தோரணையில்
    பாரதில் அந்நாள்
பண்ணிறைத்து வந்து தனைப்
    “பாரதி” என்றார் !
கண்ணொளியில் வீரகவிக்
    காரதைப் பொழிந்தும்
எண்ணமதில் தன்னிறைவாய்
    யாரதை ஏற்றார் ?

வெள்ளையுடைத் தாரகையும்
    வேண்டிமுன் வந்தார்,
கள்ளமற்ற சேவைதனைக்
    கொண்டு கொடுத்தார்,
தள்ளாத முதுமையையும்
    தாண்டி நடந்தார்
கொள்ளாமல் தனக்கெதுவும்
    தொண்டு புரிந்தார் !

வல்ல குறிக் கோளடையும்
    மானுடந் தன்னை,
வெல்லமெனச் சொல்ல விவே
    கானந்தர் வந்தார் !
நல்ல றிவாய் உள்ளுறைந்து
    ஆனதிரு தீ -அதை
எல்லார்க்கும் வள்ளலாரும்
    காண வகுத்தார் !

நாசுக்காய் நல்லவைகள்
    தாங்கி யளந்தார்.
நேசிக்கப் புத்தியின்றி
    வாங்க விழந்தே
தேசவிதி விளங்காமல்
    ஏங்கி நலிந்தே
காசுக்காய் கெட்டழிந்து
    தேங்குதல் முறையோ !

by M.Manikandan

சனி, 5 ஏப்ரல், 2014

ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் ... M.Manikandan

மறந்த உறவுச்சொற்களை
ம‌னதில் ஏற்ற‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

என்றும் பழமை பழுதில்லை
என்று உரைக்க‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

புலன்காணும் உணர்ச்சிகள்
பொய் யென்றே ஓத‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

உழைப்பிற்கு உண்மையொன்றே
ஊதியம் என்றுணர்த்த‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

பழங்களும் கீரையுமே
பசிக்குணவு எனப் பாட‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !

ஒரே சிந்தனை ஒன்றே போதும்
என்றே சொல்லித்தர‌
ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் !



ஆக்கம்: மீ.மணிகண்டன்

புதன், 2 ஏப்ரல், 2014

தண்ணீர்ப் பயணம் ... M.Manikandan

கருமுகிலில் நீரெடுக்க‌
விருப்பமது பெருகிவிட‌
பருவக்கணக் கறிந்திடா
சிறுகுருவி வென்றகதை !

நிழலுக் குள்ளே நிற்கும்போது
    நீள வுயரம் கணிக்க‌வில்லை
மழலைச் சிறகு விரிந்தபோது
    மலையின் தூரம் கன‌க்கவில்லை !

வழிகள் முழுதும் வலிகள்ளென்றே
    வண்ணக் குருவி அறிய‌வில்லை
விழிகள் தொட்ட தூரம்பெரிதென
    விளங்கிக்கொள்ளத் தெரியவில்லை !

நின்று நிமிர்ந்து பறந்து கொஞ்சம்
    நீளமூச்சு வாங்கித்தான்
ஒன்றி நிழலில் ஓடி மலையில்
    ஒவ்வொரு கல்லாய்த் தாவியது !

ஒற்றை உயிராய்த் தொடங்கிய பயணம்
    பற்றியதொருகண ம‌ச்சம்
பற்றிய லட்சியம் பற்றியவெண்ணம்
    மாற்றிய தச்சம் மறுகணம் !

நிச்சயமென்று நினைவில் நிறுத்தி
    நீண்ட தவமாய் நிலையாக்கி
உச்சியைத் தொட்டு உயரப் பறந்து
    லட்சியம் தொட்ட பயணமிது !

ஒருமனப் பயணம் உயரியவெண்ண‌ம்
    உன்னதமாம் தந்த ஜெயம்
இருந்தும் உண்மையை எண்ணுகையில்
    இயற்கை கொஞ்சம் கடினம் !

Written by M.Manikandan

ஞாயிறு, 30 மார்ச், 2014

நானும் நீயும் மீதமினி

என்னை உன்னை நம்பித்தான்
எல்லாம் இங்கே நடக்குதடா.
எனக்கும் உனக்கும் தேவையெனில்
எல்லாம் மறைந்தே போகுதடா !

ஐந்தே மாதங்கள் நமை நாடும்
ஐந்தாம் அறிவுத் தெருக்கூத்து.
ஐந்து ஆண்டுகள் நாம் தேட‌
அழிந்தே மறையும் வெறுங்காத்து !

விட‌லைக ளில்லை நாமுமினி
வெறுங்கை முழத்தை நம்புதற்கு,
வேட்டை களாடி உரிமைபெற‌
வேங்கை என்பதை நிலைனிறுத்து !

மயக்க நிலையில் நாமில்லை
மாயா ஜாலம் பார்த்திருக்க‌,
வியற்க்க உழைக்கும் மாந்தர் நாம் !
விடியல் கொடுக்கும் வெளிச்சம் நாம் !

இனியொரு காந்தி வரமாட்டார்
இன்னொரு சுதந்திரம் பெறுதற்கு,
மற்றொரு பாரதி வரமாட்டார்
மறுபடி புரட்ச்சி பாடுதற்கு.

உண்மை எங்கும் நிலைப்பதற்கு
உரிமை என்றும் கிடைப்பதற்கு
நானும் நீயும் மீதமினி
நல்லொரு தீர்ப்பை வழங்குதற்கு !


By M.Manikandan

சனி, 29 மார்ச், 2014

எழுதவொரு வார்தையில்ல ... M.Manikandan

தொட்டபெட்டா அட்டகட்டி
    தொட்டுத் தின்ன வெல்லக்கட்டி
பொட்டு வச்சுக் கிட்ட வந்தா
    பட்டுச்சேல ஒண்ணக்கட்டி

மங்கை இந்த சொக்கியிண்ணு
    மங்கலமாச் சொன்னாங்க
அங்கேயே கரைஞ்சு போனேன்
    அங்கமெங்கும் ஆசையோட

சங்கு நெத்தி காந்தமாச்சு
    தங்கம் வெள்ளி தள்ளிப் போச்சு
திங்கள் வெள்ளி நாளையேண்ணி
    அங்க இங்க ஓடியாச்சு

வாச மாலை கட்டிப்போட்டு
    மாசி மாசம் பூசை போட்டு
ஆசி கேட்டு சாமிக்கிட்ட
    பேசி வரம் வாங்கியாச்சு

ஆத்துப் பக்கம் காத்திருக்க
    காத்து வர வேர்த்திருக்க
ராத்திரிக்குப் பூத்திரிய
    ஏத்திவச்சுப் பாத்திருக்க

இந்த சுகம் போலவொரு
    சொந்த சுகம் வேற இல்ல
எந்த நாளும் பொத்திவைக்க
    எழுதவொரு வார்தையில்ல !


Written by M.Manikandan

எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ

எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ - M.Manikandan

எங்கே எங்கே எங்களின் நாட்கள்
எங்கோ தொலைந்ததை யார் தருவாரோ

விடிந்திடும் காலையின் கீற்று வெளிச்சம்
வடிந்துகொண் டிருக்கும் இரவின் மிச்சம்
குளிர்ந்தனல் காற்றை சுவாசம் சுகிக்கும்
தெளிந்தநீ ரோடையில் தேகம் குளிக்கும்

ஆன்றோர் அளந்த நல் அறிவுரை கொண்டு
சான்றோர் உவந்த நல் தெளிவுரை கொண்டு
பெற்றோர் வாழ்த்திட ஆசான் உரைத்திட‌
கற்றுவளர் ந்த பொன் நாட்களும் வருமோ

"வா"வென ந‌ண்பர்கள் வழினின் றழைத்திட
வாடாமுக மாய்க் கை கோர்த்தி ணைந்திட
கலைபல பயின்றதும் கவலைம றந்ததும்
வலைத்தள தலைமுறை வழங்கிடத் தகுமோ

பெண்மான் ஒருத்தியை கனவில் வடித்ததும்
கண்மாய்க் கரைகளில் கவிதை புனைந்ததும்
நீண்டு நிறைந்த பனித்துளி நாட்களை
மீண்டும் கணினிக் காலம் தருமோ

மலர்ந்த நன் நாட்களின் ஞாபகக் கூட்டம்
உலர்ந்த இன் நாட்களில் விழிகளைப் பனிக்கும்
"மானுடம்" என்பதும் மாறிடு மென்றால்
ஊனுடல்வ ளர்க்குமிம் மாற்றமும் மெதற்கோ ?

ஆக்கம்:  மீ.மணிகண்டன்