சனி, 10 டிசம்பர், 2022

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்!

இன்று (10/Dec/2022) தொல்லியல் ஆய்வாளர் முனைவர் திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரை ஒன்று மெய்நிகராகப் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புக் கிட்டியது. இதனை ஏற்பாடு செய்த FETNA அமைப்பிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

FETNA
களப்பிரர் காலம் இருண்ட காலமா? என்ற கேள்விக்கு, யார் பார்வையில் அது இருண்ட காலம் என்பதை உணரவேண்டும் என்று அவர் கூறியதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பிள்ளையார்பட்டியில் ஒரு குடவரை கோயில் இருக்கிறது அது முழுமைபெறாமல் உள்ளது என்றும் அங்கே மலையில் ஒரு பிள்ளையார் செதுக்கப்பட்டு அதன் கீழ் அதனைச் செதுக்கியவர் 'எக்காட்டூருக்கோன் பெருந்தசன்' என்று கல்வெட்டு காணப்படுவதாகவும் கூறுகிறார். அந்த எழுத்தின் காலம் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு என்று  ஆதாரத்துடன் விளக்குகிறார். இன்று பிள்ளையார்பட்டியில் வணங்கப்படும் பிள்ளையாரும்  எக்காட்டூருக்கொண் பெருந்தசனால் செதுக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லவா? என்பது எனது ஐயம். பிள்ளையார்பட்டி, நகரத்தார்களின் ஒன்பது கோயில்களில் ஒன்றானது என்பது யாவரும் அறிந்ததே. களப்பிரர்கள் மலையில் பிள்ளையரைச் செதுக்கியபோது அதைக் கடவுளாகச் செதுக்கியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. களப்பிரர்கள் சைவத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். பின்னர் ஏன் அதைச் செதுக்கினார்கள்? என்ற கேள்விக்கு, களப்பிரர்கள் தங்களின் அடையாளமாகவே செதுக்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியனுக்கு மீன், சோழனுக்குப் புலி அதுபோல் களப்பிரர்களுக்கு யானைக்குட்டி என்பது திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையிலிருந்து அறிகிறேன். மேலும், களப்பிரர்கள் காலத்து நாணயங்களின் ஒரு புறம், வலப்பக்கம் நோக்கி நிற்கும் யானைச்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

from worldtamilforum com

'களபிர' என்ற சொல்லுக்கு 'யானைக்குட்டி' என்ற பொருள் என்பதை அவர் உரையிலிருந்து அறிகிறேன். பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர். கோயில் சிலைகள் பொதுவாகக் கிழக்கு நோக்கி இருக்கும் ஆனால் பிள்ளையார்பட்டி விநாயகர் வடக்கு நோக்கி இருந்தவண்ணம் இருக்கிறது. இதிலிருந்தே களப்பிரர்கள் அவர்களின் அடையாளமான ஒரு யானைச் சின்னத்தையே அங்கே செதுக்கியிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் பௌத்த மதத்தை அழித்து சைவத்தை தழைக்கச் செய்தவர்கள் பிள்ளையார்பட்டியில் சிவலிங்கத்தை வைத்திருக்கவேண்டும்.

நகரத்தார்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் பிள்ளையாரைத் தொழுது செயலைத் தொடங்குவது அறிந்த ஒன்று. மேலும் எந்த சமூகமும் கொண்டாடாத ஒரு வழிபாட்டை நகரத்தார்கள் மட்டுமே கடைபிடித்து வருகிறார்கள் என்றால் அது பிள்ளையார் நோன்பு.

Thanks Google
களப்பிரர்கள் காலத்தில் பௌத்தமும் சமணமும் தழைத்திருந்தது. பிள்ளையாருக்கு குண்டு வயிறு பெரிய காதுகள் ஆங்கிலத்தில் Laughing Buddha என்று பௌத்தம் வடிவமைத்த சிரிக்கும் புத்தருக்கும் குண்டு வயிறு பெரிய காதுகள். இந்தத் தொடர்பையும் பிள்ளையார் பௌத்தத்திலிருந்து வந்ததற்கான அடையாளமாகக் காண்கிறேன். 

பூலாங்குறிச்சிக் கல்வெட்டு வைதீகர்களிடமிருந்து சொத்துக்களை விற்று களப்பிரர்களின் கோயிலுக்குத் திருப்பியதாகச் சொல்கிறது. அதாவது மன்னர்களிடமிருந்து வைதீர்கள் பெற்ற சொத்துக்களை, களப்பிரர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் வைதீகர்களிடமிருந்து திருப்பியதாகச் சொல்கிறார் நான் இதை மேலும் ஒருமுறை கெட்டுப் புரிந்துகொண்டேன். பூலாங்குறிச்சி நகரத்தார்கள் ஊர்களில் ஒன்று.

திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையில், களப்பிரர் காலத்தில் ஐயனாரை வணங்கியதையும், 'சாத்தன்' என்கிற பெயரையும் குறிப்பிடுவதைக் காண்கிறேன். நகரத்தார்கள் தமது குலதெய்வங்களாக ஐயனாரை வணங்குவது வழக்கம், மேலும் சில நகரத்தார்கள் தங்கள் குலதெய்வம் 'சாத்தையனார்' என்று கூறுவதைக் காணலாம்.

ஐயனாரை வணங்கியதுடன் பிடாரி (அம்மன்) யையும் வணங்கியதாகக் குறிப்பிடுகிறார். அம்மனுக்கு கோயில் எழுப்பி அதனைச்சுற்றி ஊர் அமைக்கும்பொழுது, அதை அம்மனுக்கு தானம் வழங்கியதாகக் குறிப்பிட்டு 'மங்கலம்' என்று குறிப்பிடுவதாகக் கூறுகிறார். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகர் குழு தானம் வழங்கியது ஐந்நூற்றுவர் மங்கலம் என்று குறிப்பிட்டுக் கூறுகிறார். நகரத்தார்களின் மாத்தூர் கோயிலில் உள்ள சிவனுக்கு ஐநூற்றீசுவரர் என்ற பெயர். 

wiki

'காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்' என்கிறது ஒரு விக்கிப்பீடியா பதிவு. நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்ததும் முருகனைத் தங்களின் குலதெய்வமாக வணங்கி வருவதும் யாவரும் அறிந்ததே.

களப்பிரர்கள் கடல் வணிகம் செய்தவர்கள். இன்று நாம் அதைத்தான் நகரத்தார்கள் கடல் வழி வணிகம் செய்தவர்கள் எனச்சொல்கிறோமோ?  . 

கண்ணகியும் கோவலனும் நகரத்தார் என்று கூறுகிறோம். அவர்கள் வாழ்ந்த இடம் காவேரிப்பட்டினம் வாழ்ந்த காலமும் களப்பிரர்களின் காலத்தை ஒட்டிய காலமாகவே காண்கிறேன். கோவலனைக் காதலித்த மாதவியும் பௌத்த துறவியாகிறார். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலையும் பௌத்த துறவியாகிறார். நகரத்தார்களின் ஒன்பது கோயில்களுள் கோவலன் பிறந்தது எந்தக்கோயில், கண்ணகி பிறந்தது எந்தக்கோயில் என்று விபரம் நம்மிடம் இருக்கிறதா?


சொ.சொ.மீ ஐயாவின் உரை, அதாவது நகரத்தார்களின் பூர்வீகம் சைவம் அல்ல. 

ஐயா சமணத்தை அடையாளம் காட்டுகிறார், நான் இங்கே சமணம், பௌத்தம் இரண்டையும் ஒன்றாகக் காண்கிறேன். மற்றபடி சைவ மாற்றத்திற்கு இரண்டு கரணங்கள் காண்கிறேன், ஒன்று, களப்பிரர்களை ஒரு கூட்டம் வாழவிடாமல் அழிக்கும் காரணத்தால் தங்களுடைய களப்பிரர் அடையாளத்தை மறைப்பதற்காக இருந்திருக்கலாம், அல்லது களப்பிரர்களின் சொத்துகளை அபகரித்து அவர்களை அழிக்க வந்த  கூட்டம் களப்பிரர்களில் 

Thanks Google
சிலரை அழைத்து, உங்களை வாழ வைக்கிறேன் நீங்கள் சைவத்திற்கு மாறுங்கள் என்று நம்பவைத்த நாடகமாகவும் இருக்கலாம்.

பௌத்தம் சொல்லித்தந்த சித்தர்கள் வாழ்வியலைத்தான் பட்டினத்தாரும் காரைக்கால் அம்மையாரும் இயற்பகையும் கடைப்பிடித்திருக்கக்கூடும், காலம் அவர்களை சைவத்திற்குள் அடைத்திருக்கிறதோ என்பது என் ஐயம்.


முருகன் வழிபாட்டை நகரத்தார்கள் பண்டாரத்தைக் கொண்டே நடத்துகிறார்கள், வைதீகர்களைக்கொண்டு பூசைகள் செய்வதில்லை. பழனிப் பாதயாத்திரையில் வேல் கொண்டு முன்செல்வதும், வேலுக்குப் பூசையிடுவதும் பண்டாரமே. பழனி அன்னதானமடத்தில் பூசைகள் பண்டாரங்களைக்கொண்டே நடைபெறுகிறது. இல்லங்களில் முருகனுக்குப் பூசைகளிடும்போது முன்னின்று பூசை இடுவதும் பண்டாரமே. 

Palani Pathayathirai

நகரத்தார் திருமணங்கள், வைதீகர்களைக்கொண்டு நடத்தப்படுவது இல்லை. வயதில் மூத்த நகரத்தார் மக்களே முன்னின்று தங்கள் வீட்டுத் திருமணங்களை நடத்திவருகிறார்கள். 

இவை ஏன்? என்ற கேள்வி என்னுள் எழும்போது அதற்கு விடையாக, களப்பிரர்களின் அழிவிற்குக் காரணம் வைதீகர்கள், எனவே வைதீகர்கள் என்றென்றும் களப்பிரர்களின் எதிரி என்ற காரணமாக் கூட இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

ஆதிக்காலங்களில் பழனி மலையில் முருகனுக்குப் பூசையிட்டவர்கள் பண்டாரங்கள் என்பதர்க்கு சொல்வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்கள் கொடுக்கும் ஆதாரம்::


     

மேலும் களப்பிரர் ஆதாரங்களை அறிய விரும்புகிறேன். அதற்கு வழிகோலுபவர்களை வரவேற்கிறேன். நன்றி!

மீ.மணிகண்டன்

Date: Dec-10-2022

Updated: Dec-29-2022

Updated: Aug-29-2023


சனி, 22 அக்டோபர், 2022

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ... மீ.மணிகண்டன்

நகைச்சுவை நாடகம். இக்கதை நாடகமாக்குவதற்காக எழுதிய சிறுகதை. அதனை மெய்யாக்கும்வண்ணம் குறும்படக் குழுவினர் என்னை அணுகி இக்கதையை ஒளி நாடகமாகப் பதிவு செய்து YouTube ல் வெளியிட்டு எனது கதையினைச் சிறப்பு செய்தனர் என்பது கூடுதல் தகவல். 

கதையின் தலைப்பு: பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

நாள்: Jun-16-2019

அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி,

என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா... கதவைத் திறந்தா என்ன...

ம்... பெல் சத்தம் உனக்கும்தானே கேட்குது... நீ போய் கதவை திறயேன்... அறைக்குள் இருந்து பதில் கொடுத்தான் பிரகாஷ்.

அழைப்பு மணி மீண்டும் ஒலிக்கிறது.

அப்பப்பா... போட்டி போட்டி.. எதுக்கெடுத்தாலும் போட்டி... சொல்லிக்கொண்டே கையில் கரண்டியோடு அறைக்குச்சென்றாள் பிரேமி... 

இப்போ நீங்க போய் கதவைத் திறக்கலே... 

திறக்கலே.... 

திறக்கலே....

ம்... திறக்கலே... சொல்லு  சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடி.... என்றான் பிரகாஷ்.

ம்.. நானே பொய்த்த திறந்துடுவேன்.... சொல்லிவிட்டு வாசற்கதவு நோக்கி நடந்தாள் பிரேமி.

கையில் கரண்டியுடன் கதவைத்திருந்தாள்... வாசலில் நிர்ப்பவரைப் பார்த்தவுடன் சற்றே பதட்டமானாள்... அவர் வேறு யாரும் அல்ல பப்பு படிக்கும் ஒரு பிரைவேட் ஸ்கூல் ஹெட்மாஸ்டர். 

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ...
குறும்படத்தின் காட்சி

வணக்கம் சார் என்று கைகளைக் குவித்தாள் பிரேமி... கையில் இருந்த கரண்டி தவறி வாசலில் நின்றிருந்த ஹெட்மாஸ்டர் சட்டை மீது உரசிக்கொண்டு கீழே 'நங்' என்று விழுந்தது. 

கரண்டி உபாயத்தால் சட்டையில் ஒட்டித் தவழ்ந்த குழம்பை தொட்டு நாவில் வைத்த அவர்... 

ம்... வத்தக் குழம்பு... உப்பு இன்னும் ஒரு பின்ச் சேத்திங்கன்னா டேஸ்ட் இன்னும் தூக்கலா இருக்கும்... என்றவர் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.... 

நான் பப்புவோட ஸ்கூல் ஹெட் மாஸ்டர்...

எஸ் சார்... ஆமா சார்... எனக்குத் தெரியுமே... பதட்டம் குறையவில்லை பிரேமிக்கு....

யார்டி வெளில... உங்க சொந்தக் காரங்க யாராவது வந்துட்டாங்களா தெரிஞ்சிருந்தா நேத்தே வீட்டைப் பூட்டிட்டு வெளியில கிளம்பியிருக்கலாமே... என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான்  பிரகாஷ்..

அச்சச்சோ.. என்னங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல... கொஞ்சம் பேசாம இருங்களேன்... என்று கணவரை அமைதிப்படுத்திவிட்டு... 

சார் நீங்க இங்க உட்காருங்க... ஹெட் மாஸ்டருக்கு இருக்கை காட்டி இருக்கச்சொன்னாள் பிரேமி.

ம்... நான் நினைக்கிற மாதிரி இல்லையா... அப்படின்னா எங்க அண்ணன் தம்பி யாராவது வந்துட்டாங்களா...  யாரை இவ வீட்டுக்குள்ள கூப்புட்டு உட்காரச்சொல்லுறா... என்று வினவிக்கொண்டே கைலியை இருகக்கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான் பிரகாஷ்.

ஓஹ்... சாரி சார்.. வணக்கம்... நான்கூட யாரோன்னு நினைச்சு.... என்று இழுத்தான் பிரகாஷ்

பரவால்ல... அதனால் என்ன ... என்ற ஹெட் மாஸ்டர் தொடர்ந்தார்...  அதிருக்கட்டும் ... நான்... வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாருங்க... என்று தான் வந்ததற்கான காரணத்தைச் சொல்ல வந்தார் ஹெட் மாஸ்டர்...

சார்... முதல்ல என்ன சாப்பிடறீங்க காபி... டீ ... என்றாள் பிரேமி 

அதெல்லாம் வேண்டாம்... என்றான் பிரகாஷ்

கணவனின் இந்த பதிலைக் கண்டு பதட்டம் அடைந்த பிரேமி... என்னங்க... என்றாள் பிரகாஷைப் பார்த்து

இல்ல அப்படி சொல்லுவார் சார்... ஆனா நாம விடமாட்டோம்னு.. சொல்லவந்தேன்... என்று சமாளித்தான் பிரகாஷ்

ஆமா.. அதெல்லாம் வேண்டாம்..என்றார் நகைத்துக்கொண்டே ஹெட் மாஸ்டர்

பார்த்தீங்களா.. ஆனா நாங்க விட மாட்டோம்...சரி தண்ணி... என்றான் பிரகாஷ் 

நோ நோ.. நான் வேண்டாம்னு சொன்னா... வேண்டாம்னு அர்த்தம் இல்ல... இட்லி, தோசை, சப்பாத்தி... இப்படி ஏதாவது சாப்பிடறீங்களான்னு கூட... நீங்க.. கேட்கலாம்... என்றார் ஹெட் மாஸ்டர்

சற்றே குழம்பிய பிரகாஷ்... ம்... புரியுது... புரிஞ்சுதா பிரேமி... சார் என்ன சொல்றாருன்னா... என்றான் மனைவியைப் பார்த்து

ஆ... ம்... புரிஞ்சுது... அதாவது இட்லி சாப்பிடறீங்களான்னு கேட்கலாம்... என்று இழுத்தாள் பிரேமி 

ஆமா கேளுங்க... பதிலுக்கு இழுத்தார் ஹெட் மாஸ்டர் 

ஆனா மாவு அறைக்கலையே... என்றாள் பிரேமி 

எஸ்... ஆமோத்தித்தான் பிரகாஷ்

தோசை சாப்பிடறீங்களானு கேட்கலாம்.. என்று இழுத்தாள் பிரேமி... 

ஆமா கேளுங்க... பதிலுக்கு இழுத்தார் ஹெட் மாஸ்டர்  

ஆனா அதுக்கும் மாவு வேணும்... ஆனா நாங்கதான் மாவு அறைக்கலையே... என்று பட்டென பதிலளித்தாள் பிரேமி 

எஸ்... ஆமோதித்தான் பிரகாஷ்

சப்பாத்தியாவது வேணுமான்னு கேட்கலாம் தான்... யோசித்து இழுத்தாள் பிரேமி

என்ன.. அதுக்கும் மாவு அறைக்கலியா.. பதிலாகக் கேட்டார் ஹெட் மாஸ்டர் 

சேச் சே... அத மாவாவே கடையில இருந்து வாங்கிடுவோம்... என்றான் பிரகாஷ்

அப்பறம் என்ன... கேட்டார் ஹெட் மாஸ்டர் 

ஆனா நான் கோதுமை மாவுன்னு எழுதிக் கொடுத்தேன் இவர் முழு கோதுமை வாங்கிட்டு வந்துட்டார்... என்றாள் பிரேமி

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ...
குறும்படத்தின் காட்சி

அதனாலென்ன... கோதுமையைக் கொண்டுவந்து கொடு ... சார் வீட்டுக்குப் போய் மாவை அறைச்சு... சப்பாத்தி பண்ணிக்குவார்... இல்ல சார்... என்றான் வெகுளியாக பிரகாஷ்

ஷட் அப்... என்ன இது... நான் எதுக்கு வந்தேன்.. நீங்க என்ன பேசுறீங்க... சற்றே கோபத்துடன் எழுந்தார் ஹெட் மாஸ்டர் 

அத நீங்க இன்னும் சொல்லவே இல்லையே சார்... என்றான் பிரகாஷ்

ஓஹ் மை காட்... லிசென்... உங்க பையன் பப்பு இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்தானா... என்றார் ஹெட் மாஸ்டர்  

ஆமா காலைல இவர்தான் கூட்டிட்டு வந்தார்... பதிலளித்தாள் பிரேமி   

ரைட்... கூட்டிட்டு வரும்போது பையன் கிட்ட பென்சில் ரப்பர் எல்லாம் மறக்காம எடுத்து பேக்ல வச்சியான்னு ஒரு அம்மாவா நீங்க கேட்டீங்களா... பிரேமியைப் பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர்  

முழித்தாள் பிரேமி 

அருகில் இருந்த பிரகாஷிடம் சென்று.. ஒரு அப்பாவா நீங்க கேட்டீங்களா... என்றார் ஹெட் மாஸ்டர்

இப்போ என்ன சார் அதுக்கு... என்றான் பிரகாஷ்

ஒரு நால்லாப் படிக்கற பையன் பென்சிலை மறந்துட்டு ஸ்கூலுக்கு போனா அவன் எப்படி பாடத்தை எழுதுவான்... என்று கோபப் படாமல் கடிந்துகொண்டார் ஹெட் மாஸ்டர் 

பிரேமியும் பிரகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குழப்பத்தில் விழிக்க தொடர்ந்தார் ஹெட் மாஸ்டர்.. அதான்.. பப்புக்கு பென்சில் கொடுத்து எழுதச்சொல்லிட்டு... உங்க கிட்ட கேட்கலாமுன்னு வந்தேன்... என்று முடித்தார் ஹெட் மாஸ்டர் 

அவன் கிட்ட பென்சில் கொடுத்தா அவனைத்தான் கேட்கணும்... எங்களைக் கேட்டா நாங்க எப்படிக் கொடுப்போம்.. என்று பரிதாபமாகக் கேட்டான் பிரகாஷ் 

ஓஹ்... நான் கேட்கறேன்னு சொன்னது... உங்க கவனக் கொறைச்சலை கேட்க வந்தேன்னு சொன்னேன்... என்றார் ஹெட் மாஸ்டர் கண்டிப்பாக

அப்படி புரியும்படி சொல்லுங்க சார்... என்றாள் பிரேமி 

சரி... ஒரு பென்சிலுக்காக இப்படி வீடு வரைக்கும் வரணுமா... ஆச்சர்யமாகக் கேட்டான் பிரகாஷ் 

நோ நோ ... டிஸிப்ளின்... டிஸிப்ளின் எனக்கு முக்கியம்... எங்க அது இல்லையோ.. உடனே அத எடுத்துச் சொல்லிக் கேட்கலைன்னா எனக்கு அடுத்த வேலை ஓடாது... டிசிப்ளின்... டிசிப்ளின்... என்று கண்டிப்பாகச் சொன்னார் ஹெட் மாஸ்டர் 

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர் ... குறும்படத்தின் காட்சி

இவர்களின் உரையாடலுக்கு நடுவே பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்தான் பப்பு.

வீட்டுக்குள் நுழைந்த பப்புவிற்கு ஹெட் மாஸ்டரைக் கண்டதும் ஆச்சர்யம்... இருந்தாலும்... குட் ஈவினிங் சார்.. என்றான் பப்பு ஹெட் மஸ்டெரைப் பார்த்து

குட் ஈவினிங்... பதிலளித்தார் ஹெட் மாஸ்டர் 

என்ன சார் எங்க வீட்டுக்கு விசிட் பண்ணியிருக்கீங்க... சந்தேகமாகக் கேட்டான் பப்பு 

நீதான் பென்சிலை மறந்துட்டியே.. அதான் உங்க பாரென்ஸ் கிட்ட அட்வைஸ் பண்ண வந்தேன்... என்றார் ஹெட் மாஸ்டர்

நானா... பென்சிலை.. மறந்தேனா... என்ன சார் சொல்லுறீங்க... சந்தேகமாக வினவினான் பப்பு 

மை பாய்... நான் ரௌண்ட்ஸ் வரும்போது... நீ பென்சிலை மறந்துட்டு... சைன்ஸ் டீச்சர் கிளாஸ்ல... போர்டில் எழுதிப் போட்டதை எழுத வழியில்லாம... வெளில... பராக்... பார்த்துட்டு... இருந்தியே... நான்தான் உனக்கு பென்சில் கொடுத்து... எழுதச் சொன்னேனே... என்ன... ஞாபகம் இல்லாயா... பப்புவிடம் உரையாடினார் ஹெட் மாஸ்டர் 

சார் மறந்தது நான் இல்லை சார்... பென்சிலை மறந்தது எனக்குப் பக்கத்தில இருந்த சுப்பு... நீங்க பென்சில் கொடுத்தது சுப்புவுக்கு... என்று விளக்கமளித்தான் பப்பு...

ஓஹ்... சாரி... தென் இட்ஸ் மை மிஸ்டேக்... அசடு வழிந்த ஹெட் மாஸ்டர்... சாரி நான் தப்பா உங்கள தொந்தரவு பண்ணிட்டேன்... என்று ப்ரேமி மற்றும் பிரகாஷைப் பார்த்து மேலும் அசடு வழிந்தார்..

ஓகே... பப்பு... நான் சுப்பு வீட்டுக்கு போறேன்... என்று சொல்லி வெளியில் கிளம்பிய ஹெட் மாஸ்டர் சற்றே தலை சொரிந்து யோசனையுடன்... பப்புவைப் பார்த்து... கிளாஸ்ல சுப்பு பப்புவோட பக்கத்துல உட்கார்ந்திருப்பான்... ஓகே... இது பப்புவோட வீடு அப்படின்னா இதுக்குப் பக்கத்து வீடு சுப்புவோட வீடு... ஆம் ஐ ரைட் பப்பு... என்று சிரித்துக்கொண்டே பப்புவைப் பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர்

கிளாசில எனக்குப் பக்கத்துல உட்கார்ந்தா அவன் வீடும் என் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கணுமா... என்ன சார் உங்க லாஜிக்... நொந்து கொண்டான் பப்பு...

அப்போ பக்கத்து வீடு இல்லையா... சந்தேகமாகக் கேட்டார் ஹெட் மாஸ்டர்...

இல்ல சார்.. பதிலளித்தான் பப்பு 

அப்போ அவன் வீடு எங்க...கேட்டார் ஹெட் மாஸ்டர் 

பப்பு சற்றே கோபத்துடன்... உங்க வீட்டுக்குப் போகணும் சார்... என்றான் 

என் வீட்டுக்கா... ஏன்... விழி பிதுங்கினார் ஹெட் மாஸ்டர் 

சுப்பு உங்க பையன் சார்... என்று பப்பு கத்தியத்தைக் கேட்டு தெருவே ஒரு கணம் அமைதியில் லயித்தது.

...மீ.மணிகண்டன் 

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பாலைவனத் தூண்கள் ... மீ.மணிகண்டன்

ஆகாயம் ஏறிப் பறக்கும் அத்தனை பேரும் பணத்தால் செல்வந்தர்களா? என்ற கேள்விக்கான எனது விடை... பாலைவனத் தூண்கள்.

சிறுகதை: பாலைவனத் தூண்கள் 

எழுதியவர் மீ.மணிகண்டன்

Jan-14-2021

"நந்தா உனக்கு லெட்டர் வந்திருக்கு போல இப்போதான் டைம் ஆஃபிஸ் போர்டு பார்த்துட்டு வரேன் உன் பேர் இருக்கு" என்றான் பஷீர் அறைக்குள் நுழைந்துகொண்டே. நீண்ட நாட்கள் கழித்து தனக்கு கடிதம் வந்திருக்கிறது என்ற செய்தியைக் கேட்டதும் நந்தனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை, அலுவல் முடிந்து வந்து குளியலுக்குத் தயாரான நிலையில் தேநீர் தயாரிப்பில் இருந்த நந்தன் கண்கள் அகலமாக விரிய "பஷீர் நிஜமாவா சொல்லுற?", "ஆமாடா" என்றான் பஷீர் தனது அலுவல் உடையை மாற்றிக்கொண்டு குளியலுக்குத் தயாராகிக்கொண்டே.

Reader's Comment


பாலைவனத் தூண்கள் ... மீ.மணிகண்டன்

"வரும்போது பார்த்தேண்டா டைம் ஆஃபிஸ் போர்ட் கிட்ட கூட்டமா இருந்துச்சு, இன்னிக்கு லெட்டர் டெலிவரி வந்திருக்கும்னு அப்பவே நினைச்சேன். ஆனா எனக்கு லெட்டர் வந்து ரொம்ப மாசம் ஆச்சா, அதான் இப்பவும் வந்திருக்காதுன்னு நினைச்சு போர்டை பார்க்காம நேரா ரூமுக்கு வந்துட்டேன்", என்று பஷீரிடம் சொல்லிக்கொண்டே, "யார்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கும்?" என்று தனக்குத்தானே கேள்விகேட்டுக்கொண்டு உற்சாகத்தில் "ஊ..லல்லல்லா" பாடினான் நந்தன். 

"நின்னு பாடிக்கிட்டே இருந்தா எப்படி தெரியும் போய் வாங்கிட்டு வாடா" என்றான் பஷீர். "இப்படியேவா?" என்று தான் குளிக்கத் தயாரான நிலையில் தலையில் தேய்த்த எண்ணை வடிவதை காட்டிக்கொண்டே நகைப்புடன் கேட்டான் நந்தன்.

"சரி சரி அப்ப குளிக்கப்போ" என்றான் பஷீர் 

"டீ போட்டிட்டிருக்கேண்டா கொஞ்சம் பொறு" என்றான் பதிலுக்கு நந்தன்.

"தாங்ஸ் டா, அதுல இஞ்சி போட்டியா" கேட்டான் பஷீர்

"ம்" பதிலளித்தான் நந்தன்.

நந்தனும் பஷீரும் மூன்றாண்டு கால நண்பர்கள். இருவரும் ஒரே கான்ட்ராக்ட்டிங் கம்பெனியில் ஒரே விதமான வேலை பார்க்கும் ஊழியர்கள். இந்தக் கம்பெனி கேம்பில் மொத்தம் ஐந்து பிரிவுக் கட்டிடங்கள் ஒவ்வொரு பிரிவிலும் சுமார் நூறு அறைகள் ஒவ்வொரு அறையிலும் அதிகபட்சம் இரண்டு நபர்கள் என்கிற கணக்கில் ஊழியர்களுக்கு அறைகள் ஒதுக்கிக்கொடுத்திருக்கும் நிர்வாகம். மூன்றாண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து இந்த சவூதி அரேபியாவிற்கு ஒரு ஏஜெண்சி மூலமாக வேலைக்கு வந்தவர்கள்தான் நந்தனும் பஷீரும். சவுதிக்கு வந்தபிறகுதான் நந்தனும் பஷீரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயம் ஆனார்கள். உறவுகள் நட்புக்களை ஊரிலே விட்டுவிட்டு வந்து ஆண்டுக் கணக்காக வேலைபார்க்கும் நந்தன் பஷீர் போன்ற நபர்களுக்கு இந்தக் கேம்ப் தான் உலகம்.  இங்குள்ள நபர்கள் தான் உறவுகள். இங்கே நந்தன் பஷீர் போல நிறையப் பேர்கள் உண்டு, உதாரணத்திற்கு குமரன் என்கிற சென்னையைச் சேர்ந்தவர் உண்டு, கிறிஸ்டோபர் என்கிற கன்னியாகுமரிக் காரர் உண்டு, வாஹித் என்கிற ராமநாதபுரத்துக் காரர் உண்டு, ஆப்ரஹாம் மேத்யூ என்கிற கேரளத்துக்காரர் உண்டு, தமிழ்விந்தன் என்கிற இலங்கைக்காரர் உண்டு, காலித் பாய் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உண்டு, இன்னும் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே கேம்பில் வாழ்ந்து பயணித்து வரும் உறவுகள். இவர்கள் அனைவருக்கும் ஒரே உணவுக் கூடம் ஒரே சமையல். காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணிவரை, என்கிற கணக்கில் ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை பார்ப்பவர்கள்தான் இந்தக் கேம்பில் இருப்பவர்கள். வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை. ஒரு நாளில் எட்டு மணிநேரம் தான் வேலை பார்க்க வேண்டும் என்று உலகச் சட்டம் சொல்லலாம் அதை நடைமுறையில் இவர்கள் கண்டதில்லை, இவர்கள் அதை பொருட்படுத்தவும் இல்லை. இங்கே வசிக்கும் நிறைய ஊழியர்கள் கனரக வாகன ஓட்டுனர்கள், வாகனங்கள் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் ஊழியர்கள், கப்பலிலிருக்கும் கிரேன் ஆபரேட்டர்கள், ஃபோர்க் லிஃப்ட் ஆப்பரேட்டர்கள், கப்பலில் இருந்து சரக்குகளை இறக்குவதற்கு குனிந்து நிமிர்ந்து உடலுழைப்பு நல்குபவர்கள், இப்படி உடலுழைப்பு நல்குபவர்களை லேபர் என்றழைக்கிறது ஆங்கில வார்த்தை, இறக்கிய சரக்குகளை பி.எல். படி சரி பார்த்து பிரித்து வைத்து, இரவு பகல் என்று இருபத்திநான்கு மணிநேரமும் காவல் செய்யும் கண்காணிப்பாளர்கள், சரக்குகளின் உரிமையாளர்கள் வரும்பொழுது அவர்களிடம் சரியானபடி பொருட்களை டெலிவரி செய்யும் விநியோகிப்பாளர்கள் என்று பலவகை உண்டு. இவர்களுக்கெல்லாம் உணவு தயாரிக்க கேம்ப்பின் உள்ளேயே சமையற்கூடமும், சமையல் ஊழியர்களும் உண்டு.

தயாரான தேனீரை கோப்பையில் இட்டு பஷீரிடம் நீட்டினான் நந்தன். பெற்றுக்கொண்ட நந்தன், "சீக்கிரம் குளிச்சுட்டு போடா மணி இப்பவே எட்டு ஆகிடுச்சு ஒன்பது மணிக்கு டைம் ஆஃபிஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க தெரியுமில்ல?".

தானும் ஒரு கோப்பையில் தேநீர் இட்டு அதை சுவைத்துக்கொண்டே "ம்... பயங்கர பசிடா மொதல்ல டீ, அப்பறம் குளியல் அப்பறம்தான் டைம் ஆபீஸ்" என்று வரிசைப்படுத்திவிட்டு தேநீரைச் சுவைக்கத் தொடர்ந்தான் நந்தன்.

நூறு அறைகள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, இந்த நூறு அறைகளுக்கும் பொதுவாக மேல் தளத்திலோ கீழ் தளத்திலோ அமைந்திருக்கும் சுமார் இருபது குளியல் அறைகள். கூடுமான வரை காலை நேரமும் சரி மாலை நேரமும் சரி ஷிஃப்ட்க்கு செல்பவர்கள் ஷிஃப்ட் முடித்து வந்தவர்கள் என குளியல் பகுதி கூட்டமாகவே இருக்கும். நட்புகளுடன் உரையாடி இந்தக் கூட்டத்திற்குள் காத்திருந்து பாட்டுப்பாடி குளித்து முடித்து அறைக்குத்திரும்புவதே ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு. இன்றையதினம் டைம் ஆஃபிஸ் நோட்டீஸ் போர்டில் கடிதம் வந்தவர்களின் பெயர்ப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது அல்லவா குளியல் பகுதியில் அதிகமாக கடிதம், ஊர், திருமணம், வீடு, நிலம், அத்தை மகள், மாமன் மகள், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை, நண்பன், அண்ணன், அக்கா என்ற வகையான பேச்சாகவே இருந்தது.

இவைகளின் நடுவே பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகித்தது. குளியல் அறைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்ததால் தானும் வரிசையில் காத்திருந்தான் நந்தன். நின்றிருந்த வேளையில் தனக்கு யாரிடம் இருந்து கடிதம் வந்திருக்கும் என்கிற நினைப்பு மீண்டும் ஆவலைத் தூண்டியது, எப்போ ஊருக்கு வருவேன் என்று அப்பா அம்மா கேட்டிருப்பார்களோ, நண்பர்கள் யாரவது ஊருக்கு வரும்போது பொருட்கள் ஏதாவது வாங்கி வரச்சொல்லியிருப்பார்களோ, யாருக்காவது திருமணம் நிச்சயம் ஆகியிருக்குமோ, உறவுகள் யாராவது யாரையாவது விசாரிக்கச்சொல்லி எழுதியிருப்பார்களோ, இப்படியான பல சிந்தனைகளின் ஊடே தன்னைப்போலவே அருகாமையில் வரிசையில் நின்றிருந்த சக ஊழியர்களின் உரையாடல்களும் நந்தனின் காதுகளைத் தீண்டியது.

அப்படியான உரையாடல்களில் சில…

"தள்ளி எடுத்த சீட்டுப் பணத்தை வாங்கித்தான் ஏஜெண்டுக்கு கொடுத்தேன், சீட்டு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு அதுக்கு அப்புறம் தான் ஊருக்கு ஏதாவது பொருட்கள் வாங்குவது பற்றி யோசிக்கணும்"

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதட்சணை வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம், இருந்தாலும் அப்பா சொல்றாரு வெறுங்கையோடு எப்படிடா அனுப்பறது, கடனை உடனை வாங்கி அனுப்ப முடியுமா ஒரு அஞ்சு பவுனாவது போடணும்"

"வட்டிப் பணம் கொடுக்கலைன்னா வீட்டு வாசலுக்கு வந்து மானத்தை வாங்கிடுவான்னு வட்டியை விடாம காட்டுறாங்க இப்போ ரெண்டு மாசமா வாடகை குடுக்கலையாம் வட்டிக்காரனுக்கு பதில் வீட்டுக்காரன் மானத்தை வாங்கப்போறான்"

"அந்தப் பொண்ணுக்கு சவூதி மாப்பிள்ளை வேண்டாமாம்"

"அதுக்கு நீ என்ன சொன்ன?"

"நான் என்ன ஃபிளையிட் ஏறி வந்து கலெக்டர் உத்தியோகமா பாக்குறேன், பாக்குறது லேபர் வேலை இதுக்கெல்லாம் அந்தப் பொண்ணு சம்மதிக்குமா, அதான் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்"

"என் பையன் கல்லூரியில் அவுங்க டிபார்ட்மெண்ட்லேயே முதல் மாணவனா வந்திருக்கானாம், ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா, வருஷக் கணக்கா தள்ளி இருந்தாலும் பிள்ளைங்களை அந்த ஆண்டவன் சந்தோஷமா வச்சிருந்தா அது போதும்"

வீடு கிரகப் பிரவேசம்ன்னு பத்திரிகை வந்திருக்குடா, இங்க இருந்துட்டு என்ன செய்யுறது, வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லியிருக்கேன்.

"மூணு மாசமா லெட்டர் வரலை இன்னைக்காவது வந்திருக்கும்னு ஆசையா நோட்டிஸ் போர்டில் என் பேரைத் தேடினேன், ம்ஹூம், இன்னைக்கும் வரலை"

"கல்யாணம் முடிஞ்ச ஒரு மாசத்தில இங்க வந்தேன், இப்போ ரெண்டு வருஷம் ஆச்சு, எப்போ வருவேன்னு கேட்குது, கடனை அடிக்காம எப்புடி ஊருக்கு போக முடியும்?"

"ரெண்டு வருஷ சம்பாத்தியம் ஊருல நிலம் வாங்கி என் பேர்ல ரெஜிஸ்டர் பன்னிட்டான்டா மச்சான், ஐ ஆம் ஹாப்பி"

"ஒவ்வொரு தடவையும் ரெண்டு லெட்டர் மூணு லெட்டர் எழுதுறா மச்சான், லவ்வோ லவ்வு, எப்படா ஊருக்குப் போவோம் கல்யாணத்தை முடிப்போம்னு இருக்கு"

"டேய் மாப்ள இங்க கேளுடா, போன வாரம் லீவு முடிஞ்சு ஊர்ல இருந்து வந்தான்ல நம்ம ராஜேசு"

"ஆமா"

"அவன் மொதல்ல ஊர்ல இருந்து வந்தபோது அவன் பொண்ணுக்கு ஒரு வயசாம், இப்போ மூணு வருஷம் காண்ட்ராக்ட் முடிச்சுட்டு லீவுல போனான், இப்ப அவன் பொண்ணுக்கு நாலு வயசு ஆகுதா, இவனைப் பார்த்து அடையாளம் தெரியாம யாரும்மா இந்த மாமான்னு கேட்குதாண்டா.. ஹா ஹா ஹா"

இந்தச் சிரிப்பொலிகூட நந்தனின் காதுகளைத் தொட்டது.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்ப தில்; 

என்கிறான் வள்ளுவன். ஆனால் இவர்களிடம் அந்த குறளைச்சொல்லி நியாயம் கேட்க முடியாது. சராசரி வாழ்க்கையில் இதுபோன்ற வலிகளை சிரித்துக் கிடப்பதுதான் இவர்களின் பாக்கியம்.

வார்த்தைப் பரிமாறல்களும் வரிசையும் மெல்ல மெல்லக் கடக்க ஒரு அறை காலியானது. குளியல் முடித்த நந்தன் அறைக்குத்திரும்ப நேரம் ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.

அறைக்குத்திரும்பிய நந்தன், "பஷீர் சாப்பாடு வாங்கீட்டு வந்துட்டியா, இன்னிக்கு என்ன டின்னர்?"

"என்ன புதுசா செஞ்சுடப் போறானுங்க, அதே கூசாக்காய் சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், சாதம். டேபிள்ள வச்சிருக்கேன், சாப்பிடு நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்", என்று நந்தனிடம் கூறிவிட்டு தான் பார்த்துக்கொண்டிருந்த 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படத்தைத் தொடரலானான் பஷீர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் டி வி, வி சி ஆர் வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தான் பஷீர், ஆனால் அப்பொழுது அவனால் வாங்க இயலவில்லை, காரணம் அந்த மாதம் அவன் அக்கா வீட்டுக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது அதில் அவர் செய்த தொழில் சரியான வருமானம் தரவில்லை என்றும் புதுத்தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு கொஞ்சம் பணம் அனுப்பித்தரும்படியும் கேட்டிருந்தார், அவர் கேட்டிருந்த தொகையை அடுத்த இரண்டு  மாதங்கள் சம்பளம் வாங்கி அனுப்பி வைத்தான், பிறகு பெற்றோரிடமிருந்து எதிர்பாராத செலவுகள் என்றும் கடிதம் வரவே அவற்றையும் சரிசெய்து அவன் விரும்பிய டி வி, வி சி ஆர் வாங்க இதோ ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. சென்ற வாரம்தான் புதிதாக வாங்கி வந்திருந்தான், அதில் தான் இப்போது 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான். படம் பார்க்கும் ஆவல் காரணமாக நந்தனை சாப்பிடச்சொல்லிவிட்டு தான் பிறகு சாப்பிடுவதாகச்சொன்னான்.

"அவங்கள குறை சொல்லாதடா, கிச்சன்ல இருக்கவங்க என்ன செய்வாங்க, அவங்களும் நம்மள மாதிரி கான்ட்ராக்ட்ல வந்தவுங்கதானே, கம்பெனி விதவிதமா காயும் கறியும் வாங்கிக் கொடுத்தா அவங்க சமைக்கப் போறாங்க. கம்பெனி வாங்கிக் கொடுக்காததுக்கு கிச்சன்ல இருக்கவங்க என்ன செய்வாங்க?" என்று சமையல் ஊழியர்களுக்கு ஆதரவாக பேசினான் நந்தன்.

"யப்பா, தெரியாம சொல்லிட்டேன், கிச்சன் ஸ்டாஃப் மேல எந்த தப்பும் இல்லை. சரியா? இப்போ நீ சாப்பிடு சீக்கிரம் பொய் உன் லெட்டரை வாங்கிட்டு வா, டைம் ஆஃபிஸ் மூடிடுவாங்கள்ள?" என்று நந்தனை அவசரப்படுத்தினான் பஷீர்.

"ஓ.கே.டா நீயும் அப்பறம் தான் சாப்பிடுறேன்னு சொல்லுற, நானும் உன் கூடவே சாப்பிடுறேன், இப்போ போய் லெட்டர் வாங்கிட்டு வந்துடறேன்." என்ற நந்தன் தான் உடுத்திய பாண்ட் ஷர்ட் சரியாக இருக்கிறதா என்று சுவற்றில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின்முன் நின்று தெரிந்தவரை எட்டி எட்டி சரி செய்து கொண்டான், கண்ணாடியின் முன்னிருந்த சீப்பை எடுத்து தலை வாரினான், சீப்பிற்கு பக்கத்தில் இருந்த யார்ட்லி பவுடர் டப்பாவை எடுத்து தனது இடதுகையில்  லேசாகக் கொட்டிக்கொண்டான் பவுடரை இரண்டு கைகளாலும் தடவி பிறகு மிகவும் லேசாக பட்டும் படாமலும் முகத்திற்குத் தடவிக்கொண்டான், " வரேண்டா பஷீர்" என்று டைம் ஆஃபிஸ் கிளம்பினான்.

"நந்தா, கான்டீன் திறந்திருந்தா வரும்போது குபூஸ் (ஒரு வகை ரொட்டி, அரபு மொழியில் 'குபூஸ்') வாங்கிட்டு வாடா, சாம்பாருக்கு நல்லா இருக்கும்." என்றான்,

"ஓகேடா", என்று பஷீருக்கு பதிலளித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான் நந்தன்.

வெகு சீக்கிரமாகவே அறைக்குத்திரும்பினான் நந்தன் கையில் குபூஸுடன். 

"என்னடா, யார்கிட்ட இருந்து லெட்டர்" என்று கேட்டான் பஷீர்.

"டைம் ஆஃபிஸ் மூடிட்டாங்க பஷீர்", என்றான் சற்று தோய்ந்த குரலில்.

"அதான் சொல்லிக்கிட்டே இருந்தேன் சீக்கிரம் போடான்னு, சரி நாளைக்கு டூட்டி முடிஞ்சு வரும்போதே நேரா டைம் ஆஃபிஸ் போயிட்டு, லெட்டரை வாங்கிட்டு வந்துடு." என்று சொல்லிவிட்டு 'உள்ளத்தை அள்ளித்தா'வைத் தொடர்ந்தான் பஷீர்.

இருவரும் உணவருந்தி முடித்ததும், பஷீரிடம், "டேய் வெளில நல்லா காத்து வருது வரியா ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாம்" என்று நடக்கக் கூப்பிட்டான் நந்தன். பஷீரும் சம்மதிக்க இருவரும் அறையைப்பூட்டிக்கொண்டு வெளியில் நடக்கக் கிளம்பினர்.

"என்னடா ஒண்ணுமே பேசாம வர்ற, லெட்டர் யார்கிட்ட இருந்து வந்திருக்கும்னுதான நினைக்கிற?" கேட்டான் பஷீர்.

"இல்லடா, அது எனக்கு நல்லாத்தெரியும், எங்க அப்பா அம்மாதான் எழுதியிருப்பாங்க, எப்போ ஊருக்கு வரேன்னு கேட்டிருப்பாங்க, நானும் வந்து மூணு வருஷம் ஆச்சு, காசும் கொஞ்சம் சேத்திருக்கேன், இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சதோட ஊருக்குப்போய் ஏதாவது தொழில் செஞ்சு செட்டில் ஆகிடனும்"

"நந்தா, இப்டித்தாண்டா முதல் முறை பிளைட் ஏறும்போது எல்லோரும் சொல்றாங்க, ஆனா காலமும் இந்த சவூதி அரேபியாவும் வேற கணக்கு போட்டுடுது"

"ஏண்டா அப்படி சொல்ற, நான் நினைச்சதெல்லாம், கொஞ்சம் காசு சேக்கனும் சீக்கிரம் ஊருக்குப்போய் பிசினஸ் பண்ணனும், இப்போ என் கணக்குப்படி எனக்கு இது போதும் இனி புது காண்ட்ராக்டுக்கு நான் சைன் பண்ணப் போறதில்ல, போதும், ஊர்ல தொழில் செஞ்சு சொந்தக்காரங்க பக்கத்துல இருந்துக்கிட்டு அக்கம் பக்கத்துல எல்லா விசேஷத்துக்கும் அட்டண்ட் பண்ணிக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கணும்” என்றான் நந்தன் ஒரு வித மன நிறைவுடன்.

"நந்தா, இந்த சவுதிக்கு வர்ற எல்லோருடைய மனநிலையும் இதான்டா, நீ ஹாப்பியா இருப்படா" என்று நந்தனுக்கு ஆதரவாகச்சொன்னான் பஷீர்.

அறைக்குத்திரும்பிய இருவரும் சற்று நேரத்தில் தத்தமது கட்டில்களுக்கு உறங்கச்சென்றுவிட்டனர். கடிதம் பற்றிய நினைப்பு தொடர்ந்துகொண்டே இருந்ததால் நந்தனுக்கு இரவு உறக்கம் சற்று கடினமாகவே இருந்தது.

அடுத்தநாள் விடியும் முன்னர் எழுந்துகொண்டான் நந்தன், குளியல் அறைகள் பகுதியில் மிகுந்த நடமாட்டம் இல்லை ஒன்றிரண்டு அறைகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தன காரணம் அந்த அதிகாலை நேரம், அவ்வளவு சீக்கிரம் இருளிலேயே எழுந்துகொண்டான் நந்தன். 

காலை ஷிஃப்டுக்கு செல்லும்முன் டைம் ஆஃபிஸ் திறந்திருந்தாலும் கடிதங்கள் பெறுவதற்கான நேரம் மலையில் மட்டும்தான் எனவே மாலை வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும் என்று மனதைச் சமாதனப் படுத்திக்கொண்டு ஷிப்டுக்கு அழைத்துச்செல்லும் பேருந்தின் வரவை நோக்கி டைம் ஆஃபிசின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான் நந்தன்.

கப்பலின் அருகாமையில் சரக்குகளின் அணிவகுப்பில் தனது உத்தியோகத்தை மிகுந்த சிரமத்துடன் பார்த்துவந்தான் நந்தன். அதிகமாக அவனது சிந்தனையை கடிதமே ஆட்கொண்டிருந்தது. மதியம் வரை மிகுந்த சிரமப்பட்டு நேரத்தைக் கடத்தினான் நந்தன். மதிய உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கும் வண்டி நந்தன் வேலை பார்க்கும் கப்பலின் அருகில் வந்து நின்றது. வண்டியின் உள்ளிருந்து ஒருவர் ஒரு பாலிதீன் பையை உணவுடன் நீட்ட அதைப் பெற்றுக்கொண்டான் நந்தன், "அண்ணா எத்தனை தடவை சொல்லியிருக்கோம் பிளாஸ்டிக் பைல சூடு சாதத்தை அப்படியே போடாதீங்கன்னு?" என்று வண்டியில் இருப்பவரிடம் கேட்டான் நந்தன்.

"ஏன் தம்பி எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி பிளாஸ்டிக் பைல போடணும்னு, ஒரு நாளைக்கு மத்தியானத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட ஐநூறு சாப்பாடு கட்டுறோம், எல்லாத்துக்கும் கம்பெனி எங்ககிட்ட பக்சா கொடுத்திருக்கு, கம்பெனி கொடுக்கிறத வச்சு நாங்க காலம் தள்ளுறோம், வரட்டுமா தம்பி, அடுத்த கப்பல்ல உங்கள மாதிரியே பசியோட நிப்பாங்க." என்று வண்டியிலுருந்தவர் கூற வண்டி அடுத்த கப்பல் நோக்கிப் புறப்பட்டது.

மாலையில் வேலை முடிந்து கேம்ப் திரும்பிய நந்தன் முதல் வேலையாக டைம் ஆஃபிஸ் சென்றான், வெளியில் பெரிய வரிசை நின்றது, ஒருவரிடம் வரிசைக்கான காரணத்தைக் கேட்டான், அவரும் புதுக் கான்டராக்டில் சேர விருப்பம் உள்ளவர்களை டைம் ஆஃபிஸ் வந்து பெயர் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள் அல்லவா அதற்குப் பெயர் கொடுக்கத்தான் இந்த வரிசை என்றார்.

நந்தனோ இது தனக்குச்சம்பந்தம் இல்லை என்ற நினைப்பில் கடிதம் வாங்க டைம் ஆஃபிஸ் அதிகாரியை நாடினான். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியில் அனுப்புனர் விலாசம் பார்த்தான் அவன் நினைத்ததுபோல அவனது அப்பாவிடமிருந்து வந்திருந்தது. பொறுமை இழந்தவனாய் ஆவலுடன் கடிதத்தை அங்கேயே பிரித்துப் படிக்கத் துவங்கினான்.

கடிதத்தைப் படிக்கப் படிக்க அவனது உற்சாகம் சற்றே குறையத் துவங்கியது, அப்படி என்ன அப்பா எழுதியிருந்தார், ஆம், ஊரில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது எதுவும் சமாளிக்க முடியவில்லை இன்னமும் தாமதிக்க வேண்டாமென்று வீடு கட்ட லோன் போட்டிருந்தோம் அதற்கான அனுமதி கிடைத்துவிட்டது இன்னும் ஓரிரு நாட்களில் பணம் வந்துவிடும் வேலைகளைத் துவங்கிவிடுவோம், உன்னிடம் இருக்கும் சேமிப்பையும் அனுப்பினால் கடனை சீக்கிரம் அடைந்துவிடலாம். உன்னுடைய அடுத்த கான்டராக்ட் எப்பொழுது ஆரம்பம் ஆகிறது? இந்த வயசிலேயே சம்பாதித்துக்கொண்டால்தான் நல்லது, இப்பொழுது உறவுகளை சொந்தங்களை பிரிந்து இருக்கிறோம் என்று எண்ணாதே, பின்னர் கல்யாணம் குழந்தை என்று வந்துவிட்டால் அவர்களைப் பிரிந்து சென்று சம்பாதிப்பது என்பது கடினமாகிவிடும். நல்ல செய்திக்கு பதில் போடவும். என்று எழுதியிருந்தார்.

கடிதத்தைப் படித்து முடித்த நந்தன் டைம் ஆபிஃஸ் வெளியில் நின்றிருந்த வரிசையில் கடைசியில் பொய் நின்றான்.  நேற்றிரவு பஷீர் சொன்ன வரிகள் மனதில் அலை மோதியது "ஆனா காலமும் இந்த சவூதி அரேபியாவும் வேற கணக்கு போட்டுடுது"

...மீ.மணிகண்டன்

குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

நிலவோடு ஒரு நேர்காணல் … சிறுகதை … மீ.மணிகண்டன்

 நிலவோடு ஒரு நேர்காணல் … சிறுகதை … மீ.மணிகண்டன்

நிலவோடு ஒரு நேர்காணல்
… மீ.மணிகண்டன்
பள்ளிக்கூட மணியடித்ததும் ஹோய் என்ற சத்தத்துடன் மாணவர்கள் தங்கள் வகுப்பறைகள் விட்டு ஓடி வெளியேறினர், மாலை வீடு திரும்பும் மகிழ்ச்சி. மலைச்சாமியும் செல்வமும் எப்பொழுதும்போல பேசிக்கொண்டே நடந்தனர், மலைச்சாமி செல்வத்திடம் கேட்டான், "டேய் தமிழ் சார் எதோ புத்தக விழா பற்றி சொன்னாரே அது எப்போ?"

"அது ஜூன் மாசத்துல டா, நமக்கு அப்ப பள்ளிக்கூடம் லீவு விட்டுருவாங்க"

"அது சென்னையில தானே"

"ஆமாடா... அது புத்தகக் கண்காட்சி, அங்க நிறைய பேர் எழுதின புத்தகங்கள் வச்சிருப்பாங்க, நிறை புத்தகங்கள் வெளியிடுவாங்க"

"நானும் போய் பாக்கணும்டா" மனதினுள் தன்னுடைய 'நிலவோடு ஒரு நேர்காணல்' புத்தகமும் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டான் மலைச்சாமி.

தன்னுடைய வீடு வந்ததும், "சரிடா நாளைக்கு பார்க்கலாம்", என்று செல்வத்திடம் விடை பெற்று தன் வீட்டிற்குள் நுழைந்தான் மலைச்சாமி. அம்மா சமையலறையில் மூட்டிய அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தாள் அடுப்பிற்கு நேர் மேலே ஓலை கீத்து இடைவெளியில் மாலைச் சூரியன் தன் கதிர்களை அனுப்பி சமைக்கும் பாத்திரத்தின் மீது சதிராடிக் கொண்டிருந்தான். சுற்றி நான்கு புறமும் மண்சுவர் நடுவில் ஒரு கைப்பிடி உயர அரைச்சுவர் தடுப்பு, எது சமையலறை எது தங்கும் அரை என்று வகுத்துக்காட்ட ஓலைகள் வேய்ந்த அந்த வீட்டில்தான் மலைச்சாமியும் அவனது தாயாரும் மலைச்சாமிக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வாழ்ந்து வருகிறார்கள்.

"டேய், கால் கை கழுவிட்டு கொஞ்சம் வந்து இந்தக் காய் நறுக்கிக்கொடுடா" என்றாள் தாய்.

"சரிம்மா..."

"நாளைக்கு சனிக்கிழமை தானே, பள்ளிக்கூடம் இருக்கா?"

"இல்லம்மா..."

"அப்போ, காலைல வேப்பங்காட்டுக்குப் போய் கொஞ்சம் சுள்ளி சேர்த்துக்கிட்டு வாரியா?"

"சரிம்மா.." போகும்போது செல்வத்தை கூட்டிட்டு போலாம் என்று தனக்குள்  நினைத்துக்கொண்டான்.

இரவு பள்ளிப் பாடங்களை முடித்துவிட்டு வழக்கம்போல் வெளிச்சுவற்றில் சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்துக்கொண்டு வீட்டு நிலை வாசலுக்கு வலப்பக்கமாக வெளியில்  போட்டான் உள்ளே சென்று போர்வை தலையணையை எடுத்துக் கொண்டு வந்தான் வெளியில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் விரித்தான். கட்டிலில் ஆயாசமாக மல்லாந்து படுத்தவனின் நேர் பார்வையில் முழு வட்ட நிலா அவனை வரவேற்றது. மலைச்சாமிக்கு நிலாதான் குரு. நிலவைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் தமிழ் ஊற்று பீறிட்டு எழும். நிறைய வரிகள் தோன்றும் அப்படியே மனனம் செய்து கொள்வான் காலையில் எழுந்ததும் முன்னிரவில் யோசித்த வரிகளை அவனது நோட்டுப் புத்தகத்தில் எதுகை மோனையோடு எழுதி ஒரு முழுக் கவிதையாக்குவான். சில நாட்கள் முன்னிரவில் யோசித்த வரிகளை மறந்துவிடுவான் எவ்வளவு யோசித்தாலும் அது திரும்ப வராத கனவாகிவிடும். இப்படியே நிலவோடு பேசிக் காதலித்து அவன் எழுதிய நோட்டுப் புத்தகத்தின் தலைப்புத் தான் 'நிலவோடு ஒரு நேர்காணல்'. அந்த நோட்டுப் புத்தகம் நிறைய அவன் எழுதிய புதுக் கவிதை மற்றும் சந்தக் கவிதைகள். தமிழ்ப் பாடம் என்றால் அவன் ஆர்வமாகப் படிப்பான், வகுப்பறையில் தமிழ் இலக்கணம் நடத்தும் பொழுது கவனித்து நோக்குவான் வீட்டிற்கு வந்ததும் தான் எழுதிய கவிதை வரிகள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வான். உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம், ஒரு முறை தான் எழுதிய ஒரு சந்தக் கவிதையில்...

'சித்திரம் போலுன்னை வெண்ணிலாவே

செதுக்கியது யாரோ வெண்ணிலாவே'

என்று எழுதியிருந்தான், தமிழ் வகுப்பில் கற்ற மாத்திரை அளவு தனது கவிதைக்குப் பொருந்துகிறதா என்று பார்த்தான் பொருந்தவில்லை என்றுணர்ந்ததும் அந்த வரிகளை இப்படி மாற்றினான்.

'சித்திரம் போலுனை வெண்ணிலவே

செய்தவர் யாரது வெண்ணிலவே'.

சனிக்கிழமை காலை, சகாக்கள் இருவரும் வேப்பங்காட்டுக்குக் கிளம்பினார் சுள்ளி சேர்க்க. வழக்கம் போல் போகும் வழியில் உரையாடல், பேசிக்கொண்டே காட்டை அடைந்தனர், "டேய் சீக்கிரம் சேர்த்துட்டு வீட்டுக்குப் போகனும்டா, எங்க மாமா இன்னிக்கு எங்க வீட்டுக்கு வராங்க கூடவே கனகாவும் வருது" என்றான் செல்வம்.

"அதானே, கனகா வந்தா நீ வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டியே, என் நல்ல நேரம் நான் காலையிலேயே உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்..." என்று சிரித்துக் கொண்டான் மலைச்சாமி.

"பேசாதடா... சீக்கிரம் வேலையப் பாரு.." என்று அதட்டினான் செல்வம்.

சேர்த்த சுள்ளிகளைக் கட்டி முடிந்து இருவரும் தங்கள் தலையில் சும்மாட்டின் மீது வைத்துக் கொண்டு வீடு நோக்கித் திரும்பினார் வழியில் மலைச்சாமிக்கு அந்தப் புத்தகக் கண்காட்சி நினைவு வர "டே நான் எழுதி வச்சிருக்க கவிதை தொகுப்பு 'நிலவுடன் ஒரு நேர்காணல்' புத்தகத்தையும் அந்த கண்காட்சியில வெளியிடப் போறேண்டா" என்றான் மலைச்சாமி உற்சாகமாக.

சிரித்துவிட்டு செல்வம், "டேய் புத்தகம் வெளியிடுறதுன்னா என்ன தெரியுமா, உன்னையும் என்னையும் மாதிரி பத்தாங்கிளாஸ் படிக்கிறவுங்க விளையாடுற விளையாட்டு இல்ல. நீ எழுதினத ஒரு அஞ்சாறு பேர் படிச்சுப் பார்க்கணும், அதோட யாராவது ஒரு பிரபலமும் அதைப் படிச்சுட்டு நல்லா நாலு கருத்து எழுதித் தரணும் அப்பறமா அந்த கருத்த புத்தகத்தோட முதல் பக்கமா வச்சு அதன் தொடர்ச்சியா உன் எழுத்துக்களை அச்சிடனும் அதுக்கு ஒரு நல்ல அட்டைப்படம் வேணும் எல்லாத்துக்கும் மேல ஒரு புத்தகப் பிரசுரக் கம்பெனி உன் கவிதைகளை ஏத்துக்கிட்டு அச்சடிச்சுத் தரணும் இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?"

இவற்றை மௌனமாகக் கேட்டுக்கொண்டே நடந்த மலைச்சாமி, "இவ்வளவும் செஞ்சாத்தான் என் புத்தகத்தை வெளியிட முடியுமா, ஏன் ஒரு கையெழுத்துப் பிரதியா வெளியிட முடியாதா? அந்தக் காலத்துல எவ்வளவு பேர் கையெழுத்துப் பிரதி வெளியிட்டிருக்காங்க, நம்ம பாடத்துல படிச்சிருக்கோம்ல"

"அது அந்தக் காலம் டா மலைச்சாமி , இப்பல்லாம் அது செல்லாது"

"என்னோட கவிதைகளை நம்ம வெற்றி டைலர் படிச்சிருக்கார், டீக்கடை சாஹிப் படிச்சிருக்கார், மாதவன் மெடிக்கல்ஸ்ல சங்கர் அண்ணன் படிச்சிருக்கார், போன வாரம் லைப்ரரி போனப்போ ரவி சார் கூட நான் நல்லா எழுதறேன் விடாம எழுதுன்னு சொன்னார்"

"அவங்க சொல்றது உண்மையா இருந்தாலும் பெரிய படிப்பு படிச்சவுங்க முகவுரை எழுதித்தரணும்டா"

"எங்கிட்ட இருக்கே"

"என்னடா சொல்ற"

"நம்ம ஸ்டேஷன் மாஸ்டர்கிட்ட ஒரு தடவை என் கவிதைகளை படிச்சுப் பாருங்கன்னு கொடுத்திருந்தேன் அவரும் ரெண்டு நாள் வச்சிருந்து ஸ்டேஷன்ல ரயில் வராத நேரத்துல என் கவிதையெல்லாம் படிச்சுப் பார்த்து, ஒரு பக்கத்துல நல்லா எழுதுற புரட்சி நிறைய இருக்கு மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காரே"

"அட போடா கிறுக்கா... என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது... சரி சரி என் வீடு வந்துடுச்சு... இந்நேரம் கனகா வந்திருப்பா..." சொல்லிவிட்டு மலைச்சாமியின் பதிலுக்குக்காதிராமல் துள்ளிக் குதித்து ஓடினான் செல்வம்.

அன்றுதான் பள்ளியின் கடைசி வேலை நாள் அதன் பிறகு விடுமுறை. இன்று எப்படியும் தமிழ் சாரிடம் புத்தகக் கண்காட்சி விலாசத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று மிகக் கவனமாக மலைச்சாமி தமிழ் சாரைத் தேடினான். "சார், நீங்க புத்தகக் கண்காட்சி நடக்குதுன்னு சொன்னீங்களே அந்த விலாசம் தர முடியுமா?"

"உனக்கு எதுக்குடா மலைச்சாமி?" கேட்டார் தமிழ் சார்

இவரிடம் தான் புத்தகம் வெளியிடப் போவதாகச் சொன்னால் இவரும் செல்வத்தைப் போல ஏதாவது குதர்க்கமாகச் சொல்வார் என்று எண்ணிய மலைச்சாமி, "நான் லீவுக்கு எங்க பெரியப்பா வீட்டுக்கு, சென்னைக்குப் போவேன் சார், அப்போ கண்காட்சி பாக்கலாம் இல்லையா அதுக்குத்தான்" என்று பாதி உண்மையை மறைத்தான் மலைச்சாமி.

"எழுதிக்கோ" என்று விலாசத்தைச் சொன்னார் தமிழ் சார்.

விலாசத்தைப் பெற்றுக்கொண்ட மலைச்சாமி சாருக்கு நன்றி சொல்லிவிட்டு தனது புத்தகத்திற்குப் பரிசு கிடைத்ததைப்போல பேரானந்தம் அடைந்தான்.

பள்ளியிலிருந்து திரும்பிய மகனை வழக்கம்போல் வரவேற்றாள் அம்மா,"டேய் கால் கைய கழுவிட்டு வந்து இந்த காப்பிய குடி, குடிச்சுட்டு இந்த உப்புக்கண்டத்தை கொஞ்சம் நச்சுக் குடு"

"சரிம்மா.."

நல்ல வெள்ளாட்டு உப்புக்கண்டம் காய்ந்து கனத்து இருந்தது எளிதாக அடித்து நைக்க முடியவில்லை மலைச்சாமியால். பெரும் போராட்டத்திற்குப் பிறகு நைத்த உப்புக்கண்டங்களைத் தாயிடம் நீட்டினான் மலைச்சாமி. "சாமி இன்னியோட பள்ளிக்கூடம் முடிஞ்சதுல்ல?" கேட்டாள் தாய்.

"ஆமாம்மா..."

"மாதவன் மெடிக்கல்ஸ்ல வேலைக்கு கேட்டிருக்கேன், நீ உடனே போக வேண்டாம் ரெண்டு நாளைக்கு நல்லா உங்கூட்டாளிகளோட விளையாடு, கண்மாயில் ஆட்டம் போடு அப்பறமா, மெடிக்கல்சுக்கு ரெண்டு மாசத்துக்கு வேலைக்கும் போயிட்டு வா பள்ளிக்கூடம் தொறக்குற வரைக்கும் சரியா ராசா, மருந்தெல்லாம் எழுதப் படிக்கத் தெரிஞ்சுக்கிட்டா நாளைக்கு நீயும் கடைகன்னி வைக்க உதவியா இருக்கும்ல?"

மலைச்சாமிக்கு இது திடீர் மாற்றமாகத் தெரிந்தது ஒன்றும் புரியாமல் ஏக்கத்தில், "ஏம்மா, லீவுல பெரியப்பா வீட்டுக்கு அனுப்பமாட்டியா? போன வருஷம் பெரியப்பா வீட்டுக்குத் தானே போனேன்?"

"அட புரியாதவனே... போன வருஷம் உங்க பெரியப்பா வீடு கட்டினாரு... கூட சித்தாள் வேலைக்கு ஒத்தாசையா இருக்கும்னு உன்னை கூட்டிட்டு போனாரு.. இப்பல்லாம் உன்னை கூப்பிட மாட்டார்"

சுரீரென்று முதுகில் யாரோ அடித்தது போல இருந்தது மலைச்சாமிக்கு. இப்போதுதான் புரிந்தது சென்ற ஆண்டு விடுமுறையில் ஏன் தான் சென்னையில் பெரியப்பா வீட்டில் இருந்தோம் என்பது.

அம்மா செய்து கொடுத்த கஞ்சியை ருசிக்க முடியவில்லை, உப்புக்கண்டத்தை மெல்ல முடியவில்லை. ஒவ்வொரு கவளமும் ருசியைக் காட்டாமல் மலைச்சாமியின் தொண்டையைக் கடந்துகொண்டிருந்தது. உணவுக் கடமையை முடித்த மலைச்சாமி எதுவும் பேசாமல் எழுந்து சென்றான். இரவு படுக்கைக்குச்செல்லும்முன் பரணில் வைத்திருந்த நிலவோடு ஒரு நேர்காணலை எட்டி எடுத்தான், தட்டுத் தடுமாறி கீழே விழுந்த நோட்டுப் புத்தகம் எதோ ஒரு பக்கத்தைத் திறந்துகொண்டு விழுந்தது... அங்கே..

உனை எட்டிப் பிடிக்க நான் பறக்க வேண்டும்

பறந்து பார்க்க சிறகுகள் வேண்டும்

சிறகுகள் தந்திட இறைவன் வேண்டும்

இறைவனுக்கு எட்டும் வரை

எழுதிட வேண்டும்...

...மலைச்சாமி

...மீ.மணிகண்டன்

May-09-2020


குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

மிதக்கும் பயணங்கள் ... மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு: மிதக்கும் பயணங்கள்

சிறுகதையை எழுதியவர்: மீ.மணிகண்டன் 

மிதக்கும் பயணங்கள் ... மீ.மணிகண்டன்

நெல்சனின் நடப்பு கான்ட்ராக்ட் நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தது விரைவில் தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை நேரில் பார்க்கப் போகும் ஆவலில் இருந்தான் நெல்சன். இந்த கான்ட்ராக்ட் நிறைவடையும் பொழுது கப்பல் யான்பு துறைமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும், கான்ட்ராக்ட் தேதி முடிந்து ஐந்து நாள்களுக்குப் பிறகே கப்பல் யான்பு துறைமுகத்தைத் தொட்டிருக்கும். பொதுவாக கரையில் இறங்கும்பொழுது இரண்டொரு நாட்கள் அந்தத் துறைமுகநகரை சுற்றி பார்த்துவிட்டு பின் பயணத்தை தொடர்வதோ அல்லது ஊருக்குத் திரும்புவதோ வழக்கம் ஆனால் யான்பு துறைமுகத்தில் அப்படி இறங்கி உலா வரமுடியாது. இஸ்லாமியர்களின் முக்கிய நகரமான மதீனா இருக்கும் காரணத்தால் இசுலாமியர்கள் அல்லாதவர்கள் அங்கே வெளியில் செல்ல அனுமதி கிடையாது. கப்பலை விட்டு இறங்கக்கூட கெடுபிடி அதிகம். முறையான அனுமதிப் படிவங்கள் பெற்ற மேலதிகாரி பரிசோதகர்கள் மட்டுமே கப்பலைவிட்டு இறங்க முடியும். நெல்சனுக்கு கான்ட்ராக்ட் முடியும் காரணத்தால் அவன் திரும்ப அவனது ஊர் செல்லவேண்டுமாதலால் அவனுக்கு அனுமதி வாங்கியிருந்தார்கள். கப்பலில் இருந்து இறங்கியதும் நேரே விமான நிலையம்தான் செல்ல முடியும் வேறு எங்கும் அடி எடுத்து வைக்க முடியாது.

இந்தக் கப்பலில் பாட்ரிக் தான் நெல்சனுக்கு மிக நெருங்கிய நட்பு. இலங்கை துறைமுகத்தைக் கடக்கும் பொழுது ஒருநாள் நெல்சனுக்கு காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது கப்பலில் இருந்த மருத்துவர் ஒன்றிரண்டு மருந்துகளைக் கொடுத்து நல்ல ஓய்வெடுக்கச்சொன்னார். அந்த இரண்டு நாட்கள் முழு ஓய்வில் பாட்ரிக் நெல்சனை கவனித்துக் கொண்ட விதம் நெல்சனுக்கு அவனது தாயை ஞாபகப் படுத்தியிருந்தது. மேல்தளத்தில் வேலைக்கு செல்லும்பொழுது கூட வெந்நீரை பிளாஸ்கில் வைத்துவிட்டு "நீ ரொம்ப எழுந்திரிக்காதே நான் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை டெக்கில் உன்னை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுச்செல்வான் பாட்ரிக். அடுத்ததாக நெல்சனின் நெருக்கம் அந்த இரண்டு புறாக்கள், ஆம் ஒரு மாலை வேளை ஹாங்காங் துறைமுகத்திடம் விடைபெற்றுக்கொண்டு கப்பல் நகர்ந்த பொழுது சிறகடித்து வந்து இரண்டு புறாக்கள் நெல்சனின் டெக்கின் ஜன்னல் அருகே அமர்ந்தது, ஒன்று இளம் சாம்பல் நிறம் மற்றொன்று வெண்மை. நெல்சனுக்கு இவைகளைப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இருட்டும் வரை அந்தப் புறாக்கள் அந்த ஜன்னலை விட்டு மீண்டும் பறக்கவே இல்லை, இது மேலும் ஆச்சர்யத்தைத்தூண்டியது நெல்சனுக்கு. காலையில் பார்த்தான் அங்கேயே நின்றன. அன்று அவைகளுக்கு அடைக்கலம் கொடுக்க எண்ணி கப்பலில் இருந்த மரச் சட்டங்களைக் கொண்டு அவைகளுக்குக் கூடு செய்தான். தினமும் உணவு தண்ணீர் கொடுத்து புறாக்களை உபசரித்து வந்தான். வேலை நேரம் போக புறாக்களுடன் பேசி மகிழ்வது நெல்சனின் வினோதப் பொழுதுபோக்கு.    

இன்று பாட்ரிக்குக்குப் பிறந்தநாள், கப்பல் சிப்பந்தி கேக் செய்திருந்தார், எல்லோருடைய பிறந்தநாளையும் கேக் வெட்டிக் கொண்டாடுவது கப்பலில் வழக்கம். கப்பல் சிப்பந்திகள் அதிகாரிகள் என எல்லோரும் கூடியிருக்க கேக் வெட்டி முதல் துண்டை நெல்சனுக்கு ஊட்டினான் பாட்ரிக். நெல்சனும் பாட்ரிக்குக்கு ஊட்டினான். "பிரெண்ட்ஸ் உங்களுக்கெல்லாம் ஒரு ஹாப்பி நியூஸ்," என்று நெல்சனின் திருமண நிச்சயத்தை சொல்ல வாயெடுத்தான் பாட்ரிக், வெட்கத்தில் சொல்லாதே என்று கையசைத்தான் நெல்சன், ஓர விழியில் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் பாட்ரிக். நம்ம பிரென்ட் நெல்சன் இந்த கான்ட்ராக்ட் முடிஞ்சதும் ஊருக்குப் பொய் கல்யாணம் செஞ்சுக்கப் போறார், அவங்க வீட்டில பெண் பார்த்து நிச்சயம் செஞ்சுட்டாங்க" என்றதும் குழுமியிருந்த அனைவரும் ஹூய் என்ற ஆரவாரத்தோடு கைகள் தட்டி ஒவ்வொருவரும் நெல்சனுக்கு வாழ்த்துச்சொல்ல ஆரம்பித்தார்கள். "ஐ ஆம் ஹாப்பி டு கெட் யுவர் க்ரீட்டிங்ஸ், எல்லோருக்கும் நன்றி, மறந்துடாதீங்க இன்னிக்கு பாட்ரிக்குக்குத்தான் பிறந்தநாள் சோ இந்த செலிப்ரேஷன் பாட்ரிக்குக்குத்தான்" என்று ஞாபகப் படுத்தினான் நெல்சன். 

நடுக்கக்கடலில் பிறந்தநாள் கொண்டாடி ஆனந்தமாய் பெற்றோருடன் போனில் உரையாடி நல்ல பொழுதாக இருந்ததை சற்றே மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தான் நெல்சன். புறாக்களுக்கு உணவளித்துவிட்டு இந்த இரவில் சற்றுநேரம் இயற்கைக் காற்றுவாங்கிவிட்டு வரலாம் என்று மேல்தளத்திற்கு வந்தான். அங்கே ஏற்கனவே பாட்ரிக் கையில் தேனீர் குவளையோடு நின்றிருந்தான். "என்னடா தூக்கம் வரலியா" என்றான் பாட்ரிக். "மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு, எல்லாமே நிறைவா இருக்க மாதிரி ஒரு பீலிங், தூக்கம் வரல" என்றான் நெல்சன். "ம்... வுட்பீ ஞாபகம்னு சொல்லு.." என்றான் பாட்ரிக் சிரித்துக்கொண்டே. "ஏ... எனக்கு மறந்தா கூட நீ ஞாபகப் படுத்திவிடுவாய்" என்றான் பதிலுக்கு சிரித்துக்கொண்டே நெல்சன். "நெல்சன், உன்கிட்ட ஒண்ணு சொல்லணும், இன்னிக்கு பார்ட்டில எல்லோரும் ஹாப்பியா இருந்தாங்க ஆனா நீ கவனிச்சியா வாலரி மட்டும் கொயட்டா இருந்தா, அவ முகம்கூட கொஞ்சம் டல்லா இருந்துச்சு," 

"யெஸ், கவனிச்சேன், ஆனா எனக்கு அத கேட்கணும்னு தோணல,"

"என்னவா  இருக்கும்?"

"அவகிட்டையே கேட்கலாமே பாட்ரிக்", என்றான் நெல்சன்.

"நோ, அவ எதார்த்தமா இருந்து நாம தப்பா புரிஞ்சுக்கிட்டா?" என்று கேள்வியெழுப்பினான் பாட்ரிக்.

"இல்ல, அவ ஏதோ நினைப்புல இருந்ததை என்னால பீல் பண்ண முடிஞ்சுது," என்றான் அழுத்தமாக நெல்சன். "சரி விடியட்டும் நானே அவகிட்ட கேட்கறேன்" என்றுவிட்டு நெல்சன் தொடர்ந்தான், "நான் கிச்சனுக்கு போய் ஒரு டீ போட்டு எடுத்துட்டு வறேன்", "நானும் வறேன் "என்று நெல்சனைத் தொடர்ந்தான் பாட்ரிக்.

டெக்கினுள் நல்ல உறக்கத்தில் இருந்தான் நெல்சன் கதவு திறக்கும் ஓசை கேட்டு சட்டென விழித்தான், பட படவென சிறகடித்தன புறாக்கள், பதட்டமாக உள்ளே வந்த பாட்ரிக், "ஹேய் நீ எதுவும் வாலரிகிட்ட பேசல இல்ல?" என்று கேட்டான், "நைட் நாம பேசிட்டிருந்தோம் அப்பறம் நான் கீழ வந்து தூங்கிட்டேன்," என்ற நெல்சன் தொடர்ந்தான், "நான் அவகிட்ட எதுவும் பேசல," 

"நல்லது, காலைல ப்ரேக்பாஸ்ட சாப்பிட கிச்சன் போனேன், வாலரி கண்ணை தொடைச்சிகிட்டே உள்ள இருந்து வெளியே வந்தா, அவ போனதுக்கப்பறம் நானும் செஃப் கிட்ட ஏன் வாலரி சோகமா இருக்காண்ணு கேட்டேன், செஃப் சொன்னத கெட்டப்பறம் எனக்கு இந்த கப்பல் லைப் மேல ஒரே கோபம்."

"என்னடா சொல்ற"

"பின்ன என்னடா, உனக்கே தெரியும் வாலரியோட மேரேஜ் ஒரு லவ் மேரேஜ், இப்போ என்னடான்னா அவ ஹஸ்பெண்ட் அவளுக்கு டிவோர்ஸ் அனுப்பியிருக்கானாம்"

இதைக் கேட்டு அதிர்ந்த நெல்சன், "ஏண்டா" என்றான் முழுவதும் தூக்கம் கலைந்தவனாக.

"இவ பாக்குற கப்பல் டூட்டி பிடிக்கலையாம்"

"இதெல்லாம் முன்னாடி தெரியாதா?"

"அது என்னவோ, ஆனா பாவம்டா வாலரி, அவளோட பேமிலி சிச்சுவேஷன் கொஞ்சம் எனக்கு தெரியும், பட் வாட் டு டூ... நத்திங் இஸ் இன் அவர் ஹான்ட்"

நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னும் ஒரு மாதம் இருக்கிறது நெல்சனின் இந்த ஒப்பந்தம் நிறைவடைய. இன்று ஞாயிற்றுக் கிழமை பிரியாணி ஸ்பெஷல் டே. வாலரி சைவம் என்பதால் கப்பலில் அசைவ உணவு சமைக்கும் நாட்களில் அவள் தனியே தனக்கென சைவ உணவு தயார் செய்து கொள்வாள். அன்று ப்ளம் கேக் கெய்திருந்தாள் முட்டை சேர்க்காமல். அங்கே ஒரு மேசையில் பாட்ரிக் மற்றும் நெல்சன் அமர்ந்து பிரியாணி சுவைத்துக்கொண்டிருந்தனர். அருகில் தனது ப்ளம் கேக்குடன் வந்து அமர்ந்தாள் வாலரி. "கைஸ் சண்டே என்ன ஸ்பெஷல்" என்றாள், "வேற என்ன சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போன் செய்யணும், ஒரு படம் பார்க்கணும், தண்ணியில மிதந்துகிட்டு வேற என்ன பண்ண முடியும் சொல்லு" என்றான் பாட்ரிக்.

"ட்ரு," என்றவள் நெல்சனிடம்,  "உன்னோட டவ்ஸ் எப்படி இருக்காங்க, கண்டு பிடிச்சுட்டியா ரெண்டு பெரும் ஜோடியா இல்ல பிரெண்ட்ஸா..?"

சிரித்தோக்கொண்டான் நெல்சன், "அவங்க யாரோ தெரியாது, ஆனா ரெண்டுபேருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப அதிகம்." என்றவன் தொடர்ந்தான், "ஆமா நீ பிறந்தித்திலிருந்தே சைவம் தான் சாப்பிடுவியா வாலரி?,"  

"ஐ கான்ட் சே, பட் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் வெஜ் தான் ஏனோ எனக்கு மீட் டேஸ்ட் ஒத்து வரல" 

"பட், இப்ப நாங்க சாப்பிடுறோம் நீ எங்க பக்கத்துல உக்காந்திருக்க... இஸ் தட் ஓகே ?", கேட்டான் பாட்ரிக்.

"ஐ யூஸ்ட் டு இட்" என்று பதிலளித்தாள் வாலரி 

"ஸோ மூக்கு ஏத்துக்கும் நாக்கு தான் ஏத்துக்காது, ஆம் ஐ ரைட் வாலரி," சிரித்துக்கொண்டான் நெல்சன்.

"ஹே.. யு நோ.. ப்ளம் கேக் இஸ் ஒன் ஆப் மை பாவோரைட்"

"அதான் மத்தவங்களுக்கு கொடுக்காம நீயே கொஞ்சமா செஞ்சுக்கிட்டியா," கண்ணடித்தான் நெல்சன்.

"ஹேய்... நீங்க பிரியாணி டேஸ்ட் பண்ணும்போது இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம், டு யு வாண்ட் டு டேஸ்ட் இட்?" எடுத்து நெல்சனிடம் நீட்டினாள் வாலரி 

"ஹேய்... ஜஸ்ட் கிட்டிங்...." என்று மறுத்தான் நெல்சன்.

"யு நோ... ப்ளம் கேக் செய்ய கத்துக்கிட்டதே என் ஹஸ்பண்ட்காகத்தான். அவருக்கு பிடிக்கும்னு சொன்னார் அவருக்காக செய்ய ஆரம்பிச்சு இப்போ இது எனக்கு பிடிச்சுப் போச்சு", நெல்சன் பாட்ரிக் இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியாமல் சற்றே மௌனத்தில் கடத்தினர்.

"ஹே... என்ஜாய் தி சண்டே கைஸ்", என்று விடை பெற்றுக்கொண்டு மேசைவிட்டு நகர்ந்தாள் வாலரி. 

யான்பு துறைமுகத்தின் எல்லையை அடைந்ததும் கப்பல் நங்கூரமிட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. "பாஆஆ.....ம்.." கப்பலின் சங்கொலி யான்பு துறைமுகத்திற்கு சமிக்ஞையானது. துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினார் தலைமை மாலுமி, தகவலில் நெல்சனுக்கான அனுமதி, விமான நிலையம் வரை தனி வாகனம் மற்றும் விமான டிக்கட் போன்ற விபரங்களை மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார்.

இந்த இரவு மட்டும்தான் நெல்சனுக்கு இந்தக் கப்பல் பயணம் நாளை கப்பல் துறைமுகத்தை அடைந்தபின்னர் அவனுக்கு வேறு வாழ்க்கை காத்திருக்கிறது. இரவு உணவிற்குப் பின் கப்பலில் பயணித்து வந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் ஒவ்வொருவரையும் சென்று பார்த்து விடை பெற்று வந்தான் நெல்சன். கேன்டீன் கடந்து வரும்பொழுது அங்கே வாலரி மற்றும் பாட்ரிக் இருவரும் நிற்பதைக் கண்டான். அருகில் சென்றான் நெல்சன், பேசுவதற்கு வார்த்தை வரவில்லை, பாட்ரிக்கின் கண்கள் பளபளப்பதைக் கண்டான் நெல்சன், வாலரியும் அதை கவனித்தாள், பாட்ரிக்கின் கையை இருக்கமாகப் பிடித்து, "ஹே... டேக் இட் ஈஸி..., இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் நீயும் ஒரு இடத்தில் இறங்கப்போற அதற்கு அப்பறம் எனக்கும் ஒரு இடம், நம்ம ஜாப் இப்படித்தானே... டேக் இட் ஈஸி.." என்று பாட்ரிக்கை சமாதானம் செய்தாள் வாலரி. அதுவரை அடைத்து வைத்திருந்த மனக்குமுறலை பாட்ரிக்கின் தோளில் சாய்ந்து கண்ணீராக கொட்டித்தீர்த்தான் நெல்சன். இதை பாட்ரிக் எதிர்பார்த்திருந்தவன்போல நெல்சனை அணைத்து ஏற்றுக்கொண்டான். 

நெல்சன் தங்கியிருந்த டெக்கில் தனது உடமைகளை சரிசெய்து கொண்டு இருந்தான், பாட்ரிக் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தான். "டேய் இந்த புறாக்களை என்ன செய்யலாம்," கேட்டான் பாட்ரிக்.

"புரியுது, நான் கூட கூட்டிக்கிட்டு போக முடியாது, யாரையும் பார்த்துக்கச்சொல்லவும் முடியாது, சோ காலைல அவங்க ரெண்டுபேரையும் ஜன்னல்கிட்ட வைக்கப்போறேன் அவங்க இருக்க நினைக்கிறாங்களா இல்ல பறக்க நினைக்கிறாங்களான்னு அவங்களே முடிவு செய்யட்டும், யான்பு தரையிலே நடக்குறதுக்கு எனக்குத்தான் அனுமதி இல்ல ஆனா யான்பு வானத்துல பறக்குறதுக்கு அந்தப் புறாக்களுக்கு முழு சுதந்திரம் இருக்கு, அவங்களுக்கு மத அடையாளம் கிடையாது.

இன்று அந்த சூரியன் கொஞ்சம் நிதானமாகத்தான் எழுந்தான், கப்பலை விட்டு நெல்சன் பிரிவதில் அவனுக்குக்கூட சற்று வருத்தம் போல. சொன்னதுபோல புறாக்களை ஜன்னலின் அருகே வைத்தான். காரணம் கேட்காமல் படபடவென சிறகடித்து நெல்சனுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த இளம் சாம்பல் நிறப் புறாவும் வெண்புறாவும் யான்பு வானத்தில் உல்லாசமாகப் பறந்தது. அவைகள் கண்களுக்கு எட்டும் வரையில் அந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் நெல்சன்.

தலைமை அதிகாரியிடம் விடை பெற்று கோப்புகளில் கையெழுத்திட்டுவிட்டு தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு கப்பலிலிருந்து பிரியாவிடை பெற்றான் நெல்சன்.

கால மாற்றத்தில் பறவைகளின் இருப்பிடம் மாறும், கப்பல் பயணமும் வாலரி பாட்ரிக் நெல்சன்களுக்கு ஒரு கால மாற்றம்.

வாலரி, பாட்ரிக், நெல்சன்களின் பயணங்களுக்கு துறைமுகங்கள் கிடையாது இந்தப் பயணங்கள் மிதந்துகொண்டே இருக்கும்.

... மீ.மணிகண்டன்

சனி, 3 செப்டம்பர், 2022

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம் ... மீ.மணிகண்டன்

பெண்மையைப் போற்றுவதாகச்சொல்லி ஏமாற்றும் உலகில், என்பார்வையில் கண்டத்தைக் கதையாகியிருக்கிறேன். அலங்காரப்பொருள்களுக்கு அடிமையாக்கி பெண்கள் தங்கள் சுயத்தை இழக்கும்படி செய்யும் நாகரீகக் கிருமிகளுக்கு மத்தியில் நான் கண்டவற்றைக்கொண்டு கதையாக்கியிருக்கிறேன். பொருளீட்டுவது முன்னேற்றம் என்றுசொல்லி உடல் நலத்தை நயவஞ்சகமாகச் சூறையாடுபவர்கள் மத்தியில் நான் கண்டவற்றைக் கொண்டு கதையாக்கியிருக்கிறேன்.

சிறுகதை: மெல்லச் சிரித்தது அல்லிக்குளம் !

... மீ.மணிகண்டன்

06-Dec-1994

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம் ... மீ.மணிகண்டன்
கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம் இருட்டு, ஒதுங்கிநிற்க ஒத்துழைக்காத மழை காரணத்தால் நனைந்துகொண்டே வீட்டை அடைந்தாள் வித்யா. "ஏம்மா இப்படி நனைஞ்சிட்டு வர்றியே போகும்போதே குடை கொண்டு போகக்கூடாதா?" என்றாள் சிவகாமி. "காலைல போகும்போது நல்ல வெயில் அடிச்சுது அத்தை, மழை வர்ற மாதிரியே தெரியல" என்றபடி தன் அறைக்குச் சென்று தலைதுவட்டி உடை மாற்றி மோகனின் படத்தின் முன் சென்று, விபூதிக் கீற்று இட்டுக்கொண்டு படத்தையே பார்த்து ஒருநிமிடம் தியானித்தாள். கணவனின் அன்பை, பாசத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும்முன் வித்யாவிடமிருந்து அவனைத் தன்வசம் ஆக்கிக்கொண்டான் அந்த இறைவன்.

சமையற்கட்டிற்குச் சென்ற வித்தியாவிற்கு காபி தயாராக இருந்தது. அவள் தாயாக மதிக்கும் அத்தை சிவகாமிதான் அவளுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் தானே எல்லாவற்றையும் செய்வாள். காரணம் தன் மகனைப் பிரிந்த சோகமே அவளுக்குப் பெரிய சுமையாக இருக்கும் என்று எண்ணினாள், மேலும் மாமியார் மாமனார் இருவரின் அன்பிற்கும் பாத்திரமானவள் வித்யா.

"கிளினிக் போயிட்டு வந்தியா, டாக்டர் அம்மா என்ன சொன்னாங்க" கேட்டாள் சிவகாமி.

"கன்பார்ம்தான்னு சொன்னாங்க... மூணு மாசம்..." என்ற வித்யாவின் கண்கள் தன்னையறியாமல் சிந்திய துளிகள் கன்னங்களை ஈரமாக்கின.

தூக்கம் கண்களைத் தழுவாத காரணத்தால் புரண்டு படுத்தாள் வித்யா, இது பழக்கமாகிவிட்டது. சில நாட்கள் ஜன்னலோரம் அமர்ந்து அந்தச்சிறு குளத்தில், நிலவொளியில் சிரிக்கும் அல்லிகளைக் கண்டும் அவள் தன்னை மறப்பதுண்டு. "அது சரி ஏன் இவ்வளவு கோபம்... கடைக்காரர் பில் எழுதும்போது தவறுதலாகக்கூட எழுதியிருக்கலாம்...." என்றான் மோகன். "அதெப்படி பணம் வாங்கும்போது தவறுதலாக எண்ணிக்கையில் விட்டார்களா ..." என்று பதிலளித்தாள் வித்யா. "சரி போகட்டும் அதுகுத்தான் அவரை உண்டு இல்லைன்னு செஞ்சுட்டியே..." சிரித்துக்கொண்டே மோகன் கூற மௌனமாய் நடந்தாள் வித்யா. "இந்த நீதி காக்கும் கோபம் உன்னோட பிறந்ததா.... இல்லை நடுவில் வந்ததா...." கேட்டான் மோகன். "ம்... இது புதுசு..." சொல்லிவிட்டு மெல்லச் சிரித்தாள் வித்யா, உண்மையைச் சொல்லவேண்டுமெனில் மோகனின் அருகாமைதான் அன்று அவளைக் கடைக்காரரிடம் தைரியமாகப் பேச வைத்தது... கணவனோடு வாழ்ந்த நான்குமாத நினைவுகளின் அரவணைப்பில் உறக்கம் எப்போது அவளின் கண்களை சுற்றும் என்பதை அறியாமலேயே உறங்கிப்போவாள், இன்றும் அப்படித்தான்... உறங்கிவிட்டாள்.

ராஜராஜன் தன்னுடைய வேலைக்கு சாதகம் செய்வதாகவே வித்தியாவிற்குச் சிலநாட்களாகத் தோன்றிவருகிறது. நேற்று ஏற்பட்ட ஒரு பிழையை பின்னர் தான் வித்யா அறிந்தாள், தன் மேலாளர் ராஜராஜன் அழைத்துக் கேட்பார் தவறுதனை ஒப்புக்கொண்டு சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றிருந்தவளுக்கு ஆச்சரியம். ராஜராஜன் அழைப்பை ஏற்று அவனது அறைக்குச்சென்றாள், "மன்னிக்கணும் சார்... என்ட்ரி தவறானதை பின்னாடிதான் கவனிச்சேன்..." என்றாள் வித்யா. "தட்ஸ் நார்மல்... நோ இஷ்யூஸ்... " சொல்லிவிட்டுத் தொடர்ந்தான் ராஜராஜன் "நான் நாளைக்கு உங்க மாமா மாமியை பார்க்க வரணும்... யு ஹேவ் அப்ஜெக்க்ஷன்?".

"நோ சார்... நீங்க வரலாம்.... வெல்கம்... நான் என் மாமா அத்தைகிட்ட சொல்லிடறேன்..." என்றால் வித்யா. "தேங்க்ஸ்.... நீங்க போகலாம்..." என்று வித்யாவைப் போகச்சொல்லிவிட்டு தன் அலுவலைத் தொடர்ந்தான் ராஜராஜன். எதற்காக இவர் நம்வீட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டே விடை தெரியாத குழப்பத்தில் தன் இருக்கையை அடைந்தாள் வித்யா.

இந்தக் கணினி யுகத்தில் காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்துவிடுகிறதே. ஆம் இது ஒன்பதாவது மாதம். அன்றொருநாள் ராஜராஜன் வித்யாவின் மாமனார் மாமியாரைச் சந்தித்து வித்யாவை மணந்துகொள்வதாகச் சொல்லி அவளின் சம்மதத்தை கேட்டுச் சென்றபின் மாமா அத்தை இருவரும் தீர ஆலோசித்து இந்தத் திருமணத்தால் வித்தியாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்று எண்ணினார்கள்.

"ஏம்மா வித்யா, அந்தத் தம்பிக்கு என்ன பதில் சொல்லுறது... நீ இன்னமும் மௌனமா இருக்கியே..." கேட்டாள் சிவகாமி. "எம்மா நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா".

"சீச் சீ, அசடு என்ன வார்த்தை சொல்லீட்ட... உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்குமேன்னுதான்..." என்றாள் சிவகாமி.

"இதோ பாரும்மா, இன்னைக்கு நாங்க இருக்கோம், உன்னை கவனிச்சுக்கறோம், உன் புருஷனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை எங்களுக்கும் ஏற்படாதுன்னு என்ன நிச்சயம். உனக்கு ஒரு குழந்தை பிறந்து பின்னால அது உன்னை கவனிச்சுக்கற வரை உனக்கு என்ன பாத்துகாப்பு... புதுமைப்பெண் புரட்சிப்பெண் அப்படின்னு கதைகள்ல படிக்க நல்லாருக்கும் ஆனா இந்த சமூகத்தில் ஒரு பொண்ணு தனியா வாழறது சாத்தியமில்லைம்மா... உன் அப்பா ஸ்தானத்துல இருந்து எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன் உனக்கு எது நல்ல வழின்னு தெரியுதோ, அதை நீயே தேர்ந்தெடுத்துக்கோ " - இது மாமனார் சதாசிவம்.

பெண்மனம் சிந்திக்கத் தொடங்கியது, வித்யா... அவள் செய்த குற்றம்தான் என்ன... சீக்கிரமே கணவனைப் பிரிந்தது இறைவன் செய்த குற்றம்... முகத்தைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அந்த நான்கு மாத வாழ்க்கையை நினைவில் கொண்டு அவள் காலத்தைக் கடத்தவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம். கணவன் என்ற அந்த உறவின் அன்பிற்கும், பாசத்திற்கும் அவள்மட்டும் என்ன விதிவிலக்கா...? இன்றைய நிலையில் அவள் மறுமணம் செய்துகொண்டால் இந்த சமூகம் அதைத் தவறாகப் பேசுமா? பேசட்டும். அதற்காக அவள் வருந்தத் தேவையில்லை. அவள் செய்தது தவறில்லையே. இந்த நிலையிலும் அவளை மணக்க ஒருவன் முன்வருகிறான் என்றால் அவன் உண்மையில் உலகம் புரிந்தவனாகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம் அவனால் அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. நிலவொளியில் சிரித்த அந்த அல்லிகள் வித்யாவின் கேள்விகளை ஆமோதித்துத் தலையசைப்பதாகவே தோன்றியது.

மறுநாள், "அம்மா, இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன், ஆனா கல்யாணத்திற்குப் பிறகும் நீங்க ரெண்டுபேரும் என்கூடத்தான் இருக்கணும்".

மாமா அத்தை இருவருக்கும் ஏதோ ஒரு கவலை பறந்துவிட்டதுபோல் நிம்மதி. இரவு மணி 10:10 வித்யாவிற்கு இடுப்புவலி ஆரம்பமாகியது. இனிமேலும் தாமதிக்கக்கூடாது என்று எண்ணி இருவரும் அவளை டாக்சியில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள்... டாக்டர் பரிசோதித்துவிட்டு "கவலைப் படாதீங்க, காலை நாலு மணிக்குள்ள குழந்தை பிறந்துடும்.... சுகப்பிரசவமாகத்தான் இருக்கும்" என்றார். நேரம் கரையக் கரைய வித்யாவின் முனகல் சத்தம் அதிகரித்து பின் கத்தும் நிலைக்கே வந்துவிட்டாள். மணி 3:15 சுகமாக ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்த வித்யா மயக்க நிலைக்குச் சென்றாள்.

காலை மணி ஆறு வித்யா மயக்கம் தெளிந்து எழுந்தாள், அருகே மாமியார் "ஆண்குழந்தை பிறந்திருக்கும்மா..." என்றாள் சற்றே கலங்கிய கண்களோடு. "இதைப் பாக்க என் பிள்ளைதான் இல்லாமப் போய்ட்டான்..." என்று அத்தை சொன்னதைக் கேட்டு ஏதோ ஒரு இனம்புரியாத பயம் அவள் மனதில் பரவ அது கண்ணீராய் உருவெடுத்தது. அவள் அழத்துவங்கினாள். கண்ணீர் வற்றிக் கண்கள் சிவக்கும் வரை அழுதவள் தூங்கிப்போனாள். மீண்டும் அவள் விழித்து எழும்போது ஏதோ ஒரு மாயையிலிருந்து விடுபட்டவள் போல் காணப்பட்டாள். தன் குழந்தையைப் பார்க்கும்போது ஏதோ ஆயிரம் காலம் தன் கணவனோடு வாழ்ந்துவிட்டது போல் அவள் உணர்ந்தாள். பிஞ்சுக் கரங்களின் மென் பரிசத்தில் அந்த வாசம் மீண்டும் நாசியைத்தொட்டது... சன்னக் குரல் சிணுங்கலில் "வித்யா" என மோகனின் குரல் தட்டி எழுப்பியது... மோகனின் அருகாமையில் அன்று அவள் கண்ட தைரியம் மீண்டும் துளிர்த்ததாக உணர்ந்தாள்...

"அம்மா நான் பொட்டு வச்சுக்கலாமா..." - வித்யா

"என்ன இது கேள்வி... நெத்திப் பொட்டுங்கறது உன்னோட பொறந்தது... நாங்க சொன்னா நீ எப்படி எடுத்துக்குவியோன்னு நினைச்சோம்... அதனால இதப்பத்தி நாங்க இதுவரை பேசல... எங்களுக்கு நீ இப்படிக் கேட்டது மகிழ்ச்சியா இருக்கு ..." என்றாள் சிவகாமி

"அம்மா... இனி நான் பழைய ஆபீசுக்கு போக வேண்டாமுன்னு நினைக்கிறேன்.... புது வேலை தேடிக்கப்போறேன்..." வித்யாவின் தீர்க்கமான பார்வையும் ஆழமான குரலும் சிவகாமிக்கு புதுமையாக இருந்தது... ஆனாலும் பிடித்திருந்தது.

வித்யாவின் மடியில் புதிதாகப் புன்னகைத்த அந்தச்சிசு, தவறு செய்ய இருந்தவளை தடுத்து நிறுத்த வந்த தெய்வமாய் அவளுக்குத் தோன்றியது. ஆம் அமைதியாக இருந்த குளத்தில் யாரோ கல்லெறிந்து சற்று கலக்கம் ஏற்படுத்திவிட்டனர். இதோ ஒரு புதிய அரும்பின் பிறப்பால் அந்தக்குளம் மீண்டும் அமைதியானது.... விட்டுப்போன அத்தியாயத்தைத் தொடரக் கிளம்பிவிட்டாள் வித்யா தெளிவாக...!

...மீ.மணிகண்டன்

06-Dec-1994

சனி, 27 ஆகஸ்ட், 2022

நாடகமாக்குவதற்காக எழுதிய சிறுகதை. கதையின் தலைப்பு: கவிதை சொன்னா காதல் வரும்!

எழுதியவர்: மீ.மணிகண்டன் 

நாள்: Sep-26-2019

கவிதை சொன்னா காதல் வரும் ... மீ.மணிகண்டன்
பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான்.

 "என்னடா..."

 "டேய்.. எனக்கு உடனடியா... ஒரு கவிதை எழுதணும்..."

 "என்னமோ சர்வர்கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற.."

 "எப்படி வேண்ணா வச்சுக்க.... பட் ஐ நீட் கவிதை அர்ஜென்ட்.."

 "என்ன விஷயம்.."

 "உனக்கே தெரியும் எனக்கு பிரேமி மேல ஒரு இதுன்னு.."

 "அதுக்கென்ன.."

 "அவகிட்ட என்னோட லவ்வ சொன்னேன்.."

 "வாவ்... கங்கிராட்ஸ்..."

 "இல்லடா.. அவ சொல்றா... இப்படியா ப்ரபோஸ் பண்ணுவ.. டீசெண்டா... ரொமான்டிக்கா... ஒரு கவிதை சொல்லி ப்ரபோஸ் பண்ணுவேன்னு நெனைச்சேன்னா ..."

 "சரி நீ எப்படி ப்ரபோஸ் பண்ண.."

 --- Flashback ---

கேன்டீனில் இருவரும் தேநீர் பருகிக்கொண்டிருக்கும் வேளையில்... "ப்ரேமி ... ரொம்பநாளா மனசுக்குள்ளையே இருக்கு... இப்போ சொல்லணும்னு தோணுது..."

 "வாவ்.. என்னது.."

 "வந்து.... ஐ லவ் யு..." பட்டென பிரகாஷ் சொல்லிமுடித்ததும் சற்றே ஆடிப்போன ப்ரேமி தட்டுத் தடுமாறி தேநீர் கோப்பையை தன்மீது கவிழ்த்துக்கொள்ள... அவளது ஆடை அதிகமாகவே தேநீர் பருகிவிட்டிருந்தது... "கொஞ்சங்கூட எதிர்பார்க்கல... ஏண்டா லவ் சொல்ற லொகேஷனா இது... எங்க உக்காந்திருக்கோம்.... சட்டுன்னு என்னமோ சாப்பாட்டுல உப்பில்லைங்கிற மாதிரி சொல்லுற..."

 "ஏன்... இதுக்காக செட் போட்டு... வைட் டிரஸ் தேவதைங்க ஆறு பேர வரச்சொல்லி சொல்லவா..."

 "அவ்வளவு மெனக்கெட வேண்டாம்..."

 "தென் வாட்.."

 "சி... ரோமியோ ஜூலியட்... அம்பிகாபதி அமராவதி.... அந்தமாதிரி இமாஜினேஷன்ல.... ஒரு ரம்யமான சிச்சுவேஷன்ல என் கை விரல பிடிச்சுக்கிட்டே...

அழகா ஒரு கவிதை சொல்லி... ப்ரபோஸ் பண்ணுவேன்னு நினைச்சிருந்தேன்... என் நினைப்புல டீய கொட்டிட்டியே.." சொல்லிவிட்டு கோபமாக விடுவிடுவென எழுந்து நடந்தாள்... பின்னாலேயே வேகமாகத் தொடர்ந்த பிரகாஷ், "அவ்வளவுதானே நாளைக்கே ஒரு கவிதை எழுதிட்டு வரேன்... இதே கான்டீன்ல... ப்ரபோஸ் பண்றேன்..."

 "பார்த்தியா மறுபடி இதே கான்டீன்... நீ எல்லாம்..."

 "சரி வேற லொகேஷன்.... பார்க்..."

 "பாக்கலாம்...பாக்கலாம்..."

 "சார் பில்ல பெ பண்ணிட்டு போங்க..."  கான்டீன் சிப்பந்தி பிரகாஷை தொடர்ந்தார்.

 --- Flashback over ---

 பிரவீனிடம் தொடர்ந்தான் பிரகாஷ்.. "இப்போ சொல்லு..."

 "என்ன சொல்ல.."

 "கவிதை..."

 "அதெல்லாம் நீ நினைக்கிற மாதிரி இல்ல.. டாப் ப தொறந்து ஒடனே தண்ணி வர்றதுக்கு... கிவ் மீ சம் டைம்..."

 "போடா.... நானே எழுதிக்கிறேன்...." போனை வைத்துவிட்டு கவிதை எழுத சிந்தனையில் அமர்ந்தான் பிரவீன்.

 "ம்ம்ம்... என்ன சொல்லி ஆரம்பிக்கிறது..... 'நான் உன்ன நினைச்சேன்...' ம்ஹூம்... இத ஏற்கனவே எழுதிட்டாங்க... 'வான் நிலா நிலா அல்ல...'

இல்லையே இதைக்கூட ஏற்கனவே எழுதின மாதிரி இருக்கே... ம்.... பேசாம யுடியூபை பார்க்கிறோம்... ஒரு கவிதையை பிக்கப் பண்றோம்... மொபைல் எடுத்து யூடியூபை திறந்தான் பிரவீன்.

 ******

 பார்க்கில் அங்கும் இங்கும் தேடி.. அதோ இருக்கிறாள் பிரேமி.... கண்டு பிடித்துவிட்டான். "என்ன லுக் ஓவரா இருக்கு...."

 "உன்னை எப்படி வர்ணிக்கிறதுன்னு... பாக்குறேன்.."

 "அப்டியா... ம்... கேட்டுக்க...." கண்களை மூடிக்கொண்டு ப்ரேமி மெல்லிய குரலில் தொடர்ந்தாள், "நிலாவைப் பாடு அதுல என்னை பத்தி பாடு..."

 "கரெக்ட்டா சொல்லணும்.... நிலாவை பத்தியா... உன்னைப் பத்தியா..."

 "நீயெல்லாம்... அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட..." சொல்லிவிட்டு எழுந்து நடந்தாள் பிரேமி...

 "ஏ.... நில்லு...." நிற்கச்சொல்லிவிட்டு கண்களை மூடி சற்று யோசித்தான்... "கேட்டுக்க... நிலா நிலா ஓடிவா... நில்லாமல் ஓடிவா.. மலைமேலே ஏறிவா பிரேமியத்தான் பார்க்க வா..." சொல்லி முடித்துவிட்டு எதோ பெரிய கவி சொல்லிவிட்ட மமதையில், "பார்த்தியா... நிலால ஆரம்பிச்சேன், ப்ரேமி... உன் பெரும் வருது கவிதை எப்புடி.."

 "ம்... நான் ஒன்னும் பாப்பா இல்ல... எனக்கு நீ சோறு ஊட்டுறதுக்கு..." சற்று தூரம் நடந்தாள் ப்ரேமி, தொடர்ந்தான் பிரகாஷ், சட்டென திரும்பினாள் "ஒரு ஷெல்லி மாதிரி கண்ணதாசன் மாதிரி இல்லாட்டியும்.."

 "இல்லாட்டியும்.."

 "ஒரு வாலி மாதிரி வைரமுத்து மாதிரி இல்லாட்டியும்.."

 "இல்லாட்டியும்.."

 "ஒரு பொயட் மாதிரியாவது திங்க் பண்ணேண்டா.."

 முழித்தான் பிரகாஷ்.. தொடர்ந்தாள் பிரேமி... "சரி நான் சொல்றத எழுதிக்காட்டு..."

 "என்ன சொல்லு..."

 "மத்தாப்பு.." எழுதினான் பிரகாஷ், "ம த் த ப் பு" எழுதியத்தைக் காட்டினான் பார்த்த ப்ரேமியின் முகம் சிவந்து கொப்புளித்தது, "தப்பு..." சொல்லிவிட்டு

நடந்தாள் பிரேமி தொடர்ந்தான் பிரகாஷ்... "ப்ரேமி ... ஒன் மோர் சான்ஸ்" நின்றாள், அங்கே கையைக் காட்டி "அங்க என்ன எழுதியிருக்கு படி.."

 "ம்ஹம்... இது.. இத... படிக்க முடியாதா... கிரேட் இன்சல்ட்...." சொல்லிவிட்டு ப்ரேமி காட்டிய இடத்தில் எழுதியிருந்ததை படித்தான் பிரகாஷ். அது ஒரு பழரசம் விற்கும் கடை, மேலே பழமுதிர்ச்சோலை என்று எழுதியிருந்தது, பிரகாஷ் படிக்கத்துவங்கினான், "ப ழ மு தி ர் ச் சே ர லை.".

 "ஆள விடு நான் உன் பக்கமே வரல..." சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தாள் ப்ரேமி.

 ******

 தன் வீட்டு டெர்ரசில் அமர்ந்திருந்தான் பிரகாஷ்.. பிரவீன் வருகையைப் பார்த்து, "வாடா.."

 "என்னடா சோகமா இருக்க.."

 "பின்ன என்னடா எதுவும் தெரியாத மாதிரி கேட்குற.."

 "அது... எழுதலாம்.... இல்ல வாங்கலாம்... பட்... கொஞ்சம் செலவாகுமே.."

 "எவ்வளவு.."

 "ஹேவ் டு ஸ்பென்ட் சம் லாக்ஸ்.."

 "டேய்... நான் வைரமுத்துக்கிட்ட கவிதை கேட்கல... நீ ஹெல்ப் பண்ணுடான்னு கேட்டேன்..."

 "கவிதை எழுதுறது ரொம்ப சிம்பிள் டா..."

 "அத கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது.."

 "கேளு... இப்போ உனக்கு புடிச்ச பழைய பாட்டு ஒண்ணு சொல்லு.." சற்று யோசித்த பிரகாஷ், தொடர்ந்தான், "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு.."

"ம்... அவ்வளவுதான் 50 மார்க் எடுத்துட்ட..."

 "என்னடா சொல்ற..."

 "இப்போ அத பாட்டா பாடாம அப்டியே படிச்ச பார்த்தியா அவ்வளவுதான், அப்பறம் மெயின் அதாவது அதுல இருக்க பவர்புல் வர்ட எடுத்துட்டு அதுக்கு ஈகுவல் ஆர் ஆப்போசிட் வர்ட் போடு..."

 "அதெப்படி..."

 "அதுல இருக்க பால ரிமூவ் பண்ணிட்டு மோர் சேத்துக்கோ.... குளிர்ச்சி... லவ்வும் குளு குளுன்னு இருக்கும்... அப்பறம் நிலவ தூக்கிட்டு அதுக்கு பதிலா

சந்திரனை போட்டுக்க... இப்ப சொல்லு..."

 "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா மோர் சந்திரனை கேட்டு..."

 "சி... தட்ஸ் இட்.... இப்ப இது உன்னோட கவிதை...."

 "உன் மூஞ்சி... எப்படி எழுதறதுன்னு கேட்டா... எப்படி எழுதக்கூடாதுன்னு சொல்லித்தர்ற..."

யோசித்தான் பிரவீன், "ஓ.கே.டா எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார் அவர் சினிமாவுக்கு பாட்டெல்லாம் எழுதுவார் அவர் ஒரு இன்ஸ்டிடியூட் வச்சிருக்கார்... அங்க ஆறு மாசம் ட்ரைனிங் எடு... அப்பறம் பாரு..."

 "அப்பறம்..."

 "அதுக்கப்பறம் ஒரு கவிதை எழுதற..."

 "அப்பறம்..."

 "அத ஒரு பேனர் எழுதி நிறைய பேர் வந்து போற இடத்துல வைக்குற..."

 "அப்பறம் அந்த நிறைய பேர் என்கிட்டே வந்து எதுக்காக அங்க பேனர் வச்சன்னு கேள்வி கேட்கணும்... அதானே..."

 "இல்லடா...இல்லடா..."

 "சரி... மொதல்ல அந்த இன்ஸ்டிடியூட் எங்க இருக்கு..."

 இருவரும் சென்றனர் 'இங்கே கவிதை எழுத கற்றுத்தரப்படும்' என்ற வாசகம் அவர்களை வரவேற்றது.

 ******

 ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரேமியைச் சந்தித்தான் பிரகாஷ் கடற்கரை மணற்பரப்பில் இருவரும் அமர்ந்திருக்க அலைகள் ஓடிவந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரேமி ஆரம்பித்தாள், "பிரகாஷ் எங்க வீட்டில எனக்கு..."

 "வெயிட்...மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டுங்க.... அதான..."

 "மூஞ்சி.... எங்க வீட்டில எனக்கு ரொம்பப்புடிச்ச என்னோட பெட், என்னோட பப்பிக்கு உடம்பு சரியில்ல..."

 "நான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன்... சாரி.... இங்க பாரு... நான் முன்னாடி சொன்ன மாதிரி... ஒரு சூப்பர் கவிதையோடு வந்திருக்கேன்... பிளீஸ் அக்செப்ட் மை ஹார்ட்.." கையில் வைத்திருந்த பேப்பரை பிரித்து ப்ரேமியிடம் நீட்டினான். படித்துப்பார்த்த ப்ரேமி சற்று ஆச்சரிமடைந்தாள். "ஐ கான்ட் பிலீவ் இட்.. நீயா எழுதின.... ஸச் அ வொண்டர்புல் போயம்..." மீண்டும் படித்தாள்,

மண்ணில் வந்த பிறை நிலவே

மனதை ஏற்க மாட்டாயா

உன்னில் கரையும் மழைத்துளி நான்

உறவாய் ஏற்க மாட்டாயா !

மனம் மகிழ்ந்த ப்ரேமி சற்று மௌனத்திற்குப் பிறகு "நான் உன்ன ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன் பிரகாஷ்.. ரியலி.. ஐ.. ஐ.."

 துள்ளிக்குதித்தான் பிரகாஷ், "ஐ.."

 சரியாக அதே நேரம் பிரேமின் போன் சிணுங்கலிட எடுத்துக் பார்த்தாள், தோழியிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ், எடுத்து ஓபன் செய்தாள், "ப்ரேமி ஏண்டி போனை எடுக்க மாட்டேங்குற.. அதான் இந்த வாய்ஸ் மெசேஜ்.. சரி கேளு.. நான் சொல்லுவேன்ல என் பிரென்ட்.. அவன் இன்னிக்கு என்கிட்டே வந்து ஒரு கவிதை சொல்லி என்ன ப்ரொபோஸ் பண்ரான்பா.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... பட் கவிதை சூப்பர்.. கேளேன்..."

மண்ணில் வந்த பிறை நிலவே

மனதை ஏற்க மாட்டாயா

உன்னில் கரையும் மழைத்துளி நான்

உறவாய் ஏற்க மாட்டாயா !

 மெசேஜ் நிறைவானது, கேட்டுக்கொண்டிருந்த பிரகாஷ் செய்வதறியாது விழித்தான். கோபம் பொங்கியது பிரேமிக்கு, "கவிதை எழுத ஆரம்பிச்ச உடனே ஒரே நேரத்துல ரெண்டு பேர ப்ரொபோஸ் பண்றியா.. "

 "அச்சோ... அது நா இல்ல..."

 "எது நீ இல்ல..."

 "உன் பிரெண்ட நான் ப்ரொபோஸ் பண்ணல...."

 "நீ சொல்லமாத்தான் அவ எனக்கு இதே கவிதையை படிச்சுக் காட்டுறாளா..."

 "சாத்தியமா... உன்கிட்ட மட்டும்தான் ப்ரொபோஸ் பண்றேன்..."

 "ஆப்ப அவகிட்ட யார் ப்ரொபோஸ் பண்ணது.."

 சற்றே யோசித்து மென்று விழுங்கி.." அது வந்து... வந்து... உண்மைய சொல்லிடறேன் ப்ரேமி, அது என்னோட கவிதை இல்ல... என் பிரென்ட் பிரவீன் அவன் லவ்வருக்கு எழுதி வச்சிருந்ததை அவனுக்கு தெரியாம எடுத்துட்டு வந்து... வந்து... உன்கிட்ட.... குடுத்து...."

 "போடா... உனக்கு கவிதையும் வராது... எனக்கு உன்மேல காதலும் வராது...." சொல்லிவிட்டுத் திரும்பிப்பாராமல் நடந்தாள்.

 அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ் மணற்பரப்பில் மண்டியிட்டு விழுந்தான், காற்று கொண்டு வந்த பாடல் அவன் காதுகளை நனைத்தது, அவள் பறந்து போனாளே... என்னை மறந்து போனாளே...

...மீ.மணிகண்டன்

Sep-26-2019