ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

நெஞ்சு பொறுக்குதில்லையே ... M.Manikandan

நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
Title by eluthu com
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முப்பங்கு சமுத்திரத்தால் மூழ்கடித்த உலகமிதை
அப்படியே அழிக்கவந்த அரக்கர்கள் கூட்டமிங்கே,
...மிரளவைத்து பயமுறுத்தி மிகையாக வற்புறுத்தி
...தரமற்ற பொருள்விற்க தந்திரமாய் விளம்பரங்கள் !

தேர்தலதன் வீரமதை தெரியாமல் கைநீட்டி
அர்த்தமற்று இலவசத்தின் அடிமையான வாக்காளர் !
...கல்விதரும் கூடங்கள் கணக்கில்லை அவனியிலே,
...பல்கலையோ வரண்டுபோகப் பணம்பறிக்கும் எண்ணங்கள் !

உயிர்சாயம் உலர்ந்துபோன உழைப்பாளி வறுமையிலே,
மயிர்சாயம் பூசிவாழும் மந்திரிகள் மமதையிலே !
...வலிதீர்க்கும் மருத்துவத்தை வருமானப் பாதையாக்கி
...பலியாக்கி வறியோரைப் பதம்பார்க்கும் மூர்க்கர்கள் !

ஆன்மீக அருமையினை அடகுவைக்கும் காலிகளால்,
தன்னுள்இறை உணராமல் தள்ளிநிற்கும் மாந்தர்கள் !
...துள்ளிவரும் மழலையினைத் தூக்கிதினம் கொஞ்சாமல்
...அள்ளிவந்து பொருள்குவிக்க அலைந்துநோகும் பெற்றோர்கள் !

பணவேட்டை ஒன்றுமட்டும் பார்வாழ்கை என்றாக
குணம்குன்றி குவலயமும் குற்றுயிராய்ச் சாகுதம்மா !
...பழசாகிப் போனதனால் பந்தபாசம் இற்றதனால்
...நிழல்காற்று இல்லாமல் நெஞ்சுநொந்து அழுகுதம்மா !

By M.Manikandan
08-Feb-15


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக