சனி, 20 ஆகஸ்ட், 2022

காதல் வானிலே ... மீ.மணிகண்டன்

அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்ற கதை

சிறுகதைப் போட்டி – 04

போட்டியின் விதிமுறை: 275 வார்த்தைகள்

நாள்: Nov-22-2021

தலைப்பு: காதல் வானிலே...!

சிறுகதை ஆக்கம்: மீ.மணிகண்டன்


நன்றி அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை
காதல் வானிலே ... மீ.மணிகண்டன்
"ஜெயா, எத்தனை தடவை சொல்லுவேன்? பிடிச்ச பிடியிலேயே நின்னா எப்படி?"

"எனக்கும் புரியாம இல்ல வானதி, இன்னிக்கு கடைசி நாள், இதுக்கப்பறம் நாம சந்திப்போமாங்கறதெல்லாம் இறைவனுக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை."

ஜெயராமனின் பலநாள் பிடிவாதத்தை மறுக்கமுடியாமல், தன்னுடைய பேருந்து அடையாள அட்டையை ஜியோமெட்ரி பெட்டியிலிருந்து எடுத்த வானதி, அதிலிருந்து தன்னுடைய பாஸ்போர்ட் அளவு கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை, மிகவும் மெதுவாக, ஆரஞ்சுப் பழத்திலிருந்து தோலை உரிப்பதுபோல அட்டையிலிருந்து தனது புகைப்படத்தை பிரித்து எடுத்தாள், ஜெயராமனிடம் நீட்டினாள், "ஜெயா என் போட்டோ உன்கிட்ட இருக்கறது யாருக்கும் தெரியக்கூடாது ப்ளீஸ்".

பொழியவும் இயலாமல் சுமக்கவும் முடியாமல் குட்டி மேகமொன்று ஜெயராமனுக்கும் வானதிக்கும் இடையே உலவிக்கொண்டிருக்க, அந்தப் பள்ளிக்கூட வராண்டா அமைதியின் கனத்தை அதிகரித்துக்கொண்டிருந்தது. வானதி நீட்டிய அவளது புகைப்படத்தை ஜெயராமன் பெற்றுக்கொள்ளும் வேளை, "ஜெயா உன்னோட போட்டோ ஒண்ணுகூட என்கிட்டே இல்லையே?" சற்றே தழுதழுத்தாள். இதை எதிர்பார்க்காத ஜெயராமன், "வானதி, அப்போ இவ்வளவுநாள் நீ மறுக்கல, உன் உதடுமட்டும்தான் மறுத்திருக்கு". தலையைக் குனிந்து மெளனமாக நின்றாள் வானதி. பிரிவுச் சூழலிலும் கொஞ்சம் மகிழ்ச்சித் தருணம் உணர்ந்தான் ஜெயராமன், தானும் அவள்போலவே பேருந்து அடையாள அட்டையிலிருந்த தனது புகைப்படத்தைப் பிரித்தெடுத்து அவளிடம் நீட்டினான். சுற்றி யாரும் இதனைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு படக்கென அவன் கரங்களிலிருந்து பெற்றுக்கொண்டாள் வானதி.

"ஜெயா யாருக்கும் தெரியவேண்டாம் ப்ளீஸ்".

"வானதி, மேகத்திலிருந்து பொழியுற மழைத்துளிய, மண்ணுல விழுந்ததுக்கப்பறம் யாராலயும் கண்டுபிடிக்க முடியாது, உன்னிடம் நான் பேசிய பொழுதுகள், உன்னுடைய போட்டோ எல்லாமே எண்ணில் விழுந்த மழைத்துளிகள்."

பள்ளிக்கூட வாயிலில் பூத்திருந்த செம்பருத்திப்பூவிலிருந்து, மஞ்சள்நீலப் பட்டாம்பூச்சியொன்று விண்ணை நோக்கிப் பறந்துக்கொண்டிருந்தது.

எங்கிருந்தோ வந்த மஞ்சள்நீலப் பட்டாம்பூச்சி பால்கனிக்குப் பக்கத்தில் பூத்திருந்த செம்பருத்திப்பூவில் அமர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயராமனை, "என்னங்க நாளைக்கு பெரியவன் வரான்ல, சிவாவுக்கு போன் பண்ணி ரயிலடிக்கு சரியான நேரத்துக்குப் போகச்சொல்லிடுங்க" என்று ஜெயராமனின் நினைவைக் கலைத்தாள் ஜனனி,  டீபாயில் காஃபியை வைத்தவள், "என்னோட பழய பெட்டியெல்லாம் மேல இருந்து எடுத்து அறையை சுத்தம் பண்ணிடுறேன், இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அறைதான், காலேஜ் முடிச்சு வரவனுக்கு தனியறை தேவைப்படும்", சொல்லிக்கொண்டே தனது அறைக்குச்சென்று பரணிலிருந்து பழையபெட்டியை இறக்கினாள் ஜனனி.

பெட்டிக்குள்ளிருந்த பழுப்படைந்த சான்றிதழ்கள், புகைப்படங்களை விலக்கி அந்த ப்ரவுன் நிற ஆட்டோகிராப் புத்தகத்தை கையில் எடுத்தாள். அறைக்குள் ஜெயராமனின் வரவை உணர்ந்தவள் ஆட்டோகிராப் புத்தகத்தை உள்ளே நழுவவிட்டு மற்ற புத்தகங்களை அடுக்கினாள். சற்று நேரத்தில் ஜெயராமன் அறையிலிருந்து வெளியேறியதும், மீண்டு ப்ரவுன் ஆட்டோகிராப் புத்தகத்தை வெளியில் எடுத்தாள், படபடவென பக்ககங்களைப் புரட்டினாள் இதயக்கனம் சற்றே அதிகரித்தது, அவள் புரட்டிய அந்தப்பக்கத்தில் இன்னமும் அந்த மைப்பேனாக் கையெழுத்து நிறம்மாறாமல் இருந்தது.

 மீ.மணிகண்டன்




2 கருத்துகள்:

  1. சிறப்பான கதை. இதை வெளியிட ஏன் ஒரு வருடம் எடுத்துக்கொண்டீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பக்கங்களைப் படித்தபின்னர், தங்களின் எழுத்துகளை ரசித்த பின்னர், கடந்த சில மதங்களாகத்தான் blogspot ல் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். அதனால்தான் இந்தத் தாமதம். நன்றி!

      நீக்கு