திங்கள், 17 பிப்ரவரி, 2025

வேண்டுதல் ... மீ.மணிகண்டன்

 வேண்டுதல் ... மீ.மணிகண்டன் 

அன்னை ஸ்வர்ணாம்பாள் போட்டியில் முதற்பரிசு வென்ற கதை.


வேண்டுதல் ... சிறுகதை ... மீ.மணிகண்டன் … 11/27/2024

     எமியின் அனுமதியின்றி அவள் கைவிரல் நகக்கணுக்களில் நுழைந்து அவளின் மூளைத்திசுக்களை முத்தமிட்டு உடல் ரோமங்களை எழுப்பிக் கூத்தாடியது வாடைக்காற்று. அசையாமல் விழிகளைத் திறந்துகொண்டாள் எமி. நல்ல உறக்கத்தைக் கலைத்துவிட்டது குளிர். தன்னிலையை உணரச் சில நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு. இப்போது நன்றாகவே விழித்துக்கொண்டாள். போர்த்தியிருந்த கம்பளி விலகி மணிக்கட்டு வரை இருகரங்களும் போர்த்தப்படாமல் இருந்தன. இருக்கட்டுமே? கூடாரத்தினுள்தானே உறங்கிக்கொண்டிருக்கிறாள், உள்ளே எப்படி காற்று நுழைந்தது? புரண்டு திரும்பினாள், அருகில் அம்மாவைக் காணவில்லை. அவசரத்திற்கு எழுந்து சென்றிருப்பாள் என்று யூகித்துக்கொண்டாள். காற்று உள்ளே நுழைந்த விதமும் அவளுக்குப் புலப்பட்டுவிட்டது. அம்மா கூடாரத்தின் வாயிலைத் திறந்து வெளியே சென்றிருப்பாள்அப்போது காற்று உள்ளே நுழைந்திருக்கும். உறங்கச்செல்லும்முன் கைகளுக்கும் கால்களுக்கும் உறைகள் அணிந்துகொள்ளச்சொல்லியிருந்தாள் அம்மா. எமி கால்களுக்கு அணிந்துகொண்டாள். சோம்பல் மேலிட கைகளுக்கு வேண்டாமென்று தவிர்த்திருந்தாள். ஒரு கையில் உறை அணிந்ததும் மறு கைக்கு உறையணிந்த கையால் உறையணிந்து இழுத்துச் சரிசெய்வது சற்றே சுலபமற்ற பணி அவளுக்கு. கூடாரத்தின் வெளிய 'உய் உய்' என்று ஊதக்காற்று ஏற்ற இறக்கங்களோடு உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தது, காதுகள் வரை மறைத்திருந்த குல்லாவைத்தாண்டி எமியின் செவிகளில் அது வெற்றிரைச்சலாய்ப் பாய்ந்துகொண்டிருந்தது. கைகள் வெளியே தெரியாவண்ணம் கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு கண்ணிமைகளைப் பொருத்திக்கொண்டாள். வாயிலைத்திறந்துகொண்டு அம்மா உள்ளேவந்து படுக்கையைச் சரிசெய்து படுத்துப் போர்த்திக்கொண்டதை எமியால் உணரமுடிந்தாலும் அமைதியாகவே இருந்தாள். மகள் விழித்தெழுந்திருக்கிறாள் என்பதை அம்மா உணர்ந்தாள். எமி கால்களை நீட்டிக் கம்பளியைச் சீராகப்போர்த்தியிருந்ததே அதற்கு சாட்சி.

 "எமி ..."

அம்மா அழைப்பதைக் கேட்டுக்கொண்டு அமைதியாகவே இருந்தாள். பதில் குரல் கொடுக்க அவளுக்கு மனமில்லை. வறண்ட மைதானமாக அவள் மனம் காய்ந்துகிடந்தது. ஷெல்டரில் உறங்கிப் பலநாள்கள் ஆகிவிட்டது. சமீப சிலநாள்களாக அழைத்துப் போகச்சொல்லிப் பலமுறை அம்மாவிடம் மன்றாடியிருக்கிறாள்அம்மா மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள். உறங்க மனமின்றி கூடாரத்தின் மேல்பகுதியை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தாள் எமி. உச்சிவானில் நிலா உருண்டுகொண்டிருக்கிறான் என்பதைக் கூரையில் படர்ந்த பாலொளி வெளிச்சத்தில் உணர்ந்தாள். அடிவயிறு சமிக்ஞை செய்து எழச்சொன்னது. கழிப்பறை உபயோகிக்க வேண்டுமெனில் எழுந்து ஏறக்குறைய முன்னூறடிகள் நடந்து செல்லவேண்டும். கூடாரமிருக்குமிடத்திற்கும் அரசு அமைத்துக்கொடுத்திருக்கும் அந்தத் தற்காலிகக் கழிப்பறைக்கும் அவ்வளவு தூரம். மேலும் மெல்லிழைக் காகிதங்கள், நறுமனக் குப்பி இவற்றையும் மறக்காமல் எடுத்துச்செல்லவேண்டும் மறந்துவிட்டால் அந்தக் கழிப்பறைக்குள் சென்று திரும்புவதே மறுபிறப்பு. இவ்வளவு தயாராகி இந்தக்குளிர் இருட்டில் வெளியே செல்வதா? கூடாரத்தின் அருகில் வேறு மார்க்கமில்லை. இந்தப்பூங்காவில் எமியும் அம்மாவும் வசிக்கும் கூடாரத்தைப்போல முப்பதுக்கும் மேற்பட்ட கூடாரங்கள் புல்வெளியில் மழைக்காளான்கள் போல் பரவலாக இருக்கின்றன. சுருக்கமாக அது ஒரு கூடாரப்பூங்கா. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு உறங்கச்சொன்னது சோம்பல். 'சடசட' வெனக் கூடாரத்தின்மீது ஏதோ உதிரும் ஓசை. சில நொடிகளில் 'படபட' வென இடைவெளியின்றி ஒலித்தது. 'சரிதான் ... மழை பெய்கிறதா?' என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள். வயிற்றின் கட்டளைக்கு எழுந்தால் மழையீரத்தில் நனையவேண்டும். குடைபிடித்துக் கொண்டு நடந்தாலும் உடைகளில் ஈரம் படியும். ஷூக்களில் ஈரம் ... ஈரத்தோடு மண்ணும் ... திரும்பிவந்து ஷூவைக் கழற்றிவிடலாம் ஆனால் அதே ஈர உடையில் உறங்க முடியுமா? ம் ஹூம் .... முடியாது ... விடியும்வரை பொறுத்துக்கொண்டு உறங்கிவிட எண்ணிப் பசையிட்டதுபோலக் கண்ணிமைகளை இருக்கமாக இணைத்துக்கொண்டாள். புரண்டு படுத்தாள். கம்பளியை இழுத்துத் தலை முழுவதும் போர்த்திக்கொண்டு இருட்டுக்குள் உடலை ஏமாற்றி உறங்கிவிட முயற்சித்தாள். அவளின் எண்ணத்திற்கு எதிராகச் செயல்பட்டது அவள் மேனி. குளிரால் நடுங்கத் தொடங்கியது. போர்த்திய கம்பளி பயனற்றுக் கனத்தது. எழுந்து அமர்ந்தாள். தலைமாட்டில் வைத்திருந்த பேட்டரி விளக்கை எடுத்து ஒளியூட்டினாள். கூடாரத்தைச் சுற்றி விளக்கொளியில் வட்டம் போட்டு அவசரத்திற்கு விடை தேடினாள். பேட்டரி விளக்கின் அருகில் இரவு உறங்கப்போகும் முன் உண்ட நூடுல்ஸ் மீதத்துடன் மூடியிருந்த நெகிழிக் கொள்கலன் கண்களில் தெரிந்தது, விடை கிடைத்தது, விடுதலை, விடுதலை என்று கண்கள் பிரகாசமானது. கலனைத் திறந்து இரண்டு கையளவு மீதமிருந்த நூடுல்ஸை மொத்தமாக அள்ளி வாயில் திணித்துக்கொண்டாள். கலன் காலியானது. அருகிலிருந்த அட்டைப்பெட்டியிலிருந்து மெல்லிழைத் தாள்கள் நான்கைந்து மடிப்புகளை மொத்தமாக உருவி வாய் மற்றும் கையைத் துடைத்துக்கொண்டு உடலிட்ட கட்டளைக்கு ஆயத்தமானாள். விடிந்ததும் நெகிழிக் கலனை வெளியேற்றிக்கொள்ளலாம், அதுவரை உள்ளே ஒரு ஓரத்தில் மூடிக்கிடக்கட்டும் என்று முடிவு செய்து கொள்கலனிடம் தன் அவசரத்தைச்சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கூடாரத்தின் ஒரு மூலைப்பகுதியை நாடினாள். அடிவயிற்றை அமைதிப்படுத்தினாள். நெகிழிக் கலன் மீண்டும் கனமாகிக் குப்பைக்குத் தயாரானது. கால்மாட்டில்  மூடிவைத்துவிட்டு உடலில் மீண்டும் கதகதப்பை உடுத்திக்கொள்ளக் கம்பளியைநாடினாள் எமி. மழை இன்னும் சட சடத்துக்கொண்டிருந்தது.

பறவைகளின் கீச்சொலியில் கண்களைத்திறந்தாள் எமி. பகலவன் வந்துவிட்டிருந்தான். அம்மா யாருடனோ வெளியே பேசிக்கொண்டிருந்தாள். "நாங்க இங்கே வந்து ஏழு நாள்கள் தான் ஆகிறது ..." என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள் அம்மா.

 "அது எங்களுக்கு தேவையற்றது ... " என்றது கனமாக ஒரு ஆண்குரல்.

 "அடிக்கடி டெண்டை பிரித்து உடமைகளைத்தூக்கிக்கொண்டு இடம் மாறுவது சுலபமான செயலா? என்று நீங்களே சொல்லுங்கள்" என்றாள் அம்மா.

எமி அதிர்ந்தாள், ' ... இந்த இடமும் போய்விட்டதா?' என்று நகைத்துக்கொண்டாள். அம்மா வெளியே காவல் அதிகாரியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டாள்.

"எங்களிடம் கேள்வி கேட்காதீர்கள். அரசின் கட்டளைக்கு நாங்கள் பணி செய்கிறோம். அங்கே உங்கள் டெண்ட்களை அமைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, கடந்த சிலநாள்களில் அங்கிருந்து முப்பதாயிரம் பவுண்டு  குப்பைகளை அகற்றியிருக்கிறோம்" என்றது ஆண்குரல்.

சரிதான் குப்பையிருந்த இடத்தில் எங்களை மாற்றுகிறார்கள்! ஏன் இந்த அம்மா இத்தனை கெஞ்சிக்கொண்டிருக்கிறாள்எப்படியும் அவர்கள் சொன்னதுதான் முடிவு. இப்படித்தான் பழைய இடத்திலிருந்து ஒரு நாள் வந்து கிளப்பினார்கள், சொன்ன நாளில் காலி செய்ய முடியவில்லை. என்ன செய்தது போலீஸ்? தாமதமான ஒரு நாளுக்கு இருநூற்றறுபது டாலர்கள் அபராதம் விதித்தது. அந்த ஒரு இரவு ஷெல்டரில் தங்கியிருந்தால் கூட ஆளுக்கு முப்பது அல்லது நாற்பதுதான் ஆகியிருக்கும். அபராதத்தைக் கட்டிவிட்டு இன்னும் காருக்கு இன்சூரன்ஸ் கட்டாமல் பயந்து பயந்து கார் ஒட்டிக்கொண்டிருக்கிறாள் அம்மா. அம்மாவின் வருமானம் அவள் வைத்திருக்கும் பழைய ஹாண்டா இன்சூரன்சுக்கும் உணவுத்தேவைக்கும் அவசிய அங்காடித் தேவைக்குமே சரியாகப்போகும் ... இல்லை இல்லை பத்தாமல் போகும். அதனால் சிலநாள்கள் அம்மாவும் மகளும் இரவு நேரம் உணவில்லாமல் கழித்திருக்கிறார்கள், வயிற்றில் ஆகாரம் இல்லாமல் கண்களில் உறக்கம் கொள்ள இயலாமல் திண்டாடியிருக்கிறார்கள். எமியின் பகல் நேர உணவுக்கு அவள் பயிலும் பள்ளிக்கூடம் பொறுப்பு. இரவில்தான் அம்மாவோடு சிலநாள்கள் தவித்திருப்பாள். விடுமுறை நாள் ஏன் வருகிறது என்று வருந்துவாள். வெளியே நடந்துகொண்டிருக்கும் உரையாடலில் எமிக்கு ஒன்று தீர்மானமானது. இன்று கூடாரத்தைப் பிரிக்கவேண்டும். அடடா அப்படியானால் பள்ளிக்கூடம் போக முடியாது என்று ஏக்கத்தை முகத்தில் ஏந்தி எழுந்து கூடாரத்தை விட்டு வெளியே வந்தாள். மறக்காமல் நெகிழிக் கலனைக் கையோடு எடுத்துக்கொண்டு வெளியேறினாள். பூங்காவின் ஒரு எல்லையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் கலனை வீசிவிட்டுத் தன் கூடாரத்திற்குத் திரும்பினாள். முப்பதாயிரம் பவுண்டு குப்பை அள்ளிய இடத்தின் விலாசத்தை காவல் அதிகாரியிடம் அம்மா விசாரித்துக்கொண்டிருந்தாள்.

பழைய ஹாண்டாவைக் கிளப்பினாள் அம்மா. முன்னதாக எமியிடம், "ஹெ எமி, இன்னிக்கு ஸ்கூல் போகவேண்டாம் நான் போய் இடத்தை பார்த்துட்டு வரேன் நீ எல்லாத்தையும் பேக் பண்ணத் தொடங்கு" என்று சொல்லியிருந்தாள். பதிலெதுவும் பேசாமல் எமி அம்மாவின் கட்டளையைக் காதில் வாங்கிக்கொண்டாள்.

காவல் அதிகாரி சொன்ன புது இடம் இப்போதிருக்கும் பூங்காவிலிருந்து பதினைந்து மைல்களுக்கு அப்பால் இருந்தது. எமியைத் தினமும் பள்ளிக்கூடம் அழைத்துச்சென்றுவர இனி அதிக நேரம் தேவைப்படும். காரை நிறுத்தி இறங்கினாள். குப்பைகளை அகற்றிய அந்த இடத்திள் இன்னும் குப்பை வாடை ஆளை விரட்டியது. காருக்குள் வைத்திருந்த நறுமணக் குப்பியிலிருந்து சில துளிகளை உள்ளங்கைகளில் உதறி இரு கைகளையும் ஒன்றாய் இணைத்துத் தேய்த்து மூக்கின் அருகில் வைத்து நுகர்ந்துகொண்டாள். இடம் மிகவும் அமைதியாக இருந்தது. அருகில் கடைகள் இல்லை. ஒரு மைல் தொலைவில் ஒரு கேஸ் ஸ்டேஷன் இருந்தது. அவளுடைய பழைய ஹாண்டா போல இன்னொரு பழைய வாகனம் நின்றிருந்தது. அதனருகில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். பார்வைக்கு கணவன் மனைவிபோலத் தெரிந்தனர். அவர்களும் கூடாரமிட வந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவளின் யூகம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த இடத்தில் பாதுகாப்பு இருக்குமா? என்று சந்தேகம் எழுந்தது, கூடவே, அவளோடும் எமியோடும் சேர்ந்து இன்னும்  நிறையக் கூடாரவாசிகளும் அங்கே தங்கப்போகிறார்கள் என்ற எண்ணம் தோன்ற, வந்த அச்சம் கூடிக்கலையும் மேகம்போல விலகியது.

அங்கே நின்ற ஷெரிஃப் வண்டியின் அருகில் சென்று வண்டியினுள் காவலர் இருப்பதை உறுதிசெய்துகொண்டு கண்ணாடியில் மெல்லத் தட்டினாள். கண்ணாடியை இறக்கிய காவலர், "என்ன?" என்று அதிகாரப் பார்வை வீசினார். தான் வீடற்றவள் (ஹோம்லெஸ்) என்று கூறி அதற்கான அடையாளக் காகிதங்களைக் காவலரிடம் நீட்டினாள். அதனைப் பெற்றுக்கொள்ளாமலேயே அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட காவலர், "இந்த இடத்தில டெண்ட் அமைக்க இன்னும் அனுமதி வழங்கப்டவில்லை. அநேகமாக அனுமதி நாளை கிடைக்கலாம். நாளை வந்து பார்" என்றார். இந்த எதிர்பாராத பதில் அவளுக்கு அச்சத்தை ஊட்டியது. "பழைய இடத்தில இன்று மதியத்திற்குள் காலி செய்யச்சொல்கிறார்கள்" என்றாள். காவலர் அதனைப் பொருட்படுத்தவில்லை. கண்ணாடியை மூடிவிட்டு அவருடைய அலைபேசியில் கவனம் செலுத்தினார்.

பேசவும் முடியாது பேசியும் பயனில்லை என்ற நிலையில் திரும்பி நடந்து தனது காருக்கு வந்தாள். பழைய இடத்திற்கு காரைச் செலுத்தினாள். இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து உயரக் கட்டிடங்களும் வணிக வளாகங்களும் மற்றவர்களுக்கு என்ன எண்ணத்தை ஊட்டுமென்று தெரியாது ஆனால் இந்த நேரம் அவளுக்குள் அருவருப்பையே ஊட்டிக்கொண்டிருந்தது. சிந்தனை முழுவதும் அலுப்பாகவே இருந்தது. இன்று இரவுப்பொழுதை எப்படி நகர்த்துவது? எங்கே தங்குவது? பறவையாய் பிறந்திருந்தால் மரங்கள் தஞ்சமளித்திருக்கும் இப்படி மனிதனாய்ப் பிறக்க வைத்துவிட்டாயே இறைவா என்று அவள் மனம் உலர்ந்தபோது கண்கள் கசிந்தன.

 "எமி ..."

கூடாரத்தின் வெளியே அம்மாவின் குரல் கேட்டது. கையில் கிடைத்த நெகிழிப் பைகளுக்குள் உடமைகளை அள்ளித்  திணித்துக்கொண்டிருந்த எமி வெளியே வந்தாள்.

"அங்கே இன்னும் பெர்மிஷன் கிடைக்கல. இன்னிக்கு ஷெல்டரில்தான் தங்கணும். எங்கயாவது ஃப்ரீ ஷெல்டர் இருக்கானு பார்த்துட்டு வரேன்" என்று மீண்டும் காருக்கு சென்ற அம்மாவைத் தொடர்ந்து சென்று "அம்மா நானும் வரேன்" என்று உற்சாகமானாள் எமி. 'ஷெல்டர்' என்ற வார்த்தையை அம்மாவின் வாயிலிருந்து கேட்டபொழுது அவள் மனம் ஆகாயத்தைத் தொட்டுத் திரும்பியிருந்தது.

"ஏன்மா ஃப்ரீ ஷெல்டர்? அங்க பாதுகாப்பு இருக்காது. போதை உட்கொள்பவர்கள், புத்தி இல்லாதவர்கள் என பலரும் இருப்பார்கள். தொந்தரவு இருக்கும். ப்ளீஸ்  பே பண்ற ஷெல்டருக்கு போலாம் மா" என்று அம்மாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தம்கொஞ்சினாள் எமி. மகள் சொல்வதை மனம் ஏற்றுக்கொண்டது. எண்பது, நூறு டாலர் செலவைக் குறைக்க எண்ணி வம்பில் விழுந்துவிடக் கூடாது என்று அவள் சிந்தனை எச்சரிக்கை மணி அடித்தது. ஷெல்டர்கள் இரவு நேரங்களில் மட்டுமே இயங்கும். காலையில் காலி செய்துவிடவேண்டும். முன்னதாகப் பெயர்ப் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்பதையெல்லாம் இத்தனை ஆண்டுகாலக் கூடார வாழ்க்கை அவர்களின் மனதில் பதியவைத்திருந்தது.

தாயும் மகளும் அலைந்து தேடி ஒரு ஷெல்டரைக் கண்டடைந்தனர். தாங்கள் வீடற்றவர்கள் என்ற ஆதாரங்களைக் காட்டி அவர்கள் இருவருக்கும் இரண்டு படுக்கைகள் உறுதிப்படுத்தித் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ததோடு எண்பது டாலர்களை முன்பணமாகச் செலுத்திவிட்டு உடமைகளை எடுத்துவரப் பூங்காவிற்கு விரைந்தனர்.

ஷெல்டரில் பனி வாடை இல்லாமல் கதகதப்பாக உறங்கலாம். அருகில் கழிப்பறை வசதி இருக்கும். இந்த ஒரு நாள் இரவை முடிந்தவரை நான்றாக உணர்ந்து மகிழ்ந்து கழிக்க எண்ணினாள் எமி. எண்பது டாலர்கள் செலவை எந்த வகையில் சமாளிப்பது என்ற மனக்கணக்கில் வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தாள் அம்மா. எதிரில் தென்படும் போக்குவரத்து காவல் வாகனங்களைக் காணும் வேளைகளில் மனம் படபடக்கும், காரணம் வண்டிக்கு இன்னும் இன்சூரன்ஸ் செலுத்தவில்லையே.

மாலை இருள் சூழ்ந்தது எமியின் உள்ளம் சிறகு விரித்த சிட்டுக்குருவியானது. எல்லா உடைமைகளையும் ஷெல்டருக்குள் எடுத்துச்சென்று வைத்துக்கொள்ள இயலாது என்பதால் படுக்கைக்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை காருக்குள் வைத்துவிட்டு அம்மாவும் எமியும் ஷெல்டருக்குள் நுழைந்து தங்களின் படுக்கைகளை நாடினர்.

கண்களை மூடிக் கடவுளை வணங்கினாள் அம்மா. "எமி ... உறங்கப் போகும் முன் நல்லா ப்ரே பண்ணிக்க ப்ளீஸ். நாளைக்கு அந்த இடத்துல டென்ட் போடுறதுக்கு பெர்மிஷன் கிடைச்சுடனும்" என்று எமியிடம் பிரார்த்தனை செய்யச்சொல்லித் தனது வேண்டுதலுக்கு பலம் சேர்க்க எண்ணினாள் அம்மா.

படுக்கைக்கு வந்த எமி இமைகளைப் பொறுத்தித் தியானிக்கத் தொடங்கினாள். "காட், அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு நாளைக்கு டென்ட் போட பெர்மிஷன் கிடைக்கக் கூடாது".

... மீ.மணிகண்டன்


வேண்டுதல் கதையை மேடையில் பேசிய திரு. மாலன் அவர்களுக்கு நன்றி.


பரிசளிப்பு மற்றும் புத்தக வெளியீடு:


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்