சனி, 30 ஜூலை, 2022

தலப்பாக்கட்டி சினிமா ... மீ.மணிகண்டன்

சிறுகதைத் தலைப்பு:  தலப்பாக்கட்டி சினிமா 

எழுதியவர்: மீ.மணிகண்டன்

பிரகாஷ் டைனிங் டேபிளில் அமர்ந்து மனைவியின் கைவண்ணத்தை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான், "சாம்பார் சாம்பார் மாதிரியே செஞ்சிருக்க, வாவ்"

"இல்லாட்டி அது சாம்பார் இல்லையெங்க"

இடது கை போனில் வாட்ஸாப் நகர்த்த, வலது கை இட்லியைப் பிட்டு சாம்பாரில் பிசைந்து வாய்க்கு கூரியர் செய்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில்... "பிரேமி… காஃபில உப்பு இல்ல..." என்றான்

"என்னது..."

"ஐ மீன்...  காஃபில இனிப்பு இல்ல... சூடும் இல்ல… சப்பு ன்னு இருக்கு..."

"நான் டேபிள்ள காஃபியே வைக்கலியே..."

"வைக்கலியா.... " மொபைல் போனிலிருந்து கவனத்தை குவளைக்குத் திருப்பினான் அது தண்ணீர்க் குவளை, அப்போதுதான் புரிந்தது தான் அருந்தியது தண்ணீர் என்று.... "ஹே... சாரி.... தண்ணியில சுகர் இல்ல...."

சமயற்கட்டை விட்டு வெளியில் வந்த பிரேமி, "அன்பான கணவரே... என்ன ஆச்சு இன்னிக்கு.. காஃபில உப்பு இல்லங்கறீங்க... தண்ணில சுகர் இல்லங்கறீங்க...."

" ம்.... எல்லாம் இந்த வாட்ஸாப்ப்பால வந்தது... ஓ.கே. காஃபிய ஃபிக்ளாஸ்கில தந்துடு... நான் கொஞ்சம் அவசரமா கிளம்பறேன்...."

"என்ன அவசரமோ...ம்... " சொன்னவள் மெதுவாக புன்னகைத்தபடி தொடர்ந்தாள், "அப்பறம் ஈவினிங் சீக்கிரம் வந்துடுவீங்களா... "

"ஏன் கேட்குற"

"இல்ல.... ரொம்பநாள் ஆச்சு தியேட்டர்க்கு போயி...."

"மை டார்லிங்...இவ்வளவுதானா... இதுக்குப் போயி.. இவ்வளவு யோசனையா....ம்.... நீ சொல்லிட்டா தென் நோ அப்ஜெக்சன்"

"எந்த படம்னு சொன்னீங்க னா.."

"சி... நீ தான் ஆரம்பிச்ச... நீயே டிசைட் பண்ணு.."

"ஓ.கே. கமல் படம்.."

"ஓ.கே.... சரி சரி நான் இப்போ கெளம்பனும் டைம் ஆகுது... ஓ.கே. டார்லிங்...." 

"பை.."

பிரகாஷ் புறப்பட்டு சென்றபின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட் கிளம்பினாள் ப்ரேமி. ஷாப்பிங் முடித்து வீடு திரும்பிய ப்ரேமி பிரகாஷுக்கு போன் செய்தாள், "என்னங்க..."

"என்ன..."

"அது வந்து... கமல் படம் வேண்டாம்"

"வொய்.. "

"வந்து... மார்க்கெட்ல காய் வாங்கும்போது பக்கத்துல பேசிக்கிட்டாங்க புதுசா வந்திருக்க ரஜினி படம் நல்லா இருக்காம்.."

"ஓ.கே. இட்ஸ் யுவர் சாய்ஸ்"

தலப்பாக்கட்டி சினிமா ... மீ.மணிகண்டன்

போனை வைத்து விட்டு இருக்கையில் துள்ளிகுதிதான் பிரகாஷ் "வாவ் இன்னிக்கு தியேட்டர் போறோம்... ரிட்டர்ன் வரும்போது தலப்பாக்கட்டி... தென் வீட்டில... என்ஜாய்..."

சினிமாவிற்கு கிளம்பும் ஆவலில் சீக்கிரம் வேலைகளை முடிப்பதில் மும்முறமாக இருந்தாள் ப்ரேமி. மாடியில் துணி காயப்போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்... கணவனுக்கு போன் டயல் செய்தாள் "ஹலோ.."

"என்ன டார்லிங்.. "

"வந்து மாடில துணி காய போடும்போது செகண்ட் ஃபிளோர் கீதா சொன்னா விஜய் படத்துக்குத்தான் கூட்டம் நிறையுதாம் அதுனால...”

"அதுனால என்ன ரஜினி படம் வேண்டாம்.... இஸ் இட்..."

"ம்..." என்றாள் சற்றே நாணத்தோடு.

"உன் சந்தோஷமே என் சந்தோஷம்..." என்றான் மறுப்பேதும் இல்லாமல் பிரகாஷ்.

"தேங்க்ஸ்ங்க... ம்மா...." என்று உற்சாகம் ஆனாள் ப்ரேமி.

அலுவலகத்தில் பிரகாஷின் மனத்திரையில் ஓடியதெல்லாம் தலப்பாக்கட்டிதான் மற்றபடி எந்தப் படமாக இருந்தாலும் அவனுக்கு அது ஒரு பொருட்டல்ல.

பிரகாஷ் டெஸ்கில் போன் ஒலித்தது... எதிர்முனையில் CEO "பிரகாஷ் இன்னிக்கு சர்பிரைஸ் ஆடிட் இருக்கு... டீம் க்கு தெரியவேண்டாம்... நீங்க ஈவினிங் கொஞ்சம் ஸ்டே பண்ணனும்..." சொல்லிவிட்டு பிரகாஷின் பதில் எதிர்பாராமல் போன் கட் ஆகிவிட்டது. ‘இதென்னடா வம்பாய் போச்சு எப்படி சமாளிப்பது’ என்று பிரகாஷ் மூளைக்கு வேலை கொடுக்கத் துவங்கினான்.

மணி மதியம் இரண்டு முப்பது, பிரகாஷ் மொபைல் போன் ஒலித்தது எடுத்துப் பார்த்தான், பிரேமி..."ம்... என்ன..."

"வந்து... விஜய் படத்துக்கும் வேண்டாம்னு முடிவாகிடுச்சு.."

"நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அப்பறம் முடிவாகிடுச்சுன்னு சொல்றியா... சரி சொல்லு வேற எந்தப் படம்..."

"தல படத்தப்பத்திதான் இப்ப லேடிஸ் பேசிக்கிறாங்க... சோ... அஜித் படம்..."

"ஓ.கே. எனக்கு ஆஃபிஸ்ல கொஞ்சம் சமாளிக்க வேண்டிய வேலை இருக்கு... நான் இப்போ போனை வைக்கிறேன்... "

"நீங்க உங்க வேலையை பாருங்க... நான் உங்க கிட்ட சொல்லாம எதுவும் செய்வேனா... அதான் உடனுக்குடன் அப்டேட்.."

"ஓ.கே. ஓ.கே. " போனை வைத்துவிட்டு சிந்தனையைத் தீவிரமாக்கினான் பிரகாஷ், எப்படி மாலை சீக்கிரம் வீட்டிற்கு செல்வது... நீண்டநாட்களுக்குப் பிறகு பிரேமி கேட்கிறாள்... இன்று விட்டுவிட்டால் நாளை மாமனார் மாமியார் வந்துவிடுவார்கள்... தனியே படம் பார்க்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு இருக்காது... சிந்தனை தொடர்ந்தது...நடுவில் மத பேதமின்றி தனக்குத் தெரிந்த கடவுளர்களின் பெயர்களையெல்லாம் மனதில் கூட்டி பிரார்த்திக்கொண்டான் பிரகாஷ்... எதிரில் தன் உடன் வேலை செய்யும் விமல் வரவைப் பார்த்ததும்.. "டேய் ஒரு ஹெல்ப்..." என்று அவனிடம் விஷயத்தை சொல்லத் துவங்கினான் ஆனால் CEO இது சர்பிரைஸ் ஆடிட் என்று சொன்னது நினைவிற்கு வரவே..."இல்ல...." சற்று சமாளித்து "சரோ கேபின்ல இருக்காளா..." 

"ஏண்டா IM ல ஆன்லைன்ல காட்டலையா..." என்றான் விமல்.

"எஸ்... மறந்துட்டேன்.... நானே செக் பண்ணிக்கிறேன்..." "கடவுளே... சினிமா... தலப்பாக்கட்டி...." மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது பிரகாஷிற்கு.

டேபிள் போன் ஒலிக்க, அவசரமாக எடுத்தான்," பிரகாஷ் ப்ரோக்ராம் கான்சல்ட்... இன்னிக்கு ஆடிட் இல்ல... பட் எனக்கு ஆன்வல் ஸ்டேட்மென்ட் மட்டும் கொடுத்துட்டுப் போங்க... ஐ நோ இட் ஐஸ் நாட் தட் ஈஸி... பட் ஐ நீட் இட்..." CEO விடமிருந்து வந்த போன் மீண்டும் பிரகாஷின் பதிலுக்குக் காத்திராமல் கட் ஆனது. 

மனதிற்குள் நினைத்துக் கொண்டான் பிரகாஷ் "பாவி மனுஷா ஆடிட் இல்லன்னு சொல்லி பால வார்த்துட்டு கூடவே ஸ்டேட்மென்ட் கேட்டு சுடுதண்ணி ஊத்திட்டியே... அதுக்கு கொறஞ்சது நாலு மணி நேரம் ஆகுமே..." அருகில் காஃபி பிளாஸ்க் பார்வையில் பட்டது... மனைவியின் நினைவும் வந்தது.. "ஆசையாக காத்திருப்பாளே..." என்று நினைத்த பிரகாஷ் சட்டென ஏதோ தெளிவு கிடைத்ததுபோல் விமலின் உதவியை நாடினான்.. "டேய் இதுமட்டும் செய்... ஓவர் டைம் நான் சைன் பண்ணுறேன்.." என்று CEO தன்னிடம் ஒப்படைத்த வேலையை பிரகாஷ் விமலிடம் கைமாற்றினான், ‘ஒரு வழியாக சமாளித்து விட்டோம்’ என்ற மன நிம்மதியில் காஃபியை கோப்பையில் ஊற்றினான் பிரகாஷ்.

மொபைல் போன் ஒலித்தது, எடுத்தான் எதிர்முனையில் ப்ரேமி, "என்ன அடிக்கடி போன் போடுற...."

"இல்ல ஒரு விஷயத்தை சுத்தமா மறந்துட்டேன், நாளைக்கு அப்பா அம்மா வராங்க இல்ல அதுக்காக கெஸ்ட் ரூம் ரெடி பண்ணியிருந்தேன்ல.."

"ஆமா..."

"ஆனா கெஸ்ட் ரூம்க்கு கர்ட்டன் ஆல்டர் பண்ண கொடுத்ததை வாங்க மறந்துட்டேன், ஆனா தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி வாங்கிட்டு வந்துடறேன்.."

"இதைக்கூட என்கிட்டே சொல்லனுமா.."

"அப்டேட்..." என்று சிரித்துக்கொண்டாள் ப்ரேமி.

சின்னச்சின்ன அலுவல்களை முடித்துக்கொண்டே நேரம் எப்போது ஐந்தைத்தொடும் என்று காத்திருந்த பிரகாஷ், கடிகார முட்கள் சரியாக ஐந்தைக் காட்டியதும் விடுவிடுவென பறந்தான்... பார்க்கிங் வந்து கார் ஸ்டார்ட் செய்து பறக்க விட்டான். சாலையும். சரம் சரமாய் மனிதர்களும். சர் சர் என்ற போக்கு வரத்தும் பிரகாஷின் பயணத்தில் பொம்மைகளாய்க் கடந்தன. காரை வீட்டு வாசலில் பார்க் செய்துவிட்டு வேகமாக வாசற்கதவை நாடினான். கதவு பூட்டியிருப்பதுபோலத் தோன்றியது. சந்தேகத்தில் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு வெளிக் கதவைத் திறந்தான். உள்ளே வெளிச்சம் இல்லை இருட்டாகவே இருந்தது. விளக்கை பளிச்சிட்டான். "பிரேமி..." கூப்பிட்ட குரலுக்கு பதில் வரவில்லை... ‘ஆல்ட்ரேட் செய்த கர்ட்டன் வங்கச் சென்றவள் இன்னும் வீடு திரும்பவில்லையோ’ என்ற நினைப்பில் நுழைவரை தாண்டி சமயற்கட்டுக்குச் சென்று பார்த்தான் அங்கும் இல்லை.. பின்புறம் பால்கனி வந்தடைந்தான்.. அங்கும் இல்லை... "பிரேமி..." போனை எடுத்து நம்பரை அழுத்தினான்... ரிங் செல்கிறது ஆனால் பதில் இல்லை.. யோசனையில் இருக்கையில் அமர்ந்து போனை எதிர் மேசையில் வைத்தான்… 

டடங்... போன் ஒளிர்ந்தது எடுத்துப் பார்த்தான் பிரேமியிடமிருந்து வாய்ஸ் மெசேஜ்... "என்னங்க நீங்க ரொம்ப பிஸின்னு சொன்னிங்களா அதான் புறப்படும்போது கூட சொல்லல அதான் இப்போ மெசேஜ் பண்றேன்... செகண்ட் ஃபிளோர் கீதா ஆண்லைன்லயே டிக்கட் போட்டுட்டா நாங்க ரெண்டு பெரும் ஊபர் புடிச்சு வந்துட்டோம்... உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு... டேபிள்ல சாப்பாடெல்லாம் வச்சிருக்கேன்... நீங்க எனக்காக எதுவும் வைக்காதீங்க... நீங்க வேணுங்கறத சாப்பிடுங்க... எனக்கு இல்லன்னாக்கூட நான் வந்து உப்மா செஞ்சுக்குவேன்... சரியா... டேக் கேர்..." வாய்ஸ் மெசேஜ் நிறைவானது. தலப்பாக்கட்டி பிரியாணிக்குள்ளிருந்து இரண்டு ஆடுகள் தலையை வெளியே நீட்டியது.!

 ...மீ.மணிகண்டன்

2 கருத்துகள்:

  1. This is the contemporary story! இன்றையச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் கதை! சிறப்பு!

    பதிலளிநீக்கு