சனி, 22 ஏப்ரல், 2023

பரிசுகளும் பாராட்டுகளும்...

மீ.மணிகண்டன் பரிசுகளும் பாராட்டுகளும்...

FeTNA 2023, Sacramento, CA

ஆண்டு 2025 (03-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'செம்புலப் பெயல் நீர் போல'.

ஆண்டு 2024, அன்னை ஸ்வர்ணாம்பாள் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு. கதை: வேண்டுதல்

ஆண்டு 2023 (12-Aug-2023), Nagarathar Writers, கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு, நகரத்தார் எழுத்தாளர்கள் அமைப்பு, கொடுக்கப்பட்ட தலைப்பு: நகரத்தார்கள் பெருமைகள்.

ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான கவிதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'ஒற்றையடிப் பாதை'.

ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'அன்பே செல்வம்'.

ஆண்டு 2023 (01-Jul-2023), கதிர்'ஸ் பல்சுவை மின்னிதழ் - இளவல் ஹரிஹரன் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு. கதை: ஜாஹ்ரா

ஆண்டு 2023, துகள் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'தாய்'. 

ஆண்டு 2023, பண்ணாகம்.கொம் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய பாடல் எழுதும் போட்டியில் பரிசு. 

ஆண்டு 2023, அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.

ஆண்டு 2023, குவிகம் மாத இதழ் நடத்திய குறும்புதினப்போட்டியில் பரிசு. குறும்புதினம்: முதல் பயணம்.

ஆண்டு 2022, வலஞ்சுழி வலைத்தளம் நடத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு. சிறுகதை: அகம்.

ஆண்டு 2021,  அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'காதல் வானிலே'.

ஆண்டு 2018, படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பிற்கான விருது. கவிதை: நகராத ஒரு கணம்

ஆண்டு 2017, மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ்மணி மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு. சிறுகதை: புத்தகம் மூடிய மயிலிறகு.

ஆண்டு 2015,  'மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது' வழங்கியவர்கள்  'இணையதளப் படைப்பாளிகள் பேரவை', புதுச்சேரி.

ஆண்டு 2014, eluthu .com தளத்தில் கவிதைகளுக்குப் பரிசுகள். கொடுக்கப்பட்ட கவிதைத் தலைப்புகள்: கற்றவை பற்றவை, பூக்களோடு ஒரு கைக்குலுக்கல், அழகான வாழ்க்கை ஆனந்தமாய், நாளைய தமிழும் தமிழரும்

படைப்பு விருது பெற்ற கவிதை

2018ம் ஆண்டு ஜூலைத் திங்கள் படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பு விருது. 


நகராத ஒரு கணம்
~~~~~~~~~~~~~~~~~~~~
* ஞாபகங்களின் காவலர்கள் 
சட்டச் சிறைக்குள்ளே

* மங்கிய மலர்ச்சியை 
மறுக்காமல் சொல்கிறது 
பழைய புகைப்படங்கள்

* வாசம் மறந்துபோனது 
சிரிப்புகள் 
சிறைபட்டுப் போனது

* நகராத ஒரு கணம் 
நாட்களை நகர்த்துகிறது

* வண்ணப் பூக்கள்  
வாடாத தோட்டம்

* ஒடுக்கப்பட்ட 
கருப்பு வெள்ளையில் 
ஒளிந்து கிடக்கிறது 
வண்ணம் 

... மீ.மணிகண்டன் 
#மணிமீ 
07/21/2018



முதற்பரிசுக் கவிதை

அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.
விழா நாள்: April-05-2023

பெண்ணவள் இன்றிப் பேரெழில் குடும்பம்
பிறப்பதும் அன்று பிழைப்பதும் அன்று;
பெண்ணே குடும்பப் பின்னணி இயக்கம்
பெருமை சேர்த்திடப் பிறந்தவள் அவளும்;

அடுப்படி சமையல் அவளின் பங்கா?
அலுவல் ஒன்றே ஆற்றுதல் பங்கா?
அத்தை அம்மான் அன்புடன் மழலை
அனைவரைக் காப்பது அவளின் பங்கா?

கொண்டவ னுக்கோர் குலமகள் ஆகிறாள்;
குழந்தைக ளுக்கோர் தாயும் ஆகிறாள்;
கோடிப் பொருள்கள் குவிந்திடு மாறு
கொள்கைப் பிடிப்புடன் கோலோச் சுகிறாள்;

இதுதான் பெண்மை ஏற்கும் பங்கு
என்றே பிறிக்க இல்லை குடும்பம்;
எதுவும் அவளே என்கிற பாங்கு
இருந்திடும் வீட்டில் இன்பம் தங்கும்;

M.பானுமதி

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

கொரோனாவின் தொடக்க காலத்தில் எழுதிய நகைச்சுவைக் கதை. நாடகமாக்கிட ஏதுவாக அதிகம் உரையாடலாக எழுதிய கதையிது.

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

சிறுகதை எழுதியவர் மீ.மணிகண்டன் 

எழுதிய நாள்: Feb-04-2020

கொக்கரக்கோ

"என்ன இது..." 

"இன்னைக்கு சண்டே..." 

"தெரியும் சண்டே ... இது என்ன..." 

"சிக்கன்..." 

விடுவிடுவென சமயலறைக்குள் நுழைந்தாள் ப்ரேமி, "ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?" என்றாள் அடுப்பிலிருந்து வெந்த இட்டலியை 

இறக்கி வைத்துக்கொண்டே.

"எந்த ஊர்ல..."

"ம்… நாம எந்த ஊர்ல இருக்கோம்..."

"அம்மாடி... புரியுற மாதிரி ஏதாவது சொல்லுறியா..."

"டி.வி. பாக்கறீங்க... யூடியூப் பாக்கறீங்க... எதுவுமே தெரியாத மாதிரி என்னைக் கேட்கறீங்க..." என அடுப்புச்சூட்டில் பொரிந்தாள்.

"ஸ்... அப்பா... தலை வலிக்குது... கொஞ்சம் காபி போட்டுத் தருவியா?"

"அம்மாடி… தலை வலியா... இதோட ஆரம்பம் தலை வலின்னு எந்த யூடியூப் லையோ சொன்ன மாதிரி இருக்கே... கடவுளே மறுபடி அதைப் பார்க்கலாம்னா 

எந்த சேனல் ன்னு அவசரத்துல ஞாபகம் வரமாட்டேங்குதே..." பயமும் கவலையும் கலந்துகட்ட, படபடத்தாள்.

"சரிதான்... காபியும் இல்லையா... பரவால்ல நான் வெளில போய் கடையில சாப்பிட்டுக்கறேன்..."

"போகும்போது நீங்க வாங்கிட்டு வந்ததை ஓபன் பண்ணாம எடுத்துட்டு போய் குப்பைல போடுங்க..."

"அடிப் பாவி... சிக்கன் விக்கற விலைக்கு... அப்படியே தூக்கி ஏறியச் சொல்லுற.. ஓஹோ... சிக்கன்தான் இவ்வளவுக்கும் காரணமா... இப்பப் புரியுது..."

"ம்... புரிஞ்சா சரி..."

"அடியே... அது எங்கயோ... யாருக்கோ கொரோனான்னு நியூஸ்ல சொல்றாங்க அதுக்காக நம்ம ஊர் சிக்கன் என்னடி பண்ணுச்சு?" என்று. கோழி சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் கிறங்கினான் பிரகாஷ்.  

வாசற்கதவு தட்டும் ஓசை கேட்க, பிரகாஷ் சாளரம் வழியே எட்டிப்பார்த்தான், வெளியே யாரோ முகத்தை மூடிக்கொண்டு நின்றார்கள். நின்றவர் மீண்டும் கதவைத்தட்டினார், 

"யாரது..."

"நான்தான்..."

ப்ரகாஷிற்கு வெளியே நிற்பவர் "நான்தான்" என்று சொல்வது புரிகிறது அதனைத்தொடர்ந்து அவர் சொல்வது என்னவென்று புரியவில்லை. ஒருவேளை 

அவர் முகத்தை மூடாமல் பேசினால் புரியும்.

சமையலறை விட்டு வெளியே வந்த ப்ரேமி, “கதவைத் திறந்துதான் பேசுங்களேன்..." என்று கதவைத்திறக்க அடி எடுத்து வைத்தாள்.

"ஏய்... நில்லு... அவர் முகத்தை மூடி இருக்கார்... யாராவது முகமூடித் திருடனா இருக்கப் போகுது..."

கதவு மீண்டும் தட்டப்பட்டு, "நான்தான்..." என்றுவிட்டு இன்னும் எதோ சொல்கிறார்...

சற்று உன்னிப்பாகக் கேட்ட ப்ரேமி சிரித்துக்கொண்டே, "அப்பா..." என்றாள். 

"என்னது உங்க அப்பாவா?"

"ஹையே... ஆமாங்க... உங்களுக்கு அப்பாவோட குரல் தெரியலையா?"

கதவைத்திறந்தாள் ப்ரேமி, "வாங்க அப்பா... என்ன இது முகமூடி?" 

"வாங்க மாமா, என்ன ஒரு போன் கூட பண்ணல..."

முகத்தை மூடியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு, " அப்பாடா... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்…” என்று மூச்சை இழுத்துவிட்டுச் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “சண்டே.. சும்மாதானே இருப்பீங்கன்னு அப்டியே கிளம்பி வந்துட்டேன் மாப்ள..."

"சரி இதென்ன கெட்டப்?"

"அட நீங்க வேற... ஏதோ கொரோல்லா வாமே அதுக்கு பயந்துதான்..."

"மாமா... அது கொரோல்லா இல்ல... கொரோனா…"

"எதோ ஒண்ணு... அத விடுங்க இன்னைக்கு என்ன சமையல்? யார் சமையல்?" 

"என்னப்பா சண்டே இங்க வந்தா கொக்கரக்கோ சாப்பிடலாம்னு வந்துட்டீங்களா..."

"அதென்ன கொக்கரக்கோ... சிக்கன்னு செல்லமா சொல்லக்கூடாதா..."

"ஆண்டவா... ஆண்டவா... அந்தப்பேரை சொன்னாக்கக்கூட சைனால இருக்கறது சைதாப்பேட்டைக்கு சட்டுன்னு வந்துடுதாம்... காத்துல அவ்வளவு வேகமாப் பரவுதாம்... அதான் அந்தப் பேரைக்கூடச் சொல்லமாட்டேன்." எச்சரிக்கைக் கொடி பிடித்தாள் ப்ரேமி.

"அடடா... நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டே ப்ரேமி... சிக்கனுக்கும் கொரோல்லாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல..."

"மாமா... அது கொரோனா..." மாமனாரை மீண்டும் திருத்தினான் பிரகாஷ்.

"விடுங்க மாப்ள... எனக்கு அப்படித்தான் வருது... சரி மாப்ள நீங்க இன்னும் சிக்கன் வாங்க கடைக்குப் போகலையா?"

"மாமா... அதெல்லாம் ஆச்சு... இப்போ இந்த சிக்கன் குப்பைக்குப் போகணுங்கறதுதான் ப்ரேமியோட போராட்டம்... இந்தப் போராட்டத்துக்கு நீங்கதான் சமாதானக் கொடி கட்டணும்..."

"அம்மாடி... உங்க அம்மா சைவமா இருந்துக்கிட்டு எப்பவுமே வெஜ்தான்... உனக்கு தெரியாதா... எப்பவோ ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை சிக்கன் சாப்பிடுறதுக்காக நாலு தெரு தள்ளி உங்க வீட்டுக்கு வறேன்... ஏமாத்திடாதடா கண்ணு..." என்று மகளைக் கெஞ்சினார் அப்பா.

"மாமா நீங்க தலை கீழ நின்னாலும் சரி... இன்னிக்கு இட்லி சாம்பார்தான்..."

"ஆமா... இப்ப இட்லி ரெடியா இருக்கு ரெண்டு பெரும் வாங்க மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பார் இருக்கு... மதியானத்துக்கு கொக்கரக்கோ மாதிரியே உங்களுக்கு காலிபிளவர் பொரியல் செஞ்சு தரேன்..."

"பாத்தீங்களா... மாமா... நான்... சொன்னது சரியா..."

இவர்களின் உரையாடலுக்கு நடுவே உள்ளே எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்த பப்பு வெளியில் ஓடிவந்தான், "தாத்தா க்ரோனா என்ன…"

"அட உனக்கும் இது தெரிஞ்சுடுச்சா... அது எதோ கண்ணுக்குத் தெரியாத பூச்சியாம்..." பேரனுக்குப் பாடம் சொன்னார் தாத்தா.

"அடடா... மாமா கொஞ்சம் நிதானமா... குட்டிப் பையன குழப்பிடாதீங்க... அவன் கேட்கறது கொரோனா இல்ல... க்ரோனா என்ன? அதாவது C R O W க்ரோ அப்படின்னா என்ன?

"ஓஹோ... அதானே பார்த்தேன்... இதக் கண்டுபுடிச்சே ஒரு மாசம்தான் ஆகுது அதுக்குள்ளே எப்படிடா ப்ரீ கே ஜி க்கு பாடமா வந்ததுன்னு…" என்று இழுத்துச் சமாளித்தார் தாத்தா.

சத்தமில்லாமல் சிக்கன் பையை எடுத்து சமையலறையில் ப்ரேமி பார்வை படும்படி வைத்துவிட்டு வந்தான் பிரகாஷ். இதனைக் கண்ட ப்ரேமி, "சொன்னா கேட்க மாட்டீங்க..." என்று ஒரு அதட்டல் போட. "இன்னிக்கு மட்டும்தான்..." என்று கெஞ்சலாகச் சொல்லிவிட்டு மாமனாருடன் உரையாட ஹாலுக்கு வந்தான் பிரகாஷ்.

பின்னாலேயே பையைத்தூக்கிக்கொண்டு ஓடிவந்த ப்ரேமி, "என்னங்க என்ன இது சிக்கன்னு சொல்லி காலிபிளவர் வாங்கிட்டு வந்திருக்கீங்க..."

"ஏய் சும்மா சமாளிக்காத... நான் கொண்டு வந்தது சிக்கன்தான்..."

"அட இங்க பாருங்க..." என்று பையை திறந்து காட்டினாள். ப்ரகாஷிற்குப் புரியவில்லை. "நான் சின்னையா கடையிலிருந்து சிக்கன்தானே வாங்கி 

வந்தேன்... அவர் சிக்கன் வெட்டி பையில் போடும்போது பார்த்தேனே..." என்று யோசித்தான். "சரி ஒரு எட்டு அவர் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்," என்று கிளம்பினான்.

"இன்னிக்கு காலிபிளவர் பொரியல்தான்..." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் ப்ரேமி.

கடை காலியாக இருந்தது. இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது. "ஆஹா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டாரா?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். 

"என்ன மாப்ள சிக்கன் கொண்டு வந்துடீங்களா?" என்றார் மாமனார் ஆவலுடன். 

"இல்ல மாமா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டார்…"

"சோ வாட், அவருக்கு ஒரு போன் போடறது..." 

"ஆமா மாமா, நல்ல யோசனை" என்று தனது மொபைல் போனை எடுத்து சின்னையாவிற்கு டையல் செய்தான் பிரகாஷ்.

மறுமுனையில், " ஹலோ…"

"அண்ணே நான்தான் பிரகாஷ் பேசுறேன்..."

"சொல்லுங்க தம்பி..."

"அண்ணே நான் உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்த சிக்கன் வீட்டுக்கு வந்ததும் காலி ப்ளவரா மாறிடுச்சு..." என்று சிரித்தான் 

"அடடே அது நீங்க தானா…"

"என்ன சொல்றீங்க?"

"ஆமா பிரகாஷ் தம்பி, நான் வீட்டுக்கு வாங்கி வச்சிருந்த காலி ப்ளவரை நீங்க மாத்தி எடுத்துட்டு போயிட்டீங்க போல..."

"நான் அந்தப் பையை மாத்தி எடுத்தபோதே சொல்லக்கூடாதா?"

"அட... எனக்கெப்படி தெரியும் நீங்க மாத்தி எடுத்தீங்கன்னு? நான் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பறப்போ பார்த்தா அந்தப் பையில சிக்கன் இருக்கு. சரி யாரோ மாத்தி எடுத்துட்டு போய்ட்டாங்க கேட்டா சொல்லலாம்னு இருந்தேன். இப்ப தான் தெரியுது நீங்கதான்னு... சரி நாளைக்கு கடைப்பக்கம் 

வரும்போது மறக்காம என்னைப் பாத்து சிக்கன் காசை திரும்ப வாங்கிக்கோங்க... சரியா?" 

"அட அது இருக்கட்டும் அண்ணே, இன்னிக்கு நம்ம சிக்கன் கனவை மொத்தமா கலைச்சுடீங்களே…"

மெளனமாக இருந்தார் சின்னையா 

"சரி அண்ணே உங்களுக்கு சண்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையா, அதுவும் சொந்தமா கடை வச்சிக்கிட்டு…"

"நமக்கு வெஜ் தான் எப்பவும் ஸ்பெஷல் தம்பி. சிக்கன் நமக்கு தொழில் அவ்வளவுதான்."

"ஆச்சர்யமா இருக்கு..."

"ஆமா... கொஞ்சநாளைக்கு முன்னே யாரோ சொன்னாங்க வெஜ்தான் ஹெல்த்துக்கு நல்லதுண்ணு, அதுலேருந்து நாங்க வீட்டோட வெஜிடேரியனா மாறிட்டோம். சரி தம்பி மணக்க மணக்க வத்தக் குழம்பு என்னைக் கூப்பிடுது நான் இப்போ போனை வைக்கிறேன், நாளைக்கு மறக்காம கடைப்பக்கம் வந்து காசை வாங்கிக்குங்க" என்று போனை வைத்தார் சின்னையா.

"என்ன மாப்ள ரொம்ப நேரமா உரையாடல்..."

"ம்... அது ஒன்னும் இல்ல மாமா... இனிமே நம்ம வீட்டில... வெஜ்தான்..." என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு பிரகாஷ் எழ, மாமனார் "வடை போச்சே..." என்று விழிக்க... 

"ப்ரேமி... காலிப்ளவர் பொரியல் ரெடியா..." என்று சமையலறை நோக்கி அடி எடுத்துவைத்தான் பிரகாஷ்.

... மீ.மணிகண்டன்

 

வியாழன், 2 மார்ச், 2023

மௌனம் திறக்கும் கதவு

எனது கவிதை வரிகள் இடம்பெற்ற மற்றுமொரு தொகுப்பு 'மௌனம் திறக்கும் கதவு'. திரு ஜின்னா அவர்களுக்கு நன்றி!

ஆண்டு: 2017







தொலைந்துபோன வானவில்

 எனது 'மனித மந்தையில் தொலைந்த மந்திகள்' கவிதை வெளியான புத்தகம் 'தொலைந்துபோன வானவில்'. திரு.அகன் அவர்களுக்கு நன்றி! 

ஆண்டு: 2017







சனி, 10 டிசம்பர், 2022

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்

களப்பிரர்கள் vs நகரத்தார்கள் எனது பார்வையில்!

இன்று (10/Dec/2022) தொல்லியல் ஆய்வாளர் முனைவர் திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரை ஒன்று மெய்நிகராகப் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புக் கிட்டியது. இதனை ஏற்பாடு செய்த FETNA அமைப்பிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

FETNA
களப்பிரர் காலம் இருண்ட காலமா? என்ற கேள்விக்கு, யார் பார்வையில் அது இருண்ட காலம் என்பதை உணரவேண்டும் என்று அவர் கூறியதை முதலில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

பிள்ளையார்பட்டியில் ஒரு குடவரை கோயில் இருக்கிறது அது முழுமைபெறாமல் உள்ளது என்றும் அங்கே மலையில் ஒரு பிள்ளையார் செதுக்கப்பட்டு அதன் கீழ் அதனைச் செதுக்கியவர் 'எக்காட்டூருக்கோன் பெருந்தசன்' என்று கல்வெட்டு காணப்படுவதாகவும் கூறுகிறார். அந்த எழுத்தின் காலம் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு என்று  ஆதாரத்துடன் விளக்குகிறார். இன்று பிள்ளையார்பட்டியில் வணங்கப்படும் பிள்ளையாரும்  எக்காட்டூருக்கொண் பெருந்தசனால் செதுக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லவா? பிள்ளையார்பட்டி, நகரத்தார்களின் ஒன்பது கோயில்களில் ஒன்றானது என்பது யாவரும் அறிந்ததே. களப்பிரர்கள் மலையில் பிள்ளையரைச் செதுக்கியபோது அதைக் கடவுளாகச் செதுக்கியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. களப்பிரர்கள் சைவர்கள் அல்லர். பின்னர் ஏன் அதைச் செதுக்கினார்கள்? என்ற கேள்விக்கு, களப்பிரர்கள் தங்களின் அடையாளமாகவே செதுக்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியனுக்கு மீன், சோழனுக்குப் புலி அதுபோல் களப்பிரர்களுக்கு யானைக்குட்டி என்பது திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையிலிருந்து அறிகிறேன். மேலும், களப்பிரர்கள் காலத்து நாணயங்களின் ஒரு புறம், வலப்பக்கம் நோக்கி நிற்கும் யானைச்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

from worldtamilforum com

'களபிர' என்ற சொல்லுக்கு 'யானைக்குட்டி' என்ற பொருள் என்பதை அவர் உரையிலிருந்து அறிகிறேன். பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர். கோயில் சிலைகள் பொதுவாகக் கிழக்கு நோக்கி இருக்கும் ஆனால் பிள்ளையார்பட்டி விநாயகர் வடக்கு நோக்கி இருந்தவண்ணம் இருக்கிறது. இதிலிருந்தே களப்பிரர்கள் அவர்களின் அடையாளமான ஒரு யானைச் சின்னத்தையே அங்கே செதுக்கியிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. பிற்காலத்தில் சமணம் பெளத்தத்தை அழித்தொழித்தவர்கள் சைவத்திற்கு வளம்சேர்க்க பிள்ளையார்பட்டியில் சிவலிங்கத்தை வைத்திருக்கலாம், யானைக்குட்டியை பிள்ளையார் என சைவத்திற்குள் வளைத்திருக்கலாம். 

நகரத்தார்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் பிள்ளையாரைத் தொழுது செயலைத் தொடங்குவது அறிந்த ஒன்று. மேலும் எந்த சமூகமும் கொண்டாடாத ஒரு வழிபாட்டை நகரத்தார்கள் மட்டுமே கடைபிடித்து வருகிறார்கள் என்றால் அது பிள்ளையார் நோன்பு.

Thanks Google
களப்பிரர்கள் காலத்தில் சமணமும் பௌத்தமும் தழைத்திருந்தது. பிள்ளையாருக்கு குண்டு வயிறு பெரிய காதுகள் ஆங்கிலத்தில் Laughing Buddha என்று பௌத்தம் வடிவமைத்த சிரிக்கும் புத்தருக்கும் குண்டு வயிறு பெரிய காதுகள். சிரிக்கும் புத்தர் செல்லப் பிள்ளையாராகியிருப்பாரோ?

பூலாங்குறிச்சிக் கல்வெட்டு வைதீகர்களிடமிருந்து சொத்துக்களை விற்று களப்பிரர்களின் கோயிலுக்குத் திருப்பியதாகச் சொல்கிறது. அதாவது மன்னர்களிடமிருந்து வைதீர்கள் பெற்ற சொத்துக்களை, களப்பிரர்கள் தங்களின் ஆட்சிக்காலத்தில் வைதீகர்களிடமிருந்து திருப்பியதாகச் சொல்கிறார் நான் இதை மேலும் ஒருமுறை கேட்டுப் புரிந்துகொண்டேன். பூலாங்குறிச்சி நகரத்தார்கள் ஊர்களில் ஒன்று.

திருமதி ஆ. பத்மாவதி அவர்களின் உரையில், களப்பிரர் காலத்தில் ஐயனாரை வணங்கியதையும், 'சாத்தன்' என்கிற பெயரையும் குறிப்பிடுவதைக் காண்கிறேன். நகரத்தார்கள் தமது குலதெய்வங்களாக ஐயனாரை வணங்குவது வழக்கம், மேலும் சில நகரத்தார்கள் தங்கள் குலதெய்வம் 'சாத்தையனார்' என்று கூறுவதைக் காணலாம்.

ஐயனாரை வணங்கியதுடன் பிடாரி (அம்மன்) யையும் வணங்கியதாகக் குறிப்பிடுகிறார். அம்மனுக்கு கோயில் எழுப்பி அதனைச்சுற்றி ஊர் அமைக்கும்பொழுது, அதை அம்மனுக்கு தானம் வழங்கியதாகக் குறிப்பிட்டு 'மங்கலம்' என்று குறிப்பிடுவதாகக் கூறுகிறார். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகர் குழு தானம் வழங்கியது ஐந்நூற்றுவர் மங்கலம் என்று குறிப்பிட்டுக் கூறுகிறார். நகரத்தார்களின் மாத்தூர் கோயிலில் உள்ள சிவனுக்கு ஐநூற்றீசுவரர் என்ற பெயர். 

wiki

'காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்' என்கிறது ஒரு விக்கிப்பீடியா பதிவு. நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்ததும் முருகனைத் தங்களின் குலதெய்வமாக வணங்கி வருவதும் யாவரும் அறிந்ததே.

களப்பிரர்கள் கடல் வணிகம் செய்தவர்கள். இன்று நாம் அதைத்தான் நகரத்தார்கள் கடல் வழி வணிகம் செய்தவர்கள் எனச்சொல்கிறோமோ?  . 

கண்ணகியும் கோவலனும் நகரத்தார் என்று கூறுகிறோம். அவர்கள் வாழ்ந்த இடம் காவேரிப்பட்டினம் வாழ்ந்த காலமும் களப்பிரர்களின் காலத்தை ஒட்டிய காலமாகவே காண்கிறேன். கோவலனைக் காதலித்த மாதவியும் பௌத்த துறவியாகிறார். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலையும் பௌத்த துறவியாகிறார். நகரத்தார்களின் ஒன்பது கோயில்களுள் கோவலன் பிறந்தது எந்தக்கோயில், கண்ணகி பிறந்தது எந்தக்கோயில் என்று விபரம் நம்மிடம் இருக்கிறதா?


சொ.சொ.மீ ஐயாவின் உரை, அதாவது நகரத்தார்களின் பூர்வீகம் சைவம் அல்ல. 

ஐயா சமணத்தை அடையாளம் காட்டுகிறார், நான் இங்கே சமணம், பௌத்தம் இரண்டையும் ஒன்றாகக் காண்கிறேன். மற்றபடி சைவ மாற்றத்திற்கு இரண்டு கரணங்கள் காண்கிறேன், ஒன்று, களப்பிரர்களை ஒரு கூட்டம் வாழவிடாமல் அழிக்கும் காரணத்தால் தங்களுடைய களப்பிரர் அடையாளத்தை மறைப்பதற்காக இருந்திருக்கலாம், அல்லது களப்பிரர்களின் சொத்துகளை அபகரித்து அவர்களை அழிக்க வந்த  கூட்டம் களப்பிரர்களில் 

Thanks Google
சிலரை அழைத்து, சைவத்திற்கு மாறினால் மேலும் இன்னல் தராமல் விட்டுவிடுவோம் என்று  கூறியிருக்கலாம்.

சமணமும் பெளத்தமும் கற்றுத்தந்த சித்தர்கள் வாழ்வியலைத்தான் பட்டினத்தாரும் காரைக்கால் அம்மையாரும் இயற்பகையும் கடைப்பிடித்திருக்கக்கூடும், காலம் அவர்களை சைவத்திற்குள் அடைத்திருக்கலாம்.


முருகன் வழிபாட்டை நகரத்தார்கள் பண்டாரத்தைக் கொண்டே நடத்துகிறார்கள், வைதீகர்களைக்கொண்டு பூசைகள் செய்வதில்லை. பழனிப் பாதயாத்திரையில் வேல் கொண்டு முன்செல்வதும், வேலுக்குப் பூசையிடுவதும் பண்டாரமே. பழனி அன்னதானமடத்தில் பூசைகள் பண்டாரங்களைக்கொண்டே நடைபெறுகிறது. இல்லங்களில் முருகனுக்குப் பூசைகளிடும்போது முன்னின்று பூசை இடுவதும் பண்டாரமே. 

Palani Pathayathirai

நகரத்தார் திருமணங்கள், வைதீகர்களைக்கொண்டு நடத்தப்படுவது இல்லை. வயதில் மூத்த நகரத்தார் மக்களே முன்னின்று தங்கள் வீட்டுத் திருமணங்களை நடத்திவருகிறார்கள். 

இவை ஏன்? என்ற கேள்வி என்னுள் எழும்போது அதற்கு விடையாக, களப்பிரர்களின் அழிவிற்குக் காரணம் வைதீகர்கள், எனவே வைதீகர்கள் என்றென்றும் களப்பிரர்களின் எதிரி என்ற காரணமாக் கூட இருக்கலாம்.

ஆதிக்காலங்களில் பழனி மலையில் முருகனுக்குப் பூசையிட்டவர்கள் பண்டாரங்கள் என்பதர்க்கு சொல்வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்கள் கொடுக்கும் ஆதாரம்::


     

மேலும் களப்பிரர் ஆதாரங்களை அறிய விரும்புகிறேன். அதற்கு வழிகோலுபவர்களை வரவேற்கிறேன். நன்றி!

மீ.மணிகண்டன்

Date: Dec-10-2022

Updated: Dec-29-2022

Updated: Aug-29-2023


பிரபலமான இடுகைகள்