சனி, 22 ஏப்ரல், 2023

முதற்பரிசுக் கவிதை

அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.
விழா நாள்: April-05-2023

பெண்ணவள் இன்றிப் பேரெழில் குடும்பம்
பிறப்பதும் அன்று பிழைப்பதும் அன்று;
பெண்ணே குடும்பப் பின்னணி இயக்கம்
பெருமை சேர்த்திடப் பிறந்தவள் அவளும்;

அடுப்படி சமையல் அவளின் பங்கா?
அலுவல் ஒன்றே ஆற்றுதல் பங்கா?
அத்தை அம்மான் அன்புடன் மழலை
அனைவரைக் காப்பது அவளின் பங்கா?

கொண்டவ னுக்கோர் குலமகள் ஆகிறாள்;
குழந்தைக ளுக்கோர் தாயும் ஆகிறாள்;
கோடிப் பொருள்கள் குவிந்திடு மாறு
கொள்கைப் பிடிப்புடன் கோலோச் சுகிறாள்;

இதுதான் பெண்மை ஏற்கும் பங்கு
என்றே பிறிக்க இல்லை குடும்பம்;
எதுவும் அவளே என்கிற பாங்கு
இருந்திடும் வீட்டில் இன்பம் தங்கும்;

M.பானுமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக