செவ்வாய், 2 மே, 2023

எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன்

 எக்ஸிபிஷன் சிறுகதை … மீ.மணிகண்டன்

எக்ஸிபிஷன் … மீ.மணிகண்டன்
பள்ளிக்கூடப் பைக்கட்டோடு பேருந்தில் ஏறினான் கதிரேசு. கண்டக்டரிடம் தனது பஸ் பாசை காண்பித்துவிட்டு ஏதேனும் இருக்கை காலியாக இருக்கிறதா என்று முதல் இருக்கை தொடங்கி கடைசி இருக்கை வரை நோட்டம் விட்டான், எதுவும் காலியாக இல்லை. 'இன்று நிற்கவேண்டியதுதானா', என்று மனதினுள் எண்ணிக்கொண்டே சற்று முன்னே நடந்து தலைக்குமேல் தொங்கிய கைப்பிடியை எட்டிப் பிடித்து பக்கவாட்டில் தூண்போல் இருக்கும் கம்பியில் சாய்ந்துகொண்டு பேருந்தின் வெளியே வேடிக்கை பார்க்கத்துவங்கினான். பள்ளிக்கூடம் முதல் அவன் வீடு இருக்கும் இடம் வரை சுமார் இருபத்தைந்து நிமிடப் பேருந்துப் பயணம்.

"மார்க்கெட் இறங்கலாம், டிக்கட் எடுக்காதவுங்க இருந்தா எடுத்துடுங்க, அடுத்தது ஸ்டேஜ்", என்று கண்டக்டர் தனது வழக்கமான வார்த்தைகளை மனப்பாடமாக ஒப்பித்தார். அடுத்த ஸ்டாப்பிங் கதிரேசு இறங்கவேண்டிய இடம், இறங்குவதற்குத் தயாராக வாசலருகே வந்து நின்றுகொண்டான். கதிரேசு இறங்கியதும் கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பணிந்த பேருந்தின் ஓட்டுநர், அடுத்த இலக்கை நோக்கி பேருந்தைப் பறக்கவிட்டார். கதிரேசு பள்ளிக்கூடச் சிந்தனையிலேயே வீடு நோக்கி நடந்தான். எக்ஸிபிஷன் போக பெயர் பதிவு செய்ய நாளை வெள்ளிக்கிழமைதான் கடைசி நாள். சனிக்கிழமை பாலன் சார் தலைமையில் தனது வகுப்பு மாணவர்கள் எக்ஸிபிஷன் செல்கிறார்கள். ராமு, குமரவேல், வாசு எல்லோரும் பணம் கட்டிப் பெயர் பதிந்துவிட்டார்கள். தான் செல்ல முடியுமா முடியாதா என்ற சந்தேகம் கதிரேசுவிற்கு வலுவாக இருந்தது. காரணம் கதிரேசு, தான்தான் சென்ற ஞாயிறன்று பால்காரர் வீட்டிற்குப் பால் வாங்கச்சென்றான், அப்போது பால்கார அண்ணனிடம், தனது தாய் சொன்னதுபோல, 'அடுத்தமாதம் சேர்த்துக் கொடுத்துவிடுகிறோம் அப்பா குவாரிக்கு இரண்டு வாரமாகப் போகவில்லை புது காண்ட்ராக்டர் இன்னும் இரண்டு வாரம் பொறுத்துத்தான் வரச்சொல்லியிருக்கிறார்', என்று சொல்லியிருந்தான். இந்தச் சூழ்நிலையில் அம்மாவிடமோ அப்பாவிடமோ இருபது ரூபாய் கேட்பது சற்றும் நியாயம் இல்லை என்று அவனது உள்மனம் உரைத்தது.

மெளனமாக வீட்டை அடைந்தான் கதிரேசு.

"என்னடா என்ன நினைப்பு, செருப்போட வீட்டுக்குள்ள வர்ற", அம்மாவின் குரல் சிந்தனையைக் கலைக்க தன் தவறை உணர்ந்து. "இல்லம்மா, இன்னிக்கு இங்கிலிஷ் பேப்பர் குடுத்தாங்களா, ராமுவைவிட நான் ரெண்டு மார்க் அதிகம் வாங்கியிருந்தனா, அந்த யோசனைதான்", என்று சமாளித்தவாறே செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் சென்று வாசல் அருகே ஓரமாக வைத்தான்.

அன்றைய வீட்டுப் பாடங்களை எழுதி முடித்தான் கதிரேசு. அம்மா அழைக்க, அப்பாவும் தானும் ஒன்றாக அமர்ந்து, அம்மா மண்ணெண்ணை அடுப்பில் சுட்டு வைக்கும் சப்பாத்திகளை ஆளுக்கு இரண்டாகச் சுவைத்தார்கள் தொட்டுக்கொள்ள அம்மாவின் மாவடு ஊறுகாய் சப்பாத்தியின் சுவையைக் கூட்டியிருந்தது.

உணவு முடிந்ததும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றிருந்தபொழுது வாங்கிவந்த அந்த காந்தச்சக்கரத்தை எடுத்து சற்று நேரம் விளையாடினான், இங்கும் அங்குமாக இரண்டு கம்பிகளுக்கிடையே உருளும் காந்தச்சக்கரம் பழைய ஞாபகங்களை சிந்தனையில் உருட்டியது, மகிழ்ச்சியைக் கொடுத்தது. தானும் தன் நண்பர்களும் அந்த சிரிப்புக் கண்ணாடிகளின் முன் நின்றுகொண்டு அடித்த லூட்டி இப்பொழுதும் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது, மகேஷ் ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு "பாருடா என் வயிறு மட்டும் குண்டா இருக்கு" என்றான், ராமு ஒரு கண்ணாடியின் முன் நின்றுகொண்டு, "டேய் என் தலையைப் பாருடா சப்பாத்தி மாவை அழுத்திவச்ச மாதிரி சப்பையா இருக்கு", என்றான், குமரவேல், "என்னை பாருங்கடா எவ்வளவு ஒல்லியா உயரமா இருக்கேன், வானத்தையே தொட்டுவிடுவேன்" என்றான், கதிரேசுவோ ஒரு கண்ணாடியின் முன் நின்று, "எனக்கு பல்லு மட்டும் வாயைவிட பெரிசா இருக்குடா, அஹ்ஹ் ஹஹ் ஹா..." என்று எல்லோரும் கூடிச்சிரித்த நிகழ்வு ஏக்கத்தை வரவழைத்தது கதிரேசுவிற்கு.

ஓரிடத்தில் கடல்வாழ் உயிரினங்களின் காட்சி வைக்கப்பட்டிருந்தது, அங்கே இருந்த வண்ண வண்ண மீன்கள், பல வகையான அளவுகளில், அகலமாக, நீளமாக இருந்தவற்றையெல்லாம் கண்டு மாணவர்கள், "டேய் அது கெளுத்தி", "இல்லடா அது கலர் மீன், கெளுத்தி இல்ல", "இல்லடா அது விரால் மீன்", "போடா அது சின்ன சைஸ் சுறா", என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத்தெரிந்த பெயர்களைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டதும் கதிரேசுவுக்கு நேற்று நடந்ததுபோல் இருந்தது. சென்ற ஆண்டு எக்ஸிபிஷன் சென்றது வரலாற்று ஆசிரியர் அருணாச்சலம் சார் தலைமையில்தான். எல்லா மாணவர்களும் சீருடையில் தான் வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்.  அருணாச்சலம் சாருக்கு அசிஸ்டென்டாக அறிவியல் ஆசிரியர் ஜோசப் சார் வந்திருந்தார்.

மாணவர்களும் ஆசிரியர்களும் எக்ஸிபிஷனில் நிறைய காட்சிப் பரப்புகளைக் கண்டுவந்தனர், மாலை இருட்டிக்கொண்டு வந்தது, பொருட்காட்சித் திடல் எங்கிலும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்துக்கொண்டிருந்தது, இராட்டினங்களில் பலவகை, பெரிதும் சிறிதும், அங்கும் இங்குமாக வைக்கப்பட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வேகமாகவும் மெதுவாகவும் இயங்கிகொண்டு பார்ப்பவர்களை வசீகரித்துக்கொண்டிருந்தது. சிறுவர் பெரியோர் எனப் பேதம் இல்லாமல் எல்லோரையும் ஈர்க்க பலவித விளையாட்டுப் பொருட்களின் கடைகள் கண்கவர் விளக்குகளால் வலைவீசிக்கொண்டிருந்தன. சுடச்சுட டெல்லி அப்பளம், சுவை மிக்க பானி பூரி, மசாலா மணக்கும் பொரித்த மீன், சலசலவென சத்தத்தோடு எண்ணையில் பொரிந்துகொண்டிருக்கும் முட்டை போண்டாக்கள், காரம் மிக்க மிளகாய் பஜ்ஜிகள், கைகள் கொள்ளாத அளவுகளில் பல வண்ணங்களில் பஞ்சு மிட்டாய்கள் எனப் பல வகையான தின்பண்டக் கடைகள் சுற்றிலுமாக அடுத்தடுத்தாக நிறுவப்பட்டிருக்க, பொருட்காட்சியை சுற்றிக் களித்தவர்கள் பசியில் ருசிதேடி, மீன் வாங்குவோமா, பஜ்ஜி வாங்குவோமா, அப்பளம் வாங்குவோமா, ஐஸ் கிரீம் வாங்குவோமா என்ற குழப்பத்தில் அனைத்துவகைக் கடைகளையும் நாடினர்.

மாணவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்த அருணாச்சலம் சார், "தம்பிகளா இங்கதான் விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள் கடையெல்லாம் இருக்கு எல்லோரும் போயிட்டு வேணுங்கறத வாங்கிட்டு சரியா இந்த புக் ஸ்டால் கிட்ட வந்துடனும்", என்று அருகில் இருந்த புத்தக நிலையத்தை அடையாளம் காட்டினார், "கரெக்ட்டா பதினஞ்சு நிமிஷம்தான் அதுக்குள்ளே இங்க திரும்ப அசம்பிள் ஆயிடனும், அப்படி வரலைன்னா நாங்க விட்டுட்டுப் போயிடுவோம்", என்றார். மாணவர்கள் அனைவரும் இதற்காகவே காத்திருந்ததுபோல ஹூய் என்ற ஆரவாரத்தோடு ஒவ்வொருவரும் ஒவ்வொருதிசையில் சிட்டாகப் பறந்தனர்.

கதிரேசுவிற்குக் குழப்பம், முதலில் விளையாட்டுப் பொருள் வாங்கப் போவதா அல்லது தின்பண்டக் கடையை நாடுவதா? பதினைந்து நிமிடங்களுக்குள் எதைச்செய்ய முடியும் இந்த சார் ஒரு அரை மணிநேரமாவது கொடுக்கக் கூடாதா... என்று மனதினுள் நினைத்துக்கொண்டே, முதலில் பொம்மைக் கடைக்குப் போவோம் தின்பண்டம் கைகளில் மீதம் இருந்தாலும் அதைப்  போகும்போதோ அல்லது வீட்டிற்குப் பொய்க்கூட உண்ணலாம் ஆனால் பொம்மைக் கடை அப்படி அல்ல என்று முடிவெடுத்து பொம்மைக் கடைகளில் தனது ஆசைப் பொருளான காந்தச்சக்கரத்தைத் தேடினான், தங்கைக்கோர் கீதம் படம் பார்த்ததிலிருந்தே அந்த காந்தச்சக்கரத்தின் மீது ஆசை, ஆம் அந்தப் படத்தில் செந்தாமரை அவ்வப்பொழுது தனது கையில் சிவப்புநிற காந்தச்சக்கரத்தை கம்பிகளின் ஊடாக உருட்டிக்கொண்டு வசனம் பேசுவதே ஒரு தனி அழகு. அப்படித்தானும் காந்தச்சக்கரம் உருட்ட வேண்டும் வசனம் பேசவேண்டும் என்பது கதிரேசுவின் ஆசைகளில் ஒன்று. அங்கே இங்கே தேடி ஒரு கடையில் வரிசையாகத்தொங்க விடப்பட்டிருந்த காந்தச்சக்கரங்களைக் கண்டுவிட்டான். மஞ்சள் பச்சை சிவப்பு நீலம் எனப் பல நிறங்களில் சக்கரம் இருந்தது ஆனால் கதிரேசு குறிப்பாக கடைக்காரரிடம் சிவப்பு நிறம் கேட்டு வாங்கினான், என்ன விலை என்ற கதிரேசுவின் கேள்விக்கு பதினைந்து ரூபாய் எனப் பதிலளித்தார் கடைக்காரர். அதே காந்தச்சக்கரம் தான் இதோ இப்பொது கதிரேசு கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருப்பது.

"என்னடா இன்னும் தூங்கலையா" அப்பாவின் குரல் கேட்டு தன்னிலைக்கு வந்தான் கதிரேசு.

மறுநாள் எந்த நினைப்பும் இல்லாமல், நாளை பார்க்காவிட்டால் அடுத்த ஆண்டு பொருட்காட்சி பார்த்துக்கொள்ளலாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இறைவனை வணங்கிவிட்டு பள்ளிக்கூடம் புறப்பட்டான். வழக்கத்திற்கு மாறாக பேருந்து இன்று மிகுந்த கூட்ட நெரிசலுடன் வந்தது. ஓட்டுநர் சரியாக நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சற்று தள்ளிச்சென்று நிறுத்தினார். கதிரேசு ஓடிச்சென்று பேருந்தில் பின்பக்கப் படிக்கட்டில் தொற்றிக்கொண்டான்.

"யாரப்பா அது, சார் சின்னப்ப பசங்கள படில நிக்காம கொஞ்சம் உள்ள விடுங்க சார்", என்றார் கண்டக்டர். முண்டியடித்துக்கொண்டு ஏறிய கதிரேசுவையும் இன்னும் ஒன்றிரண்டு பள்ளிக்கூட மாணவர்களையும் உள்ளே போகச்சொல்லி மிகுந்த சிரமத்திற்கிடையே ஒதுங்கி... இல்லை இல்லை ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு வழிவிட்டனர் மற்ற சக பயணியர். அந்தக்கூட்டத்திலும் சிறுவர்கள் தங்களின் பஸ் பாசை எடுத்து கைகளை உயர்த்தி கண்டக்டரிடம் நீட்டினர். பார்த்தும் பார்க்காமலும் "சரிசரி... நகரு நகரு…" என்று ஸ்டேஜை நிறைவு செய்வதில் மும்முரமாக இருந்தார் கண்டக்டர். எல்லோரும் கிட்டத்தட்ட அடுத்தவர்களின் பூட்ஸ் மற்றும் செருப்புக் கால்களை அரைகுறையாக மிதித்துக்கொண்டுதான் நின்றிருந்தார்கள் இருந்தாலும் கூட்ட நெரிசல் காலை வேளை என்பதைப் புரிந்துகொண்ட அனைவரும் அடுத்தவர் மீது கோபப்படாமல் பயணித்துக்கொண்டிருந்தனர்.

கதிரேசு நின்றிருந்த இடத்தில் அவனது கால்கள் ஏதன் மீதோ நிற்பது போலத் தோன்றியது. முதலில் யாருடைய காலின்மீதோ தனது வலது கால் இருக்கிறது என்றுதான் நினைத்தான் பின்னர் எதேச்சையாக அழுந்தியபோது பக்கத்தில் நின்றிருந்த யாரும் குரல் தரவில்லை. கண்டிப்பாக அது பிறரின் காலாக இருந்தால் தான் தவறுதலாக மிதித்தது அவர்களுக்கு வலியை கொடுத்திருக்கும் லேசாகவாவது குரல் கொடுத்திருப்பார்கள். இப்போது மீண்டும் தனது வலது காலை அழுத்தினான்... ம்... முடிவு செய்துவிட்டான்... தரையில் எதோ கிடக்கிறது, ஒரு வேளை அது மணிபர்ஸாக இருந்தால்... அதில் பணம் இருந்தால்... அடுத்த வினாடி கதிரேசுவின் கண்கள் பிரகாசித்தது... தானும் நாளை எக்ஸிபிஷன் சென்றுவரலாம். இப்போது காலின் அடியில் இருப்பதை எடுத்து தனது பாண்ட் பாக்கெட்டினுள் வைக்க வேண்டும் எப்படி? சிறிதும் தாமதிக்காமல் தலையை நிமிர்த்தி மேலே பார்த்துக்கொண்டு உட்காருவதுபோல தனது வலக்கையை மட்டும் தன் காலின் கீழே செலுத்தி காலில் தட்டுப்பட்டதை கையால் தொட்டுப் பார்த்தான் சந்தேகமே இல்லை அது மணிபர்ஸ்தான், சற்றே கனமான அந்த மணிபர்ஸை எடுத்து கையினால் தடவியபடியே எழுந்து தனது வலப்பக்க பாண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தான். பத்து வினாடிகளில் பல நிகழ்வுகள் அவனது மூளைக்குள் பிரவேசித்தது. சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும். யாரும் அந்தப் பர்ஸைத் தேடும்முன் தான் இறங்கி பள்ளிக்கூடம் செல்லவேண்டும். பாலன் சாரிடம் பெயர் பதியவேண்டும். எக்ஸிபிஷன் போக வாய்ப்பு கிடைத்துவிட்டது. இப்படி மூளை வேலை செய்தாலும் அவனது உள் மனம் கேள்வியெழுப்பியது 'இது தவறல்லவா?' 'இல்லை' என்றது வெளி மனம். காரணம் கேட்டது உள் மனம். ‘திருட்டு தவறு, ஆனால் இது திருட்டு இல்லை கீழே கிடந்ததுதானே’ என்றது வெளி மனம். இன்னும் மூன்று நிறுத்தங்கள் கடந்துவிட்டால் போதும் நான்காவது நிறுத்தம் கதிரேசுவின் பள்ளிக்கூட நிறுத்தம். பள்ளிக்கூடத்தில் இறங்கிவிட்டால் பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை.

ஆனால் அடுத்த நிறுத்தத்திலேயே அது நிகழ்ந்தது. பெருந்துக்கூட்டத்தைவிட்டு இறங்கிய ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இறங்கிய ஒன்றிரண்டு வினாடிகளில் பேருந்தின் பக்கச்சுவற்றை வேகமாகத் தட்டிக்கொண்டே "சார் சார் பஸ்ஸை எடுத்திடாதீங்க... எடுத்திடாதீங்க... என்னோட பர்ஸ் உள்ளே விழுந்திடுச்சு..." என்று குரலெழுப்பினார்.

பகீரென்றது கதிரேசுவிற்கு.

"யாரம்மா இது... எல்லாரும் அவசரமாக இருக்க நேரத்தில... பஸ்ஸை நிறுத்தச் சொல்றது..." என்று சற்றே கோபமானார் நடத்துனர்.

"உள்ள தான் எங்கயோ விழுந்திருக்கு கொஞ்சம் யாராவது பாருங்களேன்..." தொடர்ந்து குரலெழுப்பினார் அந்தப் பெண்மணி.

கதிரேசுவிற்கு இப்பொழுது பயம் பதட்டம் உச்சத்தைத் தொட்டது. மூளை முன்னர் போலவே மின்னலாய் செயல்பட்டது. அமைதியாக இருந்திட வேண்டியதுதான். தன்னிடம்தான் பர்ஸ் இருக்கிறது என்று யாருக்குத்தெரியும்?

சிலர் அங்கும் இங்கும் கீழே பர்ஸ் எதுவும் தென்படுகிறதா என்று தேடினர். சிலர் அவசரத்தில் நின்று பொறுமையிழந்து கொண்டிருந்தனர். கதிரேசுவின் வெளிமனம் பேசியது. 'சற்று நேரம் தேடிப்பார்ப்பார்கள், கிடைக்காது, கண்டக்டரும் அவசரத்தில் இருக்கிறார், பேருந்தை எடுக்கச் சொல்லிவிடுவார். பின்னர் எந்தப் பதட்டமும் இல்லை'. உள்மனம் மீண்டும் வினவியது 'இது சரிதானா?' மற்றவர்கள் பரபரப்பாக இருந்தாலும் அமைதியாக நின்றான் கதிரேசு.

"ஏம்மா நீ பர்ஸை இங்கதான் விட்டேன்னு எப்படி சொல்லுற, வேற எங்கயாவது விட்டிருப்ப..." என்றார் கண்டக்டர்.

"இல்ல சார், உங்க கிட்ட இருந்து டிக்கட் வாங்கீட்டு, நீங்க குடுத்த பாக்கியையும் டிக்கட்டையும் உள்ள வச்சு நான் மூடினது நல்லா ஞாபகம் இருக்கு", என்று பதிலளித்தார் அந்தப் பெண்மணி.

வெளியில் நின்ற ஒன்றிரண்டு பயணிகள், 'ஏம்பா நல்லா பாருங்கப்பா, அந்தம்மாதான் இவ்வளவு சொல்றாங்க இல்ல, கண்டிப்பா கீழ எங்கயாவது இருக்கும்' என்று அந்தப் பெண்மணிக்கு ஆதரவாகப் பேச பேருந்தில் தேடுதல் வேட்டை இன்னும் தீவிரமானது.

கதிரேசுவின் மனம், ஆசையா?, நீதியா?, நானா?, நீயா?, சரியா?, தவறா? என்று இடைவெளி இல்லாத 'பட' 'பட' துடிப்போசையில் விவாதித்துக்கொண்டிருக்க சட்டென தனது வலது கை பாண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை மின்சார வேகத்தில் எடுத்து மீண்டும் காலுக்குக் கீழே வைத்துவிட்டு, 'இதோ இங்க எதோ இருக்கு இதா பாருங்க' என்று கீழே இருந்து பர்ஸை எடுத்து நீட்டினான் அதை யாரோ ஒருவர் வாங்கி வெளியில் நின்றிருந்த பர்ஸைத் தேடும் பெண்மணியிடம் நீட்டினார். அந்தப் பெண்மணிக்குத் தனது பர்ஸ் மீண்டும் கிடைத்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி, எல்லோருக்கும் நன்றி சொன்னார், குறிப்பாக கதிரேசுவிற்கு 'நன்றி தம்பி' என்றார். அருகில் நின்றிருந்த சக பயணி ஒருவர் "அம்மா பர்ஸில் எல்லாம் சரியா இருக்கான்னு திறந்து பார்த்துக்கோங்க" என்றார். அந்தப் பெண்மணியும் சோதித்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்லிவிட்டு நடத்துனருக்கு ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தன் பாதையைத்தொடர்ந்தார். கண்டக்டரின் இரட்டை விசிலுக்குப் பேருந்து புறப்பட்டது.

அந்தப் பெண்மணி சொன்ன ‘நன்றி’ கதிரேசுவை எதோ செய்தது. கதிரேசுவின் மனக்குதிரையின் குளம்படிச்சத்தத்தின் டக்... டக்..... டக்...... டக் குகளுக்கு இடைவெளி அதிகமாகிக்கொண்டிருந்தது.

"சின்னப் பையன் அதான் நேர்மையாக் கொடுத்துட்டான்" என்றார் கூட்டத்தில் ஒருவர். "வேற யாருமா இருந்தா பாக்கெட்ல போட்டுக்கிட்டு தெரியாத மாதிரி போயிருப்பாங்க" என்றார் மற்றொருவர். "கள்ளம் கபடமில்லாத பிள்ளை மனசு அதான்" என்றார் பின்னாலிருந்து ஒருவர். கதிரேசு இப்போது ஒரு பேசு பொருளாக, காட்சிப் பொருளாக பேருந்தில் நின்றிருந்தான். சீக்கிரம் பேருந்து பள்ளியை சென்றடைய வேண்டும் பேருந்தில் இருந்து இறங்கவேண்டும் என்ற உணர்வில் படிகளை நோக்கி அடியெடுத்து வைத்தான் கதிரேசு. அருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கதிரேசுவின் கையைப் பிடிக்க... திரும்பி பாட்டியைப் பார்த்தான் கதிரேசு, "நீயா இருந்ததால குடுத்துட்டே, வேற மனுசனா இருந்தா பாவம் அந்தப் பொண்ணு பணத்தைத் தொலைச்சிருக்கும், நீ நல்லவன், நல்லா இருப்ப" என்று ஆசி கூற, கதிரேசு தான் செய்வதறியாது பாட்டியிடமிருந்து தனது கையை மெதுவாக விடுவித்துக்கொண்டு படிக்கட்டுகளை நோக்கி நகர்ந்தான்.

… மீ.மணிகண்டன்

Sep-09-2020

குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

சனி, 22 ஏப்ரல், 2023

பரிசுகளும் பாராட்டுகளும்...

மீ.மணிகண்டன் பரிசுகளும் பாராட்டுகளும்...

FeTNA 2023, Sacramento, CA

ஆண்டு 2025 (03-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'செம்புலப் பெயல் நீர் போல'.

ஆண்டு 2024, அன்னை ஸ்வர்ணாம்பாள் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு. கதை: வேண்டுதல்

ஆண்டு 2023 (12-Aug-2023), Nagarathar Writers, கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு, நகரத்தார் எழுத்தாளர்கள் அமைப்பு, கொடுக்கப்பட்ட தலைப்பு: நகரத்தார்கள் பெருமைகள்.

ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான கவிதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'ஒற்றையடிப் பாதை'.

ஆண்டு 2023 (02-Jul-2023), FeTNA, (Federation of Tamil Sangams of North America) (அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை) நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'அன்பே செல்வம்'.

ஆண்டு 2023 (01-Jul-2023), கதிர்'ஸ் பல்சுவை மின்னிதழ் - இளவல் ஹரிஹரன் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு. கதை: ஜாஹ்ரா

ஆண்டு 2023, துகள் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'தாய்'. 

ஆண்டு 2023, பண்ணாகம்.கொம் (ஜெர்மெனி) நடத்திய உலகளாவிய பாடல் எழுதும் போட்டியில் பரிசு. 

ஆண்டு 2023, அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.

ஆண்டு 2023, குவிகம் மாத இதழ் நடத்திய குறும்புதினப்போட்டியில் பரிசு. குறும்புதினம்: முதல் பயணம்.

ஆண்டு 2022, வலஞ்சுழி வலைத்தளம் நடத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு. சிறுகதை: அகம்.

ஆண்டு 2021,  அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு 'காதல் வானிலே'.

ஆண்டு 2018, படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பிற்கான விருது. கவிதை: நகராத ஒரு கணம்

ஆண்டு 2017, மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ்மணி மன்றமும் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு. சிறுகதை: புத்தகம் மூடிய மயிலிறகு.

ஆண்டு 2015,  'மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது' வழங்கியவர்கள்  'இணையதளப் படைப்பாளிகள் பேரவை', புதுச்சேரி.

ஆண்டு 2014, eluthu .com தளத்தில் கவிதைகளுக்குப் பரிசுகள். கொடுக்கப்பட்ட கவிதைத் தலைப்புகள்: கற்றவை பற்றவை, பூக்களோடு ஒரு கைக்குலுக்கல், அழகான வாழ்க்கை ஆனந்தமாய், நாளைய தமிழும் தமிழரும்

படைப்பு விருது பெற்ற கவிதை

2018ம் ஆண்டு ஜூலைத் திங்கள் படைப்பு குழுமத்தார் வழங்கிய மாதாந்திர சிறந்த படைப்பு விருது. 


நகராத ஒரு கணம்
~~~~~~~~~~~~~~~~~~~~
* ஞாபகங்களின் காவலர்கள் 
சட்டச் சிறைக்குள்ளே

* மங்கிய மலர்ச்சியை 
மறுக்காமல் சொல்கிறது 
பழைய புகைப்படங்கள்

* வாசம் மறந்துபோனது 
சிரிப்புகள் 
சிறைபட்டுப் போனது

* நகராத ஒரு கணம் 
நாட்களை நகர்த்துகிறது

* வண்ணப் பூக்கள்  
வாடாத தோட்டம்

* ஒடுக்கப்பட்ட 
கருப்பு வெள்ளையில் 
ஒளிந்து கிடக்கிறது 
வண்ணம் 

... மீ.மணிகண்டன் 
#மணிமீ 
07/21/2018



முதற்பரிசுக் கவிதை

அம்பத்தூர் நகரத்தார் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு. கொடுக்கப்பட்ட தலைப்பு: 'குடும்பத்தில் பெண்களின் பங்கு'.
விழா நாள்: April-05-2023

பெண்ணவள் இன்றிப் பேரெழில் குடும்பம்
பிறப்பதும் அன்று பிழைப்பதும் அன்று;
பெண்ணே குடும்பப் பின்னணி இயக்கம்
பெருமை சேர்த்திடப் பிறந்தவள் அவளும்;

அடுப்படி சமையல் அவளின் பங்கா?
அலுவல் ஒன்றே ஆற்றுதல் பங்கா?
அத்தை அம்மான் அன்புடன் மழலை
அனைவரைக் காப்பது அவளின் பங்கா?

கொண்டவ னுக்கோர் குலமகள் ஆகிறாள்;
குழந்தைக ளுக்கோர் தாயும் ஆகிறாள்;
கோடிப் பொருள்கள் குவிந்திடு மாறு
கொள்கைப் பிடிப்புடன் கோலோச் சுகிறாள்;

இதுதான் பெண்மை ஏற்கும் பங்கு
என்றே பிறிக்க இல்லை குடும்பம்;
எதுவும் அவளே என்கிற பாங்கு
இருந்திடும் வீட்டில் இன்பம் தங்கும்;

M.பானுமதி

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

கொரோனாவின் தொடக்க காலத்தில் எழுதிய நகைச்சுவைக் கதை. நாடகமாக்கிட ஏதுவாக அதிகம் உரையாடலாக எழுதிய கதையிது.

கொரோனா வைரஸ் கொக்கரக்கோ மைனஸ்

சிறுகதை எழுதியவர் மீ.மணிகண்டன் 

எழுதிய நாள்: Feb-04-2020

கொக்கரக்கோ

"என்ன இது..." 

"இன்னைக்கு சண்டே..." 

"தெரியும் சண்டே ... இது என்ன..." 

"சிக்கன்..." 

விடுவிடுவென சமயலறைக்குள் நுழைந்தாள் ப்ரேமி, "ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா?" என்றாள் அடுப்பிலிருந்து வெந்த இட்டலியை 

இறக்கி வைத்துக்கொண்டே.

"எந்த ஊர்ல..."

"ம்… நாம எந்த ஊர்ல இருக்கோம்..."

"அம்மாடி... புரியுற மாதிரி ஏதாவது சொல்லுறியா..."

"டி.வி. பாக்கறீங்க... யூடியூப் பாக்கறீங்க... எதுவுமே தெரியாத மாதிரி என்னைக் கேட்கறீங்க..." என அடுப்புச்சூட்டில் பொரிந்தாள்.

"ஸ்... அப்பா... தலை வலிக்குது... கொஞ்சம் காபி போட்டுத் தருவியா?"

"அம்மாடி… தலை வலியா... இதோட ஆரம்பம் தலை வலின்னு எந்த யூடியூப் லையோ சொன்ன மாதிரி இருக்கே... கடவுளே மறுபடி அதைப் பார்க்கலாம்னா 

எந்த சேனல் ன்னு அவசரத்துல ஞாபகம் வரமாட்டேங்குதே..." பயமும் கவலையும் கலந்துகட்ட, படபடத்தாள்.

"சரிதான்... காபியும் இல்லையா... பரவால்ல நான் வெளில போய் கடையில சாப்பிட்டுக்கறேன்..."

"போகும்போது நீங்க வாங்கிட்டு வந்ததை ஓபன் பண்ணாம எடுத்துட்டு போய் குப்பைல போடுங்க..."

"அடிப் பாவி... சிக்கன் விக்கற விலைக்கு... அப்படியே தூக்கி ஏறியச் சொல்லுற.. ஓஹோ... சிக்கன்தான் இவ்வளவுக்கும் காரணமா... இப்பப் புரியுது..."

"ம்... புரிஞ்சா சரி..."

"அடியே... அது எங்கயோ... யாருக்கோ கொரோனான்னு நியூஸ்ல சொல்றாங்க அதுக்காக நம்ம ஊர் சிக்கன் என்னடி பண்ணுச்சு?" என்று. கோழி சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் கிறங்கினான் பிரகாஷ்.  

வாசற்கதவு தட்டும் ஓசை கேட்க, பிரகாஷ் சாளரம் வழியே எட்டிப்பார்த்தான், வெளியே யாரோ முகத்தை மூடிக்கொண்டு நின்றார்கள். நின்றவர் மீண்டும் கதவைத்தட்டினார், 

"யாரது..."

"நான்தான்..."

ப்ரகாஷிற்கு வெளியே நிற்பவர் "நான்தான்" என்று சொல்வது புரிகிறது அதனைத்தொடர்ந்து அவர் சொல்வது என்னவென்று புரியவில்லை. ஒருவேளை 

அவர் முகத்தை மூடாமல் பேசினால் புரியும்.

சமையலறை விட்டு வெளியே வந்த ப்ரேமி, “கதவைத் திறந்துதான் பேசுங்களேன்..." என்று கதவைத்திறக்க அடி எடுத்து வைத்தாள்.

"ஏய்... நில்லு... அவர் முகத்தை மூடி இருக்கார்... யாராவது முகமூடித் திருடனா இருக்கப் போகுது..."

கதவு மீண்டும் தட்டப்பட்டு, "நான்தான்..." என்றுவிட்டு இன்னும் எதோ சொல்கிறார்...

சற்று உன்னிப்பாகக் கேட்ட ப்ரேமி சிரித்துக்கொண்டே, "அப்பா..." என்றாள். 

"என்னது உங்க அப்பாவா?"

"ஹையே... ஆமாங்க... உங்களுக்கு அப்பாவோட குரல் தெரியலையா?"

கதவைத்திறந்தாள் ப்ரேமி, "வாங்க அப்பா... என்ன இது முகமூடி?" 

"வாங்க மாமா, என்ன ஒரு போன் கூட பண்ணல..."

முகத்தை மூடியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு, " அப்பாடா... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்…” என்று மூச்சை இழுத்துவிட்டுச் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “சண்டே.. சும்மாதானே இருப்பீங்கன்னு அப்டியே கிளம்பி வந்துட்டேன் மாப்ள..."

"சரி இதென்ன கெட்டப்?"

"அட நீங்க வேற... ஏதோ கொரோல்லா வாமே அதுக்கு பயந்துதான்..."

"மாமா... அது கொரோல்லா இல்ல... கொரோனா…"

"எதோ ஒண்ணு... அத விடுங்க இன்னைக்கு என்ன சமையல்? யார் சமையல்?" 

"என்னப்பா சண்டே இங்க வந்தா கொக்கரக்கோ சாப்பிடலாம்னு வந்துட்டீங்களா..."

"அதென்ன கொக்கரக்கோ... சிக்கன்னு செல்லமா சொல்லக்கூடாதா..."

"ஆண்டவா... ஆண்டவா... அந்தப்பேரை சொன்னாக்கக்கூட சைனால இருக்கறது சைதாப்பேட்டைக்கு சட்டுன்னு வந்துடுதாம்... காத்துல அவ்வளவு வேகமாப் பரவுதாம்... அதான் அந்தப் பேரைக்கூடச் சொல்லமாட்டேன்." எச்சரிக்கைக் கொடி பிடித்தாள் ப்ரேமி.

"அடடா... நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டே ப்ரேமி... சிக்கனுக்கும் கொரோல்லாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல..."

"மாமா... அது கொரோனா..." மாமனாரை மீண்டும் திருத்தினான் பிரகாஷ்.

"விடுங்க மாப்ள... எனக்கு அப்படித்தான் வருது... சரி மாப்ள நீங்க இன்னும் சிக்கன் வாங்க கடைக்குப் போகலையா?"

"மாமா... அதெல்லாம் ஆச்சு... இப்போ இந்த சிக்கன் குப்பைக்குப் போகணுங்கறதுதான் ப்ரேமியோட போராட்டம்... இந்தப் போராட்டத்துக்கு நீங்கதான் சமாதானக் கொடி கட்டணும்..."

"அம்மாடி... உங்க அம்மா சைவமா இருந்துக்கிட்டு எப்பவுமே வெஜ்தான்... உனக்கு தெரியாதா... எப்பவோ ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை சிக்கன் சாப்பிடுறதுக்காக நாலு தெரு தள்ளி உங்க வீட்டுக்கு வறேன்... ஏமாத்திடாதடா கண்ணு..." என்று மகளைக் கெஞ்சினார் அப்பா.

"மாமா நீங்க தலை கீழ நின்னாலும் சரி... இன்னிக்கு இட்லி சாம்பார்தான்..."

"ஆமா... இப்ப இட்லி ரெடியா இருக்கு ரெண்டு பெரும் வாங்க மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பார் இருக்கு... மதியானத்துக்கு கொக்கரக்கோ மாதிரியே உங்களுக்கு காலிபிளவர் பொரியல் செஞ்சு தரேன்..."

"பாத்தீங்களா... மாமா... நான்... சொன்னது சரியா..."

இவர்களின் உரையாடலுக்கு நடுவே உள்ளே எழுத்துக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்த பப்பு வெளியில் ஓடிவந்தான், "தாத்தா க்ரோனா என்ன…"

"அட உனக்கும் இது தெரிஞ்சுடுச்சா... அது எதோ கண்ணுக்குத் தெரியாத பூச்சியாம்..." பேரனுக்குப் பாடம் சொன்னார் தாத்தா.

"அடடா... மாமா கொஞ்சம் நிதானமா... குட்டிப் பையன குழப்பிடாதீங்க... அவன் கேட்கறது கொரோனா இல்ல... க்ரோனா என்ன? அதாவது C R O W க்ரோ அப்படின்னா என்ன?

"ஓஹோ... அதானே பார்த்தேன்... இதக் கண்டுபுடிச்சே ஒரு மாசம்தான் ஆகுது அதுக்குள்ளே எப்படிடா ப்ரீ கே ஜி க்கு பாடமா வந்ததுன்னு…" என்று இழுத்துச் சமாளித்தார் தாத்தா.

சத்தமில்லாமல் சிக்கன் பையை எடுத்து சமையலறையில் ப்ரேமி பார்வை படும்படி வைத்துவிட்டு வந்தான் பிரகாஷ். இதனைக் கண்ட ப்ரேமி, "சொன்னா கேட்க மாட்டீங்க..." என்று ஒரு அதட்டல் போட. "இன்னிக்கு மட்டும்தான்..." என்று கெஞ்சலாகச் சொல்லிவிட்டு மாமனாருடன் உரையாட ஹாலுக்கு வந்தான் பிரகாஷ்.

பின்னாலேயே பையைத்தூக்கிக்கொண்டு ஓடிவந்த ப்ரேமி, "என்னங்க என்ன இது சிக்கன்னு சொல்லி காலிபிளவர் வாங்கிட்டு வந்திருக்கீங்க..."

"ஏய் சும்மா சமாளிக்காத... நான் கொண்டு வந்தது சிக்கன்தான்..."

"அட இங்க பாருங்க..." என்று பையை திறந்து காட்டினாள். ப்ரகாஷிற்குப் புரியவில்லை. "நான் சின்னையா கடையிலிருந்து சிக்கன்தானே வாங்கி 

வந்தேன்... அவர் சிக்கன் வெட்டி பையில் போடும்போது பார்த்தேனே..." என்று யோசித்தான். "சரி ஒரு எட்டு அவர் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்," என்று கிளம்பினான்.

"இன்னிக்கு காலிபிளவர் பொரியல்தான்..." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள் ப்ரேமி.

கடை காலியாக இருந்தது. இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது. "ஆஹா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டாரா?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். 

"என்ன மாப்ள சிக்கன் கொண்டு வந்துடீங்களா?" என்றார் மாமனார் ஆவலுடன். 

"இல்ல மாமா சின்னையா கடையை கட்டிட்டு கிளம்பிட்டார்…"

"சோ வாட், அவருக்கு ஒரு போன் போடறது..." 

"ஆமா மாமா, நல்ல யோசனை" என்று தனது மொபைல் போனை எடுத்து சின்னையாவிற்கு டையல் செய்தான் பிரகாஷ்.

மறுமுனையில், " ஹலோ…"

"அண்ணே நான்தான் பிரகாஷ் பேசுறேன்..."

"சொல்லுங்க தம்பி..."

"அண்ணே நான் உங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்த சிக்கன் வீட்டுக்கு வந்ததும் காலி ப்ளவரா மாறிடுச்சு..." என்று சிரித்தான் 

"அடடே அது நீங்க தானா…"

"என்ன சொல்றீங்க?"

"ஆமா பிரகாஷ் தம்பி, நான் வீட்டுக்கு வாங்கி வச்சிருந்த காலி ப்ளவரை நீங்க மாத்தி எடுத்துட்டு போயிட்டீங்க போல..."

"நான் அந்தப் பையை மாத்தி எடுத்தபோதே சொல்லக்கூடாதா?"

"அட... எனக்கெப்படி தெரியும் நீங்க மாத்தி எடுத்தீங்கன்னு? நான் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பறப்போ பார்த்தா அந்தப் பையில சிக்கன் இருக்கு. சரி யாரோ மாத்தி எடுத்துட்டு போய்ட்டாங்க கேட்டா சொல்லலாம்னு இருந்தேன். இப்ப தான் தெரியுது நீங்கதான்னு... சரி நாளைக்கு கடைப்பக்கம் 

வரும்போது மறக்காம என்னைப் பாத்து சிக்கன் காசை திரும்ப வாங்கிக்கோங்க... சரியா?" 

"அட அது இருக்கட்டும் அண்ணே, இன்னிக்கு நம்ம சிக்கன் கனவை மொத்தமா கலைச்சுடீங்களே…"

மெளனமாக இருந்தார் சின்னையா 

"சரி அண்ணே உங்களுக்கு சண்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையா, அதுவும் சொந்தமா கடை வச்சிக்கிட்டு…"

"நமக்கு வெஜ் தான் எப்பவும் ஸ்பெஷல் தம்பி. சிக்கன் நமக்கு தொழில் அவ்வளவுதான்."

"ஆச்சர்யமா இருக்கு..."

"ஆமா... கொஞ்சநாளைக்கு முன்னே யாரோ சொன்னாங்க வெஜ்தான் ஹெல்த்துக்கு நல்லதுண்ணு, அதுலேருந்து நாங்க வீட்டோட வெஜிடேரியனா மாறிட்டோம். சரி தம்பி மணக்க மணக்க வத்தக் குழம்பு என்னைக் கூப்பிடுது நான் இப்போ போனை வைக்கிறேன், நாளைக்கு மறக்காம கடைப்பக்கம் வந்து காசை வாங்கிக்குங்க" என்று போனை வைத்தார் சின்னையா.

"என்ன மாப்ள ரொம்ப நேரமா உரையாடல்..."

"ம்... அது ஒன்னும் இல்ல மாமா... இனிமே நம்ம வீட்டில... வெஜ்தான்..." என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு பிரகாஷ் எழ, மாமனார் "வடை போச்சே..." என்று விழிக்க... 

"ப்ரேமி... காலிப்ளவர் பொரியல் ரெடியா..." என்று சமையலறை நோக்கி அடி எடுத்துவைத்தான் பிரகாஷ்.

... மீ.மணிகண்டன்

 

பிரபலமான இடுகைகள்