புதன், 24 டிசம்பர், 2014

கோணல் வரிசை ... M.Manikandan

வானை வாசலென்றும்
வையத்தை வானமென்றும் ...

குப்புறப் படுத்து
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
கோணல் வரிசைப் புள்ளிகளை

எதைத் தொட்டேன்
எதை விட்டேன்
எண்ணிக்கை விட்டுப்போக
இன்னும் இன்னும் ...
எத்தனையோ முறை ...

வீதி பெருக்கி
வெண்ணொளி தெளித்தும்
தொகுத்த கணக்கு
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
மூடிய திரைக்குள்
முடித்திடும் முயற்ச்சியில்.

திரை விலகும்
திரும்பவும் படரும்
திருத்தாத வரிசை

கள்ளக் கணக்கென்று
கடிந்துகொண்டுமிருக்கும்
கருவரியாத மாயை
மீண்டும்
குப்புறப் படுத்துக் கொண்டு !


by M.Manikandan

வியாழன், 18 டிசம்பர், 2014

மறந்து போனது மலராக

மறந்து போனது மலராக

மதிவளர்க்கும் என்றெண்ணி
மண்டையில் ஏற்றி  
அதிவிரைவில் அழியுமுன்னே
தாளில் மாற்றி
மதிப்பெண்கள் பெற்றகணம்   
மறையும் கூற்றை  
விதிவெல்லும் செயலேன்றோர்
விளக்கம் சொல்வார்.

பலர்கூட பாராட்டும்
பதக்கம் வாங்கி
சிந்தனையைச் சிதரவிட்டுச்
சிறப்பென் றேங்கி
முந்தானை, முறுக்குமீசை
முனகல் பேசி
விந்தழியும் காமமதில்
விழுந்தே நோவார்  

உணவிருந்தும் உடையிருந்தும்
உறக்கம் போக்கி
பணம்பெருக்கும் தந்திரத்தை 
பழக்கம் ஆக்கி
கணக்கின்றிக் காகிதத்தைக்
கட்டிச் சேர்த்து
பிணக்கழுகுப் பொறித்தேடிப்
பிணைத்தும் கொள்வார்  

உலகமிதை அமுதமென
ஊன்றிப் பேசி
கலகநிறைக் காட்சியிதை
களியென் றாடி  
பலமிதன்று படுத்துவிட  
பயந்தே ஓடி
உலர்ந்து போய் உருக்குலைந்து
உதிர்ந்தே போவார்  


Written by M.Manikandan

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும்

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும் - M.Manikandan

அருணமலை ஈசனோடு ஆறுபடை நாயகனும்
அருளுவக்க‌ ஆலயமாய் ஆக்கிவைத்த‌ கோட்டையிலே
தருணமிதில் நாமிருந்து தந்தபுகழ் ஏற்றுவதாய்
கருணைமனப் பூர்விகரைக் கைபொருத்திப் போற்றிடுவோம் 1

காடுதனைச் சீர்படுத்திக் கட்டிடக்கலை புகுத்தி
நாடுதனில் கோட்டையென்றே நலமாய்ப் பெயர்படுத்தி
பாடுபட்டு நம்முன்னோர் பகட்டாய் ஆக்கிவைத்த
வீடுதனைச் சந்ததிக்காய் விட்டுக் கொடுத்தாரே     2

கடலரித்துப் போனதுவாம் காவிரிப்பூம் பட்டினத்தில்
உடன‌ழைத்த மன்னருக்காய் ஒன்றிணைந்தே பாண்டிமண்ணில்
மடையுடைத்து மறுபடிநீர் மனையகத்தே புகுந்திடாது
வடிவமைத்தார் படியடுக்கி வாசலது உயரமதில்     3

பட்டண‌‌ வாசலெல்லாம் பதமாய்ப் பதிந்தசிலை
மட்டும்போ தாதென்றே மரத்தினில் சிற்பக்கலை
சிட்டாய் வரலாற்றைச் செதுக்கிய கதவுநிலை
எட்டாக் கற்பனைதான் இந்நாள் ந‌மதுநிலை     4

சனங்கள் வந்தமரச் சதுரச் சமுக்காளமிட்டு
தனங்கள் பெருக்கிவரத் தானங்கள் பூசையிட்டு
தினங்கூடி வாழுதற்கும் திருமணங்கள் செய்தற்குமாய்
மனங்கூடித் திட்டமிட்ட மகத்துவமே பேரில்லம்    5

மொட்டுடன் இலைகொட்டும் முற்றம் வளவென்றும்
இட்டொரு அடுப்பிருக்க இரண்டாங் கட்டிருக்கும்
கட்டிட நுணுக்கமதை கற்றோர் வகுத்தவித‌ம்
கட்டுகள் மூன்றோடே கணக்காய் நான்கிருக்கும்     6

பட்டாலை பத்தி,சடப் பரப்பம்பாய் விரித்திருக்கும்
பட்டியக்கல் நெடுவாசல் பாதிச்சுவர் பளிங்கிருக்கும்
முட்டைப் பூச்சுடனே முழுச்சுவரும் பூசிரிக்கும்
கட்டிய களஞ்சியங்கள் கொட்டிய நெல்பெருக்கும்     7

"எப்பத்தான் வருவாக‌ எம் ஐயா கடல்தாண்டி"
இப்படியாய் மனமேங்க‌ இருப்பாக வரம்வேண்டி
அப்பத்தா ஆயாக்கள் அகத்தே செய்ததவம்
அப்பப்பா அடையாளம் அப்பாவித் தூண்களெலாம்     8

வீதி இரண்டிணைக்கும் விதமாய் அமைந்திருக்கும்
ஆதி நகரத்தார் ஆக்கிய இல்லங்கள்
மேதினி அதிசயிக்க மேலாய்ச் சிறக்க‌ட்டும்
சோதிச் சிவனருளால் சுகமே பெருக்கட்டும்     9

அந்திப் பொழுதெல்லாம் அடுத்தோர் விடியலுக்கே
அந்தப் பழஞ்சொத்தும் ஆக்கிடப் புதுமைக்கே
சிந்தனை தவறவிட்டு சேதார மாக்கவேண்டாம்
முந்திச் செயல்பட்டு முகப்பில்லம் காத்திடுவோம்     10

உதிரம் தந்தசுவர் உதிரவும் விடலாமொ ?
புதினம் மாற்றமென்றே புகழழித் திடலாமோ ?
அதிகம் சொல்லவில்லை அறிந்தது கொஞ்ச‌மதை
பதிகம் எழுதிவந்தேன் பழையது நிலைக்கட்டுமே.        


ஆக்கம்: கல்லல். மீ.மணிகண்டன்

பிரபலமான இடுகைகள்