வியாழன், 5 மார்ச், 2015

வான் காணாப் பிறை ... M.Manikandan

உறையும் பனிக்குளிரில் 
ஓடாமல் நான் குளிக்க 
ஒருபானைத் தண்ணீரை  
அடுப்பேற்ற வேண்டாம் 

சிக்குண்ட தலைமுடிக்கு  
நல்லெண்ணெய் வார்த்துபின்னே 
சீகர்க்காய் தேய்த்துமே 
சீர் படுத்திட வேண்டாம் 

சீப்புக் கொண்டு தலை வாரி 
ரெட்டைப் பின்னல் ரிப்பனிட்டு 
சிங்காரம் செய்துமே 
சிரமங்கள் படவேண்டாம் 

உடை தேடி எனக்குடுத்தி 
ஒழுங்காகப் பையடுக்கி 
பள்ளிக்கூடம் செல்வதற்குப்
பாதி வழி வரவேண்டாம் 

கறுப்புப் பொட்டுவைத்தும் 
கற்பூரம் சுற்றி வைத்தும் 
கண்ணேறு கழித்து நீ 
கவலைகள் படவேண்டாம் 

காரத் துவையலோடு 
கறி சமைத்துச் சோறாக்கி 
உடல் வருத்தி நீ எனக்கு 
ஒரு வாய் ஊட்டிடவும் வேண்டாம் 

ஏங்கி நான் அழுகும் 
இன்னல் பொழுதுகளில் 
அருகே நீ இருந்தால் 
அது போதும் ஆறுதலாய் 

அம்மா நீ யாரோ ...... ?


by M.Manikandan
05-May-15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக