வியாழன், 18 டிசம்பர், 2014

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும்

நகரத்தார் இல்லம் நலமே பெருக்கட்டும் - M.Manikandan

அருணமலை ஈசனோடு ஆறுபடை நாயகனும்
அருளுவக்க‌ ஆலயமாய் ஆக்கிவைத்த‌ கோட்டையிலே
தருணமிதில் நாமிருந்து தந்தபுகழ் ஏற்றுவதாய்
கருணைமனப் பூர்விகரைக் கைபொருத்திப் போற்றிடுவோம் 1

காடுதனைச் சீர்படுத்திக் கட்டிடக்கலை புகுத்தி
நாடுதனில் கோட்டையென்றே நலமாய்ப் பெயர்படுத்தி
பாடுபட்டு நம்முன்னோர் பகட்டாய் ஆக்கிவைத்த
வீடுதனைச் சந்ததிக்காய் விட்டுக் கொடுத்தாரே     2

கடலரித்துப் போனதுவாம் காவிரிப்பூம் பட்டினத்தில்
உடன‌ழைத்த மன்னருக்காய் ஒன்றிணைந்தே பாண்டிமண்ணில்
மடையுடைத்து மறுபடிநீர் மனையகத்தே புகுந்திடாது
வடிவமைத்தார் படியடுக்கி வாசலது உயரமதில்     3

பட்டண‌‌ வாசலெல்லாம் பதமாய்ப் பதிந்தசிலை
மட்டும்போ தாதென்றே மரத்தினில் சிற்பக்கலை
சிட்டாய் வரலாற்றைச் செதுக்கிய கதவுநிலை
எட்டாக் கற்பனைதான் இந்நாள் ந‌மதுநிலை     4

சனங்கள் வந்தமரச் சதுரச் சமுக்காளமிட்டு
தனங்கள் பெருக்கிவரத் தானங்கள் பூசையிட்டு
தினங்கூடி வாழுதற்கும் திருமணங்கள் செய்தற்குமாய்
மனங்கூடித் திட்டமிட்ட மகத்துவமே பேரில்லம்    5

மொட்டுடன் இலைகொட்டும் முற்றம் வளவென்றும்
இட்டொரு அடுப்பிருக்க இரண்டாங் கட்டிருக்கும்
கட்டிட நுணுக்கமதை கற்றோர் வகுத்தவித‌ம்
கட்டுகள் மூன்றோடே கணக்காய் நான்கிருக்கும்     6

பட்டாலை பத்தி,சடப் பரப்பம்பாய் விரித்திருக்கும்
பட்டியக்கல் நெடுவாசல் பாதிச்சுவர் பளிங்கிருக்கும்
முட்டைப் பூச்சுடனே முழுச்சுவரும் பூசிரிக்கும்
கட்டிய களஞ்சியங்கள் கொட்டிய நெல்பெருக்கும்     7

"எப்பத்தான் வருவாக‌ எம் ஐயா கடல்தாண்டி"
இப்படியாய் மனமேங்க‌ இருப்பாக வரம்வேண்டி
அப்பத்தா ஆயாக்கள் அகத்தே செய்ததவம்
அப்பப்பா அடையாளம் அப்பாவித் தூண்களெலாம்     8

வீதி இரண்டிணைக்கும் விதமாய் அமைந்திருக்கும்
ஆதி நகரத்தார் ஆக்கிய இல்லங்கள்
மேதினி அதிசயிக்க மேலாய்ச் சிறக்க‌ட்டும்
சோதிச் சிவனருளால் சுகமே பெருக்கட்டும்     9

அந்திப் பொழுதெல்லாம் அடுத்தோர் விடியலுக்கே
அந்தப் பழஞ்சொத்தும் ஆக்கிடப் புதுமைக்கே
சிந்தனை தவறவிட்டு சேதார மாக்கவேண்டாம்
முந்திச் செயல்பட்டு முகப்பில்லம் காத்திடுவோம்     10

உதிரம் தந்தசுவர் உதிரவும் விடலாமொ ?
புதினம் மாற்றமென்றே புகழழித் திடலாமோ ?
அதிகம் சொல்லவில்லை அறிந்தது கொஞ்ச‌மதை
பதிகம் எழுதிவந்தேன் பழையது நிலைக்கட்டுமே.        


ஆக்கம்: கல்லல். மீ.மணிகண்டன்

புதன், 29 அக்டோபர், 2014

கதிராய் எழுவாய் கதிரேசா ... M.Manikandan

கதிராய் எழுவாய் கதிரேசா

ஆனைமுக நாயகனே அருமருந்தே அற்புதமே
மோனைத்தமிழ் காக்கும் மூவாமுதல் நிலையே
சேனைமண வாளனை சேய்மொழியில் நான்பாட
தானைத் தளபதியே காத்தருள்வாய் கணபதியே

விண்ணாடும் நிலவொளியே வேல்பிடிக்கும் செஞ்சுடரே
என் நாடும் காத்தருளும் எழிற்பழனி வேலவனே
கண்ணான முருகனுனை கவிபாடி நானழைக்க
என்னாசைக் கண்மணியே எழுவாய் இதுசமயம்

தில்லை நடம் புரியும் சிதம்பரனார் புத்திரனே
கிள்ளை மொழி பயிலும் வள்ளி மணம் கொண்டவனே
முள்ளை எடுத்தாலும் முல்லையென மாற்றிவைக்க
பிள்ளை மனத்தரசே எழுவாய் இதுசமயம்

கண்ணுதலான் நல்மணியே கன்னல்மொழி நாயகமே
மண்ணிலத்தார் மன்றாடும் மாழைமயில் வாகனனே
விண்ணப்பித்தேன் என்குறைகள் வேகமாக மாறிடவே
அண்ணல் மலைக்கோவே எழுவாய் இதுசமயம்

பொல்லாத்திசைகளைந்து பொய்கையென வார்த்தருளும்
புல்லார் பகையழிக்கும் புள்ளிமயில் வேலவனே
செல்லாத காசெனவே பிள்ளைனிலை மாறும்முன்னே
வில்லார் வடிவழகா எழுவாய் இதுசமயம்

வானோர்குலம் காக்க வண்ணமயில் ஏரிவந்தாய்
தானவர் திரளழிக்க தற்பரமாய் நீயிருந்தாய்
மானாம் என் மிடிதீர்க்க மன்னவனே தாமதமேன்
தேனாம் தமிழ் தொடுத்தேன் எழுவாய் இதுசமயம்

தாலாட்டும் நேரமிதில் தாயுனை நான் தேடுகிறேன்
பாலூட்டும் வேளைதனில் பதுங்குவதேன் வேலவரே
வேலாட்டம் விழியிரண்டால் வேண்டும் வரம் நீயருள
கோலாட்டம் ஆடியிங்கு எழுவாய் இதுசமயம்

அள்ளிக்கொடுத்ததெல்லாம் ஆர்வலனே மாறியதேன்
சொல்லிக் கொடுத்தாரோ சூட்சுமத்தை நானறியேன்
கள்ளி மலராதோ கார்முகில்தான் பெய்யாதோ
வெள்ளி மயிலேரி எழுவாய் இதுசமயம்

ஆலைக்கரும்பாகி ஆட்டுவிக்கும் என் நிலையை
சோலைக் கதிராக்க சுந்தரனே தாமதமேன்
நாளையென தேதி சொல்லி நாளைக் கடத்தாமல்
வேளை பிறந்ததென்று எழுவாய் இதுசமயம்

ஒப்பேதும் இல்லையென்று உன்னடியை நம்பிவந்து
இப்போதழைப்பதுவும் கேட்டு மனம் மாறலையோ
சிப்பிக்குள் முத்தாகி எத்தனை நாள் அங்கிருப்பாய்
தப்பாமலே இணங்கி எழுவாய் இதுசமயம்

வாடா மலர்க்கரத்து வஞ்சியரின் நாயகனே
பாடாத செந்தமிழே பார்த்தருளும் தாயகமே
தேடி வருவோர்கள் தேம்புதல் உனக்கழகோ
நாடிக் குறை தீர்க்க எழுவாய் இதுசமயம்

சொல்லாத என்னிலையை சொல்லிவிட்டேன் இப்போது
கல்லாய் இருப்பதென்ன கந்தா மனமிறங்கு
இல்லார் நிலை மாற்றும் இன்முகத்துச் செண்பகமே
நல்லார் மனங்குளிர எழுவாய் இதுசமயம்

*** மீ.மணிகண்டன்

வியாழன், 2 அக்டோபர், 2014

அறிவிலி யான் ... M.Manikandan

மகத்துவம் அறியார்க்கு
மருத்துவம் இனியில்லை.
பொருளே புசித்தார்க்கு
புலரும் பொழுதில்லை.
மடியும் மாந்தர்க்கு
மகிழ்ச்சி யென்றில்லை – இதை
அறிந்தும் அறிவிலியான்
அகத்தவம் மேற்கொள்ளேன்.

by M.Manikandan

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மன நிறை வெனும் மழை ... M.Manikandan


கட்டிய மலர்களும்,பறவை களும்,
கன்றுட னசைமரங் களும்,சா ரலும்,
கற்சிலை, கடற்கரை, மலை,மே கமும்,
கண்டினுங் கரைந்திடா தொருதா கமும்…

எண்ணியே மயங்கிடக் கிளிக்கீச் சுகள்,
எங்கினு மொலிக்கமூங் கிலின்பாட் டுகள்,
எப்பொழு துடன்பாணர் களின்மெட் டுகள்,
என்னிலை யிலுந்தளர்ந் திடாக்கா துகள்…

அற்புத மனமகிழ் மழைவா சனை,
அந்திம லரும்புது மலர்வா சனை,
அத்தரும், புனுகுடன் சுகவா சனை,
அன்றியு மதனினும் ஒருயோ சனை…

உன்னத வகையொடப் பளபா யசம்
உப்புட னறுசுவை யுணவா யிரம்
உச்சியு மிரவுமுண் டுமயங் கியும்
உத்தர விடுங்குடல் பசிமே விடும்...

கட்டுடல் மகிழவும் களைப்பா றவும்
கன்னிம ணவாளனும் பரிமா றவும்
கட்டிலும் தலையணை தினம்மா றியும்
கற்றிடக் கலைவளர் வதுநூ தனம்...

இத்தனை பருகியும் நிறையா தது
இன்னுமெ னதேடுதல் குறையா தது
இன்னுமி தெதற்கென உணரா தது
இன்னலே மிகுமினிப் பிழைதா னது

by M.Manikandan

புதன், 3 செப்டம்பர், 2014

யானோ வணிகன்

கற்பனைச்சுருளில்
படம்பிடித்தேன்
காகிதப் பக்கத்தில்
திரையுமிட்டேன்

...விற்பனை கூவியும்
...வேகமில்லை
...வீங்கிக்கிடக்குது
...வீட்டுகுள்ளே...!

உற்சவ மூர்த்தியை
உருவமைத்தேன்
ஊர்வலம் போய்வரத்
தேரமைத்தேன்

...ஊருக்குச் சொல்லியும்
...ஓசையில்லை
...உறங்கிக் கிடக்குது
...ஓலைக்குள்ளே...!

பொய்யும் புரட்டும்
போகும் பாதையில்
பூவும் பொன்னுமே
மூடிக்கிடக்குது

...புல்லர் அறிந்திட
...வில்லையெனிலோ
...போகட்டுமே ஒரு
...தோல்வி இல்லை...!

by M.Manikandan

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் ... M.Manikandan

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் போட்டிக் கவிதை
(eluthu.com) மூன்றாம் பரிசு வென்ற படைப்பு
----------------------------------------------------------------------------------

பொன்னிறைக் கூடத னூடே
மின்மினிக் கோலம தாலே
உன்னத வாழ்வதை மேலே
அன்புட னாக்கிடுஞ் சேயே !

செந்நிற மாயொரு வீணை
என்னிலை ஏற்றிடுஞ் சேனை,
நன்னில மீதினில் வானை
புன்னகை யாலுதிர்ப் பானே !

முன்னிரு பாலொளிப் பற்கள்
மின்னிட வான்பிறை வீணே !
கன்னிக ளாயிரு சொற்கள்
கன்னலு மேகெடுந் தானே !

தன்னிரு கைகளில் மண்ணை
பின்னொளித் தாட்டுவான் கண்ணை
முன்வர வேயவ னன்னை
நன்னடை காட்டிடு வானே !

அன்னிய மாகிடும் நாளை
என்வச மாக்கிடும் பாளை !
என்னவன் பூநகை போலே
முன்னிலை வேரெது மேலே !

முன்னுரை ஆகிவந் தானே
நன்னுரை ஆக்கவந் தானே
இன்னுரை வாழ்வது வீழா
தென்றுரைத் தாடிவந் தானே !

பன்னிரு ஆண்டுக ளோடி
பின்னது பூத்தென போடி,
நன்னுல காக்கிட வந்த
என்னரும் பாலனுக் கீடோ !

சொன்னது ஓர்துளி தேனே
இன்னமு தோரடை தானே !
இன்னமு மாக்கிட பேனா
வின்முனை, மைவளம் காணா !

by M.Manikandan


புதன், 6 ஆகஸ்ட், 2014

மழை கா ... M.Manikandan

வான் தரும் மழை நீர்
தா வரம் பெறும் நீர்
தா னென உணர் வீர்
மாண் புடை மனத் தீர்.

by M.Manikandan

பிரபலமான இடுகைகள்