சொல்லாத ஒன்று ...மீ.மணிகண்டன்
முதுகுச் சவாரியில்
முழங்கால் வலித்ததைச்
சொல்லவே இல்லை ...
மழைக் காய்ச்சலில்
மருத்துவமனை வரிசையில் விழிகள் உறங்காத
வேதனையைச்
சொல்லவே இல்லை ...
மூன்றாம் வகுப்பில்
முழுக்கால் சட்டைக்கு
அழுதபோது
மூன்று நாட்கள்
இருக்கிறது இன்னும்
முதல் தேதிக்கு என்று
சொல்லவே இல்லை ...
மிதிவண்டிக் கனவொன்றை
முகப்பு வாசலில் நனவாக்கி
கழுத்துவலி மருத்துவத்தைக்
கடத்தி வந்ததைச்
சொல்லவே இல்லை ...
விடுதிக்கு வந்து என்
வெறுங்கைகளுக்குள்
திணித்தபோதும்
ஒரே எட்டுமுழ வேட்டியை
ஒருபக்கமாகவே கட்டிவரும்
உண்மையைச்
சொல்லவே இல்லை ...
மாதக் கடைசியில்
மணிக்கட்டைத் தடவிப் பார்த்து
மகனேன்னைப்
பார்த்தபோதுதான் புரிந்தது
நீ சொல்லாதவைகளில்
ஒளிந்திருக்கும் சுகத்தையும்
சொல்லவே இல்லை ...
... மீ.மணிகண்டன்
#மணிமீ
25/Jun/15
அருமையான கவிதை... 👌
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு