சனி, 11 ஜூன், 2022

ஆனந்தவிகடனில் எனது கவிதை

ஆனந்த விகடனில் எனது கவிதை
2016ம் ஆண்டு ஜூலைத்திங்கள் ஆனந்த விகடனில் எனது கவிதை. 
ரூபாய் 500 சன்மானம் தந்த ஆனந்த விகடனுக்கு என் நன்றி!

மீ.மணிகண்டன்

ஆனந்தவிகடனுக்கு நன்றி ... மீ.மணிகண்டன்





அப்பாவின் துணை

சிறுகதையின் தலைப்பு: அப்பாவின் துணை

எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ)

"எதையோ மறந்து விட்டேனே...", என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு வைத்த பை... "அப்படி என்ன மறந்திருப்பேன்...", வழியில் பேருந்து நிழற்குடையின் நிழலில் நின்று அங்கிருக்கும் சிமெண்ட் இருக்கையில் பையினை வைத்து எழுதி வந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டோமா என்று சரி பார்த்துவிட எண்ணினார்... இப்படித்தான் ஒருமுறை வெற்றிலை வாங்க மறந்து விட்டார் வீட்டிற்கு சென்றபின் மனைவியின் முதல் கேள்வி, "வெற்றிலை எங்கே?", கமலம் ஒரு வேளை உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார் ஆனால் வாயில் வெற்றிலை இல்லாமல் ஒரு பொழுதும் நகர்வது சிரமம். அன்று தான் எவ்வளவு கோபம்... எவ்வளவு கேள்விகள்... "எதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா? கடைக்கு பொய் வருகிற வேலை மட்டும் தான் செய்யுறீங்க அதையாவது ஒழுங்கா செய்யுறீங்களா?  அப்படி என்ன ஞாபக மறதி? பொறுப்பு இருந்தால் இப்படி மறப்பீங்களா? எங்களை எல்லாம் எப்படி உங்க நினைப்பில் வைச்சிருப்பீங்க? எப்படித்தான் நீங்க வங்கியில் வேலை செஞ்சீங்களோ? சமர்த்தா அவங்க பணிஓய்வு குடுத்து வீட்டுக்கு அனுப்பீட்டாங்க? எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இருக்கா? ம்..க்கும்...".

அப்பாவின் துணை ... மீ.மணிகண்டன்

"சரி இப்பவே நான் பொய் வாங்கிட்டு வந்துடறேன்... கோபப்படாதே", என்றவரிடம் உடன் பதிலளித்தார் கமலம், "ஆஹா போதும் உங்க அக்கறை... வெளியில பாக்கறவங்க இந்த அம்மா இவ்வளவு பெரியவரை வெயில்னு பாக்காம இத்தனை தடவை கடைக்கு அனுப்புதுன்னு என்ன கரிச்சுக் கொட்டணும் அதுக்குத்தானே.. அப்பப்பா நல்ல பேர் இல்லைனாலும் பொல்லாப்பு வாங்கித்தரன்னு இப்படி அலையுறீங்களே...", ஒன்றும் பேச முடியாமல் அறைக்குச்சென்று விட்டார் சிவநேசன்.

அதுபோல இன்று எதுவும் நடந்து விடக்கூடாதே என்று சிமெண்ட் இருக்கை மீது வைத்த பைக்குள் பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா என்று சரி பார்த்தார்.

அரிசி 2 கிலோ ... இருக்கிறது
உ.பருப்பு... இருக்கிறது
பொன்னாங்கண்ணிக் கீரை பார்க்கவே குளிர்ச்சியாக இருந்ததால் பட்டியலில் இல்லாவிட்டாலும் அதை வாங்கி வைத்திருந்தார் அதையும் கொஞ்சம் விலக்கி...
சிந்தால் சோப்பு 2 ... இருக்கிறது
சர்க்கரை... இருக்கிறது

"பட்டியலில் உள்ள யாவும் இருக்கிறது... பொருட்கள் மறக்கவில்லை... இருந்தாலும் எதையோ மறந்து விட்டேனே..." என்ற எண்ணம் துளைத்துக் கொண்டே இருக்க....பையை தூக்கிக்கொண்டு மீண்டும் நடையைத் தொடர்ந்தார். ராஜன் மளிகைக் கடையிலிருந்து அவர் வீடு சுமார் 400 மீட்டர் தொலைவு.

"ஒரு வேளை மகன் ஏதாவது சொல்லி மறந்து விட்டேனா... இல்லையே அவன் வாங்கி வரச்சொன்னது வாசன் டைலரிடமிருந்து அவனது தைத்து தயாராக இருக்கும் கால்ச்சட்டை மட்டும்தான்...", இதோ டைலர் கடை வந்து விட்டது, கடையில் இருந்தது தையற்காரரின் உதவியாளர் ஒரு வாலிபர். அவரிடம் ரசீதை நீட்டினார் சிவநேசன். அந்த வாலிபர் வாங்கிக்கொண்டு ரசீதில் என்ன எண் இருக்கிறது என்று பார்த்தார் பின்னர் விநியோகத் தேதி என்ன என்று பார்த்தார் இன்று தான் என்று சரி பார்த்துக்கொண்டவர் தைத்துத் தயாராய் இருக்கும் உருப்படிகளில் எந்த எண் ரசீதுடன் ஒத்துப்போகிறது என்று சரிபார்த்து, "ம்... இதோ கிடைத்துவிட்டது..." அந்த பாண்டை மடித்து முறையாக ஒரு காகிதப் பைக்குள் இட்டு சிவநேசனிடம் நீட்டினார், சிவநேசன் பதிலுக்கு ரூபாய் 500 ஒற்றைத்தாளை எடுத்து நீட்டினார்... கடை வாலிபரோ, "சார் பில் 450, 450 ஆ இருந்தா குடுங்க இல்லாட்டி அண்ணன் வரணும் என்னிடம் சில்லறை இல்லை", என்றார். "அண்ணன் எப்போ வருவார்?" என்று கேட்டார் சிவநேசன். "சாப்பிடப் போயிருக்கார் இப்போ வர்ற நேரம்தான் அதுவரைக்கும் இந்த நாற்காலியில் உட்காருங்க", என்று ஒரு நாற்காலியைக் காட்டினார். இருக்கையில் அமர்ந்த சிவநேசனுக்கு பழைய ஞாபகம் தொடர்ந்தது... அன்று மகன் கேட்ட பிளேடு வாங்க மறந்து விட்டார் அதற்குத்தான் மகனிடம் எவ்வளவு பேச்சு வாங்கினார்... "ஏன்பா நான் கேட்டது ஒரேயொரு பொருள் அதைக்கூட உன்னால வாங்கி வர முடியலையா... இந்த ராத்திரில பொய் நான் எந்தக் கடையத் தொறக்கச்சொல்லி வாங்குவேன்... நேத்தே பிளேடு தீர்ந்து போச்சு.. பழசை வச்சே அட்ஜஸ்ட் பண்ணிட்டிருக்கேன்... ஷேவ் பண்ணாமப்போனா மேனேஜர் மேலேருந்து ஷூ வரைக்கும் மொறைச்சுப் பார்ப்பான்.. அது போட்டும் ஷேவ் பன்னாமப் போனா எந்த டாக்டராவது மெடிக்கல் ரெப்பா என்ன மதிப்பானா? நீட்டாப்போகும்போதே ரெண்டு மணிநேரம் உட்கார வச்சுடறானுங்க... நீயெல்லாம் வங்கியில காற்றாடி, குளுகுளு அரைன்னு சொகுசா இருந்து வேலை பார்த்த ஆளு உனக்கெல்லாம் எங்க கவலை புரியாது... போப்பா...", இன்னும் மகன் உதிர்த்த வார்த்தைகளை எழுத்தில் சொல்வது நாகரிகம் அல்ல.

"சார் இந்தாங்க 50 ரூபாய் பாக்கி", என்று நினைவைக் கலைத்தார் கடைக்கார வாலிபர், "அண்ணன் வந்துட்டாரா?", என்று கேட்ட சிவநேசனிடம், "ம்... இதோ...", என்று தையற்கடை உரிமையாளரைக் காட்டினார் அந்த உதவியாளர். "நன்றி சார்", என்று இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு சிவநேசன் வீடு நோக்கிய தன் நடையைத் தொடர்ந்தார்... மீண்டும் தொடர்ந்தது மறந்துவிட்ட உணர்வு... "நான் உண்மையிலேயே ஏதாவது மறந்து விட்டேனா இல்லை வெறும் நினைப்பா?", சிந்தனை குழப்பமானது. "மகளின் விருப்பம் ஏதாவது வாங்காமல் விட்டுவிட்டேனா... இருக்காது... அவள்தான் கோபத்தில் இருக்கிறாளே எதையும் வங்கச் சொல்லவில்லை என்பது திண்ணம்". ஏன் அவளுக்கு கோபம்... சென்ற முறை மருதாணிப் போடி வாங்கி வரச்சொல்லியிருந்தாள் மருதாணிப் பை வாயில் பாதித் திறவு இருந்ததைக் கவனிக்காத சிவநேசன் அதை அப்படியே பையில் போட்டுக்கொண்டார் வீடு வந்து சேர்ந்தபின் பொருள்களை எடுத்து வைத்தார் ஆனால் அவரின் போதாத நேரம் பிரிந்திருந்த மருதாணிப் பொடிப் பை முழுவதும் கொட்டி காய்கறிகள் மீதும் மீதி பையிலுமாக சிதறி ஒட்டிக்கிடக்க காய்கறிகளைக் கழுவி எடுத்துவிட்டார் ஆனால் தண்ணீரோடு கரைந்து போன மருதாணிப் பொடியை அவரால் திரட்டி எடுக்க முடியாமல் மகளிடம் வாங்கி கட்டிக்க கொண்டார்.

சிந்தனைக்கு முடிவுரை எழுதியது வீட்டு வாயிற்படி... வீட்டுக்குள் சென்றவர் பொருள்களை மனைவி கமலத்திடம் நீட்டினார்... "ஒரு தம்ளர் காப்பி போடுறயா...", மெதுவாகக் கேட்டார் சிவநேசன். "ஏன் சாப்பிடுற நேரத்துல காப்பி?", எதிர் கேள்வி... "சரி வேண்டாம்.", என்றுவிட்டு அறைக்குள் சென்றார்... மீண்டும் மறந்த உணர்வு சிவநேசனைத் தீண்டியது... எதோ உறுத்துகிறதே "என்ன மறந்தேன்?", "இந்தாங்க...", காப்பித் தம்ளரை நீட்டினார் கமலம். "இன்னிக்கு தேதி 5 ஆயிடுச்சு பென்ஷன் வந்திருக்குமில்ல சாயங்காலம் வாக்கிங் போகும்போது மறக்காம ATM போயிட்டு வந்துடுங்க". இந்தப் பேன்ஷன்தான் சிவநேசனை மாதந்தோறும் அவர் மனிதன் என்பதை அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது... "சரி", என்றார். அடுப்படிக்குச் சென்றுவிட்ட கமலம் அழைப்பு மணி அழைக்கும் ஓசை கேட்டு "வாசல் கதவைத் திறக்கறீங்களா... நான் அடுப்படிக்கு வந்துட்டேன்...", என்றார். மெதுவாக முகப்பு நோக்கி நடந்தார் சிவநேசன்... கதவைத் திறந்தார்... வாசலில் நின்றவர் ராஜன் மளிகைக்கடைச் சிப்பந்தி... "என்னப்பா?", என்றார் சிவநேசன். "இந்தாங்க மறந்து கடையில விட்டுட்டு வந்துட்டீங்க எங்க இதுக்காக திரும்ப நீங்க நடந்து வந்து சிரமப்படப் போறீங்களோன்னு வேகமா வழிநெடுக உங்கள பார்த்துகிட்டே வந்தேன்". என்று மூச்சு வாங்கிக்கொண்டே தான் கொண்டு வந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை சிவநேசனிடம் நீட்டினார் சிப்பந்தி. 

...மீ.மணிகண்டன்

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்
குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.

வெள்ளி, 10 ஜூன், 2022

மழையின் தாகம்


மழையின் தாகம் ... மீ.மணிகண்டன்

மழையின் தாகம் 

சொட்டுச் சொட்டாய்
சோலையில் சாரல் 
சோ வேனும் சத்தம் 
அவைகளின் கூவல்
 
கரும் புகை மண்டலக் 
கருவினில் உதயம் 
கருப்பு கரைந்த 
கண்ணாடித் துளியும்

ஒன்றன் பின் ஒன்றாய் 
தொடர்ந்த பிறப்பு 
வரிசை மாறா 
வாலிப வனப்பு 
 
மேக வாழ்வின் ரகசியத்தை 
புள்ளிப் புள்ளிப் பந்துகளாய் 
பூவின் இதழில் உருண்டெழுதும் 
புதுமைக் காதல் கதை கதையாய்
 
காற்றுப் பாதை நெடுகிலுமே 
கவிதை பாடி வந்த துளி 
ஆற்றைத் தேடி அலைந்தழுது 
விழுந்த இடமோ சாலை வெளி!

மீ.மணிகண்டன்

புதன், 8 ஜூன், 2022

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்

கதையின் தலைப்பு: குடைக்குள் கங்கா

எழுதியவர்: மீ.மணிகண்டன் (புனைப்பெயர்: மணிமீ)

"இந்த மழை இப்போதைக்கு விடாது போலிருக்கே..." சற்றே கோபத்தோடு மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் கங்கா. 4:50க்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை, என்னதான் குடை பிடித்து நின்றாலும், சாரல் மழையில் உடைகள் நனைவதும், பாதம் தொட்டுச் சாலையில் ஓடும் மழை நீரும் சங்கடத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது கங்காவிற்கு. அந்தப் பேருந்து நிறுத்தத்தில், கங்காவைத்தவிர இன்னும் ஒன்றிரண்டு நபர்களும் பெருந்திற்காகக் காத்திருந்தனர், ஆனால் எந்தப் பேருந்திற்காக அவர்களின் காத்திருப்பு என்று தெரியாது. அங்கே நின்றிருந்த வசந்த்தும், பெருந்திற்காகத்தான் நின்றான் ஆனால் அவனிடம் குடை இல்லாத காரணத்தால் மழையில் நனைந்தவாறே நின்றிருந்தான். மின்னலும் இடியும் கருத்த மேகக்கூட்டமும் மாலை ஐந்துமணியைக்கூட 

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்

இருட்டாக்கிக்கொண்டிருந்தது. கங்கா சற்றும் எதிர்பார்க்காத வேளையில் அவளின் முன் அந்தக் கார் வந்து நின்றது, காரை ஓட்டிவந்த அந்த வாலிபன் உள்ளிருந்தவாறே கங்காவிடம் ஏதோ சைகை காட்டினான். அவனது சைகையைப் பார்த்ததும் தன் கண்களாலேயே அவன்மீது கோபத்தைக் கக்கினாள் கங்கா. கார் வாலிபன் அவளின் கோபத்தைச் சற்றும் சட்டை செய்யாமல் கார் கண்ணாடியை இறக்கி, "மழையில ரொம்ப நேரமா நனையுறீங்க இஃப் யு டோன்ட் மைண்ட் ஐ வில் ட்ராப் யு" என்றான், "உங்க கரிசனத்திற்கு ரொம்ப நன்றி, நான் ஒண்ணும் மழையில நனையல, என் கைல குடை இருக்கு, மைண்ட் யுவர் ஓன் பிசினெஸ்", என்று சூடாக வார்த்தைகளை அவன் மீது கொப்புளித்துவிட்டு சற்றே தான் நின்ற இடத்தை விட்டு நகர்ந்து நின்றாள் கங்கா. இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வசந்த் தனக்குள் சிரித்துக்கொண்டான், அவனது மனப்பறவை, "அடப்பாவி... நான் மழையில் நனைஞ்சுக்கிட்டு இருக்கேன், அவள் குடைக்குள் நிற்கிறாள், என்னிடம் உதவி வேண்டுமா என்று கேட்கத்தோன்றவில்லை, அவளிடம் கேட்டு வாங்கிக்கட்டிக்கொள்கிறான், இவனைப்போன்ற ஆட்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்", என்றது. மனப்பறவையை அமைதிப்படுத்திவிட்டு கங்காவை நோக்கி நடந்தான் வசந்த்.

தன் அருகில் யாரோ ஒருவன் வருவதைக்கண்டு கங்கா குடையை இறுக்கப் பிடித்துக்கொண்டு இன்னும் சற்று தள்ளி நின்றாள், "கடவுளே இந்த பஸ் இன்னைக்கின்னு பார்த்து இப்படி சோதிக்குதே", என்று நிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், அவள் அருகில் சென்ற வசந்த், "எஸ்க்யூஸ் மீ, நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா உங்க குடையில கொஞ்சம் இடம் தருவீங்களா, பாருங்கா ரொம்ப நேரமா நனைஞ்சிகிட்டு இருக்கேன், தலை கனக்க ஆரம்பிச்சிடுச்சு, தலையைத் துவட்டி கர்ச்சீஃப் முழுக்க ஈரம் ஆயிடுச்சு", என்று தன் ஈரக் கர்ச்சீஃப்பைக் காட்டினான். "யாரிவன்?" என்கிற தோரணையில் வசந்த்தை ஏறிட்டுப் பார்த்தாள் கங்கா. "என்ன அப்படிப் பார்க்குறீங்க, இங்க பாருங்க குடையில மட்டும் கொஞ்சம் இடம் கொடுங்க போதும், உங்க மேல என் சுண்டு விரல் கூடப் படாது, நீங்க அந்த கார்க்காரனுக்கு பதிலடி கொடுத்ததை பார்த்துக்கிட்டுதான்  நின்றேன்", என்று சொல்லிவிட்டு அவன் சட்டையை சரிசெய்து கொண்டு நின்றது கங்காவிற்கு குபுக்கென்று சிரிப்பை வரவழைத்தது, வசந்தின் அந்த அணுகுமுறை அவளுக்கு குழந்தைத்தனமாகத் தோன்றவே, "ம்", என்று தன் குடையை வசந்தை நோக்கி நகர்த்த, வசந்த்தும் சற்று முன்வந்து தன் தலை மழையில் நனையாத வண்ணம் குடைக்குள் நின்றுகொண்டான்.

அந்நியனின் அருகாமை, சற்றே லேசான பயம் கங்காவின் மனத்தைக் கவ்வினாலும் தான் நின்றிருக்கும் இடம் ஒரு பொது இடம் இங்கே எந்தவகையான எதிர்ப்பானாலும் அதைச்சந்திக்கும் துணிச்சல் தன்னிடம் இருக்கிறது என்றே கங்கா நம்பினாள். சற்று நேரத்தில் ஒரு சிறுவன் அவர்கள் இருவரும் நிற்கும் இடம் நோக்கி வந்தான், அவன் அணிந்திருந்த சட்டையின் அழுக்கு வாடை எவரையும் முகம் சுழிக்க வைக்கும், கங்காவும் வசந்த்தும் அதற்கு விதிவிலக்கல்ல, மழையில் மலர்ந்த மண்வாசனையை மறைத்து மேலோங்கியது அந்தச் சிறுவனின் சட்டையின் அழுக்கு வாடை, ஒரு வேளை இந்த மழைக்குப் பின் அந்தச்சட்டையில் இருந்து அழுக்கு மறையக்கூடும். கையளவிற்கும் சற்றே கூடுதல் அளவிலான நெகிழிப் பை ஒன்று சிறுவனின் தலை மழையில் நனையாத வண்ணம் கவசமாக இருந்தது. அருகில் வந்த சிறுவன் "அக்கா டீ, பன் வாங்க ஏதாவது காசு கொடுக்கா..." என்றான். வசந்த் அந்தச் சிறுவனைப் பார்த்தான், மனப்பறவை மீண்டும் பேசியது, "பாரு, ரெண்டு பேர் நிக்கிறோம் ஆனா இவனுக்கு என்னிடம் கேட்கத் தோன்றவில்லை அவளிடம் கேட்கிறான், உதவியானாலும் சரி உபாத்திரவமானாலும் சரி, எல்லோருக்கும் பெண்கள்தான் கண்களுக்குத் தெரிவார்கள் போல". வசந்த் சிறுவனின் மீது பதித்த அந்தப் பார்வையின் அர்த்தத்தை கங்கா புரிந்துகொண்டிருக்கக்கூடும். லேசான புன்னகையோடு கங்கா வசந்தை நோக்கினாள், "நான் வேணும்னா 'டீ'க்கு கொடுக்கிறேன், நீங்க 'பன்'க்கு கொடுங்க", என்றாள் கங்கா, இதைச் சற்றும் எதிர்பார்க்காத வசந்த் சுதாரிப்பதற்குள் அவனது மனப்பறவை மீண்டும் தலை தூக்கியது, "எப்படி இவள் இவ்வளவு ஷார்ப்பா இருக்கா?", என்று கேட்ட மனப்பறவையை சட்டை செய்யாமல் கங்காவிற்கு, "யெஸ்.. யெஸ்... ஷூர்", என்று பதிலளித்தவன் தனது சட்டைப் பையிலிருந்த நனைந்த ரூபாய்த் தாள்களிலிருந்து சிறுவனுக்குத் தேவைப்படும் காசை எடுத்தான், கங்கா வசந்த்திடம், "இந்தக் குடையை கொஞ்சம் பிடிங்க நான் அவனுக்கு என்னோட பர்சில இருந்து காசு எடுத்து கொடுத்துட்டு வாங்கிக்கறேன்," என்றாள். இதை எதிர்பார்க்காத வசந்த்திற்கு பட்டென்று அவளிடமிருந்து குடையைப் பெரும் ஒரு சூழல், அவளின் கை விரல்கள் வசந்தின் கைவிரல்களைச் சந்தித்த அந்த ஒன்றிரண்டு வினாடிகள் வசந்த் மழையை மறந்தான் தான் நிற்கும் மண்ணை மறந்தான். பாரதிராஜாவின் அந்த ஐந்து வெள்ளை உடை தேவதைகள் அங்கே வந்து இளையராஜாவின் லல்லல்லா பாடிச்சென்றது அவனுக்கு மட்டுமே புலப்பட்டது.

சற்று நேர இடைவெளியில் கங்காவிற்கான பேருந்து வருவது தெரிந்தது. பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பது நன்றாகத் தெரிந்தது, இருந்தும் எப்படியாவது ஏறிவிட வேண்டும், சீக்கிரம் வீடு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவளுக்குள் ஓங்கியிருந்தது. "ஓகே, எனக்கு பஸ் வற்ற மாதிரி தெரியுது நான் கிளம்பறேன்", என்று வசந்த்திடம் சொன்ன கங்கா அவனது பதிலுக்கு காத்திராமல் பேருந்தில் ஏறுவதற்குத் தோதாகச் சற்று முன்னோக்கி நடந்தாள். வசந்த் மீண்டும் மழையில் நனையலானான். ஈரமாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் தனது கைக்குட்டையை எடுத்து மீண்டும் தன் தலையைத்துடைப்பதும் பிழிவதுமாக, மழை தனக்கிட்ட வேலையைத் தொடரலானான். வேகமாக வந்த பேருந்து சரியாக நிறுத்தத்தில் நிற்கவில்லை... சற்று தள்ளி நிற்கும் என்று எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றம் தரும் வகையில், பேருந்து நிற்காமலேயே சென்றுவிட, அதிகமானோர், மழையினையும், அந்த அந்திப் பொழுதினையும் கடிந்துகொண்டிருந்தனர். கங்கா மீண்டும் திரும்பி தான் முன்பு நின்றிருந்த இடத்திற்கு வந்தாள், வசந்த் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அப்பொழுதுதான் வசந்த்தை மழையில் விட்டுச்சென்றதை உணர்ந்தாள் கங்கா. "மன்னிக்கணும், பஸ்ஸை பார்த்ததும் நீங்க மழையில நனைவீங்கங்கறத மறந்துட்டு வேகமா போயிட்டேன்", என்று வசந்த்திடம் வருந்தினாள் கங்கா. "அட பரவால்லிங்க... இதுக்காக எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு... மழை நேரம்... மாலை நேரம்... எப்படியும் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்ங்கிற நினைப்பு இருக்கிறது எல்லோருக்கும் சகஜம்தானே." என்று சமாதானம் சொன்னான் வசந்த். மீண்டும் இருவரும் ஒரு குடைக்குள் அடைக்கலமாகினர்.

சற்றுநேரம் மெளனமாக நின்றிருந்தனர் இருவரும். எவ்வளவு நேரம் இருவரும் ஒரே குடைக்குள் மெளனமாக நிற்பது? மௌனத்தை கலைத்தாள் கங்கா, "ஏங்க காலைல வரும்போதே மழை வர்றாப்ல இருந்திருக்குமே அப்பறம் ஏன் குடை எடுக்காம வந்தீங்க?" என்ற கங்காவிற்கு பதிலளித்தான் வசந்த், "கதவை பூட்டின பிறகு மழை வருமோன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு, ஆனா பூட்டின கதவை மறுபடி திறந்து உள்ளே பொய் குடை எடுக்க சோம்பேறித்தனம்... மழை வந்தாப் பார்த்துக்கலாம்... என்று அப்படியே வந்துட்டேன்... ஆனா இப்போ கஷ்டமா இருக்கு..." என்று தன் தவறை எண்ணி நொந்துகொண்டான். 'ஓ சார் சின்ன விஷயத்துக்கெல்லாம் சோம்பல் படுவீங்களோ?' என்று கேட்டாள் கங்கா. 'அடடா அப்படி பட்டுன்னு முடிவெடுத்துடாதீங்க, யு நோ, ஆபீஸ் வொர்க்ல நான் ரொம்ப பர்ஃபெக்ட், கொஞ்சம் கூட சோம்பல் படமாட்டேன், நான் ஹார்ட் வொர்க்கர் னு பேர் வாங்குறவன்', என்று, எங்கே தன் திறமைகளை கங்கா குறைத்து எடை போட்டுவிடுவாளோ என்கிற பயத்தில் படபட வென ஒப்பிக்கலானான். இதனைக் கேட்ட கங்கா சிரித்துக்கொண்டே, 'சரி சரி நீங்க சுறுசுறுப்பானவர்ங்கறத அக்ஸப்ட் பண்ணிக்கறேன்' என்று பதிலளித்து, அவனது வேகத்தைக் குறைத்தாள். மழை சற்று வேகம் கூட்டியது, பேருந்திற்கான காத்திருப்பு இருவருக்கும் வேதனையைக் கூட்டியது. சற்றே யோசித்த வசந்த், 'ஏங்க தப்பா எடுத்தக்கலைன்னா, அதோ அந்த டீ கடைல ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம் வறீங்களா?' என்றான், 'எனக்கும் அது தோணாம இல்ல, ஆனா டீ கடை அவ்ளோ தூரத்தில இருக்கு, இங்கிருந்து போகும்போதோ, அல்லது கடைல நிக்கும்போதோ பஸ் வந்துடுச்சுன்னா இவ்வளவு தூரம் பஸ் ஸ்டாப்புக்கு திரும்ப மழைல ஓடி வந்து பஸ்ஸை பிடிக்க முடியாது, அதுனாலதானே குடையை பிடிச்சுக்கிட்டு இங்கேயே நிக்கறேன்', என்று பதிலளித்தாள் கங்கா. 'இவ்வளுவு நேரமா நிக்கறோம், உங்களுக்கு வந்த ஒரு பஸ்ஸும் நிக்காம போய்ட்டான், இன்னமும் சீக்கிரம் பஸ் வந்துடும்னு நம்பறீங்களா?' கேட்டான் வசந்த். 'நம்பணுமே, நம்பாம விட்டுட்டா மனித மனத்திற்கு அழகில்லையே, வீட்டுல அம்மா வேற என்னை இன்னும் காணோம்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருப்பாங்க.' என்று தன் கவலையை கொஞ்சமாக வெளிக்காட்டினாள். 'பாருங்க கொஞ்சம் ரிலாக்சேஷன் வேணும், அப்படியே பஸ் வந்துட்டாலும் ரோட்டுல பஸ்ஸுக்கு முன்னாடி என் ரெண்டு கைகளையும் விரிச்சு மறியல் பண்ணியாவது உங்களை ஏத்தி விட்டுடறேன்', என்ற வசந்தின் விளையாட்டுத் துணிச்சலை ரசித்தவளாய், 'சரி வாங்க உங்கள நம்பி டீ கடைக்கு வறேன்', என்று கங்கா சம்மதம் சொல்லவும், இருவரும் ஒரே குடைக்குள் சற்று முன்னும் பின்னுமாக டீ கடை நோக்கி நடக்கலானார்கள், இருந்தாலும் பேருந்து வருகிறதா என்று அவ்வப்பொழுது திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தாள் கங்கா.

கடையை அடைந்ததும், கடையின் முன்னால் வேயப்பட்டிருந்த ஒட்டு வாரத்தின் உள்ள இருவரும் ஒதுங்கிக்கொள்ள, குடையை மடக்கினாள் கங்கா. இடது கரத்தில் பெரிய கப் மற்றும் வலது கரத்தில் சின்ன கப் என்று லாவகமாக பாலை ஆற்றிக்கொண்டிருந்தார் கடைக்காரர். "மாஸ்டர் ரெண்டு டீ ஸ்ட்ராங்கா போடுங்க" என்றான் கடைக்காரரைப் பார்த்து வசந்த், சற்றும் தாமதிக்காமல் கங்காவிடம் திரும்பி, 'சாரி, கேட்க மறந்துட்டேன், நீங்க டீ சாப்பிடுவீங்கதானே?', என்றான், 'இல்ல ', என்று பதிலளித்தாள் கங்கா. 'வேறே?' என்றவனின் கேள்விக்கு, 'ராகிமால்ட் சொல்லுங்க', என்று பதிலளித்தாள் கங்கா. 'மாஸ்டர் ரெண்டு இல்ல, ஒண்ணுதான் டீ, இன்னொண்ணு ராகிமால்ட்' என்று கடைக்காரரிடம் ஆர்டரை மாற்றினான் வசந்த். மழையில் அரைகுறையாக நனைந்து நின்ற வசந்த் மற்றும் கங்காவைப் பார்த்த டீக்கடைக்காரர், 'உள்ளே டேபிள் காலியா இருக்கு, போய் உட்காருங்க', என்றார் கரிசனத்துடன். கங்காவிற்கு பேருந்து வந்துவிடுமோ என்ற பயம், நிறுத்ததைப் பார்த்தவாறே, 'இல்ல இங்கயே நிக்கலாம், பஸ் வந்தா தெரியும் போய் ஏறிடலாம்,' என்றாள் சற்றே அச்சம் கலந்த தொனியில். 'ஆமா மாஸ்டர் பரவால்ல நாங்க இங்கயே நிக்கறோம்', என்றான் வசந்தும் கங்காவிற்கு ஆதரவாக. டீக்கடையின் அடுப்புச்சூடு இந்த மழைக்கு இதமாகவே இருந்தது இருவருக்கும். அடுப்பின் மீது பாய்லரில் தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்க, பாய்லரின் அருகாமையில் தனது ஈரக் கைக்குட்டையை விரித்துப்பிடித்து ஈரம் சற்று உலரச்செய்தான் வசந்த்.

சூடான திரவம் தொண்டையை நினைத்தது இருவருக்கும், பேருந்து நிறுத்தத்தில் ஒரு பார்வை வைத்துக்கொண்டே சூடான் ராகிமால்ட்டை ஊதி ஊதிப் பருகிமுடித்தாள் கங்கா, இன்னும் சற்று நேரம் மழையை எதிர்கொள்ளும் தெம்பைப் பெற்றனர் இருவரும். டீக்கடைக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆயத்தம் ஆனார்கள். மடக்கி வைத்த குடையை மீண்டும் விரித்தாள் கங்கை. 'வேணும்னா குடையை குடுங்க நான் பிடிக்கறேன்', என்றான் வசந்த், 'இல்ல பரவால்ல', என்று பதிலளித்துவிட்டு தானே பிடித்துக்கொண்டாள். முன்போலவே முன்னும் பின்னுமாக நடந்து நிறுத்தம் வந்தடைந்தனர், 'பார்த்தீங்களா, நாம் டீ சாப்பிட்டு வந்தாச்சு இன்னும் பஸ் வரல. எவ்வளவு பயந்தீங்க', என்று வசந்த் சொல்லி முடிக்கும் அதே நேரம் பேருந்து ஒன்று தென்பட்டது, கங்கா தொடர்ந்தாள், 'பாருங்க அதோ... எனக்கு பஸ் வருது'. 'குட் லக், நான்தான் மறுபடி மழையில நனையணும்', என்று சற்று தாழ்ந்த குரலில் சொன்னான் வசந்த். சட்டென ஏதோ சிந்தித்த கங்கா, 'எனக்குதான் பஸ் வந்துடுச்சே நீங்க குடையை வச்சுக்கோங்க', என்று வேகமாகச் சொன்ன கங்கா குடையை வசந்தின் கைகளில் திணித்தாள். 'அப்பறம் எப்படி இந்தக் குடையை உங்ககிட்ட திருப்பிக் கொடுக்கறது', என்று சந்தேகமாகக் கேட்டான் வசந்த். 'அது நாளைக்கோ இல்ல அடுத்தநாளோ நாம இந்த இடத்துல மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைச்சா வாங்கிக்கறேன், இப்ப எனக்கு நேரம் இல்ல இந்த பஸ்ஸை நான் மிஸ் பண்ணிடக்கூடாது, எங்க அம்மா ஏற்கனவே பயந்துகிட்டு இருப்பாங்க, நான் வறேன்,' என்று படபடவென பதிலளித்துவிட்டு நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தின் பின்புறப் படிக்கட்டில் ஏறுவதற்காக விடுவிடுவென ஓடினாள் கங்கா. 'கொஞ்சம் இருங்க நீங்க பஸ்ல ஏறுகிற வரைக்கும் நனையாம இருக்க நான் குடை பிடிச்சுக்கிட்டு வரேன்', என்று குடையை அவளுக்குப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே ஓடிவந்தான் வசந்த்.

பெருந்தினுள் ஏறிய கங்கா, வசந்தைப் பார்த்து 'ரொம்ப நன்றி', என்றாள் சிரித்துக்கொண்டே, சொல்லிவிட்டு உள்ளே நகர்ந்தாள், 'நான் தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்லணும், குடைக்கு', என்றான் வசந்த. பேருந்து புறப்பட்டது, வசந்த வெளியில் குடைக்குள் நின்றுகொண்டு கங்காவைப் பார்த்து மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல, பேருந்தில் இருந்துகொண்டு சன்னல் வழியே வசந்தின் அப்பாவித்தனத்தை ரசித்தவாறே புன்னகைத்து நின்றாள் கங்கா.

கங்கா இறங்கவேண்டிய நிறுத்தத்தின் அருகில் பேருந்து நின்றது, மழை சற்று குறைந்திருந்தது ஆனால் நிற்கவில்லை, மாலை வெளிச்சத்தை இருள்கவ்வியிருந்தது. பெருந்தைவிட்டு இறங்கிய கங்கா வீட்டை நோக்கி வேகநடை போட்டாள், தனது வலது கையை தலைக்குமேல் உயர்த்தி கொஞ்சமாக மழையைத் தடுத்துக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தாள். கங்கா எதிர்பார்த்ததுபோலவே வாசலில் பயத்துடன் மகளின் வரவை எதிர்நோக்கியிருந்தாள் கங்காவின் தாய். 'ஏண்டி இவ்வளவு நேரம்?' என்று சற்று பதட்டமாகக் கேட்ட தாய்க்கு, 'அட போம்மா பஸ் ரொம்ப நேரமா வரலை, வந்த பஸ்ஸும் நிக்காம போய்ட்டான்', என்று நொந்துகொண்டாள், 'பாதைல நிக்காம கொஞ்சம் வழி விடும்மா, வீட்டுக்குள்ள வந்ததுக்கப்பறம் உன்னோட என்கொயரிய ஆரம்பி.' என்று தாயை நகர்ந்துகொள்ளச்சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்த கங்கா முற்றத்தில் ஓரத்துக்கொடியில் காய்ந்துகொண்டிருந்த தலைதுவட்டும் துண்டை எடுக்க ஓடினாள்.  'குடை கொண்டு போனியே? இப்ப ஏன், இப்படி நனைஞ்சு வந்து நிக்கறே?' என்று மறு கேள்வி தொடுத்தள் தாய். சட்டென தன்னிலை உணர்ந்த கங்கா கொஞ்சமும் யோசிக்காமல், மனது நிறைத்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டிக்கொல்லாமல், 'தொலைச்சிட்டேன்மா', என்று உதட்டளவு பதிலை தாயிடம் சமர்ப்பித்தாள் கங்கா.

மீ.மணிகண்டன்

குடைக்குள் கங்கா ... மீ.மணிகண்டன்
குறிப்பு: எனது சிறுகதைகள் தொகுப்பு, "குடைக்குள் கங்கா" புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளுள் இதுவும் ஒன்று.  

வியாழன், 1 மார்ச், 2018

கவிதையில் சித்திர விசித்திரங்கள்

எனது சித்திரக் கவிதைகள் இடம்பெற்ற புத்தகம். 'கவிதையில் சித்திர விசித்திரங்கள்'. திரு இலந்தை ஐயா அவர்களுக்கு நன்றி!
ஆண்டு: 2018






உலகமுதல் சித்திரக் கவியரங்காம் 
   உன்னதமாய்ச் சந்தவ சந்தத்திலே 
அலைகடலில் முத்தா டியோரருகேக் 
   கரையோரம் நீந்தியோன் பாக்களிங்கே... 


1. நாற்கால் கோபுர பந்தம்
வஞ்சித்துறை
உந்தனருள்தா மைந்தனருந்த   
சந்தவசந்த நந்தவனத்தே 
பந்தமிணைத்தே செந்தமிழாற்ற
சிந்தனையேற்ற வந்தனைகந்தா 


2. கோமூத்திரி
வண்ணத்துப்பூச்சி நினைப்பு
கிண்ணத்துப்பச்சை நிறப்பூ

3. சிவலிங்க பந்தம்

பல விகற்ப இன்னிசை வெண்பா

கருவுமாகி மெய்யுமாகு கோலங் களேயறவு     
ணர்த்தவ மென்னைநா டீமா வினைய
கலவொ ருவரமே கொண்டேன்பா லன்சீலன்    
வேலவனை நான்வணங் கி

விரிவாக:
கருவாகி உடலாகும் கோலங்கள் அற உணரும் தவம் என்னை நாடியே மாவினை அகல ஒரு வரமே கொண்டேன் பாலன் சீலன் வேலவனை நான் வணங்கி


... மீ.மணிகண்டன் 
Feb-28-2018

செவ்வாய், 9 ஜூன், 2015

வாழ்க வளமுடன்

வயதொன்று கூட்டியது
வாசமண வாழ்வின்று
தந்திடவே பலவெற்றி
தாண்டியது பன்னிரெண்டு

பகல்காணும் பொழுதொருவர்
படுத்துறங்கும் இரவொருவர்
இன்பமான திருமணநாள்
இதுபோலே யார்பெறுவார்

பொறுத்தாளும் புத்திகொண்டு  
புதுநாட்கள் தனைநோக்கும்
மகத்தான இருவுள்ளம்
மறக்காமல் தவமிருக்கும்

வாழ்த்தொன்று நலம்சேர்த்து
வளமோடு வாழ்ந்துயர
மின்னஞ்சல் எனும்பெயரால்
மிதக்கவிட்டேன் உனைச்சேர

குறையின்றி வந்ததெனக்
குறுஞ்செய்தி அனுப்பிடடி
இமையிரண்டும் உரசாமல்
இரண்டாகக் கிறங்குதடி


மீ.மணிகண்டன்
வாழ்க வளமுடன்

புதன், 6 மே, 2015

ஆழியிலே ... M.Manikandan

ஆழியிலே முத்தெடுக்க
  ஆசையுடன் நான்விரைந்தேன்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
  அனுதினமும் உருக்குலைந்தேன்
 நாழிகைகள் நாட்களாக
  நாட்களுமே மாதமாக
நாற்புறமும் தேடுகிறேன்
  நடந்துசெல்லப் பாதையில்லை
நீந்துவது(உ) பாயமதை 
  நேசித்துக் கற்கவில்லை
நீர்முகந்து வழிசமைக்க
  நீலக்கடல் விடுவதில்லை
காய்ச்சீரில் கவியெழுதி
  கவலைதனை மறந்திடவோ 
கார்திகேயன் அருளையெண்ணி
   காலமிதைக் கடந்திடவோ

--மீ.மணிகண்டன்

06-May-15

பிரபலமான இடுகைகள்