புதன், 14 ஜனவரி, 2015

தைத்தாய்க்கு வணக்கம் ... M.Manikandan




பழமைதனைப் பறைசாற்றிப் பருதிவொளி யாய்நீண்டு,
விழுதுகளாய் வேரூன்றி வினையழிக்கும் சூல்கொண்டு,
குழுவினராய் ஒன்றாகி, குலங்காக்கும் கற்கண்டு    
உழவர்களைக் காப்பாற்றும் உறுதிதனை உட்கொள்வோம் !

எழுதாத கவிதைகளாய் ஏறுழுது நிலம்காக்க
பொழுதெல்லாம் கண்விழிக்கும் புண்ணியரின் உயிர்காக்க,
புழுதிக்கால் கைகளுக்கு பொன்னாலே அலங்கரிக்க,
பழுதற்ற மனத்தாலே பகிர்ந்திடுவோம் உறுதிமொழி !

அழுகின்ற அவர்கண்கள் ஆனந்தம் பார்த்திடவே
விழுகின்ற வியர்வையிலே வைரங்கள் முளைத்திடவே
உழுதுண்டு வாழ்வதுவே உயர்வென்று காட்டிடவே
எழுந்திட்டோம் இனியென்ன என்றென்றும் நற்பொழுதே !

மழையென்னும் வரந்தரவே மரந்தொட்டு வணங்குகிறேன் !
கழநியிலே பெரியோரின் கால்தொட்டு வணங்குகிறேன் !
ஒழுக்கத்தின் ஒளிப்பிழம்பாம் ஒருஆன்மா வணங்குகிறேன் !
தழலொற்று வாழ்வேற்ற தைத்தாயை வணங்குகிறேன் !

By M.Manikandan

15-Jan-15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக