புதன், 6 மே, 2015

ஆழியிலே ... M.Manikandan

ஆழியிலே முத்தெடுக்க
  ஆசையுடன் நான்விரைந்தேன்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
  அனுதினமும் உருக்குலைந்தேன்
 நாழிகைகள் நாட்களாக
  நாட்களுமே மாதமாக
நாற்புறமும் தேடுகிறேன்
  நடந்துசெல்லப் பாதையில்லை
நீந்துவது(உ) பாயமதை 
  நேசித்துக் கற்கவில்லை
நீர்முகந்து வழிசமைக்க
  நீலக்கடல் விடுவதில்லை
காய்ச்சீரில் கவியெழுதி
  கவலைதனை மறந்திடவோ 
கார்திகேயன் அருளையெண்ணி
   காலமிதைக் கடந்திடவோ

--மீ.மணிகண்டன்

06-May-15

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அவர்களுக்கும் காதல் ... M.Manikandan

பூப்பாதக் கொலுசின்
மணியாக வில்லையாம்
கரைந்து போனது
புல் நுனிப் பனித்துளிகள்
*
அடர் கூந்தலுடன்
நட்பு பேண
விழுது வளர்த்தது ஆலம்
*
அந்திப் பூ
செவ்வந்தியானது
அவளுதட்டு முத்தத்தால்
*
அவளின் கரம்பட்ட
அரளிக்கும் காதல்
உள்ளங்கை ரேகை போல
வேர்கள்
*
குடந்தாங்கும்
இடை தாவ முடியாமல்
கொவ்வை கோபத்தைக்
கொப்பளித்தது கனியாய்
*

By M.Manikandan
07-Apr-15

செவ்வாய், 10 மார்ச், 2015

மனித மந்தையில் தொலைந்த மந்திகள் ... M.Manikandan

அந்த மூவரையும்
காணவில்லையே

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாம்
விரல் பதிவுகளில்
பள்ளிக்கூடங்களுக்குள்ளேயே
போர்வைகள் விலகுகின்றன

மொழிச் சுதந்திரம்
முதிர்ந்து விட்டதாம்
மூச்சிரைக்க முழங்கப் படுகிறது
முனகல்ச்சத்ததின் பரிணாமங்கள்
முளைக்கட்டுக் கூடங்களிலேயே

கேள்வி ஞானம்
கிளைத்து விட்டதாம்
சேர்க்கை சரிதங்கள்
செதாரமறக் கேட்டு ரசிக்கப்படுகிறது
எழுத்தறிவுச் சாலையிலேயே

வயது முதிர்ந்ததோ
வறுமை முறித்ததோ 
அழத் தோன்றுகிறது 
அழகு மந்திகளைத்
தேடித் தாருங்களேன் 

by M.Manikandan

11-Mar-15

வியாழன், 5 மார்ச், 2015

வான் காணாப் பிறை ... M.Manikandan

உறையும் பனிக்குளிரில் 
ஓடாமல் நான் குளிக்க 
ஒருபானைத் தண்ணீரை  
அடுப்பேற்ற வேண்டாம் 

சிக்குண்ட தலைமுடிக்கு  
நல்லெண்ணெய் வார்த்துபின்னே 
சீகர்க்காய் தேய்த்துமே 
சீர் படுத்திட வேண்டாம் 

சீப்புக் கொண்டு தலை வாரி 
ரெட்டைப் பின்னல் ரிப்பனிட்டு 
சிங்காரம் செய்துமே 
சிரமங்கள் படவேண்டாம் 

உடை தேடி எனக்குடுத்தி 
ஒழுங்காகப் பையடுக்கி 
பள்ளிக்கூடம் செல்வதற்குப்
பாதி வழி வரவேண்டாம் 

கறுப்புப் பொட்டுவைத்தும் 
கற்பூரம் சுற்றி வைத்தும் 
கண்ணேறு கழித்து நீ 
கவலைகள் படவேண்டாம் 

காரத் துவையலோடு 
கறி சமைத்துச் சோறாக்கி 
உடல் வருத்தி நீ எனக்கு 
ஒரு வாய் ஊட்டிடவும் வேண்டாம் 

ஏங்கி நான் அழுகும் 
இன்னல் பொழுதுகளில் 
அருகே நீ இருந்தால் 
அது போதும் ஆறுதலாய் 

அம்மா நீ யாரோ ...... ?


by M.Manikandan
05-May-15

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

உறங்கும் சுவைக்கட்டி ... M.Manikandan


சிந்தனையும் மொழியும்
கலவிக்க
எண்ணத்தில் கருவானவள் நான் !

கருவுற்ற சிறு பொழுதுகளில்
கற்பனையால் வளர்க்கப்படும்
சிசு நான் !

எண்ணம் புடைக்க வளர்ந்து
கை விரல் மருத்துவத்தில்
மைக்கருவி ஆயுதத்தால்
பிரசவிக்கப்பட்டு
காகிதத் தொட்டிலில்
தவழ விடப்பட்டது என் பிறப்பு !

அங்கமெங்கும் அடுக்கப்பட்ட
அலங்கார வார்த்தைகளின்
அணிவகுப்பு என் அழகு !

இலக்கணத் தெளிவுகொண்டு
எல்லோரையும் வியக்க வைக்கும்
அறிவு எனது !

எதுகை மோனையோடு
யாப்பு பூசிய என்னை
எடுத்துக் கொஞ்சுபவருக்கு
என்னால் நிழல் தர இயலும் !

இங்கே என்னைப்போல்
நாகரீகம், பொதுவுடைமை
அன்பு, அறிவு,
ஒழுக்கம், உயர்வு என
இன்னும் இன்னும் எத்தனையோ
எங்கள் தோழமைகள் !

எம்மைப் பிரசிவக்க
மும்முரமாக இயங்குவோர்
ஏனோ எடுத்துக் கொஞ்ச
முன் வருவதில்லை.

இப்படித்தான்
பெருக்கிக் கிடக்கிறோம்
எழுதப்பட்ட அனாதைகளாய் !

By M.Manikandan
28-Feb-15

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

அழகுப் பிள்ளை யார் ... M.Manikandan



பல விகற்ப இன்னிசை வெண்பா

மஞ்சள் அரைத்திட மாலைக் கதிரவன்
கொஞ்சி வணங்கிட குட்டியம் மூசிகம்
கண்டு கிளைக்குள் கிளையாய் இருந்திடும்
குண்டழ குப்பிள்ளை யார்  

by M.Manikandan
22-Feb-15

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

நெஞ்சு பொறுக்குதில்லையே ... M.Manikandan

நெஞ்சு பொறுக்குதில்லையே மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
Title by eluthu com
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முப்பங்கு சமுத்திரத்தால் மூழ்கடித்த உலகமிதை
அப்படியே அழிக்கவந்த அரக்கர்கள் கூட்டமிங்கே,
...மிரளவைத்து பயமுறுத்தி மிகையாக வற்புறுத்தி
...தரமற்ற பொருள்விற்க தந்திரமாய் விளம்பரங்கள் !

தேர்தலதன் வீரமதை தெரியாமல் கைநீட்டி
அர்த்தமற்று இலவசத்தின் அடிமையான வாக்காளர் !
...கல்விதரும் கூடங்கள் கணக்கில்லை அவனியிலே,
...பல்கலையோ வரண்டுபோகப் பணம்பறிக்கும் எண்ணங்கள் !

உயிர்சாயம் உலர்ந்துபோன உழைப்பாளி வறுமையிலே,
மயிர்சாயம் பூசிவாழும் மந்திரிகள் மமதையிலே !
...வலிதீர்க்கும் மருத்துவத்தை வருமானப் பாதையாக்கி
...பலியாக்கி வறியோரைப் பதம்பார்க்கும் மூர்க்கர்கள் !

ஆன்மீக அருமையினை அடகுவைக்கும் காலிகளால்,
தன்னுள்இறை உணராமல் தள்ளிநிற்கும் மாந்தர்கள் !
...துள்ளிவரும் மழலையினைத் தூக்கிதினம் கொஞ்சாமல்
...அள்ளிவந்து பொருள்குவிக்க அலைந்துநோகும் பெற்றோர்கள் !

பணவேட்டை ஒன்றுமட்டும் பார்வாழ்கை என்றாக
குணம்குன்றி குவலயமும் குற்றுயிராய்ச் சாகுதம்மா !
...பழசாகிப் போனதனால் பந்தபாசம் இற்றதனால்
...நிழல்காற்று இல்லாமல் நெஞ்சுநொந்து அழுகுதம்மா !

By M.Manikandan
08-Feb-15


பிரபலமான இடுகைகள்